கடல் – 19
அன்னத்திற்கு உறக்கம் என்பதே தூரம் போய் நான்கு நாங்கள் ஆகிவிட்டது. மனது ரணமாய் காந்திக்கொண்டிருக்க தன் மகன் கொடுத்த வேதனை அதை விட அதிகமாய் வலியை கொடுத்தது.
மின்னொளி வீட்டில் பிரச்சனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தவனின் முகமே சரியில்லாது இருக்க உடையும் கசங்கி அழுக்காய் இருந்ததை பார்த்து பதறியவர்,
“அய்யா எஞ்சாமி, எங்கைய்யாச்சும் விழுந்திட்டியா?…” என வந்து கேட்டவரை பிடித்து ஆக்ரோஷம் வந்தவனாய் தள்ளிவிட்டான் தர்மராஜ்.
உடலே நடுங்கிப்போனது மகனின் இந்த செயலில். அவனின் முகம் அதைவிட பயங்கரமாய் இருக்க,
“ராசு…” என்றார் குரல் கலங்க அதிர்ச்சி விலகாமல் பார்க்க,
“போதும்மோவ், ஒன்னால நா பட்ட தொயரம் எல்லா போதும். எப்ப பாத்தாலு என்னிய எதாச்சு சொல்லுததுலதேன் நீயி இருக்க. எனக்கு என்னனு கேக்குதியா? இன்னிக்கு ஒன்னால எனக்கு மின்னு இல்ல. அவ இல்லவே இல்ல…” என அந்த வீடே அதிரும்படி இரைந்தான்.
“ராசு நா சொல்லுதத கேளும்யா…” என கெஞ்சிய அன்னத்தின் குரலை கேட்டு காதை பொத்திக்கொண்டவன்,
“போதுமாட்டு எனக்கு போதுமாட்டு அம்மோவ். ஒன்னால இன்னிக்கு எவ்வாழ்க்க போச்சும்மோவ்…” என முகத்தை மூடிக்கொண்டு அவன் அழ விக்கித்து அமர்ந்திருந்தார் அன்னம்.
“அய்யா, நானா ஒவ்வாழ்க்க போவ காரணமாயிட்டே?…”
“ஆமா ஆமா நீயிதேன், என்னிய மட்டு யே இப்பிடி வளத்து வெச்சிருக்க? அவேன் என்னிய அடிக்க வாரியான். ஐயோன்னு ஓடத்தேன் தோணிச்சி. அவேன எதுத்து அடிக்க பயந்து வந்துருச்சி. ஒன்னாலதேன்…” என பேச அழுகை முட்டிக்கொண்டு வந்தது அன்னத்திற்கு.
“ஊரு சனமெல்லா வேடிக்க பாக்க ரோட்டுல விழுந்துட்டே. ஒடனே எல்லாரு பாவமின்னு சொல்லுதானுக. ஏம்மோவ் என்னிய பாவமாக்கின? நீதான? இல்லன்னாத. நீயிதேன்…” என அன்னத்தை காண்க விடாத அளவிற்கு அவன் பேச விழுந்த இடத்தில் இருந்து எழகூட முடியாமல் அப்படியே இருந்தார் அன்னம்.
“போது, அம்புட்டுமே போது. நா போறே. மின்னுவ கட்டாம வரமாட்டே. என்னிய எதாச்சு சொல்லலாமின்னு பாத்த. இங்கயே சங்கறுத்துட்டு ஒங்காலுல விழுவே…”
“வேணாலே, ராசு, அவ இன்னொருத்தனுக்கு பரிசம் போட்டவ, தப்புலே. ஒனக்கு அம்மா அதுக்கு மேல ஒசந்த பொண்ண பாத்து கெட்டிவெக்கிதேன். அம்மா சொல்லுதத கேளுய்யா…”
“பேசாத நீ பேசாத. கம்மின்னு கெட. பேசுன…” என மிரட்டியவன்,
“கேளு கேளுன்னு சொல்லி சொல்லித்தேன் என்னிய இப்பிடி ஆக்கி வெச்சிட்ட. ஐயோ நா என்னம்மோவ் செய்யுவே…” என மடங்கி அமர்ந்து அழுதவன் சிறிது நேரத்திலேயே எங்கோ கிளம்பி சென்றுவிட்டான்.
போன் செய்து கேட்டதற்கு மீண்டும் இப்படி கேட்டால் திரும்ப வரவே மாட்டேன் என்று வேறு மிரட்டியிருக்க பயந்துபோனார் அன்னம்.
அதன்பின்னர் மகனின் வரவுக்காய் காத்திருக்க ஆரம்பித்தாலும் எந்தவித சேதாரமும் இன்றி வரவேண்டும் என்கிற வேண்டுதல் தான் அதில் அதிகம் இருந்தது.
———————————————————–
அன்று அருள்ஜோதி மின்னொளி திருமணம்.
அதிகாலை மூன்று மணி. வீட்டில் ஒருவரும் உறங்கவில்லை. விடியற்காலை ஏழு மணிக்கு முகூர்த்தம் என்றாலும் நள்ளிரவே அனைவருமே எழுந்துவிட்டனர்.
வெளியூர் உறவினர்கள் வேறு. வெளியே பின்புறம் ஒற்றை குளியலறை மட்டும் இருப்பதால் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடிக்க அதற்கு முன்பே மின்னொளியை குளித்துவர சொல்லிவிட்டனர்.
இன்னும் சில வயதான பெண்கள் மார்புவரை பாவாடையை ஏற்றிக்கட்டிக்கொண்டு கிணற்றடியில் தண்ணீர் இறைத்து குளித்து முடித்தனர்.
“மதினி வெரசா கெளம்புனாத்தேன் ஆறு மணிவாக்குல வேனு வரவும் பொறப்பட முடியு…” என அனைவரையும் அவசரப்படுத்திக்கொண்டிருந்தார் ராஜாத்தி.
அவரை அனைவருமாக அது எங்கே, இதை தா, டீ குடு, தண்ணீர் கொண்டு வா, சீப்பை எடுத்து தா என மாறி மாறி பம்பரத்தை விட வேகமாய் சுழல வைத்துக்கொண்டிருந்தனர்.
அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்க மின்னொளியை காணாது காசியாத்தா வீடெங்கும் தேடினார். அவளோ தொழுவத்தை பெருக்கிகொண்டிருந்தாள்.
“இந்தா இந்நேரம் என்னத்துக்குடி கொல்லப்பக்கம் போனவ? அதுக்குத்தேன் ரெண்டுபேத்த அமத்திருக்குல. செத்தநேரத்துக்கு கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டியா?…” என காசியாத்தா வந்து சத்தம் போட்டார் மின்னொளியை.
“இப்ப என்ன? நேரமிருக்குல. நானு வெருக்கு வெருக்குன்னு ஒக்கார முடியலன்னுட்டுதேன் இங்கிட்டு வந்தேன்…” என கையை கழுவிக்கொண்டு முன்வாசல் பக்கம் வந்தாள் பேசிக்கொண்டே.
“நல்லா வந்த போ…” என அவளின் தலையை சுற்றியிருந்த துண்டை அவிழ்த்துவிட்டு,
“இங்கன செத்த ஒக்காரு. இந்நேரத்துக்கு ஒன்னிய ஆரு தலைக்கி வண்டுகெட்ட சொன்னா? எதுக்குங்கேக்கறதில்ல…” என மின்னொளியை திண்ணையில் அமர்த்திய காசியாத்தா அவளுக்கு துட்டிவிட ஆரம்பித்தான்.
“நா செஞ்சிக்க மாட்டேனா? விடுத்தா…” என மின்னொளி சிலுப்ப,
“அசெஞ்ச பாத்துக்கிடு…” என்றவரின் அதட்டலுக்கு புன்னகையுடன் செவி சாய்த்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.
புன்னகையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தாலும் மானசீகமாய் தன் தாயை வெகுவாய் தேடினாள் மின்னொளி.
“செத்த முன்னுக்கா போடி. முடி நீளமா தரைய பரசுது…” என்று தானும் பின்னால் நகர்ந்து நுனி முடியையும் சேர்த்து துவட்டியவர்,
“ஒக்காந்துரு. அடுப்புல கங்கு கெடக்கு. எடுத்தாரேன்…” என சொல்லியவர் அவள் வேண்டாமென மறுக்கும் முன்னரே சென்றிருக்க,
“நேரமாவுதுன்னு சொல்லிட்டு இது பண்ணுத அழிசாட்டியோ இருக்கு பாரு…” என மின்னொளி முணங்கியபடி அமர்ந்திருக்க வீட்டுக்குள் ராஜாத்தி வாசல் பெருக்கி கோலம் போட சொல்லி ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருக்க,
“இதுக்குமா ஆள சொல்லனு?…” என தானே பாவாடையை தூக்கி சொருகிக்கொண்டு வாசலை தெளிக்க கிளம்ப அங்கே வாசல் அருகே யாரோ வந்து நிற்பது தெரிய கண்களை கூர்மையாக்கிக்கொண்டு நன்றாக பார்க்க தர்மராஜ் வந்துகொண்டிருந்தான்.
அவனை பார்த்ததுமே மனதினுள் சிறு அச்சம் தான். ஆனாலும் தைரியமாக அவனை எதிர்கொள்ள வந்த வேகத்தில் அவன் மின்னொளியை பிடிக்க போக நகர்ந்து அவனின் காலை தட்டிவிட்டவள்,
“என்ன தெகிரியம்லே, என்னிய தொட வருவ…” என சொல்லி அவனை அடிக்க ஏதாவது தென்படுகிறதா என பார்க்க அதற்குள் கீழே விழுந்தவன் எழுந்த வேகத்தின் மின்னொளியை பின்னால் இருந்து கைகளை முறுக்கியவன் அவளின் வாயை பொத்தினான்.
“மின்னு நா சொல்லுதத கேளு புள்ள. எங்கூட இப்பிடியே வந்துரு. எங்கியாச்சும் போயிறலாம்…” என சொல்ல அவனின் பிடி இத்தனை இறுக்கமாய் இருக்குமென அவள் நினைத்ததில்லை.
ஒற்றை அடியில் சுருண்டுவிடுபவனுக்கு எங்கிருந்து இத்தனை வேகமும், பலமும் என திகைத்தவள் வெளியே யாரேனும் வருகிறார்களா என தேடியவள் கத்த முடியாமல் அவனின் கையை கடித்துவைத்து,
“ஏலே என்னிக்கு எம்மாமேன் அருளு எனக்கு பரிசம் போட்டானோ அன்னில இருந்து நா அவென் பொண்டாட்டிடா. எங்கிட்ட கூறுகெட்டத்தனமா பேசுத நீயி…” என அவனிடமிருந்து விடுபட திமிற எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை தர்மராஜ்.
“வா மின்னு போவோம்…” என சொன்னதையே சொல்ல சொல்ல அதற்குள் காசியாத்தா வந்ததும் பார்த்துவிட்டவர் சத்தமிட்டு உள்ளே இருந்தவர்களை அழைக்க தர்மராஜ் பதறிப்போனான்.
விடியற்காலை வீட்டில் பெண்கள் தான் கிளம்பிக்கொண்டிருப்பார்கள். அனைவரும் மண்டபத்திற்கு சென்றிருப்பார்கள் என்று தான் அவன் இத்தனை தூரம் இதற்காக காத்திருந்தது.
ஏனென்றால் வீட்டில் முருகய்யனோ, கணேசனோ அவ்வப்போது அருளோ என யாரேனும் இருந்துகொண்டே இருக்க அக்கம்பக்கத்தினர் வேறு பகலெல்லாம் அது இதுவென வீட்டில் தான் வந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
இப்பொழுது பெண்கள் தானே என்னும் ஒருவித அலட்சியம் அவனுக்கு. அதற்கும் மேல் மின்னொளியை எப்படியாயினும் இங்கிருந்து அழைத்து செல்வது, இல்லை செல்ல முடியாவிட்டால் இன்னும் ஒரு ஆயுதத்தை கையில் வைத்திருந்தான்.
அவளின் திருமணத்தை நிறுத்தவென. அவனளவில் அவன் புத்திக்கு எட்டிய யோசனை இது ஒன்றே.
“ஏலே மொத அவள விடு, இல்லாங்காட்டி எம்புள்ளைக்கி சொல்லியனுப்பிச்சா ஒன்னிய கொடல உருவாம விடமாட்டியான். உசுரு தப்புச்சு போயிரு…” என காசியாத்தா அருகே வர,
“யே கெழவி, தூரப்போ தூரப்போ. ஒம்மவேன் வாரதுக்குள்ள ஒன்னு இவளோட நா போயிரனும். இல்ல ஒரேடியா போயிரனு…” என்றவன் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து மின்னொளியின் வாயில் ஊற்ற முயன்றான்.
“ஆத்தே…” என்ற அழகுப்பாட்டி சட்டென காசியாத்தா கையில் வைத்திருந்த நெருப்புத்துண்டங்களை பிடுங்கி அவனின் முதுகுப்புறமாய் எரிய பதறி மின்னொளியை விட்டு விலகியவன் ஐயோ அம்மாவென துள்ளினான்.
“ஒம்புத்தி ஏம்டா இம்புட்டு குப்பையாட்டம் கிடக்குது…” என ராஜாத்தி சொல்லிக்கொண்டிருக்க குணசாலி அன்னத்திற்கு அழைக்க ஆரம்பித்தாள்.
உறங்காமல் இருந்த அன்னம் இவளின் அழைப்பை ஏற்காமல் எண்ணை பார்த்துவிட்டு வைத்துவிட விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தாள்.
“ஆராச்சும் சத்திரத்துக்கு போன போடுங்கவேன். ஆம்பளைங்க வர சொல்லும்…” என காசியாத்தா சத்தம் போட,
“சொன்னீங்க குடிச்சுருவேன். ஆமா, இங்கயே செத்துருவேன். மின்னு வாத்தா. சொல்லுதாதா கேளு சாமி. அவுகள சொல்லு. வேணா ஆருக்குஞ்சொல்ல வேணா, சொல்லலைன்னு சொல்லு…” என பயந்து பயந்து அவன் பேச,
“இங்கருந்து போயிருய்யா, புண்ணியமா போவும். நாங்க கெளம்பனும். அவனுங்க வந்தா ஒன்னிய வெட்டி வீசிருவானுங்க. போயிரு சாமி…” என ராஜாத்தி அவனுக்காய் பரிதாபப்பட,
“இல்ல மின்னு இல்லாம போவமாட்டே. மின்னு மின்னு…”என வெறி வந்தவனாய் கத்தியவன் மீண்டும் அவளின் கையை பிடிக்க போக பின்னால் நகர்ந்தவள்,
“மருவாதியா போயிரு, அம்புட்டுத்தேன் சொல்லுவேன். ஒன்னியத்தேன் ஆவாதுன்றேன்ல. ஏம்லே சங்கப்பிடிக்குத? போய் தொலையேன்…” அவள் கத்த,
“மாட்டல, இன்னிக்கு இந்த வீடு சாவு வீடுடி. எவனு ஒங்கழுத்துல தாலிய கட்டுதான்னு பாக்குதேன். மின்னு ஒன்னாலதேன் எனக்கு வாழ்க்கயும், சாவும்…” என கையில் வைத்திருந்த விஷத்தை காண்பிக்க அவன் ஒரு கோழை என அறிந்த மின்னொளி செய்யமாட்டான் என்னும் தைரியத்தில்,
“குடியேன், ஒன்னிய ஆரு வேணாங்குதா?…” என்றவளின் அலட்சியத்தில் அழுகையுடன் அவளை வெறித்தவன்,
“போறேம்த்தா…” என்ற வார்த்தையுடன் சட்டென வாயில் கவிழ்த்துவிட்டான் மொத்தத்தையும்.
“ஆத்தே…” என அனைவரும் பதறிப்போக அவனை மடிதாங்கிய அழகுப்பாட்டி,
“ஏத்தா மின்னு சுப்புவுக்கு போன போட்டு ஆட்டோவ கொண்டார சொல்லு. அப்பிடியே நீச்சத்தண்ணியில உப்ப கலந்து கொண்டா, புளிய கரைச்சு உப்பை போட்டு அத்தயும் கூட கொண்டாத்தா…” என சொல்லியவர் தர்மராஜை பரிதாபமாய் பார்த்தார்.
“அடேய் என்ன மனுசேன்லே நீயி…” என அவனின் கன்னத்தில் அறைந்தவர் அவனின் சுயநினைவு அகலாது இருக்க அவனிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.
அதற்குள் மின்னொளி அவர் கேட்டதை போல கொண்டுவர பிடிவாதமாய் வாயை திறக்கமாட்டேன் என்பதை போல வாயை மூடியபடி மின்னொளியை பார்த்தபடி இருந்தான்.
“என்ன அழுத்தம்லே ஒனக்கு…” என்ற மின்னொளி அவனின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட,
“ஏத்தா செத்த கம்மின்னு இருவே…” என காசியாத்தா சொல்ல வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது.