கடல் – 17
தர்மராஜ் நின்ற விதமும், அவன் பார்வை தன்னை தாண்டி சென்ற திசையும் அருளை மேலும் கோபமுற செய்ய,
“அப்ப ஒத்த வார்த்தல சொன்னா கேக்கமாட்ட? அப்பிடித்தான?…” என்றவன் அவனை அடிப்பதற்கு நெருங்க,
“இங்காருண்ணே நா அந்த புள்ளக்கிட்ட ஒத்த வார்த்த பேசிப்போட்டு போயிடுதேன். பொறவு பொறவு…” என அருள் அடித்துவிடுவானோ என பயந்துகொண்டு அவன் பின்னே நகர பால் வாங்குவதற்காக நான்கைந்து பெண்களும், இரண்டு ஆண்களும் அங்கே வந்துவிட,
“ஏலே ராசு இங்கன என்னவே ஒனக்கு சோலி…” என ஒருவன் கேட்க,
“மின்னு…” என்ற தர்மராஜிடம்,
“அடிங், ஒன்னிய நேத்தே நாலு சாத்து சாத்தி தொரத்திருக்கனு. அடியாத மாடு பணியாதுன்னி இப்பத்தேன் தெரியுது…” என அவன் பாய்ந்தேவிட பயத்தில் அருள் அடிக்கும் முன்பாக பின்னால் நகர்ந்தவன் சைக்கிளை கீழே போட்டு அதன்மீதே விழுந்தான் தர்மராஜ்.
“எப்பா சோதி சோதி நில்லுய்யா…” என ஒருவன் வந்து அருளை பிடித்துக்கொள்ள மின்னொளி தொழுவத்தில் இருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தாள் இங்கு நடக்கும் கலவரத்தை.
இந்த சத்தத்தின் சலசலப்பில் ராஜாத்தி விழித்து வந்து பார்த்துவிட்டு பதறி வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்ப வெளியே முதல் ஆளாய் வந்த கணேசன் ஓடிவந்து கீழே கிடந்த தர்மராஜை தூக்கி,
“தட்டுக்கெட்ட பயலே…” என ஒரு அறை விட,
“அவனே சவலப்பிள்ளமேனிக்கிதேன் இருப்பியான். அவன போயி அடிச்சுக்கிட்டு…” என அழகுப்பாட்டி வந்துவிட குணசாலி அருகிலேயே வரவில்லை.
முருகய்யன் வந்த வேகத்தில் அடித்துவிடுவாரோ என பயந்துபோய் நின்றான் தர்மராஜ். அவரோ வந்ததும் கணேசனிடமிருந்து அவனை விடுவித்து கையெடுத்து கும்பிட்டுவிட்டார்.
“போதுஞ்சாமி இதுக்குமேல அசிங்கப்பட எம்வொடம்புல தெம்பில்லைய்யா. இந்த உசுரு எம்மவ கழுத்துல தாலியேறுற வரைக்காச்சும் இருக்கனுமின்னு இப்பத்த இருந்து வேண்ட ஆரம்பிச்சுட்டேன். கொன்னுப்புடாதய்யா…” என்றவர்,
“வேணா ஒங்காலுல விழவா சாமி…” என குனியப்போனவரை பிடித்து தூக்கி நிறுத்திய அருள்,
“ஏலேய்ய்ய் இந்த நிமிசோம் நீ இங்கன இருந்து போனேன்னா பொழச்சுப்ப. இல்ல ஒன்னிய வகுந்துட்டுத்தேன் எனக்கு பொறவு சோலி…” என நாடி நரம்புகள் துடிக்க அவன் கத்திய கத்தலில் தட்டு தடுமாறி தர்மன் சைக்கிளை தூக்க அவனால் முடியாமல் போனது.
கீழே சைக்கிளின் மேல் விழுந்ததனால் நடு முதுகிலும், வேகமாய் பின்புறமாக கையை ஊன்றியதால் இரு கையிலும் வலி எடுக்க கண்ணீர் கட்டிவிட்டது அவனுக்கு.
“அவேனால முடியலவே. பொறு நா அன்னத்துக்கு சொல்லுதேன்…” என ஒருவர் சொல்ல,
“வேணா, வேணா அம்மோவ் வேணா, ஐயோ வேணா…” என பதறியவனை அங்கிருந்தவர்கள் பரிதாபமாய் பார்த்தார்கள் என்றால் ராஜாத்தியும், அழகுப்பாட்டியும் பயத்துடன் பார்த்தனர்.
போகும் வழியெங்கும் அதனை சொல்லிக்கொண்டு வேறு ஒருவரையும் அருகே நெருங்கவிடாமல் அவன் செல்ல தெருவே வேடிக்கை பார்த்தது அவனை.
“யத்தே இவேன் நடவொடயே செரியில்லியே. நெஞ்சுக்குழிக்குள்ள என்னவோ இடிக்குதே…” என ராஜாத்தி சொல்ல,
“எம்புத்திக்கு அதேன்த்தா அம்புடுது. ஆத்தே…” என நெஞ்சில் கைவைத்து நிற்க அருளுக்கு இவர்கள் பேசுவது கேட்டது. தலைகுனிந்து உடல் குலுங்க முருகய்யன் அருளின் தோளில் சாய்ந்து நிற்க,
“ஒமக்கென்ன கோட்டியா மாமோவ், அவென் காலுல போய் உழுவறேங்கற? நீறு மட்டு விழுந்துருந்தீறு அவென் காலால நடக்கற கடேசி நாளு இதுவாத்தேன் இருந்துருக்கும்…”
“ஏலே சோதி எல்லாத்தியு வெட்டவெளில பேசனுமா? உள்ளார போங்க…” என காசியாத்தா சத்தம் போட கணேசன் முருகய்யன் கையை பிடித்து ஆறுதல் சொல்லியபடி நடக்க,
“சோதி, எனக்கு திடுக்குங்குதுடா…” என ராஜாத்தி முகம் இன்னும் தெளியாமல் இருக்க பயத்துடன் அவனை பார்க்கவும்,
“இந்தா நா என்னத்துக்கு இருக்கானாம்? போ போயி அந்த மனுசன பாரு…” என்று சொல்லி தமக்கையின் தலையில் இரண்டு தட்டு தட்டி தடவியவன் ராஜாத்தி செல்லவும் அழகுப்பாட்டியை பார்த்தான்.
“ஒனக்கென்ன கெழவி? நீயும் பயந்துக்கிட்டியா?…” என குரலை இலகுவாக்கும் விதமாய் கேட்க,
“ஆமாய்யா, ஆனா ஒன்னிய நெனச்சுத்தேன். எனக்கு பயந்து வருது. என்ன செய்ய சொல்லுத?…” என அவரின் உண்மையான பயத்தை சொல்ல,
“என்ன கெழவி அவன சாச்சிட்டு நா கம்பியென்ன போயிருவேன்னு நெனச்சு கலங்குதியோ?…”
“சோதி…” என அவனின் கையை பிடித்துக்கொண்டவரின் கண்ணீரை துடித்தவன்,
“ஒம்பேத்தி கையாள கஞ்சி குடிக்கனுன்மின்னு எம்விதிய இந்த சல்லிப்பய மாத்திப்புடுவானா? இதுக்கு எதுக்குத்தா வெசனப்படுத?…” என சமாதானம் செய்தவனின் புன்னகை ஏதோ ஒருவிதத்தில் ஆறுதல் தந்தது அழகுப்பாட்டிக்கு.
“நெசமாத்தேன் சொல்லுதியா?…”
“யே ஒத்த அடிக்கு தாங்குவானா அந்த பய. இப்ப இவன கவனிக்கறத உட்டுட்டு சோலிய பாப்போமத்தா. போ போயி ஒம்மவன தேத்து. அவருதேன் ஒடஞ்சி கெடக்காரு இவேன் செஞ்ச கோட்டித்தனத்தால…” என்றதும் அழகுப்பாட்டி செல்ல வாசலில் பால் வாங்குவதற்காக வெளியே நிற்பவர்களை பார்த்தவன்,
“என்ன? பாலு ஒருத்தருக்கும் வேணாமோ?…” என கேட்டதும் தான் உள்ளே செல்வோமா வேண்டாமா என நின்றவர்கள் அவன் கேட்டதும் அமைதியாக உள்ளே வந்து திண்ணையருகே நின்றனர்.
இவை அனைத்தையும் பார்த்து நின்ற மின்னொளி பால் கறந்து நுரையுடன் நிறைந்திருந்த வாளிகளை தூக்கிக்கொண்டு வர அவளிடம் சென்றவன்,
“நீ போ புள்ள. போயி அளந்து ஊத்த எடுத்து வெய்யி. இத்த நா சொமந்தாரேன்…” என அவளிடம் வாங்கிக்கொண்டவன் பாலை கொண்டு வந்து திண்ணையில் வைத்துவிட்டு அவர்களுக்கு தனியாக கறந்த பாலை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
“எக்கா இத புடி. மூலைக்கி மூல ஒக்காந்தா சோலி ஆவுமா. போயி எல்லாருக்கு காப்பிய போடு…” என அதட்டல் போட முருகய்யன் அருகே அமர்ந்திருந்த ராஜாத்தி எழுந்து அவனிடமிருந்து பாலை வாங்கிக்கொண்டு சென்றவர்,
“லே சோதி, மின்னு…”
“வெளியில பால ஊதிக்கிட்டு இருக்கா…” என்றவன் தனது சட்டையை வாங்கி போட்டுவிட்டு போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
சுப்புவிடம் பேசியவன் பத்துமணி போல் ஆட்டோவை எடுத்துக்கொண்டு வர சொல்லிவிட்டு மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்தான்.
அப்பொழுதுதான் லேசாய் இருள் விலகி சூரியன் வெளியே வந்து வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.
பால் வாங்க வந்தவர்கள் அனைவரும் அருள் இருப்பதை பார்த்துவிட்டு என்ன ஏதேன கேட்காமல் அமைதியாய் சென்றனர். இல்லை என்றால் ராஜாத்தியை கூப்பிட்டேனும் ஆறுதல் சொல்வதை போல பிரச்சனையை பேசி பேசி கவலையை கூட்டியிருப்பார்கள்.
மின்னொளியிடம் சட்டென அப்டி பேசிவிட முடியாது. ஆனால் ராஜாத்தி கொஞ்சம் முகதாட்சண்யம் பார்க்க கூடியவர் தான் என்பதால் அவரிடம் பேசுவார்கள்.
எப்பொழுதும் அருள் என்றால் பயம். நேற்றும், இன்றும் அவனின் அதிகபட்ச கோபத்தை பார்த்தவர்கள் வாயை திறக்கவே இல்லை.
வரவேண்டியவர்கள் ஓரளவு வந்து சென்றுவிட இன்னும் நான்கைந்து பேர்தான். மின்னொளி அவர்களுக்காக அமர்ந்துகொண்டு வாங்கி சென்றவர்களின் கடன் கணக்கை எழுதி வைத்துக்கொண்டிருந்தாள்.
இதில் பாதி பணம் தந்து மீதியை பின்பு தருகிறேன் என்றவர்களையும் கவனமாக குறித்து, கொடுத்ததை கழித்துக்கொண்டு அமர்ந்தவள் நோட்டை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க அருளின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.
என்னவென கேட்பதற்கு வாயை திறக்கும் முன் அருளும் இவளை பார்த்து பேச ஆரம்பிக்கும் முன் ராஜாத்தி டீ போட்டு எடுத்து வந்துவிட்டார்.
அவன் வாங்கிக்கொள்ளவும் மின்னொளியிடமும் அதனை நீட்ட குடித்துவிட்டோமே என நினைத்தவள் அருள் முறைத்து பார்ப்பதை பார்த்து தனக்கு எடுத்துக்கொண்டாள்.
“வேணாமின்னா கீழயா கொட்ட போறாவுக?…” என முணுமுணுக்க,
“இந்த வீட்டுல நீயுந்தே இருக்க. ஒனக்கு சேத்துதேன் போடுதாக. யே மொத குடிச்சா இன்னொன்னு தொண்டையில எறங்காதாக்கு?…” என்று பேசியவன்,
“நீ என்ன இங்க மூஞ்சிய பாத்துக்கிட்டு? போயி உள்ள பாரு. அவுகளுக்கு சாப்புட எதாச்சும் செய்யி…” என ராஜாத்தியையும் விரட்ட,
“சோதி, சுப்புவுக்கு சொல்லிட்டியா?…” என கணேசனும் வர,
“இம்புட்டு நேரமாவா சொல்லாம இருப்பே? எனக்கு தெரியாதா? பத்துமணிவாக்குல வருவியான். ஒத்தொத்தொவுகளுக்கா பதிலு சொல்லிக்கிட்டே இருக்கனுமோ?…” என அருள் எரிச்சலாக,
“இப்ப ஒனக்கு என்னாலே? என்னத்துக்கு எல்லாருக்கிட்டயும் கோமிக்க?…” என ராஜாத்தி கேட்க,
“அவக்கிட்ட தனியா பேசனுன்னு நெனைக்கிதேன். வெடல எரிஞ்சாப்புல எல்லாருக்கு சொல்லனுமோ? அதுக்காங்காட்டி எம்புட்டு நேரமா ஒக்காந்துருக்கேன்…” என்றானே பார்க்கலாம்.
இதனை பார்த்து கணேசன் சிரித்துவிட காசியாத்தாவுக்கு அவன் பேசியது நன்றாகவே கேட்டது.
“ஏலே வேலையத்தவனே, ராவுக்கே ஊட்டுக்கு போவனுமின்னு தவிச்ச. நா கூட விடியமின்ன போயிருப்பன்னு பாத்தா வரிஞ்சுக்கட்டிக்கிட்டு கருப்பசாமியாட்டம் அவனுக்கு நெஞ்ச காட்டிக்கிட்டு நிக்கித?…” என்றபடி அவர் வர,
“எம்மா மொத நீ உள்ள போ…” என அவரை அனுப்பிய ராஜாத்தி,
“இதுக்கேன்டா இம்புட்டு கடிசு? பேசனுமின்னு சொன்னா போவ போறம்…” என ராஜாத்தி சொல்லிவிட்டு செல்ல மின்னொளியின் முகத்தில் அத்தனை நக்கல்.
“என்னத்துக்குடி சவடாலா பாக்குத? என்னவோ நெனச்ச தான?…” என கேட்க,
“சரியான கெடா வெரட்டி நீயி…” என மின்னொளி சொல்ல,
“சொல்லுவடி, ஏஞ்சொல்ல மாட்ட?…” என அவன் முகம் சுருங்கியது.
“ப்ச், இந்தா இப்ப என்ன சொல்லிட்டேமின்னு மூஞ்சிய தூக்கி வெக்கித?…” என்றதும் அவளிடம் திரும்பி அமர்ந்தவன்,
“அவென் வந்தத பாத்துக்கிட்டுத்தான இருந்த? ஒங்கப்பாரு அவென் காலுல விழுவேங்காரு நீயி கல்லுமாரி நிக்குத…”
“அதேன் நீ இருந்தல. அதேன்…”
“நா இருந்தா? ஒனக்கு உறுத்தா வரலயாடி?…”
“யே வராம, வந்து அவென் மூஞ்சில சாணிய கரைச்சு ஊத்திருப்பேன்…” என்றவள் அமைதியாக,
“என்னடி ஒனக்கு வெசனம்? எங்கிட்ட சொல்லு…” என்றான் தன்மையாக,
“வெசனமின்னு இல்ல. அன்னிக்கி அவன கெட்டி வச்சு ஒரு காரியத்த இழுத்து விட்டுப்பிட்டேன். அங்க தொட்டு இப்பவரிக்கும் சனியம்புடிச்சு வருது. அதேன் இனி நானா எதுவும் செய்யுததா இல்ல. அதேன் எனக்கு இத்தனபேரு இருக்கீகள…” என்றவளை பார்த்தவன் மனதிற்கு என்னவோ போல் இருக்க,
“இது நீயில்லடி. இன்னொருவாட்டி இந்தமேனிக்கு பேசாத. நெஞ்ச பெசையுது…” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தவள் சிரிக்க,
“நேத்துல இருந்தே ஒம்மொவத்துல என்னவோ இருக்கு. உள்ளார கோமிக்குத, ஆனா காட்டிக்கல. என்னன்னு ஒடச்சு சொல்லேன்…” என்றதும் பட்டென,
“அவேனுக்கு பயந்துக்கிட்டு இம்புட்டு வெரசா அவதியவதியா கலியாணத்த வெக்கனுமான்னுதேன் கடுகடுத்து வருது…” என்றவளை கண்டவனின் இளக்கம், மென்மை தன்மை எல்லாம் பறந்துபோனது அருளுக்கு.
“இப்ப என்ன கலியாணத்த ஒரு ஆறுமாசத்துக்கு ஒத்திருவோமா?…” என ஆத்திரத்துடன் பல்லை கடித்துக்கொண்டு அவன் கேட்க,
“நா அப்பிடியா சொன்னேன். அவேனுக்கு பயந்துக்கிட்டு எதுக்கு இம்புட்டு வெரசான்னுதேன்? இதுக்கேன் கோமிக்கிற?…” என மின்னொளியும் முகம் சுருங்க அதை கண்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன்,
“இங்காருத்தா மாமனும், அக்காளும் ஒரு நிம்மதியா இல்ல. அந்த தருமேன் செஞ்சத பாத்தியல. அவென் சரியில்ல புள்ள. எப்ப என்ன பண்ணுவியான்னு தெரியாது. வீட்டுல எல்லாரு பயந்துக்கெடக்காக. இதுல அவனுக்கு போதவாட்டம் வேற…”
“அதேன் நீயிருக்கல. யே நீ பாத்துக்கிட மாட்டியா?…” என்றவளை மனம் கனிய பார்த்தாலும் அதனை காட்டிக்கொள்ளாமல்,
“அதுக்காங்காட்டி நா முச்சூடும் இங்கனவே காவகாக்கட்டா? நீ கலியாணம் இப்ப வேணாங்குதத பாத்தா நெசமாத்தேன் என்னிய கட்டுவேன்னு நீ சொன்னியான்னு தோணுது புள்ள…” என்றவன் அவளை வேண்டுமென்றே சீண்ட,
“அம்புட்டு சந்தேகமின்னா வேற எவளையு கட்டு…” என மின்னொளி இப்பொழுது எகிற,
“ஒன்னிய பரிசம் போட்டு, ஒங்கைய்ய தொட்டு, ஒங்கால புடிச்சு மெட்டியாட்டம் கொலுசு மாட்டிட்டு இன்னொருத்திய பாப்பேனாக்கும்?…” என அருள் சொல்லி காண்பிக்க அவனை முறைக்க முயன்றாள் மின்னொளி.
“செரிதான புள்ள. இல்லன்னு சொல்லேன்?…” என்றவனுக்கு முகத்தை காட்டாது திரும்பிக்கொண்டாள்.
அதற்குள் இன்னும் இருவர் பால் வாங்க வந்து வாங்கி சென்றதும் ராஜாத்தி வந்து இருவர் குடித்துவிட்டு வைத்த தம்ளர்களை எடுத்துக்கொண்டு அருளை முறைத்துவிட்டு செல்ல,
“ஒளி…” என்றழைத்தான் அருள். தன் தாய் தந்தைக்கு பின்னர் அவளை ஒளி என அழைக்கும் ஒரே உறவு. மனதளவில் அப்படி ஒரு நெருக்கமாய் உணர்ந்தவளின் மனதில் ஒருவித பயமும் சுழன்றது.
வெளியில் சொல்லாத பயம், இதுவரை யாரிடமும் காட்டிக்கொள்ளாத பயம். அருளை திரும்பி பார்க்க அந்த பயம் கலக்கமாய் கண்களை சென்று அடைந்தது.
“எதாச்சும் நெனச்சு வெசனப்படுதியோ?…” என அவன் கேட்க சட்டென மறைத்துக்கொண்டு தைரியமாய் அவனை பார்த்தாள்.
“எனக்கு உள்ளுக்குள்ள பதறுதுடி, இவேன் கிறுக்குத்தனம எனதாச்சும் பண்ணிப்பிட்டா. ஒன்னு கேட்டா கோமிக்க மாட்ட தான?…”
“என்ன?…” என்றாள். ஆனால் அவன் பதறுகிறேன் என்றதும் யோசனையானவள்,
“என்னன்னு சொல்லு…” என்றாள் மீண்டும்.
“பேசாம நம்ம கலியாணத்த இன்னு வெரசா முடிச்சா என்னனு வருது. நீ என்ன சொல்லுத?…” என்றான் பதட்டத்தை மறைக்காத குரலில்.
“அவேனால என்னய்யா பண்ண முடியும்? யே அஞ்சி நடுங்குத? ஒன்னுமாவாது…” என இவள் தைரியம் சொல்ல பெருமூச்சு விட்டவன் அவளை பார்த்தான்.
தருமனை அத்தனை சுலபமாய் அவனால் நினைக்கமுடியவில்லை. அடிதடி, ரவுடியை கூட எளிதில் எடைபோட்டுவிடலாம். என்ன செய்வான் என்று யூகிக்கலாம்.
ஆனால் தர்மராஜை போன்ற ஆட்கள் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர்கள். ஏனோ மனதிற்குள் சஞ்சலம் கரைபுரண்டோட மின்னொளியை ஆழ்ந்து பார்த்தான்.
எதிர்காலத்தில் பெரிதாய் பேரின்பம் எதையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை, அதை தேடவும் இல்லை. ஆனால் அவளுடன் வாழும் வாழ்க்கை முழுவதும் அனுபவித்து வாழ சின்ன சின்ன சந்தோஷங்கள் மட்டுமே போதும் என நினைத்தான்.
அதற்கு பங்கம் விளைவிப்பதை போல தர்மன் எதையும் செய்துவிடுவானோ என்று தான் யோசித்தான்.
“மாமா…” என்ற இளவரசனின் குரலில் கலைந்தவன் எழுந்து உள்ளே சென்ற அருளை தன் உயரத்திற்கு அமரவைத்த இளவரசன்,
“பாரு ஒன்னிய பாக்க போவாதன்னு ஆத்தா சொல்லிப்பிடுச்சு. நீ வசுபுடுவியா, ஆத்தாதேன் சொல்லுச்சு…” என சொல்ல ராஜாத்தியை முறைத்துப்பார்க்க அவர் வேலை பார்ப்பதை போல முகம் திருப்பிக்கொண்டார்.
காசியாத்தா, அழகுப்பாட்டி இருவரும் காலை உணவுக்காக வெங்காயத்தை உரித்துக்கொண்டிருக்க குணசாலி அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததை போல மகளுடன் அமர்ந்திருந்தாள்.
“செத்த பேசிக்கிட்டு இருங்க. நா போயி கறி எடுத்தாறேன்…” என முருகய்யன் எழ,
“அதெல்லா ஒன்னு வேணா. ஒக்காரும்…” என்றவன் கணேசனையும் மற்றவர்களையும் பார்த்துவிட்டு கவலையுடன் இருந்த முருகய்யனிடம்,
“மாமோவ், இங்க பாரும். கலியாணத்த ஒடனே வெச்சிக்கிடுவோமா?…” என கேட்க பார்த்த வேலையை விட்டுவிட்டு அனைவருமே அருளைத்தான் பார்த்தனர்.
“என்னய்யா சொல்லுத?…” அழகுப்பாட்டி கேட்க,
“ஆமா கெழவி, நெசமாத்தேன்…” என்றவன் மின்னொளி வராததை உறுதிப்படுத்த வெளியே எட்டிப்பார்க்க, அவள் பால் ஊற்றிவிட்டு பாத்திரங்களை கழுவி வைக்கும் சத்தம் கேட்டது.
“ஒடனேன்னா?…” என குணசாலி ஆர்வம் தங்காது கேட்க அவள் புறம் திரும்பவே இல்லை அருள்.
“ஒரு வாரத்துல செஞ்சா என்ன?…” என்று அடுத்த வெடியை போட,
“ஒரு வாரத்துல கலியாணமா? ஏலே அந்த மனுசென் மின்னு கலியாணத்த எப்பிடிலாம் நடத்தனுமின்னு இருக்காரு தெரியுமா? கோட்டிப்பயலே…” என ராஜாத்தி திட்ட,
“நா நல்லா ரோசன பண்ணிட்டுத்தேன் சொல்லுதேன்…” என்றவன் கணேசன் புறம் திரும்பி,
“எண்ணே நீயே சொல்லு. அவென் எப்ப என்ன பண்ணுவியான்னு நா அங்கனவே பயந்து பயந்து கெடக்க முடியுமா? நெஞ்சுக்குழி கெதக்கு கெதக்குங்குமே…” என்ற அருளை பார்த்த காசியாத்தா தான் அந்த முடிவை எடுத்தார்.
“அய்யா மருமவனே, அவென் வரிசைகட்டி நம்மள அசிங்கப்படுத்துதான். நேத்து ராவுலதேன் வெரட்டுனோம். இப்ப விடியுமின்ன வந்து வாசல்ல நின்னு கூட்டத்த கூட்டிப்பிட்டான். நாளு கழிய கழிய எதையாச்சுஞ்செஞ்சிட்டே இருப்பியான்…” என்றதும் ராஜாத்தி எதுவோ சொல்ல வர,
“இந்தா ராசு அடிச்சட்டி ஓட்டையா இருந்தா என்னடி? கொழக்கட்ட வெந்தா போதுமில்ல. நமக்கு கலியாணந்தேன் முக்கியோ. கட்டிக்க போறவனே சொல்லிப்பிட்டான்…” என அழகுப்பாட்டி சொல்ல,
“ஆமா, நமக்கு ஊரு பாக்க கலியாணம். அது நாளிக்கே நடாந்தா என்ன? நாலு மாசஞ்செண்டு நடந்தா என்ன? கலியாணம் தான?…” என காசியாத்தா எழுந்து சென்று நாள்காட்டியில் முகூர்த்தத்தை பார்க்க ஆரம்பித்தார்.
அருளும், அழகுப்பாட்டியும், காசியாத்தாவும் சொல்ல சொல்ல முருகய்யனுக்கே அதுதான் சரி என்னும் எண்ணம் வந்துவிட்டது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை போல இருந்தவருக்கு இப்பொழுது பிரச்சனைக்கான தீர்வு கிடைத்துவிட்ட திருப்தி.
அது அவரின் முகத்திலேயே தெரிய இப்பொழுது சற்று தெளிவுடன் ராஜாத்தியை பார்க்க அவருக்கு இது போதுமே. இனி மறுக்க அவருக்கென்ன உள்ளது.
மின்னொளி பாத்திரங்களை கழுவி கவிழ்த்தி விட்டு தாவணியால் கையை துடைத்தபடி வருவதற்குள் அடுத்த ஐந்தாவது நாள் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.
முதல்நாள் நிச்சயம் முடித்து மறுநாளே திருமண நாள் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.
இப்பொழுது இதை அவளிடம் யார் சொல்வதென மாறி மாறி பார்த்தார்கள் குடும்பத்தினர்.
“ஆத்தா ஒனக்கு கலியாணம், எனக்கு புது உடுப்பு. கலியாணம்..” என இளவரசன் கைதட்டி குதூகலிக்க,
“தெரியுஞ்சாமி…” என இவள் சிரிக்க,
“கலியாணம் வார வெள்ளிக்கெழம. மாத்தியாச்சி…” என செவ்வந்தியும் அதே மகிழ்ச்சியுடன் சொல்ல என்ன என நேராக பார்வை சென்றது அருளிடம் தான்.
ஆனால் அவன் தான் அவளை பார்க்கவே இல்லையே.