“புள்ள அத தவுர வேற ஆரையும் அந்த அறக்குள்ள விடமாட்டிக்குது. எதுக்கு அத்த சங்கடத்த குடுத்துக்கிட்டு?…”
“என்ன செய்யனுன்னு நெனைக்கிதீக? அத்த சொல்லுங்க…”
“மச்சு எடுத்தா என்னங்கறேன்?…” என கேட்க,
“ஆத்தே அது ஒடனேங்காட்டி முடியுமா? எம்புட்டு சோலி?…”
“த்ச்சு த்தே, எம்புட்டு நாளாகிப்புடும்? ஒரு மூணு வாரமாவுமா?…”
“கட்டடத்த பாப்பமா? இல்ல கலியாண சோலிய பாப்பமா? மொத விசேசம் முடியட்டு…” ராஜாத்தி சொல்ல,
“அதேன் ஆத்தா இருக்குல இங்கன. பாத்துக்கிடாதா? சோதிட்ட சொல்லி ஆள கொண்டார சொன்னா அதுபாட்டுக்கு ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருக்கட்டு…”
“இப்ப என்ன அவசரங்கறேன்?…”
“அட கூறுகெட்டவளே, கலியாணத்தன்னிக்கு ராவுக்கு தங்கனுமில்ல…”
“அது எந்தம்பி வீட்டுலதேன? நீங்க கெடந்து என்னத்துக்கு துள்ளுதீரு?…”
“மறுவீட்டுக்கு வருவாகள…”
“நம்ம இருக்க ரூம…” என்றவரை பேசவிடாமல்,
“நாளிக்கு ஆள வரசொல்ல போறே. அம்புட்டுத்தேன்…” என அதற்கு மேல் வாக்குவாதம் புரியாமல் அவர் எழுந்து சென்றுவிட ராஜாத்திக்கு தான் ஆயாசமாக இருந்தது.
“இந்த மனுசென் கலியாணம் முடியுமின்ன என்னிய கிறுக்காக்கிப்பிடும்…” என அங்கலாய்த்தலுடன் அவரின் பின்னே சென்று பின் வாசலை மூடினார்.
கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு மேல் தான் அனைவருமே உறங்க ஆரம்பித்தனர். அதனால் அடித்துப்போட்டதை போல உறங்க வழக்கம் போல விடியற்காலையில் கண்விழித்துவிட்டாள் மின்னொளி.
எப்பொழுதும் வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பே எழுந்து குளித்துவிடுவது அவளது வழக்கம் என்பதால் அன்றும் வழக்கமான நேரத்தில் விழிப்பு தட்டியது.
கண்ணை கசக்கிவிட்டு பார்த்தால் லேசான விளக்கொளியில் அனைவருமே கூடத்தில் உறங்குவது தெரிந்து மெல்ல சத்தம் எழுப்பாமல் எழுந்து பார்த்தவள் பார்வை அங்கே அருளை காணாமல் தேடியது.
“பரிசம் முடிஞ்சன்னிக்கு இங்கனே ஒறங்குவானாக்கும்? போயிருப்பான்” என நினைத்துக்கொண்டு தன் தாயின் அறைக்குள் சென்று தன்னுடைய மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு பின்னால் குளித்துவிட்டு வர சென்றாள்.
குளித்து முடித்து மீண்டும் அறைக்குள் வராமல் பின்பக்கத்தில் இருந்தே தொழுவத்திற்கு வந்தவள் மாடுகளை பார்த்துவிட்டு அதற்கு தீவனத்தை எடுத்து போட்டவள் முன்வாசலுக்கு வந்தாள்.
கையில் வாசல் தெளிக்க சாணம் கலந்த தண்ணீரும், இன்னொரு கையில் பெருக்குமாறும் சகிதமாக வர, அங்கே கட்டில் போடப்பட்டிருப்பதை கண்டதும் வேகமாய் சென்று பார்க்க இவளின் கொலுசொலியில் கண்விழித்துவிட்ட அருள் வேண்டுமென்றே கண்ணை திறவாது உறங்குவதை போலவே பாசாங்கு செய்தான்.
லுங்கியும், உள் பனியனுமாக இடுப்புவரை போர்த்திய போர்வையுடன் ஒரு கையை தலைக்கு முட்டுக்கொடுத்து அவன் படுத்திருந்த விதத்தை பார்த்தவள்,
“சிடுமூஞ்சி ஆளப்பாரு. ஒறங்கவா செய்யுதா? இரு ஒன்னையும் கூட்டி குமிக்குறேன்…” என சத்தமாக சொல்லி திரும்ப சட்டென அவளின் கையை பிடித்து நிறுத்திய அருள் எழுந்துவிட்டான்.
“கொஞ்சமாச்சும் ஒறங்குதானேன்னு நெனப்பிருக்காடி? கூட்டி குமிப்பியோ?…” என அவளின் கையை பின்பக்கமாய் வளைத்து நிறுத்த,
“நீ மட்டு? அதேன் நா வாரேன்னு தெரியுதுல. அசையாம படுத்துக்கெடந்தா நீ ஒறங்கலன்னு கண்டுபிடிக்கமாட்டேனா?…”
“ராங்கி, தெரிஞ்சும் பேசுதீனா எம்புட்டு சவுடாலு ஒனக்கு? கொஞ்சமாட்டும் பயமிருக்கா?…” என முறைக்க,
“பயந்து?…” என நமுட்டு சிரிப்பு சிரித்து,
“வாங்கண்ணே…” என வெளிவாசலை பார்த்து சற்று குரலை உயர்த்த பட்டென அவளின் கையை விட்டுவிட்டு பின்னால் நகர அது முடியாமல் கட்டிலில் விழுந்தான்.
அவனின் படபடப்பை பார்த்தவள் சத்தமின்றி வாய்பொத்தி சிரிக்கவும் தான் யாரும் வராமல் தன்னை போக்கு காட்டியிருப்பது புரிந்தது.
“ஒரு மார்க்கமாத்தேன் இருக்க. இரு வெச்சிக்கறேன்…” என கோபத்துடன் அவன் எச்சரிக்க அதனை கண்டுகொள்ளாமல் மின்னொளி வாசலை பெருக்க ஆரம்பித்தாள்.
கட்டிலை தூக்கி மடக்கியவன் திண்ணையில் கொண்டு சாய்த்து நிறுத்திவிட்டு வாசல் விளக்கை ஒளிரவிட்டு மரத்தடியின் அருகே இருந்த தொட்டியில் முகத்தை கழுவி கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஒரு துண்டை எடுத்து முகத்தை துடைத்தபடி மின்னொளியை பார்த்தான்.
என்று போல் பாவாடை தாவணி தான். தலைக்கு ஊற்றியிருப்பாள் போலும், இன்னும் அவிழ்த்து துவட்டாமல் துண்டை கொண்டு கொண்டையிட்டு இருந்தாள். தலையின் ஈரம் முதுகையும், கழுத்தையும் நனைத்திருக்க பார்த்தபடி நின்றான்.
குப்பைகளை கூட்டி அள்ளி ஒரு கூடையில் போட்டவள் வாளியில் இருந்த சாணம் கலந்த தண்ணீரை கொண்டு வாசல் தெளிக்க ஆரம்பிக்க ஊர் செல்லும் எண்ணமின்றி திண்ணையில் அமர்ந்துகொண்டான்.
ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி துண்டை தோளில் போட்டு அவன் அமர்ந்திருக்க மின்னொளி ஒரு கோலத்தை போட்டுவிட்டு இவனிடம் வந்தாள்.
“இன்னிக்குத்தேன் என்னிய பாக்குதியா?…”
“நெனப்புத்தேன், உள்ளார போனுமின்னா எல்லாரு ஒறங்குதாக. அக்கா யே வேட்டி சட்டைய எங்க வச்சுதோ? அத்த எதுக்கு எழுப்பனுமேன்னு ஒக்காந்துருக்கேன். இங்க ஒன்னியத்தவுர ஆரு இருக்கா. அதேன் நீ வேல பாக்குதத பாத்துக்கிட்டு ஒக்காந்துட்டேன்…”
“நா போயி எடுத்தாரட்டா?…” என மின்னொளி கேட்க,
“அதெல்லா ஒன்னும் வேணா. செத்த ஒக்காரு. என்னிய எழுப்புனமாரி ஓங்கொலுசு அவுகளையும் எழுப்பிரும். இன்னும் செத்த ஒறங்கட்டும்…” என சிரிக்காமல் பேச காலில் இருந்த கொலுசை அவள் கழற்ற போக,
“ந்தா என்னத்துக்கு கழட்டுறவ? ஒடனே போயி வேட்டிய கொண்டாறனுமா? வேணான்னு சொன்னாலு கேட்காம. ப்ச், இப்ப என்ன நா கெளம்பவா? செரி போறேன்…” என வேகமாய் எழுந்துகொண்டான் அருள்.
தன்னை அனுப்ப பார்க்கிறாள், அவளுக்கு தான் அங்கிருப்பது விரும்பாமல் தான் தனது உடையை எடுத்து கொடுத்து தன்னை அனுப்பிவிட பார்க்கிறாள் என கோபம் கொண்டான். அவனின் கோபம் அவளுக்கும் பற்ற,
“யோவ், நில்லு. சும்மா என்னத்துக்கு வெடுக்குங்கற? பாலு கறக்க வாரதுக்கு இன்னு நேரமிருக்கே. ஒனக்கு குடிக்க எதாச்சும் கொண்டாறலாமின்னுதேன் இத்த கழட்டுனேன். நீ சிலுப்பிக்கற. போன்னா போ. ஆரு வேணாங்கறது…” என்று மின்னொளியும் குரலுயர்த்தாமல் அவனை போலவே எகிறி கொலுசை கழற்றி அவன் மீது தூக்கி வீசியவள் உள்ளே சென்றுவிட்டாள்.
மின்னொளி சென்றதும் அருளுக்கு தன் மீதே கோபமாகியது. உண்மையில் அவளை எப்பொழுதும் தானே பேசி பேசி கோபமூட்டி அவளிடம் வாங்கிக்கட்டிக்கொள்வான்.
இன்றும் அவனாக ஒன்றை நினைத்து பேச அவளை கடுப்பேற்றிவிடோமே என கவலை கொண்டவனின் மனம் முதல்நாள் இரவு அவள் தன்னிடம் பேசியவற்றை நினைத்து பார்த்தது. இத்தனைக்கு பிறகும் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என எப்படி நினைக்கமுடியும் என மனது அவனை குற்றம் சாட்டியது.
தன் மடியில் ஒன்றும் காலுக்கருகே ஒன்றுமாய் கிடந்த கொலுசை எடுத்து கையில் வைத்தவனின் கை அத்தனை குளிர்ந்து. கையில் பிடித்தபடி கண்ணை மூடி சாய்ந்துகொண்டான் சுவற்றில்.
அவனுக்கே தெரியவில்லை தனக்கு இத்தனை கோபமும் ஏன்? இந்த படபடப்பு எதற்கென?.
தன் மனதின் குழப்பம் அவனை இப்படி பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்க நாசியருகே கமகமவென ஒரு வாசனை. மின்னொளி தான் சுட சுட கடும் டீ போட்டு கொண்டுவந்திருந்தாள்.
அதில் சுக்கு, திப்பிலி, இஞ்சி, மல்லி என தட்டிபோட்டு கருப்பட்டி சேர்த்திருக்க வாசனையே வயிற்றில் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பியது. நிமிர்ந்து பார்த்து நேராக அமர்ந்தவன் அவளிடம் அதனை வாங்கிக்கொண்டான்.
அதிகாலை குளிருக்கு அது தேவையாய் இருக்க தொண்டைக்குள் அமிர்தமாய் இறங்கியது.
“இத்த போடதேன் போனியாக்கும்? நா கேட்டேனா?…”
“ஒனக்கு யாரு தனியா போட்டா? எனக்கு போட்டேன். அதேன் நீயும் இருக்கியேன்னு கொண்டாதேன். வேணாமின்னா குடிக்காம கீழ வெச்சிட்டு ஒக்காரு…”
அப்பொழுதும் வைத்துவிட்டு கிளம்பு என சொல்லாமல் வைத்துவிட்டு உட்கார் என அவள் சொல்வது புரிந்துகொண்டவன் முகத்தில் இளகிய புன்னகை.
எதிர் திண்ணையில் அவனை போலவே சுவற்றில் சாய்த்து அவள் அமர்ந்திருக்க அருள் எழுந்து அவளுக்கெதிரே தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அந்த பானகத்தை அருந்தியபடி இருக்க முதலில் குடித்து முடித்த அருள் கொலுசை அவளிடம் நீட்ட,
“ஒன்னுந்தேவையில்ல. ஒஞ்சோலிய பாரு. என்னத்துக்கு இத்த நா மாட்டி ஒங்கக்கா ஒறக்கம் போவனும்?…” என பிடிவாதமாய் சொல்ல,
“வாயாடி பேசி பேசியே என்னட்ட வாங்கிக்கட்டிக்கற நீ…” என இவன் முறைக்க,
“அதேன் இன்னும் கட்டிக்கவே இல்லையே. ஒத்த சங்கிலி போடவே ஒனக்கு ஒடம்பு ஒதறுது. இதுல கட்டுதாகலாம்…” என நொடிக்க அருள் வாயில் கையை வைத்துவிட்டான்.
“ஆத்தாடி, அடிப்பாவி, என்ன பேச்சு பேசுத?…” என வாயை பிளக்க,
“இந்தா நா தாலி கெட்டிக்கறத சொன்னே. நீயா எதாச்சும் குறுக்கா நெனைக்காத…” என்றவள் குரல் உள்ளடங்கி போக அருளுக்கும் புன்னகை.
அதன் பின் மின்னொளியின் காலை இழுத்து பிடித்தவன் கொலுசை அவனே அணிவித்தான். மின்னொளி வேண்டாம் என சொல்லவே இல்லை. அவன் போட்டுவிடுவதை ஒருவித லயிப்புடன் பார்த்தவள்,
“ஒனக்கு இதெல்லாந்தெரியுமா? அப்ப நித்தம் வீசுனாலும் நீயே மாட்டிவிடுவ…” என கேலி பேச,
“வீசுவே நீயி. கொழுப்புடி…” என அவளை முறைத்தான் அருள்.
அதற்குள் பால்காரர் வந்துவிட மின்னொளி எழுந்து சென்றாள். அவள் சென்றதும் வேப்பமரத்தின் குச்சியை ஒடித்தவன் வெளி வாசல் தடுப்புக்கு உள்ளே நின்று பல் துலக்கியபடி தெருவை பார்த்துக்கொண்டு நின்றான்.
சுப்பு இருப்பதால் அந்த கவலையின்றி இவன் நிதானமாகவே இருந்தான். அனைவரும் எழுந்து வரவும் சுப்புவை வரசொல்லி கிளம்புவோம் என நினைத்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
தூரத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தர்மராஜ் மின்னொளி வீட்டின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு எட்டி எட்டி பார்க்க இன்னமும் இருள் பிரியாதிருந்ததால் ஓரத்தில் தடுப்பிற்கு உள்பக்கம் அருள் நிற்பதை அவன் கவனிக்கவில்லை.
மின்னொளி இருக்கிறாளா என தேடியபடி தர்மராஜ் நிற்க அருளுக்கு அத்தனை கோபம். சட்டென வாயை கழுவிவிட்டு வந்த அருள்,
“என்ன தருமா பாலு வாங்க வந்தியா?…” என கைலியை தூக்கி மடித்தபடி கழுத்தை சுற்றி போட்டிருந்த துண்டை எடுத்து முறுக்கிக்கொண்டு அவன் வந்து நிற்க தர்மராஜிற்கு தூக்கிவாரி போட்டது.
“இல்ல வந்து…” என அவன் திணற,
“அதேன் எதுக்கு வந்தேன்னு கேக்குதேன். சொல்லுலே…” என அருள் இப்பொழுது குரலை கடினமாக்கியிருக்க,
“பால் பால் கறக்க…”
“அதுக்கு இங்கன மொதலருந்தே ஒத்தாளு வாராருல. ஒனக்கு எதுக்கு அந்த சோலி. மொத ஒவ்வீட்டு மாட்டுக்கு கற. பொறவு ஊருக்கு கறக்கலா…” என வாசலை மறித்தபடி அருள் நிற்க தைரியத்தை வரவழைத்தவனாக,
“மின்னுவ பாக்க…” என சொல்லுபவனை அறையவேண்டும் போல வந்தது அருளுக்கு.
“ஆரு, மின்னுவா? எம்பொண்டாட்டியவா கேக்குத?…” என்ற அருள்,
“அவள என்னன்னு நெனச்ச? மின்னுன்னு எம்முன்னாடியே சொல்லுத? ஒடம்புல உசுரு மிஞ்சாதுலே…” என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்.
ஆனால் தர்மராஜோ இப்பொழுது அவளிடம் பேசியே தான் தீருவேன் என்பதை போல சைக்கிளை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு பிடிவாதமாய் நின்றான்.