கடல் – 18
தர்மராஜ் வீட்டிற்கு செல்லாமல் தன் நண்பர்களுடன் எப்பொழுதும் சந்திக்கும் அந்த இடத்தில் தனியாக அமர்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனை பரிதாபமாய் பார்த்தபடி கதிரேசன்.
மனதளவில் எப்பொழுதும் தனிமை தான். ஆனால் இது இந்த தனிமை அவனை உயிரோடு கொன்றது.
எதையும் செய்ய முடியாமல், எதற்கும் லாயக்கு இல்லாதவன் நீ என்னும் பார்வையை தாங்கிக்கொண்டு, ஐயோ பாவம் இவன் என்னும் பரிதாப பேச்சை கேட்டுக்கொண்டு, தருமனா அவனுக்கு எதுவும் தெரியாதே என்னும் நக்கலும் அக்கறையும் கலந்த பரிகாசங்களை தாங்கிக்கொண்டு இன்னும் என்னவற்றையல்லாம் அனுபவிக்க போகிறேனோ என இயலாமையுடன் இருந்தான்.
“ஏலே தருமா இதுக்குத்தேன் சொன்னே, வேணாம்டான்னு. கம்மின்னு இருந்துருந்தா கூட ஆறப்போட்டு பேசிருக்கலா. நீ அடங்கினியா? இப்ப பாரு சடசடன்னு பேசி முடிச்சு நாள குறிச்சிட்டானுக. இனியாங்காட்டி நீ கம்மின்னு ஒம்ம சோலிய பாத்துட்டு இருவே…” என கதிரவன் அவனுக்கு அறிவுரை சொல்ல,
“மின்னுட்ட ஒத்த வார்த்த பேசவுடாம அடிச்சு தொரத்திட்டானுவ. அவனையு, அந்த கணேசன் போட்டவனையு சும்மா விடமாட்டேன்ல…” என தர்மராஜ் சொல்ல,
“ம்க்கும், இவேன் அடங்கமாட்டியான். தருமேன் தருமடி வாங்கி இவங்கூட சேந்ததுக்காங்காட்டியே அன்னோ எஞ்சங்க அத்துப்புடும்…” என கதிரவன் புலம்ப,
“அவ மேல நா எம்புட்டு ஆச வெச்சிருக்கே தெரியுமாலே. ஒருத்தரு, ஒருத்தரு கண்டுக்காம போனா? யே என்னால முடியாதாக்கு?…”
“ஐயோ புரியாம பேசுதடா நீயி. அந்த புள்ளைக்கே நீயின்னா வேப்பங்காயி. அதேன் சொல்லுதேன் விட்டுரு…”
“அவள கெட்டி இந்த ஊரு மத்தியில நா வாழ்ந்து காமிக்கல…” தன் பேச்செதையும் கேட்காமல் அவன் போக்கில் பேசிக்கொண்டிருந்தவனை பார்த்த கதிரவன்,
“லே இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? அதேன் ஒருத்தேன் பரிசம் போட்டு நாள குறிச்சுட்டானுல. தப்புடே…”
அவனுக்கு புரியவைக்க முயன்றான் கதிரவன். ஆனால் பிடிவாதமாய் எதையும் காதில் போட்டுக்கொல்லமாட்டேன் என இருப்பவனை என்ன செய்வது?
“அதுக்காங்காட்டி மின்னுவ விட சொல்லுதியோ?…”
“இனி ஒன்னே ஒன்னுதேன் செய்ய முடியு…”
“என்ன?…”
“நீ அந்த புள்ளைய விட வேணா. ஆனா நா ஒன்னிய விடலாமில்ல. போடா போக்கத்தவனே. சொல்லிக்கிட்டே இருக்கே. நீயி புரியாமலே பேசுத. அவனுங்க ஒம்மேல சுத்த கிறுக்கா இருக்கானுக. சிக்கிடாதடி. இன்னிக்கு ஊருக்காரவுக இருந்தாங்காட்டி நீ தப்பிச்ச. அந்த அருளு சரியான மொரடேன்லே…”
“அடிச்சா? பயந்துருவேனா? இல்லல்ல மின்னுவ பாத்து அவக்கிட்ட வெளங்குதாப்புல சொல்லுதேன். பொறவு பாரு…” என சொல்லி தர்மராஜ் திரும்ப அங்கே கதிரவன் இல்லை. தூரமாய் நடந்து சென்றுகொண்டிருந்தான்.
“போலே, போ, என்ன செய்யனுமின்னு எனக்கு தெரியும்லே…” என்ற தர்மராஜின் முதுகுத்தண்டு அப்படி ஓர் வலியை கொடுத்தது.
———————————————————————-
உண்மையில் சொல்லியது போல செய்துவிட்டானோ என மின்னொளி அவனை பார்க்க அருள் மின்னொளியை பார்த்தால் தானே அவள் என்ன விதமாய் பார்க்கிறாள் என அறிந்துகொள்ள? அவனோ நிமிரவே இல்லை.
“இப்ப என்னத்துக்குடி அவன மொறைக்கித? ஒங்கப்பேன்தேன் கண்ண கசக்குதியான். அதுக்குத்தேன் முன்னக்கூட்டியே நாள பாத்தோம். என்னாங்குற?…” என அழகுப்பாட்டி அருளை காப்பாற்றினார்.
“இல்ல வெள்ளிக்கெழம…” என சொல்லி அவளின் பார்வை யோசனையாய் சுவற்றை பார்த்தவளுக்கு படபடவென்றானது.
“அவுக சொல்லுதது செரித்தேன் மின்னு. எல்லா எல்லாத்துக்கு நல்லதுதேன். இப்ப என்ன? என்னிக்கினாலும் நீ சோதி பொண்டாட்டியா அவென் வீட்டுக்கு போவப்போறதுதேன…” கணேசன் சொல்ல எதுவும் பேசாமல் பின் வாசலை திறந்துகொண்டு சென்றுவிட்டாள்.
“அவ என்ன நெனைக்கிதான்னே அம்புடமாட்டிக்கி…” என ராஜாத்தி பெருமூச்சுடன் சமைக்க செல்ல,
“அப்ப பத்திரிக்க எல்லா வேணா மாமோவ். வெத்தல, பாக்கு, பழத்த வச்சு மொறைக்கு அழச்சுக்குவோம். நம்மூரு தான?…” அருள் சொல்ல,
“சத்திரத்துக்கு என்ன சொல்ல?…” கணேசன் ஞாபகப்படுத்தியிருக்க,
“அவேன்கிட்ட பேசிப்பாப்பம். நாம சொல்லுத தேதிக்கி கெடச்சா செரி. இல்லாங்காட்டி கோவில்ல வச்சுக்குவோம். சாப்பாட்ட கோவிலு சத்திரத்துல இல்ல வீட்டுல வெச்சிக்கத்தேன்…” அருள் இதற்கும் ஒரு வழி சொல்லவும் ராஜாத்தி தூரத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்த அவனைத்தான் பார்த்தார்.
உண்மையில் தான் சொன்னதற்காக இத்திருமணத்திற்கு சம்மதித்தனா? இல்லை அதற்கு முன்பே மின்னொளியின் மீது ஒரு அபிப்ராயம் வைத்திருந்தானா? ஒரு வேளை தான் சொல்லியதால் தனக்காக வேண்டம் என்றானா? என பார்த்தபடி நிற்க திருமண திட்டங்கள் ஜரூராய் நடந்தேறியது.
இப்போது இந்த நினைப்பு தேவைதானா என புத்தி அவரை குட்ட சமையலை முடிக்கும் வேலையை பார்த்தார்.
மறுநாள் திருமண உடைகள் எடுக்கவும் மாங்கல்யம் எடுக்கவும் நல்லநாள் இருப்பதால் ராஜாத்தியை வர சொல்லி அவருடன் சென்று புடவை எடுத்துக்கொள்வதாக முடிவானது. அவர்களுடன் கணேசன், குணசாலியும் செல்வதாய் பேசிக்கொண்டனர்.
அதன் பின்னர் மற்ற யார் யார் பொறுப்பேற்பது என கடகடவென பிரித்துக்கொண்டனர்.
அதற்குள் உணவும் தயாராக சாப்பிட்டு முடித்து கை கழுவி வரும்வரை மின்னொளி பின்னால் இருந்து உள்ளே வரவே இல்லை. அருள் அவளை அழைப்போமா என பார்த்தான்.
“சோதி, அவ எதையோ நெனச்சிக்கிட்டு இருக்கா. செரியாயிடும். கூப்புட்டாலும் வரமாட்டா. விடு. பசி பொறுக்காது, இன்னு செத்தநேரத்துல வந்து அவளே போட்டுக்குவா…” என ராஜாத்தி சொல்ல,
“நல்லாருக்கு நீ பேசுதது, அவ அத செஞ்சிக்குவா, இத செஞ்சுக்குவான்னு அவ தோதுக்கு விட்டு அந்த புள்ள நெனைக்கிதத கூட நீயா நெனச்சிப்பியோ? வந்து சாப்புடுன்னா வரனு. எல்லாருஞ்சேந்து சாப்புட்டா அவ மட்டு தனியா திம்பாளா? என்னத்த எறங்கும்?…” என அக்காவை அதட்ட,
“ஏம்லே நீ கூடத்தேன் இப்ப சத்தமில்லாம சாப்புட்டு முடிச்ச? யே கூப்புட வேண்டியதேன? அவள வெரட்டுத?…” என காசியாத்தா மகளுக்கு ஏந்துகொண்டு வர அதற்குள் வாசலில் சுப்புவின் ஆட்டோ சத்தம் கேட்க,
“செரி கெளம்புவோம்…” என்றவன் முருகய்யனுக்கு தைரியம் சொல்லிவிட்டு ராஜாத்தியிடம் சிலபல அறிவுரைகளை சொல்ல அவரும் கேட்டுக்கொண்டார்.
“கெளம்புத்தா, இன்னு என்ன வேடிக்க?…” என கணேசன் குணசாலியை விரட்ட,
“அவ வேணா இங்க ஒத்தாசைக்கி இருக்கட்டுமே கணேசா…” காசியாத்தா சொல்ல குணசாலியின் முகம் மலர்ந்தது.
ஐந்து நாள். சமைக்கவும் வேண்டாம், வேலையும் பார்க்க வேண்டாம். நினைத்த நேரத்தில் இருக்கும் இடத்தில் ராஜ உபசாரம். விதவிதமாய் சமையல், அதிலும் ராஜாத்தியின் கை ருசியும், அழகுப்பாட்டியின் உப்புச்சாறின் உரைப்பும், புளிப்பும் அப்போதே நாக்கில் எச்சியை ஊறவைத்தது.
அதோடு இங்கே நடப்பவற்றையும், என்ன செய்கிறார்கள் என்பதையும் நன்றாக தெரிந்துகொள்ளலாம் என்றும் இங்கேயே இருந்தால் மகளுக்கென எதையாவது வாங்கிக்கொள்ளலாம் என்றும் மனது படபடவென கணக்குகள் போட,
“ஆரு, இவ ஒத்தாசையா? நல்லா இருப்பாளே? அதேன் இங்க நேத்து வந்ததுல இருந்து இவ பாத்த ஒத்தாசையை நானுந்தேன் பாத்தேனே…” என கணேசன் நக்கலாய் சொல்ல,
“இங்க வந்ததுல இருந்தே இந்த மனுசெனுக்கு நாக்கு கூடிப்போச்சி. வீட்டுக்கா வரட்டு வெச்சிக்கிடுதேன்” என குணசாலி முணுமுணுக்க,
“அடேய், சும்மா அவள ஒரசிக்கிட்டு. இங்கன இருந்தா ராசு கூட அக்கம்பக்கத்த கூப்புட ஒத்தாசையா இருக்குமில்ல. அதுக்குத்தேன் சொல்லுதேன்…” என சொல்லவும் அழகுப்பாட்டியை பார்த்தான் கணேசன்.
“அவள உட்டுட்டே போய்யா. அதேன் நா இருக்கேனுல்ல. பாத்துக்குதேன்…” என அழகுப்பாட்டி சொல்லவும் அவரின் குரலில் உள்ள சூட்சமத்தில் குணசாலிக்கு சற்று கிலி தான். ஆனாலும் தைரியமாக இருந்தாள். கணேசன் அவளை திரும்பி பார்க்க,
“ஆமா, எப்பிடியும் போயி ரெண்டு நாளுல வரனும். பொறவு மறுவீடு அது இதுன்னு இருக்கு. என்னத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டும் அலஞ்சிக்கிட்டு….” என ராஜாத்தியும் சொல்ல,
“செரி செரி…” என்றதும் வேகமாய் அவனருகே வந்த குணசாலி,
“எங்களுக்கு மாத்துத்துணி எல்லா எடுத்துட்டு வந்துருங்க…” என சொல்லியவளிடம்,
“வாரேன், நீ இங்க செத்த எல்லாத்துக்கு கூடமாட ஒத்தாசையா இருடி. இப்ப நம்மால ஆனத செய்யனுமில்ல…” என்றவன்,
“மின்னுவ வெளியில எங்கயும் அனுப்பிடாத…” ராஜாத்தியிடம் சொல்ல,
“பரிசம் போட்டவிட்டி எங்கயும் போவக்கூடாது மாலக்கழுத்தோட. அதனாங்காட்டி வீட்டுலதேன் இருப்பா…” ராஜாத்தியும் சொல்ல,
“செரி பொறப்படுதோம்…” என கணேசன் வாசலுக்கு செல்ல அவன் பின்னே முருகய்யனும் அருளும் பேசிக்கொண்டே சென்றனர்.
மறுநாள் காருக்கு கணேசன் தானே சொல்லிவிடுவதாய் சொல்ல அதற்குள் மண்டபத்தின் உரிமையாளரிடம் அருள் பேச அவர்கள் கேட்ட இரண்டுநாட்களுக்கு மண்டபம் கிடைக்காதென்றும், முதல் நாள் வியாழன் அன்று விசேஷம் இருப்பதாகவும் சொல்ல அருளுக்கு யோசனை.
முருகய்யனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வியாழன் நடுநிசிக்கு மண்டபம் குடுத்தால் கூட போதுமென்று சொல்லிவிட ஒருநாள் மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டனர்.
“யே சோதி ராத்திரில சாவி வாங்கி காலைக்கி செரியா வருமா?…” முருகய்யன் கேட்க,
“வரும் மாமோவ், ராத்திரிலதேன் சமைக்க வேல ஆரம்பிப்பாக. நமக்கு தாலிக்கட்டு காலையிலதேன். அதனாங்காட்டி ஒத்துவரும். மத்தியான சாப்பாடு முடியவு காலிபண்ணி குடுத்துருவோம்…” என அருள் சொல்லவும் சரி என்றுவிட்டார்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வந்த ராஜாத்தி முருகய்யனிடம் வந்து எதுவோ சொல்ல,
“அதெல்லா பொறவு பாத்துக்கிடுவோமத்தா…” என்றார் அவர்.
“என்னன்னு சொல்லுக்கா…” என்றான் அருள்.
“நாளக்கே போவனுமா சீல எடுக்க?…” ராஜாத்தி கேட்க,
“பின்ன கலியாணம் முடியவு போவமா? புள்ள அன்னிக்கு என்னத்த கட்டுமாம்?…”
“ஏலே, கலியாணத்துக்கு ரெண்டுநா முன்ன எடுக்கறது. அதத்தேன் சொல்லுதேன்…”
“ரெண்டுநா முன்ன எடுத்து அதுக்கு ரவிக்க? தெக்க வேணாவா? பழசவா போடும்?…” என அதற்கும் அவன் எகிற ராஜாத்திக்கும் கோபம் வந்துவிட்டது.
இவன் என்னடா இது கல்யாணம் முடிக்கும் முன்னரே அவளுக்காக இந்த ஆட்டம் ஆடுகிறான்? என அவனை முறைத்து பார்த்தவர்,
“யாத்தா, ஒம்மவன் இப்பவே பொண்டாட்டிய இந்த தாங்கு தாங்க ஆரம்பிச்சுட்டான். நாளப்பின்ன எம்போக்குவரத்துக்கே பஞ்சப்பாட்டா போயிரும் போலியே…” என வேண்டுமென்றே சீண்ட அருள் சற்று அதிகமாகத்தான் போகிறோமோ என்ற விதமாய் பார்த்தான்.
“ஏலே சும்மாச்சுக்குந்தேன் சொல்லுதேன். எனக்கு சந்தோசந்தேன்…” என தம்பியை தேற்றியவர்,
“நாளிக்கி பயத்தங்காட்டுல மாறுகால் பாயுதுன்னு சொல்லிருந்தாரு. அதுக்குத்தேன்…”
“அத்த பாத்துக்க ஆள போட்டு பாத்துக்கலாம்…” என்றவனை,
“செரி போயி அவக்கிட்ட சொல்லிட்டு வா…” என அருளை அனுப்பினார் மின்னொளியிடம்.
இன்னும் அவள் அங்கேயே அமர்ந்திருக்க என்ன பேசுவதென தெரியவில்லை அருளுக்கு. நேற்றிலிருந்து தன் கோபத்தின் அளவு அளவுக்கதிகமாய் இருப்பதை அவன் உணர்ந்திருந்தான்.
அதிலும் இன்று காலை நடந்த நிகழ்வு வேறு அவனை மூர்க்கனாக்கியிருந்தது தர்மனின் வரவால்.
படியில் தலை சாய்த்து தொழுவத்தை பார்த்தவிதமாய் அவள் அமர்ந்திருக்க இவன் சென்று நின்றதும் அமைதியாய் பார்த்தாள்.
“கெளம்புதேன் புள்ள. நாளைக்கி சீல எடுக்க போறாக. ஒனக்கு என்னமாரி சீல வேணுமின்னு சொல்லிவிட்டீனா அக்கா எடுத்தாந்துரும்…”
“யே நீயி போவலையா?…” என்றாள்.
“என்ன நானா? அக்கா தான எடுக்கனு? நா என்னத்துக்கு? எனக்கு சோலி கெடக்கு. என்னால முடியாது…”
“நீ போறதுனா போ. எந்த சீல கெட்டுனா எனக்கு நல்லா இருக்குமோ அத்த நீயே எடுத்துட்டு வா. இல்ல ஒங்கக்காதேன் போய் எடுக்குமின்னா அவுகளுக்கு புடிச்சதாவே எடுக்கட்டும். கெட்டிக்குதேன்…” என்றவளை என்ன சொல்வதென புரியாமல் பார்த்தவன்,
“போடி…” என்று சொல்லி கிளம்பியவன் மீண்டும் அவளருகே வந்து,
“செத்த சூதானமா இருந்துக்கடி…” என்றவன் திரும்பி பார்க்காது சென்றுவிட்டான்.
அவன் சென்ற பின்னும் யோசனையிலேயே இருந்தவள் அதன் பின்னர் மெதுவாக வந்து சாப்பிட்டுவிட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
குணசாலி மகளும், இளவரசனும் இருக்க அவளுக்கு சற்று பொழுதும் போனது. குணசாலி தான் அந்த வீட்டில் நடப்பதை அன்னத்திற்கு சொல்ல அவரோ நன்றாக திட்டிவிட்டு இனி அந்த குடும்பத்தின் பேச்செடுத்துக்கொண்டு வராதே என்றுவிட்டார்.
இதிலும் குணசாலியை அழகுப்பாட்டி வேறு கண்காணிப்பதை போல சுற்றி சுற்றி வர அதுவேறு அவளை எரிச்சல் மூட்டியது.
மறுநாள் திருமண உடைகள் எடுக்க செல்ல கடைசி நேரத்தில் அருளும் அவர்களுடன் கலந்துகொண்டான்.
எப்படி சேலை எடுப்பது என்று அவனுக்கு தெரியாமல் திகைக்க பின் ஒருவாறு ஒரு புடவை அவளுக்கு நன்றாக இருக்கும் என எடுக்க உண்மையில் அத்தனை நன்றாகவே இருந்தது அந்த புடவை.
அனைத்தும் எடுத்துவந்து ராஜாத்தி காண்பிக்க மின்னொளிக்கு அருள் வந்தானா என தெரியவேண்டி இருந்தது.
“கெழவி ஆராரு உடுப்பெடுக்க போனாக? கேளேன்…” என மின்னொளி கிசுகிசுக்க அதற்கு அவசியமே இன்றி ராஜாத்தியே பேசிக்கொண்டிருந்தார் முருகய்யனிடம்.
“போன எடத்துல திடுதிப்புன்னு சோதி வந்து நின்னியான். சும்மா வந்தேன்னு சொல்லிட்டு அவன்தேன் மின்னுக்கு சீல காமிச்சான். நல்லாருக்கா பாருங்க…” என புடவையை எடுத்து முருகய்யனிடம் காண்பிக்க மின்னொளியின் மனதிற்கு அத்தனை நிறைவாய் இருந்தது.
மின்னொளி புடவையை கையில் வாங்கவே இல்லை. ஆனால பார்வை அதனிடமே சென்று வந்தது.
மறுநாள் காலையிலேயே போல அருள் வந்தவன் மின்னொளியை தேட அவள் கண்ணில் படவில்லை.
“என்னலே ஒத்த வார்த்த சொல்லல வாரேன்னு…” என ராஜாத்தி வர,
“எங்க அவள?…” என்றன் வாசலிலேயே வைத்து.
“இந்தா உள்ளார வந்துதேன் கேக்குதது…” ராஜாத்தி அழைக்க,
“ப்ச், அதுக்கெல்லா நேரமில்ல, டவுனுக்கு போறேன் ஒரு சோலியா. அங்கன ஒருத்தன் நல்லா ரவிக்க தப்பியான்னு சுப்பு சொன்னான். அதேன் செரின்னு அளவுக்கு வாங்க வந்தேன்…” என்றான் ராஜாத்தியின் முகம் பார்க்காமல். அவருக்கு அத்தனை சிரிப்பு தம்பியை பார்த்து.
“செரி எதாச்சும் குடிச்சுட்டு போவேன்…”
“அட வெரசா கொண்டான்னா…” என சொல்லவும்,
“அவ குளிக்குதா. இப்பத்தேன் போனா, வர நேரமாவுமே…”
“இன்னேரமா? அவதேன் கோழி கூவமின்ன குளிக்கித ஆளாச்சே…”
“காலையில குளிச்சுட்டாதேன். நேத்திக்கி ஒரே தூறலு, நசநசன்னு கொல்லப்புறமே பாடாவதி ஆயிருச்சி. அவதேன் அம்புட்டையும் கூட்டி பெருக்கி அலசிவிட்டா. மேலெல்லா சவதி. இப்ப குளிக்க போயிட்டா. வரட்டும் சோதி…”
“யே நீ எடுத்து தாரது. போக்கா…” என விரட்ட “இவனோட” என முணுமுணுத்துக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தார் ராஜாத்தி. பல வருடங்களுக்கு பின்னர் அதற்குள் நுழைகிறார்.
அருளிடம் அதற்குள் என்னை அனுமதிக்கமாட்டாள் என்று சொன்னால் கோபப்படுவான் என்று அதனை அவர் சொல்லியதே இல்லை. இப்போதும் சொல்ல விரும்பவில்லை ராஜாத்தி.
உள்ளே சென்றவருக்கு அத்தனை திருப்தி. அந்த அறை அத்தனை சுத்தபத்தமாய் இருந்தது. அறையின் மூலையில் ஒரு ஓரத்தில் முத்துநகை புகைப்படம் மாலை போடப்பட்டு அதன் அருகே விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
அதனை பார்த்தவர் ஒரு பெருமூச்சுடன் அவளின் உடைகள் இருந்த அலமாரியை திறக்க எதை எடுக்கவென இப்போது சமீபமாய் அவள் போடும் சட்டைகளை தேடியவர் அந்த அளவு சரியாக இருக்கும் என்று எடுத்து மீண்டும் அதனை பூட்டிவிட்டு திரும்பியவர் பட்டென திரும்பி மீண்டும் அதனை திறந்து பார்த்தார்.
அந்த உடைகளுக்கிடையே இருந்ததை பார்த்தவருக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. ஒருவித அழுகை அவரின் தொண்டையடைக்க வாசலில் அருளின் சத்தம் மீண்டும் கேட்டது.
வேகமாய் அலமாரியை பூட்டிவிட்டு ஒரு பையில் மின்னோளியின் அளவு துணியை வைத்துக்கொண்டு அந்த கதவையும் எப்பொழுதையும் போல சாற்றிவிட்டு தம்பியிடம் சென்றார்.
“என்னத்தா போறப்ப திட்டிக்கிட்டே போறதாட்டம் தெரிஞ்சிச்சு…” என்ற தம்பியிடம் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தவர்,
“பாத்து சூதானமா பைய பைய போனும்லே….” என அறிவுறுத்தி அனுப்பினார்.
தான் பார்த்ததை அழகுபாட்டியிடமோ இல்லை முருகய்யனிடமோ சொல்லலாம் என்றால் இப்போதிருக்கும் சூழ்நிலை அதை வேண்டாம் என்று தடுத்தது. மனதை தேற்றிக்கொண்டவர் வேலையில் தன்னை ஆழ்த்திக்கொண்டார்.
குடும்பத்தினர் அனைவரும் ஒருவித பயத்துடனே நாட்களை கடத்த திருமணத்திற்கு முந்தைய நாளும் வந்தது.
அவர்கள் பயந்ததை போல தர்மராஜோ அன்னமோ அதன் பின்னால் வந்து எந்த பிரச்சனையும் பண்ணவில்லை.
தர்மராஜ் அடிவாங்கி சென்ற அன்று அன்னம் வருவார் என நினைத்திருக்க அவர் வரவே இல்லை. அது ஒருபுறம் நிம்மதியளித்தாலும் அதன் பின்னான நாட்களில் தர்மராஜ் அவர்களின் கண்ணிலேயே படவில்லை.
ஊரில் எவரும் வேறு நான் பார்க்கவில்லை நீ பார்க்கவில்லை என்று சொல்ல அன்னத்திடம் சென்று கேட்கவும் பயந்தனர். அன்னமும் மகனை காணவில்லை என யாரிடமும் சொல்லவும் இல்லை.
காட்டிற்கு செல்ல வேலையை பார்க்கவென தான் இருந்தார். யாரிடமும் பேசுவதும் இல்லை.
சூழ்நிலை ஒரு மனிதனை மனிதனாய் இருக்கவிடுவது தான் கடினம். புத்தியும், மனதும் ஒரே நேர்கோட்டில் செல்லும் பொழுது சூழ்நிலையை மனிதன் தன் வசமாக்குவான்.
அதுவே புத்தியை பின் தள்ளி மனது அதிவேகத்துடன் முன்னோக்கி அசுரவேகத்தில் செல்லும் பொழுது தான் தன் இலக்கின் தன்மையை பொருத்து அதன் குணமும் மாறுபடும். விடையும் வேறுபடும். இந்த இடத்தில் சூழ்நிலை கைதியாய் மனிதன் உருவெடுப்பது அவனின் சிக்கல்களின் ஆரம்பம்.
புத்திசாலிகள் மாட்டிக்கொண்டாலும் வெளிவர தெரிந்தவர்களுக்கு அது வேறு. ஆனால் ஆழம் தெரியாது அகப்பட்டுக்கொண்டவர்கள் அதள பாதாளத்தில் தான்.
இங்கே தர்மன் சற்றும் யோசியாது புத்தியை உபயோகிக்காது, தன் மனதின் உந்துதலில் தான் நினைத்தது தனக்கு வேண்டும் என்னும் ஆசையில் சூழ்நிலையின் கையில் அகப்பட்டுக்கொண்ட மனிதனாய் சூழ்நிலையின் வசப்பட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுத்தான்.
அப்படி ஒரு முடிவுடன் யாருக்கும் தெரியாமல் திருமணத்தன்று விடியற்காலை மின்னொளியை பார்க்க வந்தான் தர்மராஜ்.