கடல் – 16
அன்னம் வீட்டிற்கு வந்ததில் இருந்து தண்ணீர் கூட குடிக்கவில்லை. அவருக்கு தெரியும் தான் செய்தது அதிகமென்று. ஆனால் வேறு வழி அவருக்கு இருக்கவில்லை.
கூட்டத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. அதிலும் பகையை மறந்து பெண் கேட்டும் தனக்கு மறுத்ததை தாங்கமுடியவில்லை அவருக்கு.
“அம்மோவ்…” என அவரின் மடியில் தலைசாய்க்க போனவனை விட்டு தள்ளி அமர்ந்த அன்னம் அவனை அழுத்தமாய் பார்க்க,
“போதுமாலே, இதுக்காங்காட்டி என்ன அவமானோ வேணுமாக்கும்? சொல்லு…” என அவனிடம் எரிந்துவிழ,
“அம்மோவ், திட்டாதம்மோவ்…” என தர்மராஜ் முகம் கசங்கி பார்க்க,
“என்னலே ஒன்னிய சொல்லி சொல்லி வளத்தேன். எங்கிட்ட ஒத்த மக்கா ஒத்த வார்த்த பேச ரோசன பண்ணுவாக. இன்னிக்கு ஊர கூட்டி என்ன பேச்சு பேசிட்டாக…”
“அம்மோவ், இப்ப அங்கன பரிசம் போட்டுருப்பாக தான?…”
“ஏலே நா என்ன சொல்லுதேன். நீ என்னாலே பேசுத? அப்ப ஒங்கம்மா அசிங்கப்பட்டாலும் பரவால்ல ஒனக்கு. அதேன?…”
“இல்லம்மோவ், இல்லம்மோவ்…”
“நீயி ஒழுங்கா வளமயா இருந்துருந்தா நாம இப்படி ஒரு நெலமைக்கு வந்துருப்பமா? மொதவே ஒத்த வார்த்த எங்காதுல போட்டுருந்தா மதிப்பா கேட்டு கட்டி வெச்சிருப்பேனே? நீ செஞ்சுவச்ச வேலைக்கி…” என கோபப்பட்டார்.
அப்பொழுதும் தர்மராஜிற்கு நல்லவிதமாய் எடுத்து சொல்ல வேண்டுமென்று அவருக்கு தோன்றவே இல்லை.
தான் பெண் கேட்டு சென்றும் மறுத்துவிட்டாரே என்ற கோபமும், தன் மகனின் ஆசை நிராசையாகிவிட்ட துடிப்பும் மட்டுமே அவரிடம்.
அந்த கோபத்தை எல்லாம் மகனிடம் காட்டி அவனை திட்டி தீர்த்தவர் அப்படியே படுத்துவிட தாயின் அரவணைப்பும் இன்றி நினைத்த வாழ்வும் இல்லாமல் போய்விட்டதால் உண்டான அழுத்தம் அழுகையாய் வெளிப்பட சத்தமின்றி அழுதபடியே தரையில் படுத்து உறங்கியே போனான் தர்மராஜ்.
——————————————————–
மின்னொளி வீட்டில் மண்டபத்தின் உரிமையாளருக்கு போன் செய்து இரு நாட்களுக்கு மண்டபம் முன்பதிவு செய்துவிட்டனர்.
பேச்சுக்கள் நீண்டுகொண்டே இருப்பதை பார்த்த ராஜாத்தி உறங்கிக்கொண்டிருந்த மின்னொளியை எழுப்பி அவளுக்கு திருஷ்டி கழித்ததும் உறங்க விட்டார்.
அதன் பின்னர் பத்திரிக்கை அழைப்பிற்கு பெயர்களை வரிசைப்படுத்த நேரம் நடுநிசியை தாண்ட ஆரம்பித்தது.
“அட போதும்யா, மத்தத எல்லா நாளக்கி பேசிக்கலாம். செத்த ஒடம்ப சாச்சாதேன் விடியக்கறுக்க வேலய பாக்கமுடியு…” என அழகுப்பாட்டி சொல்ல காசியாத்தாவும் அதை அப்படியே பின்பற்றினார்.
அப்பொழுது தான் குணசாலி அவள் மகள் செவ்வந்தி உறங்கிவிட்டிருக்க அருளின் மடியில் இளவரசன் உறங்கியிருந்தான். அனைவரும் அப்படியப்படியே இருந்த இடத்தில் உறங்கி வழிய,
“செரி மாமோவ், நா பொறப்படுதேன். நாளக்கி வந்து மத்தத பேசிக்கலாம்…” என்று அருள் எழுந்துகொள்ள கணேசனும் எழுந்து குணசாலியை எழுப்ப அவளுக்கு கண்களை திறக்கவே முடியவில்லை.
“கணேசா புள்ளைங்க இருக்கட்டுமப்பா, இப்பவே பாதி சாமம் தாண்டிருச்சு. நீயும் இங்கன இருந்துட்டு நாளைக்கி போறதுதான?…” முருகய்யன் சொல்ல அவன் அருளை பார்க்க,
“இருந்து வாண்ணே…” என அருளும் சொல்ல,
“நீயும்தேன். பரிசம் போட்டு ராத்திரில போவியோ? காத்துக்கருப்பு அலையுமப்பு…” அழகுப்பாட்டி அவனை அனுப்ப முடியாதென மறுக்க,
“கெழவி பரிசத்த போட்டு இங்கன தங்க முடியுமாக்கும்? சுத்த கூறு வேணா? பாக்குதவே வாயிக்கு அவுலாவ நாந்தேன் கெடச்சேனா?…” என்று அருள் சத்தம் போட,
“லேய், அவுக சொன்னா காரணமத்தா போகும்? கம்மின்னு இருலே. அங்கன மொடக்குதத இங்கனவே மொடக்கேன். விடியக்கறுக்குல கெளம்பிக்க…” என காசியாத்தா சொல்ல,
“கேளு சோதி, இந்நேரம் எல்லைய தாண்டுதது செரியில்ல. மாலக்கழுத்து வேற…” ராஜாத்தி அவனிடம் இறைஞ்சுவதை போல பேச,
“ஏம்லே இத்தன பேரு சொல்லுதாக, என்னாலே இடும்பு பண்ணுத? செரின்னேன்…” என கணேசன் சொல்ல,
“ஒனக்கென்ன ஆடா மாடா? ஒண்ணுமில்ல. எனக்கு அப்பிடியா?…”
“யே அதேன் ஒந்துடுப்பு இருக்கானுல சுப்பு போட்டவேன். அவன ஒத்த நாளு பாக்க சொன்னா மாட்டேன்னா சொல்ல போறியான்?…” காசியாத்தா இப்படி சொல்லிவிட,
“இந்நேரம் அவென் ஒறங்கிருக்க மாட்டானாத்தா?…”
“ஒன்னிய கூட்டிப்போவ மட்டும் ஒறங்காம இருப்பானாக்கும்? ஏலே என்ன சலம்பலா?…” காசியாத்தாவுக்கு கோபம் வந்துவிட்டது.
“ஆமாய்யா, இப்ப போவனுமின்னாலும் அவேன வர சொல்லித்தேன் நீ கெளம்பனு. போயி நீ என்னத்த ஒறங்குவ? அதுக்கு கொஞ்சநேரமாச்சு ஒறக்கத்த கண்ணுல காட்டு இங்கனவே…”
முடிவாய் முருகய்யன் சொல்லவும் இடுப்பில் கை வைத்தபடி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவனின் விழிகள் கடைசியில் அழகுப்பாட்டியின் அருகே படுத்திருந்த மின்னொளியிடம் வந்து மையம் கொண்டது.
“இம்புட்டு நடக்குது ஒறக்கத்த பாரேன்…” என முணுமுணுக்க,
“அவ எந்திச்சா இம்புட்டு நேரமா பேசுனீங்கன்னு வச(திட்ட) ஆரம்பிச்சுடுவா. அதுக்கு கம்மின்னு ஒறங்கிடுவே தம்பி…” என கணேசன் கிண்டல் பேச,
“ஒன்னிய ஆரு என்னியவே கெவனிக்க சொன்னா? போலே சோலிய பாத்துக்கிட்டு…” என அவனிடம் சத்தமில்லாமல் சண்டை போட்டவன் கணேசனின் சிரிப்பில் தலையை கோதிக்கொள்ள,
“நீ பேசுதியா இல்ல நா பேசவா?…” காசியாத்தா சொல்ல,
“அட இருத்தா அவனுக்கு போன போடுதேன்…” என சொல்லி சற்று தள்ளி வந்து சுப்புவிற்கு அழைக்க அவன் விழித்து தான் இருந்தான்.
“லே ஒறங்கிட்டியா?…”
“ஏதேது ஒறங்கிட்டியாவா? எந்தூர்லலே ஒறங்குனவேன் போன எடுத்துருக்கியான்?…” என சுப்பு கடுப்பானான்.
பின்னே குடும்பமே போக வர ஆட்டோவிற்கு தன்னிடம் சொன்னாலும் அங்கே என்ன நடக்கிறதென ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு.
நண்பனான அருள் எப்படி மின்னொளியை கட்டிக்கொள்ள சம்மதித்தான் என்றும் தெரியவில்லை. இவனானால் எதுவும் அவனிடம் பகிர்ந்துகொள்ளாதது வேறு கோபம். அவனின் கோபம் புரிந்தவனாக,
“ஒனக்கு எல்லாத்தையும் ஒடனே ஓதிடனுமாக்கும்? சொல்லுதத கேளுவே…” என அதட்ட,
“மாட்டேன்னா விடுருவியோ? அம்புட்டு நல்லவனாடே நீயி?…” சுப்புவும் பதிலுக்கு எகிற,
“செரி வெக்கிதேன்…” என அருள் போனை கட் பண்ணி விட உடனடியாக சுப்பு லைட்துவிட்டான்.
“சொல்லித்தொலலே. இல்லனா ஒறக்கமே அண்டாது…” என்றதும் தான் அருள் விஷயத்தை சொல்ல,
“அப்ப இன்னிக்கு அங்கதேன் ரா தங்கலா?…” என ஒரு மாதிரி குரலில் வினவ,
“ஏலே…” அருள் அதட்ட,
“தலிவரு திமிங்கலம் தானுங்கோ. நீ அசத்துலே…” என சமயம் பார்க்காது சுப்பு கேலி செய்ய அருளை பார்த்தபடியே இருந்த வீட்டினர் அவன் பேசுவது கேட்காவிட்டாலும் முகத்தையே கவனித்தனர்.
“செருப்பு பிஞ்சிரும்லே. வாய மூடிட்டு மொடக்குலே…” என எரிந்துவிழ பட்டென்று போனை வைத்துவிட்டான் சுப்பு. அருள் வரவும்,
“செரி நா வெளில கயித்துக்கட்டில்ல படுத்துக்கறேன்…” என அருள் சொல்லவும் அவன் தங்க சம்மதித்ததே போதும் என நினைத்த முருகய்யன்,
“ராசு ரெண்டுபேத்துக்கும் கொஞ்சம் புதுசாட்டம் இருக்க சாரத்த (லுங்கி) எடுத்தா…” என்றதும் வேகமாய் உள்ளே சென்றார் ராஜாத்தி.
அழகுப்பாட்டி மின்னொளியின் தலையை தலையணைக்கு மாற்றியிருக்க அவளருகே இரண்டு பாயை தனக்கும் காசியாத்தாவுக்கும் விரித்து படுக்கும் முன்னர்,
“சோதி வெளில அந்த வேப்பல கொலய ஒடிச்சிட்டு வாயா…” என்றதும் அவனும் சென்று ஒடித்து வர அதனை மின்னொளி தலைக்கு மேல் வைக்க ராஜாத்தி ஒரு இரும்பு கம்பியை கொண்டுவந்து அதனையும் வைத்துவிட்டு செல்ல,
“இவளுக்கு இம்புட்டு சூதானமாக்கும்” என கிண்டலாக நினைத்துகொண்டு கைலியை மாற்றி வந்தவன் வெளியே சென்று கட்டிலை எடுத்து போட்டு படுத்துக்கொண்டான்.
“ராசு போர்வ கொண்டாத்தா. இத்த கூட சொல்லனுமா ஒனக்கு?…” என வாங்கிக்கொண்டு முருகய்யன் வாசலுக்கு செல்ல,
“என்ன மாமோவ், எதுனாங்கட்டி சொல்லனுமா?…” தனியாக பேச வருகிறாரோ என நினைத்து இவன் கேட்க,
“இல்லைய்யா, கொசு ஆஞ்சிபிடும், அதேன் போர்வ கொண்டாந்தேன்…” என்றதும்,
“ஒத்த கொரலு குடுத்தா வரமாட்டேனாக்கும்?…” என வாங்கிக்கொண்டவன் மீண்டும் படுத்துக்கொள்ள மரத்தடியில் காற்று சிலுசிலுவென வீசியது.
கண்ணை மூடியதுமே உறங்கிவிட்டான் அருள். என்றைக்குமே படுத்தவுடன் உறக்கம் வந்துவிடும் வரம் வாய்க்கப்பெற்றவன்.
அவனை பார்த்துவிட்டு பின்பக்கம் தொழுவத்திற்கு சென்றவர் அங்கும் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர அவரை காணாது தேடிக்கொண்டு வந்தார் ராஜாத்தி.
“இங்கன இந்நேரம் என்ன பண்ணுதீக?…” என கேட்க,
“ச்சு சோதி ஒறங்குதான். மெல்ல பேசுத்தா…” என்ற முருகய்யன் வ்கமாய் வீட்டுக்குள் சென்றார்.
அங்கே இரண்டாவது கூடத்தில் மின்னொளி அருகே அழகுப்பாட்டியும், காசியாத்தாவும் படுத்திருக்க அவர்களை ஒட்டியபடி இன்னும் ஒரு பாய் விரிக்கப்பட்டு அங்கே இளவரசன் உறங்கிக்கொண்டிருந்தான்.
சற்று தள்ளி அழகுப்பாட்டிக்கு வாங்கியிருந்த கட்டிலில் குணசாலியும் அவள் பெண்ணும் படுத்திருக்க அதன் அருகே கீழே கணேசன் உறங்கிக்கொண்டிருந்தான்.
“அந்த கட்டிலு வெறுமனே தான இருக்கு? அங்கன மொடக்கவேண்டி தான இவேன்? நீ சொல்லலையா?…”
“நாஞ்சொன்னேன், அதுதேன் இங்கன படுக்குதேன்னு சொல்லிருச்சு. அதேன் ஒங்களுக்கு அங்கனவே விரிப்ப போட்டுட்டேன். எல்லாரு கூடத்துல மொடக்க நா மட்டு என்னாத்துக்கு உள்ளார? அதேன்…” என்றதும்,
“அந்த புள்ளக்கு மாத்து சீல?…”
“அதுக்குத்தேன் எழுப்புனேன். அவுக வேற ஆளு சீலய உடுத்த மாட்டாவுகளாம். அதேன் அப்பிடியே ஒறங்குதாக…” என சொல்ல,
“செரி விடுத்தா…” என்றவர் கூடத்தை பார்த்துவிட்டு சற்று தள்ளி பின் வாசல் புறம் அழைத்துவந்தார் ராஜாத்தியை.
“ராசு எனக்கு ஒரு ரோசன தோணுது புள்ள…” என மெல்லிய குரலில் சொல்ல,
“சொல்லுங்களேன்…” என்றவர் கதவை திறந்து வெளியே கிணற்றடிக்கு செல்ல அங்கிருந்தே தொழுவத்திற்கும் சென்றுவிடலாம். படியில் அமர்ந்துகொண்டு,
“இப்ப சொல்லுங்க…” என்றார்.
“இல்ல சோதி இப்பவே வெளியிலதேன் ஒறங்குதான். கலியாணத்துக்கு பொறவு வந்து போறப்ப அவுகளுக்கு ஒத்த ரூமாச்சும் வேணாமா? நீ என்ன சொல்லுத?…”
“அதேன் இன்னொரு அற இருக்குல?…”