கடல் – 14
அன்னத்தின் கோபத்திற்கு எல்லை இல்லை எனலாம். அந்தளவிற்கு ஏமாற்றமும், ஆத்திரமும் அவரை படுத்தி எடுத்தது. அவரின் எண்ணவோட்டத்தை நாடி பிடித்த குணசாலி சரியாக குறி பார்த்து அடித்தாள்.
“கேக்குதீகளா? நாஞ்சொல்லுதத? இப்ப செத்த முன்னதேன் அண்ணேனும், ராசுவும் காசியாத்தா கூட வந்து தாக்கல் சொல்லிட்டு விசேசத்துக்கு சொல்லிட்டு போனாக. எம்வீட்டு மனுசேன் ஆளுக்கு முந்தி அங்க போவனுமின்னு தவிச்சிக்கிட்டு கெடக்குதாரு…”
“இங்க ஒன்னுமே தெரியல புள்ள. காத்துவாக்குல ஒன்னும் வரலியே…” அன்னம் சொல்ல,
“எங்களுக்கே இது அதிசயந்தேன். என்னத்த பண்ண? ஆனாலும் என்ன ஒரு திண்ணக்கம்? அன்னிக்கு ஊரே பாக்க நடந்தத இன்னிக்கு பூசி மொழுவ பாக்குதாக…”
“இதுக்கு நா விடுவேனா?…” அன்னம் சூளுரைக்க இதுதானே வேண்டும் குணசாலிக்கும்.
“அதத்தேன் சொல்லுதேன். நம்ம தருமேன் என்ன சொம்பப்பயலா? அவனுக்குத்தேன் இப்ப மின்னுவ குடுக்கனும்…” குணசாலி இன்னமும் கொம்பு சீவ,
“பாத்துக்கிடுதேன் இந்த பரிசத்த எப்பிடி நடத்துதானுங்கன்னு…” என்று அன்னம் சொல்லிய பின்பே குணசாலிக்கு திருப்தியாக இருந்தது.
விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து தன் கணவனை கையில் பிடிக்க முடியவில்லை. என்னவோ அவன் பிள்ளைக்கே திருமணம் நிச்சயமாக போவது போல அவன் ஆட அதுவும் ராஜாத்தி அத்தனை நிமிர்வாக வந்து பேசியது எல்லாம் குணசாலியை வெறுப்பேற்றியது.
இங்கே விசேஷ வீட்டிலோ ஒரே நாள் தான் உள்ளூருக்குள் அத்தனை பேருக்கும் சொல்லி நிச்சயத்திற்கான இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்து பந்தல் போட்டு என அமர்க்களப்படுத்திவிட்டார் முருகய்யன். அத்தனையும் அருளின் ஏற்பாடு.
மறுநாள் மாலை நேரம் மாப்பிள்ளை வீட்டினர் என்று அனைவரும் வந்துவிட மின்னொளிக்கு தான் ஒருவித புது உணர்வு. முதல்நாள் என்னை திருமணம் செய்ய வா என ஏதோ ஒரு வேகத்தில் பேசி வந்துவிட்டாள்.
வந்த பின்னர் சரியா தவறா என்று கூட யோசிக்கும் மனநிலை இல்லாது அவன் வருவானா மாட்டானா என்ற எதிர்பார்ப்பு வந்து ஒட்டிகொண்டது.
ராஜாத்தி வந்து அழகுப்பாட்டியிடம் சொல்லி மின்னொளியிடம் பேச சொல்ல அவருக்கோ அத்தனை பயம்.
இவள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தால் என்ன செய்வது என ஆயிரம் கடவுள்களை வேண்டியபடி மின்னொளி சம்மதிக்க வேண்டுமென குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டு மஞ்சள் துணியில் காசை முடிந்துவைத்துவிட்டு வந்து அமர்ந்தார்.
மாலை பால் ஊற்றி முடிந்து அனைவரும் சென்றதும் அவற்றை கழுவி வைத்துவிட்டு கணக்குகள் பார்த்துக்கொண்டிருந்தாள் மின்னொளி.
“யத்தா செத்த உள்ளாற வாயேன்…” என அழகுப்பாட்டி அழைக்க ராஜாத்தி உள்ளே இருந்து எட்டி எட்டி பார்த்தபடி இருந்தார்.
“என்னடா இது” என மின்னொளி அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்க்க ராஜாத்தியின் பின்னால் அவரின் புடவையை பிடித்துக்கொண்டு இளவரசனும் அதே போல பார்க்க சிரிப்புதான் வந்தது இவளுக்கு.
“சொல்லு கெழவி, எதாச்சும் ரகசியமா?…” என அவள் ரகசியமாய் கேட்டவிதம் பாட்டிக்கு சொல்ல வந்ததை மறக்கடித்தது.
“ரொம்ப சந்தோசமா இருக்கா போலயே? இப்ப இத்த சொன்னா எல்லாத்தையும் தூக்கி விசுருவாளோ?” என சற்று பயத்துடன் ராஜாத்தியை பார்க்க அவரோ நேரமாகிறது என ஜாடை காண்பித்தார்.
பின்னே மின்னொளியிடம் சொல்லி அவளின் சம்மதம் வாங்கிய பின்பு தான் மின்னொளி தாய்மாமன் வீட்டிற்கு நேரில் சென்று அழைக்க வேண்டும். மறுநாள் நிச்சயதார்த்தம் என்பதால் அனைத்திற்கும் சொல்லவேண்டும், நேரம் வேறு வெகு குறைவென்பதால் பதட்டத்துடன் இருந்தார்.
ஏனென்றால் முருகய்யனிடம் பேசிவிட்டு சென்ற அருள் அடுத்தடுத்து ஆகவேண்டிய வேலைகளை துரிதப்படுத்திவிட்டான்.
அப்பொழுதே சமையலுக்கு ஆள் சொல்லி, மேலதாளத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு பூ பழத்திற்கு என அனைத்திற்கும் சொல்லி முடித்துவிட்டதாக தகவல் சொல்லியிருக்க இப்பொழுது மின்னொளி மாட்டேன் என்றால் என்ன செய்ய என கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தார்.
மறுத்தால் எப்பாடுபட்டேனும் சமம்திக்க வைத்தே ஆகவேண்டும் என்றும் இவர்களை பார்த்துக்கொண்டே நிற்க,
“என்னவாம் ஒஞ்சின்னமருவளுக்கு? இங்கயே பாக்குதாக?…” என கீழ்கண்ணால் ராஜாத்தியை பார்த்தும் பார்க்காதபடி அவள் சொல்ல,
“அதுக்குத்தேன் பேச வந்தேன்…” என்றவருக்கு நா உலர்ந்துவிட்டது.
“ப்ச், என்ன கெழவி இப்ப சொல்ல போறியா இல்லயா?…” என எரிச்சல்பட்டாள். அவளுக்கு அருள் ஏன் இன்னும் வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை என்று கோபமாய் வந்தது.
“அப்போ தான் சொல்லியதை அவன் சிரத்தையாக எடுத்துக்கொள்ளவில்லையோ? அவனுக்கும் நான் கீழ் தானா?” என்று மனதை அறுக்கும் அந்த நினைவுடன் இவள் இருக்க,
“எல்லா நல்ல வெசயந்தேன். உள்ள வான்னா வாயேன்டி…” என சற்று கோபமாய் சொல்ல,
“ஒன்னோட ரோதனையா போச்சு கெழவி…” என எழுந்துகொண்டவள் கையில் அந்த நோட்டுகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு,
“வா உள்ள…” என வந்து தனது கட்டிலின் கீழ் அமர்ந்தவள் கட்டில் காலில் சாய்ந்துகொண்டு,
“இங்கவாச்சும் சொல்லுதியா அந்த சங்கதிய. ஆரும் காத அத்து இங்க வெச்சிடமாட்டாக. பெரிசா பேச வந்துட்ட…” என சீண்ட,
“ஏன்டி அவேன்கிட்ட கூட சுளுவா பேசிட்டாக. நீ இருக்குத பாரு…” என அங்கலாய்க்க,
“எவேன், நீ எவென சொல்லுத?…” என்றாள் பார்வையை கூர்மையாக்கிக்கொண்டு. அருளிடமாக இருந்தால்? அதுதான் சட்டென உடலில் ஒரு பரபரப்பு.
அது அவன் மீதான அபிப்ராயத்திலா என்றால் அவளிடம் அதற்கு பதில் இல்லை. தான் பேசிவிட்டு வந்ததற்கு அவனிடம் என்ன எதிரொலி? தன் பேச்சிற்கு மதிப்பா என்று தெரிந்துகொள்ளவே அவள் மனம் உந்தியது.
“நம்ம சோதி…”
“அவனுக்கென்ன?…”
“அதேன், ஒங்கப்பேன் போய் பேசுனானே நேத்து. அந்நேரம் என்ன நெனச்சானோ வேணாமின்னான். இன்னிக்கு அவனே வந்து ஒங்கப்பன பாத்து ஒளிய கட்டித்தாங்கன்னு சொல்லிருக்கான். நாளக்கே பரிசத்த போட்டுறலாம்னு வேற. இப்ப நீ செரின்னா ஆகற சோலிய பாக்கனும். நாளக்கே வேற பரிசம்னா எல்லாத்தையும் இப்ப ஆரம்பிச்சாதேன் உண்டு…”
மனதில் இருந்ததை படபடவென சொல்லிவிட்டு அவளின் பதில் சாதகமாகத்தான் இருக்கவேண்டும் என்னும் ஆசையுடன் அவளின் முகத்தையே பார்த்திருந்தார்.
ராஜாத்தி முதலிலேயே சொல்லிவிட்டார் தான் போய் பேசி இதற்கு சம்மதித்தான் என ஒருபோதும் மின்னொளிக்கு சொல்ல கூடாதென்று.
அதனால் அவனாகவே வந்ததாக இவர் சொல்லியிருக்க மின்னொளி தான் அருளிடம் பேசியதை இவர்களிடம் சொல்லாமல் இருக்க இப்பொழுது இருவருமே சம்பந்தப்பட்டவனிடம் நேரில் பேசியதை மறைத்தனர்.
“என்னத்தா எதாச்சும் சொல்லு…” என அழகுப்பாட்டி அவளிடம் மெதுவான குரலில் பேச,
“அவுக எங்கையோ கெளம்பி இருக்காக?…” என ராஜாத்தியை பார்த்து கேட்க,
“இவ ஒருத்தி நா ஒன்னு கேட்டா இவ சொன்ன கேப்பா. நீ செரின்னுட்டா போயி மொத ஒத்தாய்மாமேன்னு ஒருத்தேன் ஒத்தக்காட்டு கொரங்கு இருக்கானுல. அவனுக்கு அழைக்கனும்னு தயாரா இருக்கா. ஒங்கப்பேன் தான் போன போட்டு சீலைய மாத்திட்டு இருக்க சொன்னியானாட்டு இருக்கு…”
அழகுப்பாட்டிக்கு கோபம் வந்துவிட அவர் பாட்டுக்கு பேசிவிட இப்பொழுது மின்னொளி முறைக்க அதில் திருதிருத்தவர்,
“யத்தா கோவப்பட்டுட்டேனா? அய்யோ, என்ன செய்யுவேன்? எங்கட்ட வேவுததுக்குள்ள…”
“ஏங்கெழவி இப்பத்தேன் எனக்கு கலியாணம் பேசுன. அதுக்குள்ளே ஒங்காருமாயத்த பேசுத? கூறு இருக்காத்தா?…”
“மின்னு…” அழகுப்பாட்டிக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே விளங்கவில்லை.
“என்னத்தா?…” என குழப்பமாக பார்க்க,
“அதேன் அழைக்கிததுக்கு பொறப்பட்டாச்சுல. போயிட்டு வர சொல்லுங்க. நேரமா வர சொல்லுங்க…” என சொல்லிவிட்டு எழுந்து செல்ல அவள் சொல்லியதை கேட்டுகொண்டிருந்த ராஜாத்திக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது.
மாட்டேன் என்று சொல்லி தாம் தூமென குதிப்பாள், பெரிய பிரச்சனை ஆகும் என நினைத்திருக்க இவளானால் ஒற்றை வார்த்தையில் அனைவரையும் கவிழ்த்துவிட்டாளே என மகிழ்ச்சியில் விம்மிப்போனார்.
அழகுப்பாட்டிக்கு அவள் எப்படி சம்மதித்தாள் என்றெல்லாம் தோன்றவே இல்லை. சம்மதித்துவிட்டாள். எப்படியோ இதற்கு ஒப்புக்கொடுத்துவிட்டாள். அது ஒன்றே போதும் என மனது நிறைந்து போனவர்,
“ராசு கேட்டியா?…” என இன்ப அதிர்ச்சி விலகாத குரலில் அழகுப்பாட்டி அங்கிருந்தே கிசுகிசுக்க,
“ஆத்தா நீ கேட்டியா?…” என அவரை போலவே கிசுகிசுப்பாய் இளவரசன் தன் தாயிடம் ரகசியம் பேச ராஜாத்திக்கு கைகால் ஓடவில்லை.
“அத்தே அவுகளுக்கு போன போட்டு சொல்லிட்டு வாரேன். இங்கன பேசவும்தேன் மின்னு சொல்லுதத கேட்டுட்டு கூப்புட சொன்னாரு…” என சொல்லி முருகய்யனுக்கு அழைக்க அவர் உடனே வந்துவிட்டார்.
அடுத்தடுத்த நிகழ்வுகள் அவசரகதியில் அரங்கேற ஊருக்குள் மறுநாள் காலையிலேயே நிச்சயதார்த்தத்திற்கு அழைக்க செல்ல அன்னத்தின் பக்கத்து வீட்டிற்கு சொல்லிவிட்டு அன்னம் வீட்டிற்கு செல்வதா வேண்டாமா என யோசிக்க ராஜாத்தி தான் ஊரை அழைத்ததை போல அவர்களையும் முறைக்கு அழைத்துவிடுவோம் என சொல்ல அவரும் சென்றார்.
“அங்கனவே நில்லுண்ணே. என்னத்துக்கு வந்துருக்கன்னு எனக்கு தெரியாதா? என்னிய எம்புள்ளைய முச்சந்தில வச்சு மூக்கறுத்தாமாரி பண்ணிப்புட்டல…” என அன்னம் கத்த அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க,
“இதுக்குத்தேன் ரோசனையா(யோசனை) இருந்திச்சு எனக்கு. கேட்டியா ராசு? வா போவம்…” என வந்தவழியே திரும்பிவிட்டார் முருகய்யன்.
“வந்துட்டு பேசாம போனா? இங்காரு சாயங்காலம் நானும் எம்புள்ளையோட வரத்தேன் செய்யுவேன். என்ன பண்ணுதன்னு பாக்குதேன். பரிசத்த நாந்தேன் போடுவேன் ஒம்பொண்ணுக்கு…” என காட்டுக்கத்தலாய் கத்த அவரின் பேச்சை கேட்ட எவருக்குமே பிடிக்கவில்லை.
“ஏத்தா அன்னோ, விடேன், பொண்ண பெத்தவுகளுக்கு தெரியாதா? வேணாமின்னு சொன்னா நம்ம கம்மின்னு இருக்கதுதேன் நமக்கு மருவாதி…”
“எவளாச்சும் வாப்பெட்டிய தெறங்தீக, வசம்ப வெச்சு அறக்கிப்புடுவேன் அறக்கி. போங்கடி அந்தான்ட. எம்வீட்டு சங்கதிய பேசுத தொலவுக்கு தெகிரியமாச்சோ? அவவ சோலிக்கழுதைய மேச்சுக்கிட்டு போங்கடி…” என்று வெறி வந்தவரை போல பேச அதன் பின்னர் ஒருவரும் வாயை திறக்கவில்லை.
முணுமுணுப்போடு கூட்டத்தை கலைத்தனர். அதில் சிலர் அவர்களுக்குள்ளேயே தங்களுடைய அனுமானத்தை பகிர்ந்தனர். அன்னம் கூட சொல்லி தர்மராஜ் அப்படி ஓர் காரியத்தை செய்திருக்கலாம் என்னும் அளவில் சென்று நின்றது அந்த பேச்சுக்கள்.
முருகய்யன் முகமே வாடி விட ராஜாத்திதான் அவரை பேச்சுக்கொடுத்து திசை திருப்பினார்.
ஓரளவு ஊரில் அனைவருக்கும் சொல்லிவிட்டு வீட்டை வந்தடைய மதிய நேரம் ஆகிவிட்டது. சட சடவென வேலைகள் அவர்களின் கவனிப்பிற்கு காத்துக்கிடக்காமல் வெகு சிறப்பாகவே சென்றது.
மின்னொளி யாரையும் எதிர்பார்க்காமல் குளித்து புடவை கட்டி, தலை வாரி பூச்சூட்டி என மணப்பெண்ணின் அனைத்து லட்சணங்களுடன் கூடத்தில் வந்து அமர அதனை கண்ட முருகய்யனுக்கு கால்கள் வேறெங்கும் நகரவில்லை.
அப்படியே முத்துநகையை பார்த்தது போலவே மகளின் முகம் ஒளிவீச காண காண தெவிட்டவில்லை அந்த தகப்பனுக்கு.
“ஆத்தே எம்மவளா இது?…” என சொல்லியபடியே வர மின்னொளிக்கு எப்படி அதனை எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. ஒரு மாதிரி சங்கடமாய் வெட்கம் வருவதை போல இருக்க,
“கெழவி நா நா உள்ளார இருக்கேன். நீ பாத்துக்க. எல்லாரும் வருவாக…” என சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர முருகய்யன் முகம் சுருங்கிவிட,
“ஏலே என்னத்துக்கு மொகரல மூக்கணாங்கயிறு சொருகுனமேனிக்கி நிக்கித? மொத மொத சீல கெட்டிருக்கா. அவளுக்குமே கூச்சமா இருக்குமில்ல. போடா போடா…” என்று அழகுப்பாட்டி சொல்லவும் தான் சிரிப்புடன் வெளியே வந்தார்.
ஊரை கூட்டி வரிசை தட்டுகளுடன் அருள்ஜோதி வர தாய்மாமனாய் கணேசன் முன்னின்று சந்தோஷமாய் வரவேற்றான்.
ராஜாத்திக்கும், அழகுப்பாட்டிக்கும் அவன் இந்தளவாவது இருக்கிறானே என்னும் நிம்மதி. குணசாலி தான் முகத்தில் முள்ளை கட்டியதை போல நின்றாள்.
அவர்கள் வந்ததும் பொதுவான பேச்சுக்களை பேசாமல் நேரடியாக நிச்சயதார்த்தத்தை பற்றி ஆரம்பித்துவிட கூட்டத்தில் சலசலப்பு கேட்க வெளியே அன்னமும் தர்மராஜும் வந்திருந்தது தெரிந்தது.
மின்னொளிக்கு கோபம் சுறுசுறுவென ஏற அவளின் முகத்தை பார்த்த ராஜாத்தி “எங்கே அவள் வெளியே வந்துவிடுவாளோ? ஏதாவது கோபமாக பேசிவிடுவாளோ” என பதறி வேகமாய் அவளை சுற்றி நான்குபேரை நிறுத்தியவர்,
“இங்காரு மின்னலு, இந்த எடத்தவிட்டு அசையப்பிடாது. புரியுதா?…” என முதன் முதலில் தன் அதிகாரத்தை காட்டினார் அவளிடம். அவள் சலனமின்றி பார்க்க ராஜாத்திக்கோ நிற்க நேரமில்லை.
முருகய்யனும், அருளும் வாசலுக்கு சென்றிருந்தனர். எங்கே எதுவும் பிரச்சனை ஆகிவிடுமோ என பயந்துகொண்டே அவர் ஓட அன்னம் பேசி பேசி பெரிதாக்கிக்கொண்டிருந்தார்.
“இந்தாம்மா, இப்ப என்னத்துக்கு இங்க வந்து சவுடாலு பேசுத? அதேன் பொண்ண குடுக்கமுடியாதுன்னு பெத்தவுக சொல்லிப்பிட்டாகளே. இதுக்காங்காட்டி ஒங்களுக்கு என்ன வேணு?…” அருள் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு பேச அவனுக்கு ஆதரவாக கணேசன் அவனருகே.
“யே எனக்குங்கூடத்தேன் பொண்ணு கேக்குத்த உரிம இருக்கு. அதுக்குத்தேன் வந்தேன். இன்னொரு காரணமுந்தேன் இருக்கு. அது இந்த ஊருக்கே வெளிச்சம்தேன்…” என்ற பேச்சில் வெகுண்ட அருளை அடக்கும் விதமாய் ராஜாத்தி வந்து அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“ப்ச், விடுத்தா, இவேன் ஒரு ஆளுன்னு இவனயெல்லா அடிச்சு. விடுத்தா. பேசத்தேன் செய்யுதேன்…” என தன்னை உதறிக்கொண்டவன் வேஷ்டியை மடித்துக்கட்டி,
“என்னாலே ஒனக்கு பிரச்சன? சொல்லுலே…” என தர்மராஜிடம் கேட்க அவனோ வெடவெடக்கும் உடலுடன் அருளின் தோரணையில் உதறல் எடுக்க,
“வந்து வந்து, மின்னுவ நா, அம்மோவ் நீ சொல்லும்மோவ்…” என தாயை துணைக்கு அழைக்க எதிர்த்து பேச தைரியமில்லாத அவனை கண்டு அருள் கேவலமாய் பார்த்தான். அன்னத்திற்கும் மகனின் செயலில் கோபம் தான்.
“நாந்தேன் மொத பொண்ணுகேட்டு இந்த வீட்டு வாசப்படி மிதிச்சேன். எனக்கொரு நாயத்த மொத சொல்லிட்டு ஒங்க சோலிய பாரும்…” அன்னம் சொல்ல கோபத்தை அடக்கும் பொருட்டு இரு கையையும் நீட்டி நெட்டிமுறித்து மார்பின் குறுக்கே கட்டிக்கொண்ட அருள்,
“எல்லாருக்குந்தேன் சொல்லுதேம். நல்லா கேட்டுக்கிடுங்க. அவ யே அக்கா மவ அவள காட்றதா இருந்தாலும் எனக்குத்தேன் உரிம. யாருக்கும் கட்டிகுடுக்கறதா இருந்தாலும் எனக்குதேன் அந்த கடம. இப்ப அவள நாந்தேன் கட்டுவேன். அந்த முடிவுக்கு வந்தாங்காட்டி எதுக்கு கட்டி குடுக்குத பேச்ச பேசனு?…” என அன்னத்திடம் சொல்லியவன்,
“வெளங்குச்சாலே, என்ன சொல்லுதேன்னா கம்மின்னு ஒ திருவாய்க்கால சாத்திட்டு போடான்னு சொல்லுதேன். இனி எங்க வீட்டுப்பக்கம் கண்ணு திரும்புச்சு…” என அருள் எச்சரிக்க,
“செரியா சொன்னதா தம்பி…” என கணேசனும் அவனை மெச்சிக்கொள்ள குணசாலிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“ஏலே நாம்பாக்க வளந்த பொடியேன் நீயி. இன்னிக்கு நீ பொதுவுல பேச வளந்துட்டியோ? அம்புட்டு ஏத்தமா? இந்த அன்னத்துக்கிட்டயா? எனக்கு ஒம்ம வவுசு தெரியும்லே. அவளுக்குத்தேன் ஒன்னிய கண்டாலே ஆவாதுல. பொறவு இப்ப மட்டும் என்ன? அவதியவதியா ஒங்கிட்ட புடிச்சுக்குடுக்க பாக்குதாவ?…”
“இங்காருங்கய்யா பெரியமனுசகளா, இதுக்கு மாத்தரம் எனக்கு கேட்டு சொல்லுங்க, கம்மின்னு போயிடறேன். இனி இந்த பக்கம் வந்தா என்னனு முக்குல நிக்கவெச்சு மூக்கறுத்தாலும் என்னனு கேக்கமாட்டேன்…” என அன்னம் சொல்ல கூட்டத்தில் ஆளுக்கொன்றாய் பேச அருள் ராஜாத்தியை பார்த்து,
“எக்கா போயி புள்ளைய கூட்டிவா…”
“ஏலே சோதி, இவுக சொல்லுததுக்கு எதுக்குலே புள்ளைய வாசலுக்கு கூட்டனும்? ஒன்னு வேணாமிலே…” ராஜாத்தி மறுக்க,
“ஆமா சோதி, ராசு சொல்லுததுதேன் செரி. என்னதேன் இருந்தாலும் பரிசம்போட்ட பொண்ண வெளில ஊருக்கு மத்தில நிக்க வெக்கிதது நல்லதில்லைய்யா…” அழகுப்பாட்டியும் ராஜாத்தி சொல்லுவதை போல சொல்ல,
“அவென் சொன்னா அதுக்கு ஒரு வெசயம் இருக்கும் ராசு. தம்பி சொல்லுதான்ல…” காசியாத்தாவும் அருளுக்கு உறுதுணையாய் பேச,
“என்ன மாமோவ் நீரு என்ன சொல்லுதீக?…” என முருகய்யனிடம் கேட்க,
“கட்டிக்கபோறவேன் நீயி, ஒனக்கு தோதானா செய்யி சாமி…” என்றுவிட அருள் ராஜாத்தியை பார்த்தான்.
“ஆளாளுக்கு என்னத்துக்கு ரோசனைங்கறேன். அப்ப இங்க ஏதோ சேதி இருக்கபோயித்தேன் அந்த புள்ளைய கூட்டியாற ரோசனையா(யோசனை) இருக்கு. பாத்துக்கிடுங்க எல்லாரு…” அன்னம் இளக்காரமாய் பேச அருளுக்கு கோபம் கனன்றது.
இப்பொழுது ராஜாத்தியை வெளிப்படையாகவே அவன் முறைத்து பார்க்க அவர் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் மின்னொளியை அழைக்க சென்றுவிட்டார்.
“சொன்ன வார்த்த மீற கூடாது. ஞாவவம்(ஞாபகம்) இருக்கட்டு…” என தர்மராஜை பார்த்து அவன் எச்சரிக்க அன்னம் அலட்சியமாய் பார்த்தார்.
அவரை பொறுத்தவரை மின்னொளி தன் மகனை மறுத்தலும் அருளை ஏற்கமாட்டாள், அவனை விரும்ப மாட்டாள் என நினைத்திருந்தார். அதனால் உண்டான தைரியம் அவரை அப்படி பேச வைத்தது.
சில நொடிகளில் அனைவரின் பார்வையும் சிறு கிசுகிசுப்புடன் நிலைவாசலை பார்க்க அருளும் பார்த்தான்.
அடர் பச்சைவண்ண பட்டில் பதுமையென வருபவளை கண்கொட்டாமல் பார்த்தான் அருள்.
“வாயாடி நீயாடி இது?” என ஒரு நொடி மலைத்துப்போனவன் அடுத்த நொடியில் அவளை முறைத்தான்.
“கொஞ்சமாச்சும் பதவிசா வாராளா பாரு. எவன வெட்டலாம், எவன குத்தலாம்னு கண்ணுல பன்னரிவாள தீட்டிவச்சமேனிக்குத்தேன் பார்வ” என இவனின் முணுமுணுப்புக்கு ஏற்றது போல தலை குனியாமல் அனைவரையும் முறைத்துக்கொண்டே வந்தவள் முருகய்யன் அருகே நின்றுகொண்டாள்.
அதிலும் அன்னத்தையும், தர்மராஜையும் பார்த்தவளுக்கு எரிச்சலில் முகம் உர்ரென்று மாற,
“இந்தா மின்னு…” என அன்னம் வர,
“இந்தா ஒனக்கு எல்லாரு முன்னுக்க கேக்கனும் அதான. கம்முன்னு தள்ளி நில்லு. எங்களுக்கு கேக்க தெரியும்…” என்ற அருள் மின்னொளியின் பக்கம் திரும்ப அவளும் அவனை பார்த்தாள்.
“இங்காரு புள்ள செத்த இங்கன வா…” என அவன் அழைக்க அவனருகே சென்று நின்றாள் மின்னொளி.
“என்னிய கெட்டிக்க ஒனக்கு சம்மதந்தான. புடிக்காட்டியும் சொல்லு புள்ள. இங்க ஆரும் ஒன்னிய வம்படியா எனக்கு கட்டிவெக்க மாட்டாக…” என அருள் சொல்ல ஊர்மக்கள் அனைவரும் அவளையே பார்க்க மின்னொளி அவனை மட்டுமே பார்த்தாள்.
“சம்மதந்தேன், ஒன்னிய மட்டுந்தேன் கட்டிக்க சம்மதம்…” என பளிச்சென சொல்ல அருள் அசந்து நின்றான்.
அவளின் பதில் ஒற்றை வார்த்தையாகவோ இல்லை தலையசைத்தோ சம்மதம் சொல்வாள் என நினைத்தால் பொட்டிலடித்ததை கூட்டத்தின் மத்தியில் உன்னை மட்டுமே கட்டுவேன் என்று தைரியமாக அவனை பார்த்து அவள் சொல்லியவிதம் அவனை அசரடித்தது.
அத்தனைபேர் மத்தியில் தன் மீதான அவளின் பிடித்தம் கண்டு லேசான வெட்கம் வேறு அவனை பற்ற இதழோரம் பூக்கும் புன்னகையை அடக்கியவன்,
“போ, நீ உள்ளார போய்க்கோ…” என்று அனுப்பவும் அவனை பார்த்துக்கொண்டே தான் உள்ளே சென்றாள்.
இந்த பார்வை பரிமாற்றத்தையும் இருவரது மகிழ்ச்சி நிறைந்த முகத்தையும் பார்த்த தருமனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அதிலும் மின்னொளியின் முகம் காண காண இனி அவள் தனக்கில்லை என்பதில் தான் பெரிதும் துவண்டான்.
அனைவருக்குமே அவளின் பதிலில் அத்தனை திருப்தி. இப்பொழுது அனைவரின் பார்வையும் அன்னத்தையும், தர்மராஜையும் “உங்களுக்கு இது போதுமா” என்பதை போல பார்க்க அன்னத்திற்கு அங்கே நிற்கவே முடியவில்லை.