அதற்குள் அன்னத்தின் வீட்டிற்கு தகவல் சொல்ல ஒரு ஆள் செல்ல மின்னொளி அவனின் வாயை வலுக்கட்டாயமாய் பிடித்துக்கொள்ள அழகுப்பாட்டி உப்பு தண்ணீர் கரைசலை அவனின் வாயில் ஊற்ற ஆரம்பித்தார். அவன் வாங்காமல் வெளியே துப்ப இப்பொழுது மின்னொளி வாங்கி ஊற்றினாள்.
“இவன இப்ப காப்பாத்தி என்ன செய்ய போறீகளாம்? செத்து தொலயட்டு விடவேண்டிதான?…” என அருள் கோபத்துடன் வர அவனை திரும்பி முறைத்தவள்,
“செத்த கம்மின்னு இருக்கீகளா?…” என அவனை மிரட்டியவள் தர்மராஜ் வயிற்றில் உள்ளவற்றை வெளியே தள்ளும் வரைக்கும் ஊற்றிக்கொண்டே தான் இருந்தாள்.
சற்று நேரத்தில் அவனின் குடலில் உள்ளதெல்லாம் வெளியேற அன்னமும் அழுகையுடன் வந்துவிட்டார். மின்னொளியின் வீட்டில் பிரச்சனை செய்துவிட்டு தன்னிடம் வந்து சண்டையிட்டு சென்றவனை அதன் பின் இன்று தான் பார்க்கிறார்.
யாரையும் எதுவும் சொல்லவில்லை. சொல்லும் அளவில் மனதில் திடமில்லை என்பதே உண்மை. அழகுப்பாட்டி அன்னம் வரவும் நகர்ந்துகொள்ள தன் மடியில் தாங்கியவர் சத்தமின்றி அழ அந்த சூழ்நிலை மிகவும் கனமாக மாறியது.
“ஏலே சோதி இவன கொண்டுபோயி ஆசுப்பத்திரில சேரு. இப்ப பயமில்ல…” என அழகுப்பாட்டி சொல்ல சுப்புவும் அவனும் சேர்ந்து அவனை தூக்கிக்கொண்டு சென்றனர். ஓட்டமும் நடையுமாய் அன்னமும் உடன் சென்றார்.
சிறிது நேரம் அங்கே ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. அப்படியப்படியே திண்ணையில் அமர,
“என்ன அடுத்த சோலிய பாக்கவேணாவா? கெளம்புங்கடி. இந்தா மின்னு போயி இன்னொருக்க தலைக்கி ஊத்துத்தா…” என காசியாத்தா சொல்ல அதற்குள் ராஜாத்தி மின்னொளி குளிப்பதற்கு மஞ்சள் கலந்த நீரை கலந்து வைக்க என்னவென பார்த்தவளிடம்,
“சாமிக்கிட்ட வெச்சிருந்த மஞ்சளு வெழாவின தண்ணிதேன். மனசுக்கே என்னனோன்னு இருக்குத்தா. என்ன கால கெரகமோ அவென் இங்க வந்து இந்த ஆட்டம் ஆடிட்டு போயிட்டான்…” என சொல்ல,
“நீ போத்தா போயி மொத எல்லா கண்ணும் அவிஞ்சு போவட்டும். நீ குளுர குளுர தலைய நனச்சிட்டு வா…” என்று அவளை விரட்டியவர் மற்ற அனைவரையும் கிளப்பினார்கள்.
அதிகாலை என்பதால் மின்னொளி வீட்டில் தங்கி இருப்பவர்களை தவிர்த்து ஊரார் ஒருவருக்கும் அவன் வந்து சென்றது தெரியவே இல்லை.
தர்மராஜ் என்ற ஒருவனை மறந்தவர்களாக அனைவருக்குமே திருமண பரபரப்பு பற்றிக்கொண்டது.
ஆறு மணிக்கெல்லாம் வேன் ஒன்று வந்துவிட அனைவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல சரியாய் மண்டபத்திற்கு சேர்ந்தனர்.
அதன் பின்னர் மணமக்கள் இருவருக்கும் முகூர்த்தத்திற்கு உடை கொடுக்கப்பட இருவரும் மாற்றிக்கொண்டு வர பணித்தனர்.
முதலில் அருள் வந்து அமர்ந்துவிட்டான். அவனின் மனதில் இன்னமும் படபடப்பு குறையவில்லை.
மின்னொளி உடை மாற்றி வர தான் எடுத்துக்கொடுத்த புடவையில் எப்படி இருக்கிறாள் என்று அவளை திரும்பி பார்க்கவேண்டும் என்று நினைத்தான் அருள். மெதுவாய் தலையை திருப்பி பார்க்க மின்னொளி வந்துகொண்டிருந்தாள்.
“ஹ்ம்ம் மின்னு இந்த சீலையில மின்னத்தேன் செய்யுதா…” என நினைத்தபடி அவளை அங்குலம் அங்குலமாய் அளந்தவனின் பார்வை ஆராயும் பார்வையாக இல்லாமல் அவளை அவஸ்தையில் அமிழ்த்தும் பார்வையாக இருப்பதை அவனே உணரவில்லை.
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்து அவனின் பார்வையை மொத்தமாய் உணர்ந்த மின்னொளிக்கு குப்பென வியர்க்கும் புது உணர்வு. விழியை தாழ்த்தினால் அவன் திரும்பிக்கொள்வானோ என அவனை பார்த்த இவள் அவனின் பார்வையை உள்வாங்கியபடி அவனருகே சென்று அமர்ந்தாள்.
“குனிஞ்சுதேன் வாயேன். ஏன்டி அந்த பார்வை பாக்குத?…” என அவளின் பக்கம் சரிந்து அவன் பேச,
“நா பாக்குததுதேன் ஒனக்கு தெரியுதாக்கும். இப்ப நீயி என்ன பண்ணுதியாம்? எல்லாரு ஒன்னியத்தேன் பாக்குதாக…” என அவனை முணுமுணுப்புடன் சீண்ட,
“ஒன்னிய கெட்டிக்கிட்டு…”
“கெட்டாம? எந்திச்சு ஓடிருவியோ?…” என சொல்லி மெல்ல அவன் புறம் திரும்பவும் திருமாங்கல்யம் அவனின் கைக்கு வரவும் சரியாய் இருக்க டக்கென தாலியை கட்டினான் அருள்ஜோதி.
கண்களை விரித்து அவள் உணரும் முன் நிகழ்ந்துவிட்டிருந்த இந்த நிகழ்வை அவள் அனுபவிப்பதற்குள் அவளின் கழுத்தை சுற்றிக்கொண்டு வந்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தான்.
“இன்னிக்க விட அன்னிக்கி வெச்சியே அதுதேன் எனக்கு புடிச்சது….” என்றவளின் கிசுகிசுப்பில் நெளிந்தவன்,
“கம்முன்னு இருடி, உசுப்பேத்தாத…” என சொல்லி அவளைவிட்டு சற்று விலகியே அமர்ந்துகொண்டான்.
அதன் பின் சம்பிரதாயங்களும், முறைகளும் வரிசையாக நடைபெற இருவருமே அதனை முழுமனதுடன் செய்தனர்.
மதிய உணவு நேரம் முடிந்து ஊர்மக்கள் கலைய ஆரம்பித்தனர். மண்டபத்தை காலி செய்துவிட்டு மணமக்கள் முருகய்யன் வீட்டிற்கு தான் முதலில் வந்தனர்.
பால் பழம் சாப்பிடும் முறை முடிந்து மாலை அருளின் ஊருக்கு செல்ல அங்கே சில சாஸ்திரங்கள் நடைபெற்றன. இரவு உணவு அங்கே அனைவருக்கும் தயாராக சாப்பிட்டு முடிக்கவும் அனைவரும் வெளியே அமர்ந்திருக்க உள்ளே காசியாத்தாவிடம் பேசிய ராஜாத்தி இரவு சடங்கிற்கு தயார் செய்தார்.
“என்ன கூத்து பண்ணுத நீயி? அப்பப்ப கோட்டிபுடிச்சுக்குதா ஒனக்கு?…” என அருள் அவர்களின் ஏற்பாடு கண்டு ராஜாத்தியை திட்ட,
“இதுவரைக்கும் நீ பேசுன கம்மின்னு போயிட்டேன். திரும்ப பேசின நா கெளம்பி எம்வீட்டுக்கு போயிட்டே இருப்பேன். பொறவு நீயு, ஒம்பொண்டாட்டியும் என்னவு பண்ணுக…” என்ற மிரட்டலில் அருள் வாயடைத்து நிற்க,
“என்னடி இது வார்த்த பெருசா வருது?…” காசியாத்தா ராஜாத்தியிடம் தான் பாய்ந்தார்.
“நீ கம்மின்னு போத்தா…” என அவரை விரட்ட,
“எக்கா ஒனக்குத்தேன். அந்த புள்ள. ப்ச், சங்கட்டப்பட போவுதுத்தா…” என்றான் அருள்.
“அதுக்குன்னு? எதெது எப்பெப்ப நடக்கனுமோ நடக்கனுந்தேன்…” என பிடிவாதமாய் சொல்லியவர்,
“அவக்கிட்ட நா பேசிக்கிடுதேன். நீ போ…” என்றதும் வெளியே செல்ல போனவனை நிறுத்திய ராஜாத்தி,
“வாசல்ல காவக்காத்தது போதும்லே. ரூமுக்குள்ள போ…” என்றதும் தான் தனக்கென தயாராக இருந்த அறைக்குள் சென்றான்.
அந்த வீட்டில் மூன்று அறைகள் இருந்தாலும் யாரும் அதனை உபயோகிப்பது இல்லை. ராஜாத்தி இருந்தவரை சில நாட்கள் தான் அங்கே இருந்தார். அதன்பின்னர் அனைவரும் கூடத்தில் தான் உறங்குவது எல்லாம்.
இப்பொழுது தனக்கென அதுவும் பிரத்யோகமான விதத்தில் இந்த நேரத்தில் தயாராக இருந்தது மனதினுள் பெரும் பிரளயத்தை உண்டாக்கியது. அவளை எப்படி எதிர்கொள்வது என்பதை விட தன்னை எப்படி கட்டுப்படுத்துவது என்றுதான் அவனின் தலையாய கவலையாய் போனது.
பின்னே அவனும் ஏகப்பட்ட ஆசைகளுடன் அவளை கை பிடித்திருக்கிறானே. மனைவி என்று வரும் பொழுது கணவனுக்கான எதிர்பார்ப்புகளும், உணர்வுகளும் அங்கே தனித்துவம் வாய்ந்தது அல்லவா?
தாம்பத்தியத்தின் ரகசியங்கங்களை அறிந்துகொள்ள அவனின் மனம் பெரும் அவா கொண்டாலும் தயக்கத்திற்கும், ஆசைக்கும் நடுவில் தடுமாறினான்.
அவனுக்கும் ஆசை தான். ஆனாலும் மின்னொளி இதனை எப்படி எடுத்துகொள்வாள் என யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
ராஜாத்தியிடம் அருள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுகொண்டு தான் இருந்தாள் மின்னொளியும்.
ஏற்கனவே மனதினுள் ஏகப்பட்ட போராட்டம். இப்பொழுது இதனை எதிர்கொள்வது என்பது தவிர்க்க இயலாதது என நினைத்தவள் மனதில் எழுந்த அலையை அடக்கி சமன்செய்ய ஆரம்பித்தாள்.
“மின்னு…” என தன் முன் வந்து நின்ற ராஜாத்தியை பார்த்த மின்னொளி அவரின் பார்வை வீச்சில் ஒருவாறு புரிந்துகொண்டவள் கண்கள் அலைப்புற விரல்கள் நடுங்க ஆரம்பித்தது.
அவளும் கண்டுகொண்டாள் என்பதை புரிந்துகொண்ட ராஜாத்தி அடுத்த நொடி தன் விரல்களை அவளின் கன்னத்தில் பதித்திருந்தார் பெரும் சத்தத்துடன். அவர் அடித்ததை எதிர்ப்பின்றி வாங்கி நின்றாள் மின்னொளி.
“இம்புட்டு நாளு நீ யே பேசாம இருந்தன்னு எனக்கு தெரியல. ஆனா இனி ஒன்னியமாரித்தேன் நா இருக்க போறேன். ஒங்கிட்ட பேசாம…” என்ற வார்த்தையில் மொத்தமாய் உடைந்து போனவள்,
“சின்னம்மோவ்…” என்ற குரலுடன் அவளை அணைத்துக்கொள்ள ராஜாத்தியும் தாய்மையுடன் அவளை அரவணைத்தார்.
“போதும்டி, இம்புட்டுநாளு நீ பட்டதெல்லா போதும். என்தம்பி ஒன்னிய நீ இருக்கறமாரியே புடிச்சு கட்டிக்கிட்டான். அவென் சந்தோசம் எனக்கு மட்டுமில்ல ஒனங்குந்தேன் முக்கியோம். புரியுதா புள்ள?…” என கேட்டதும் அவளும் தலையசைக்க,
“செரி, போயி மொத மொகத்த கழுவிட்டு வா. அவென் உள்ள போயிட்டான். இப்பத்திக்கு ஆருக்கிட்டையு ஒன்னுஞ்சொல்ல வேணா…” என்று அவளை வேகமாய் தயார் செய்து உள்ளே அனுப்ப வந்ததுமே கண்டுகொண்டான் அவளின் முக வேறுபாட்டை.
“இந்தா என்ன புள்ள சொணங்கிக்கெடக்க? ஓஹ் இத்த பாத்து பயந்துட்டியாக்கும்? அதெல்லா நீ வெசனப்படாத. போயி படு…” என்றவனை பார்த்தவளுக்கு அவனின் அன்பில் உள்ளம் நெக்குருகியது.
ஆனாலும் அவனை சீண்டிப்பார்க்கும் நோக்கம் எழ சிரிப்புடன் அவனை பார்த்தாள் மின்னொளி.
“யோவ், போய் படுன்னா? ஒத்தையிலையா?…” என வேண்டுமென்றே கேட்டாள் தன் துடுக்கான குரலில்.
“ஆமா புள்ள. யே கேக்குதா?…”
“பின்ன ஒ அக்கா என்னனா எந்தம்பிதேன் ஒலவம், அவே சுத்துனா நீயு சுத்து. ஒக்காந்தா ஒக்காருன்னு இம்புட்டு நேரமுச்சூடும் பாடத்த நடத்துச்சு. உள்ள வந்தா படுங்கற? என்ன வெளாடுதீகளா?…” என்று வம்புச்சண்டை இழுப்பதை போல அவனை வம்பிழுக்க,
“அடிங்க, வாயாடி, தெரியும்டி நீயாது, அடங்குறதாதுன்னு. பாவமா வந்து நின்னியேன்னு பாத்தா வாய் நீளுது பாரேன்..” என அவனும் வேஷ்டியை மடித்துக்கட்ட,
“அப்படி வா வழிக்கு” என்று பார்த்தபடி நின்றாள் மின்னொளி.
“அக்காவுக்காச்சும் தம்பின்னு எம்மேல அக்கற. தாலி கட்டிருக்கேன்னு ஒனக்கு என்னடி இருக்கு?…”
“என்னவோ நா போய் தனியா ஒறங்குன்னு சொன்னதாட்டம் எங்கிட்ட எகிறுத? நீ பயந்துபோயி தப்பிச்சு ஓடப்பாத்துட்டு என்னிய ஏசாத…”
“ஆரு நானா? ஆருடி இப்ப நீ சொல்லுத. இத்த இப்பவே பைசல் பண்ணல நா சோதி இல்லடி…” என மின்னொளியை இழுத்து அணைத்தவாக்கில் பிடிக்க,
“அப்ப அருளுன்னு ஒத்துக்கறியா மாமோவ்…” என்று அவள் சொல்லி முடிக்க வாயை பிளந்துகொண்டு அவன் பார்த்த பார்வையில் மின்னொளிக்கு தான் வெட்கம் தின்றது. அவனின் மார்பில் முகம் புதைத்தவள்,
“யோவ், என்னையா இப்பிடி பாக்குத?…” என அவள் கிசுகிசுக்க அவர்களின் சண்டை எல்லாம் நொடியில் மறந்தது அவனுக்கு.
“ஒளி…” என குழைந்த குரலில் அழைத்தவன் அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
“ஒனக்கொண்ணு செரமோ இல்லியே புள்ள…” என்றதற்கு அவளின் அணைப்பே பதிலாக அதன் பின் அருளுக்கு ஏது கட்டுபாடு? மனதின் சஞ்சலங்கள், குழப்பங்கள், அழுத்தங்கள் என அனைத்தும் லேசாக அவளுள் கரைய ஆரம்பித்தான் அருள்ஜோதி.
தட்டுத்தடுமாறி தள்ளாடி தள்ளாடி ஆரம்பித்த அந்த உறவு அவனின் தலைகோதலில் நிறைவுற்றது.
வார்த்தைகளால் சொல்லப்படாத அந்த நேசத்தின் சுவையை பெண் மின்னலவளுக்கு திகட்ட திகட்ட உணர்த்தினான் அவளின் சுட்டெரிக்கும் சூரியன்.