கடல் – 2
நொடிப்பொழுதில் சுதாரித்தவள் அவனை இன்னமும் இளக்காரமாய் பார்த்துவிட்டு,
“நா சமைஞ்சா ஒனக்கென்ன? ஆவலைன்னா உனக்கென்ன? நீயி என்ன எனக்கு குச்சா கெட்டப்போற? போவியா…”
“அடியே நெனப்பாடி ஒனக்கு? இந்த செம்மத்துல நடக்காதிடி. பாத்துருவோ…”
“எனக்கு ஆச பாரு? இத்த சொல்லத்தேன் வந்தியோ?…” அவனை பார்த்துவிட்டு நகல சொல்ல,
“நா கெட்டாம? வேற எவே வாரான்னு பாக்குதே…” எதற்கு வந்தோம் என்பதை மறந்து அவளின் அலட்சியத்தில் வெகுண்டு அருள் பேச அவனை மீண்டும் பார்த்தவள்,
“வரப்ப பாரு. இப்ப நடைய கட்டு. வந்துட்ட…”
“வராம, இனி நாங்க வச்சதுதேன் சட்டம். வரத்தேன் போறேன். அதேன் ஒ அப்பனே எங்கட்ட வந்துட்டாருல முழுசா…” என்ற பொழுதில் மின்னொளியின் கண்ணில் லேசாய் கண்ணீர் பரவ ஆரம்பிக்க,
“அவர பத்தி நீ பேசாதலே. உன்னால ஆனத பாத்துக்க. என்னவோ ஓடமப்பட்டவனாட்டம் பேசுத?…” எரிச்சலில் அவள் எகிற,
“ஒ அப்பனே எங்க ஓடமதேன். அப்பிடித்தான்டி பேசுவே…” என்றவன் லேசாய் நெகிழ்ந்த கைலியை மடித்துக்கட்டி,
“என் மச்சான நா பேசாம? அதேன் ஒ அப்பனே ஒன்னோட லட்சணோ தெரிஞ்சி ஏ அக்காவ கட்டிகிட்டாரு. ஒன்னால ஒத்தத்துட்டுக்கு பிரயோசனமில்லைன்னு. கருவாச்சி. பேர பாரு அம்மாவாசைக்கி மின்னொளியாம்…”
அருள் சொல்லியவேகத்தில் அவனை பிடித்து வயலுக்குள் ஒரே தள்ளாக தள்ளிவிட இதை எதிர்பாராதவன் மொத்தமாய் சகதியில் அமிழ்ந்து எழுந்தான்.
“அம்புட்டுத்தேன் சொல்லிட்டே. ஒ மூஞ்சியை நீ கண்ணாடில பாத்திருப்பியா?. நல்லா நெருப்புல விழுந்த ஓணா ஒடப்புல கெடந்து எந்திச்சு வரவனாட்டம் இருந்திட்டு என்ன பேசுதியோ?…” என்று பாவாடையை இழுத்து மேலே ஏற்றி சொருகி அவள் பேச சகதியுடன் எழுந்து வந்தவன்,
“ஒன்னால ஒன்னு வெளங்கிருக்கா? எம்போனும் போச்சு…” என சட்டையில் இருந்த போனை பார்த்து அவன் பொறும அவனை எள்ளலாய் பார்த்தவள்,
“ஆட்டுக்கு தாடிய அளந்து வெச்ச மாதிரி எங்கிட்ட ஒ வாலாட்டத்த அடக்கி வைய்யி. இல்ல. எம்பன்னருவாதேன் பேசும். போய் சோலிக்கழுதைய பாரு…” என்று விறைப்பாய் பேசிவிட்டு அவள் சென்றாலும் முகம் கலங்கி கண்கள் சிவந்திருந்தது.
“ராங்கிபுடிச்சவ எத்தன ஏசினாலு திருப்பி குடுக்குதாலே?…” என சுப்புவிடம் வந்து அவன் எரிந்துவிழ,
“அவ பாட்டுக்கு சூசுவான்னு போயிட்டு இருந்தவள வீம்புக்கு போய் விரல புடிச்சா கடிக்காம கொஞ்சவா செய்யுவா? தெரிஞ்சி போயி தலைய குடுத்தது ஒ தப்புத்தேன். போயி அந்த பம்புசெட்டுல தலைய கழுவிட்டு வாலே. மருந்து கெட்டின ஒடம்பு. கொள்ள சோலி கெடக்கு…” என அவன் பங்குக்கு பேச இன்னமும் எரிச்சலானான் அருள்ஜோதி.
எப்பொழுதும் தன்னை உயர்த்தி பேசுபவன் மின்னொளி விஷயத்தில் மட்டும் கிண்டல் பேச்சு பேச அந்த கோபமும் அவள் மீதே பாய்ந்தது.
சட்டைப்பையில் நனைந்து போயிருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து வாய்க்காலில் லேசாக அலசி சுப்புவிடம் எடுத்து கொடுத்தவன் நேராய் சென்று கிணற்றில் குதித்தான்.
நன்றாக மூழ்கி எழுந்தவன் அதன் குளுமையில் சற்று முன் மனதில் பரவியிருந்த இருந்த வெப்பம் சிறிது குறைந்ததை போல தோன்ற மேலே எழுந்து வந்தான்.
தூரத்தில் மின்னொளி இவனை பார்த்ததும் கண்டுகொள்ளாமல் மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட முறைப்புடன் வயலை தாண்டிக்கொண்டு நீர் சொட்ட சொட்ட ஆட்டோவில் வந்து அமர்ந்தான்.
“இதுக்குன்னே இன்னொரு உடுப்போட திரியனு போலலே…” என்ற சுப்புவின் கேலியில் அவனின் பின்னந்தலையில் சட்டென்று அடித்தவன்,
“ரோட்டப்பாருவே…” என மிரட்டலாய் உறும அதன் பின்னால் கேலியை கைவிட்டவனாய் வண்டியை செலுத்த ஆரம்பித்தான் சுப்பு.
இதற்கு மேல் பேசினால் நிச்சயம் அருள்ஜோதியின் கோபத்திற்கு ஆளாகி முரட்டுத்தனமாய் தாக்கப்படுவோம் என்பதை நன்றாய் அறிந்தவனாகிற்றே.
அருள் மனமெங்கும் மின்னொளியின் மீதான கோபம் தன் தமக்கையின் மீது பாய்ந்தது. கேட்டார்களா தாயும், தமக்கையும். இப்படி ஒரு இரண்டாம்தார வாழ்வு தேவையா? என நினைத்து வெதும்பாத நாளில்லை.
அதன்பொருட்டே முருகைய்யன் மீதான கோபமும் பலமடங்கு பெருகிக்கிடந்தது. திருமணம் நடந்த புதிதில் அவர் நடந்துகொண்டவையும் அதன் பின்னர் மின்னொளியின் அலட்சியமும் ராஜாத்தியை ஒதுக்கிய விதமும் அழியா சுவடுகளாய் இவனின் மனதில் பதிந்துபோக இன்றுவரை அவளை வார்த்தையில் ஜெயிக்கமுடியாதது வேறு வதைத்தது.
“அவள இத்தோட விட்டுடுவேனா? அம்புடட்டும் அன்னிக்கி இருக்குலே. அவ அப்பன் வந்து கதறிக்கிட்டு குச்சிகட்ட சொல்லிவானுல்லே. வச்சிக்கிடுதேன்…” என்று தொடையை தட்டி சூளுரைக்க அப்படி ஒரு வாய்ப்பை இந்த ஜென்மத்தில் அவள் தனக்கு அளிக்கப்போவதில்லை என்பதை அறியாதவனாகிபோனான்.
“அதுக்குத்தேன் ஒ அண்ணங்கார கெரகம்புடிச்சவே இருக்கானுள்ள. மறந்துபோச்சாலே?…” சுப்பு எடுத்துக்கொடுக்க,
“அவே இருக்க பவிசுல வந்து கெட்டிட்டுத்தேன் மறுவேல பாப்பியான். நீ வேற ஏம்லே?…” என்று எரிந்துவிழ,
“செரி, செரி. நாளைக்கி செனைக்கி போட கூட வாலே. ஒத்தையா மாட்ட இழுத்துக்கட்ட ஆவாதுன்னா ஒந்தங்கச்சி கேப்பேனான்னுறா…” சுப்பு தன் வேலையை ஞாபகப்படுத்த,
“மாட்டேன்னா விடவா போற? போவம்…” என்றவன் தன்னுடைய சிறிய நோக்கியா போனை தனித்தனியாக கழட்டி சுப்புவின் துண்டில் துடைத்துக்கொண்டே வந்தான்.
“ஊருக்கு போனதும் அக்கா சொல்ல சொல்லுச்சு. இந்த ராங்கிக்காரியால எல்லா போச்சு…” பல்லைக்கடித்துக்கொண்டே அருள் சொல்ல ஊரை நெருங்கி வீட்டை அடைந்ததும்,
“அதே எம்போனு இருக்கில. பேசு. நா உள்ள போயி தண்ணி குடிச்சிட்டு வாரேன்…” என சுப்பு தன் மொபைலை தர அது நான்கைந்து ரப்பர் பேண்டுகள் போடப்பட்டு அங்கங்கே நீலமும், மஞ்சளுமான செல்லோடேப் வேறு கலர்கலராய் போட்டு ஒட்டப்பட்டிருந்தது.
இந்த ஜல்லிக்கட்டில் இன்னும் இரண்டு ரவுண்டு வந்திருந்தால் வேறு ஒரு போனாவது வாங்கியிருக்கலாம் இவனுக்கு என்று நினைத்தான் அருள்.
இதுதான் அவன். எத்தனை தான் தன்னால் வேறு வாங்க முடியும் என்று நினைத்தாலும் அந்த இறுமாப்பு என்றைக்குமே அவனிடத்தில் இருக்காது.
சொத்துக்கள் ஏனைய இருந்தாலும் அனைத்தும் தந்தை சேர்த்து வைத்தது என்றாலும் அதை அனுபவிப்பானே தவிர ஆடம்பரத்திற்கு உபயோகிக்க மாட்டான். இதையும் தாண்டி அவன் தனக்கென்று ஆசை ஆசையாக வாங்குவதென்றால் அது தன்னுடைய ஜல்லிக்கட்டில் வருபவற்றை கொண்டுதான்.
அதில் வரும் பொருட்களாகட்டும் பணமாகட்டும் அதன் மீது அத்தனை காதல் அவனுக்கு. பொக்கிஷமாய் பார்த்து பார்த்து பூரிப்பான் அவன். மிக அவசியத்திற்கு மட்டுமே செலவழிக்கும் செலவாளி. அக்காவிற்கென்றால் அத்தனை செய்யும் பாசமான சகோதரன்.
ராஜாத்தியிடம் வீடு வந்து சேர்ந்துவிட்ட தகவலை சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைய காசியாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தான் சுப்பு.
அதை பார்த்துக்கொண்டே தனது போனின் பாகங்களை அரிசி பானைக்குள் ஒவ்வொன்றாக திணித்துவிட்டு,
“ஆத்தா குளுதாடில போன கழட்டி போட்ருக்கேன். நீபாட்டுக்கு ஒலைய வச்சு அரிசிய அள்ளி போட்டுடாத. பொறவு இன்னைக்கு மத்தியான கஞ்சிக்கி போனுதேன்…” என கிண்டலாக சொல்லியவன் குளிப்பதற்கு பின்பக்கம் சென்றான் வேற்றுடையுடன்.
“என்னாச்சு துடுப்பு? என்னத்துக்கு போன அரிசிக்குள்ள வெக்கிதான்?…”
“ஹ்ம்ம், ஒம்மவே போன வச்சிருந்த லட்சணத்த பாத்திட்டு ஒம்மருமவ குளிப்பாட்டி அனுப்பிருக்கா. குளிருக்கு கூத காய ஒம்மவே அத்த அரிசிக்குள்ள திணிச்சிருக்கா. இத்த அவேன்ட்ட அசமஞ்சமா கேட்டுப்புடாத ஆத்தா…” கேலியாய் சொல்லி அருளிடம் கேட்டுடுவாரோ என்று பயந்து முடித்தான்.
“இம்பிட்டு பயந்து கெடக்குதவனுக்கு என்னத்துக்குலே சவடாலு…”
“ஏஞ்சொல்லமாட்ட கெழவி? செரி, அத்த வுடு. கருப்பட்டி வேணுமின்னு வீட்டுல கேட்டா…” என்றவன் முடிக்கும் முன்னரே,
“அந்தா மூலையில பானைக்கி மேல இருக்கற கின்னிப்பெட்டில (பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட ஒரு பெட்டி) வச்சிருக்கேன். எடுத்துக்க…” என்றார் காசியாத்தா.
“என்னலே கெளம்புதியா?…” தலையை துவட்டிக்கொண்டே பனியனும், லுங்கியுமாய் அவன் வந்து நிற்க,
“போவ வேண்டித்தேன். பஸ்டாண்டுல போயி நின்னாத்தேன் சவாரி கெடக்கும். ஒனக்கேன்னப்பா ஒக்காந்து திண்ணாலும் வட்டலு நெம்ப சோறுதேன்…” என பெருமூச்சு விட்டவனாய் சுப்பு சொல்ல,
“மொகரைய பேத்துருவேன் பாத்துக்க. காக்கஞ்சினாலு ஒழச்சாதாம்லே. போயி சோலிக்கு நில்லு…” என்றவன் சுப்பு கிளம்ப,
“இந்தா நில்லுலே. சவாரிக்கி காசு வாங்காம போறவே?…”
“கோட்டிப்பயலே அக்காவ கொண்டி எறக்க காசு குடுக்கானாம்? நா பேத்துருவேன்ல ஒ மொகரைய…” என்று சுப்பு கோபமாய் சொல்லி செல்ல லேசான சிரிப்புடன் அவன் செல்வதையே பார்த்திருந்தான் அருள்.
“லே சோதி அவேகிட்ட போயி காச நீட்டிதியே? கூறு இருக்காலே? போயி ஆட்டுக்கறி எடுத்தா. வெஞ்சன வச்சு தாரேன். போயி குடுத்திட்டு அவே பொஞ்சாதிட்ட நா குடுத்தேன்னு சொல்லிட்டு வா…” என்று சொல்லிய காசியாத்தா இப்பொழுதே கறிக்குழம்புக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தார்.
“வரப்பவே சொல்லுததுக்கென்ன கெழவி? வாங்கியாந்திருப்பேனுல?…” என்று எரிச்சலுடன் சட்டையை போட்டுக்கொண்டு தனது சைக்கிளில் கிளம்பினான்.
“பெருமைக்கி எரும மேய்க்கத்தேன் இந்த வண்டிய வாங்கிருக்கான் போல. ஒத்தநா ஏறி ஓட்டிப்பாக்கல. வந்தன்னைக்கி ராசாவாட்டம் வந்தெறக்கினத்தோட செரி. தொடச்சி தொடைச்சி தேயத்தேன் போகுது. எப்ப பாரு சைக்கிளத்தேன் தூக்கறது…”
வாசலில் ஒய்யாரமாய் நின்றுகொண்டிருந்த புல்லட்டை பார்த்து பெருமூச்சு விட்டவராக வழக்கமான புலம்பலுடன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் காசியாத்தா.
——————————————————-
களையடுக்க ஆட்கள் வந்துவிட ஆட்களோடு ஆளாக நின்று மின்னொளி அவர்களை வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள்.
சிறு பெண்ணாகிற்றே என்று எவரும் அவளை குறைத்து எடைபோட முடியாதபடி இருக்கும் அவளின் செயல்களும், பேச்சும், வேலைவாங்கும் பாங்கும்.
ஒருவர் பேச்சில் இருந்தே ஆட்களை எடைபோடும் குணமும், பொறுப்பும் பிறந்ததிலிருந்தே அறிவாளி குழந்தையாகவே வளர்ந்தவளுக்கு யாரும் எதையும் சொல்லி செய்யும் பழக்கம் என்பது இல்லவே இல்லை.
என்ன ஒன்று, கோபம் என்று வந்துவிட்டால் எதையும் பார்க்கமாட்டாள், யாரையும் யோசிக்கமாட்டாள். பேச்சுக்களும் அத்தனை துடுக்காகவும், எதிரவர்களை பேச யோசிக்கவைக்கும் விதமாகவும் இருக்கும்.
முருகைய்யனுக்கு இன்னொரு தாய் என்பதை சொன்னால் மிகையாகாது. என்ன நினைக்கிறாள் என்பதை புரிந்துகொள்ளவே முடியாத அளவிற்கு புதிர் போன்றவள்.
வயல்வேலைகள் முடிந்து வீட்டுக்கு மின்னொளி வந்து சேர முருகய்யனும் வந்துவிட்டார். மகளுக்கும் அவருக்குமான பேச்சுவார்த்தைகள் விட்டகுறை தொட்டகுறையாக ஏதோ அளவில் தான் இருந்து வருகிறது.
ராஜாத்தியை மனைவியாக கூட்டி வந்ததில் இருந்தே இறுக்கமாய் இருந்தவள் அதன் பின் தேவைக்கு மட்டுமே பேச்சு என்னுமளவில் அவரை எட்டியே நிறுத்தினாள்.
மனைவி முத்துநகை நினைக்கும் பொழுதே மனதில் ஒருவித சுகமும், பாரமும் அவரை அமிழ்த்தியது. எப்பேர்ப்பட்ட பெண்ணரசி. வாழ்வாங்கு வாழத்தான் கொடுத்துவைக்கவில்லை. அதை நினைத்து இன்றளவும் மருகாத நாளில்லை முருகய்யன்.
மகள் குளித்துவிட்டு வரவும் தாயை பார்த்த முருகய்யன்,
“எம்மா மின்னலுக்கு சோறு போட்டியா?…” என மெதுவாய் கிசுகிசுப்புடன் கேட்க அவரை முறைத்த அழகு,
“சோலிய பாருலே. வவுறு கத்துனா திங்க போறா. போ…” என்று வாயில் குதப்பிய வெற்றிலைபாக்குடன் அவரை பேச பரிதாபமான முகத்துடன் சாப்பிட அமர்ந்தார் அவர்.
பிள்ளை வயிற்றுடன் ராஜாத்தி அவருக்கு வந்து பரிமாற பேச்சுக்கொடுக்காமல் அமைதியாக சாப்பிட்டார்.
“இன்னைக்கு ரா வெளில தங்கறதா சொன்னீக?…” ராஜாத்தி மெதுவாய் கேட்க அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு இல்லை என்பதை போல தலையை மட்டும் அசைத்தார்.
“இன்னைக்கி சோதி வந்துட்டு போனான்…” அதற்கும் தலையசைப்பு மட்டுமே.
“ஒங்கட்ட பேசனுனு சொல்லிருக்கான்…”
“என்னவாம்?…” நீண்ட நேரத்திற்கு பின்னால் முத்தை உதிர்த்தார்.
“சீமந்தம் பண்ணனுனு, அதுக்காண்டி பேசத்தேன்…” மிக தயக்கமாகத்தான் இதையும் அவர் பேசியது.
“கோட்டியாடி ஆட்டுது ஒன்தம்பிக்கி? வீட்டுல வயசுபுள்ளைய வெச்சிக்கிட்டி வளைய அடுக்கனுமாக்கும்?…” என அவர் எரிந்துவிழ இவர்களின் பேச்சு உள்ளே இருந்த மின்னொளியின் காதிலும் விழுந்தது தெளிவாய்.
ராஜாத்தி அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவரின் விழிகள் கலங்கி கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. ஆனாலும் அதை காண்பித்துக்கொள்ளாது தலைகுனிந்து அமர்ந்திருந்தார். உண்டு முடித்து கை கழுவிய முருகய்யன்,
“செத்த நேரம் குறுக்க சாய்க்கறேன். ஒருமணிநேரஞ்செண்டு எழுப்பு…” என்றவர் பின் மீண்டும் ராஜாத்தியை பார்த்து,
“செத்த உள்ள வா. பணந்தாரேன். புள்ள கையில நீயே குடு…” என அழைக்க வேகமாய் எழுந்து சென்றார் அவர்.
அனைத்தையும் மௌனமாய் பார்த்துக்கொண்டிருந்த மின்னொளி முகம் யோசனையில் மாற,
“யாத்தா மின்னலு, வந்து சாப்பிட்டுத்தா. ராவாகியும் வெக்கைய பாத்தியா?அவியுது கெடந்து. உள்ளார என்னன்னு ஒறங்குவானோ ஒ அப்பன்?…” என்றபடி அவளுக்கும் தனக்குமான தட்டை எடுத்துவைத்து காத்திருக்க பாவடையும் சட்டையுமாக சற்றுமுன் அலசிய கூந்தலுடன் ஈரம் சொட்ட அவள் வந்து அமர்ந்தாள்.
நன்றாக பூசிய உடல்வாகுடன் வாளிப்பான பெண் தான். நிறம் மட்டும் முருகய்யனை கொண்டு பிறந்திருந்தாள். ஆனால் தாயின் மொத்த அழகையும் வாரிக்கொண்டு தான் வந்திருந்தாள்.
அவளின் மாநிறம் அந்த அழகை மழுங்கடித்திருப்பதை போன்ற தோற்றம் அழகு பாட்டியிடம் அவ்வப்போது பெருமூச்சை எழுப்பும். மொத்தமாகவே தாயை கொண்டிருந்திருக்களாமோ என்று.
“ஏத்தா மின்னலு தாவணி கட்டிக்கிட்டு வரப்புடாதா?…” அப்படியாவது ஏதாவது நல்லது நடந்திடாதா என்னும் ஆவலுடன் அவர் சொல்ல அந்த சத்தம் அவரின் வாய் விட்டுத்தான் வந்ததே தவிர மின்னொளியின் காதை அடையவில்லை. அத்தனை மெதுவாய் சொன்னார்.
பேத்தி இன்னமும் பருவமடையாமல் இருக்க இருக்க வயதான பெண்மணியின் உள்ளம் நிறைய அத்தனை வேதனைகள் மிதமிஞ்சி இருந்தது. தன் வேண்டுதலை அந்த கடவுள் என்றைக்கு தான் காதுகொடுத்து கேட்க போகிறாரோ என்ற கவலையுடன் பேத்தியையே பார்த்தார்.
“என்ன கெழவி என் மூஞ்சில படம் வரையரியா?…” என கேட்டுக்கொண்டே சாதத்தை எடுத்து தனக்கு போட்டுக்கொள்ள கதவை திறந்துகொண்டு வந்தார் ராஜாத்தி.
“வாத்தா நீயும் கூட ஒக்காறேன்…” என மருமகளையும் தாங்க,
“இல்லத்தே, பொறவு சாப்படறேன். இப்ப வேணா…” என்றவர்,
“மின்னலு குத்தக பணத்த ஒங்கிட்ட குடுக்க சொன்னாக…” என்று கத்தையாக பணத்தை நீட்ட அதை பார்த்துவிட்டு அமைதியாக இவள் சாப்பிட தரையில் வைத்தார் ராஜாத்தி.
“இந்தா ஒக்காருன்றேன்ல…” என வலுக்கட்டாயமாக அவருக்கு தட்டை போட்டு சாப்பாட்டை பரிமாற மின்னொளியும் அவருக்கு தள்ளி அமர இடம் கொடுப்பதை போன்று அமரவும் ராஜாத்தியும் சேர்ந்தே சாப்பிட்டார்.
ஆனாலும் மனம் முழுவதும் தன் தம்பியிடம் என்ன பதில் சொல்வதென்ற யோசனையிலேயே சரியாக உண்ண முடியவில்லை. சாப்பிட்டு முடித்து அவர் எழுந்துகொள்ள,
“கெழவி இதுலருந்து இருவதாயிரத்த எடுத்து அவகட்ட குடு. வளப்பூட்டு ஏழா? ஒம்பதா? பாத்து செய்யி. ஒம்மவன்ட்ட நா குடுத்தேன்னு சொல்லிரு இப்பவே…” என்றதும் ராஜாத்திக்கு நெஞ்சம் கனிந்தது.
கலங்கிய கண்களை காட்டிக்கொள்ளாமல் திண்ணைக்கு சென்று அமர்ந்துகொண்டார். அவருக்கு தெரியும் மின்னொளி பார்த்துக்கொள்வாள் என்று. ஆனாலும் கணவனாய் அவருக்கு சொல்லவேண்டுமல்லவா?
வானத்தை நிமிர்ந்து பார்த்தவர் அங்கு தெரிந்த நட்சத்திரங்களையும் நிலாவையும் பார்த்து,
“எக்கா ஒம்மவ ஒம்மனசவிட பெருமனசுக்காரி…” என பெருமிதமாய் பார்த்து சொல்ல அவரின் தோளை தொட்டார் அழகு.
“அத்தே…” என்று எழப்போக,
“அட ஒக்காருத்தா…” என பக்கத்தில் அமர்ந்தவர்,
“முத்து இருந்து ஒனக்கு என்ன செய்யுவாளோ அத்த எம்பேத்தி செய்யுவா. வெசனப்படாதத்தா…” என ராஜாத்தியின் கண்களை துடைக்க தலையசைத்து ஆமோதித்தார்.
“வெரசா அவன எழுப்புத்தா. பேத்தி ஒறங்க முன்ன இவன்கிட்ட சொல்லனும். இல்லன்னா ஆடுவான்…” என்றதும் வேகமாய் முருகய்யனை எழுப்ப சென்றார் ராஜாத்தி.
வெளியில் வந்தவர் முகத்தை கழுவிக்கொண்டு வந்து உரக்கணக்கு நோட்டை எடுக்க,
“இந்தாவே ஒம்மவ குடுக்க சொன்னா…”
“எதுக்கு?…” மகள் இருக்கிறாளா என தேடிக்கொண்டே வீட்டை சுற்றி பார்வையை ஓட்ட,
“சீமந்தத்துக்குத்தேன். வேற எதுக்காம்?…”
“என்ன? யாருக்கு இப்ப சீமந்தம்?…” வெடுக்கென கேட்க,
“ஏன்டா கோட்டி புடிச்சவனே? எனக்காடா போட போவுத? ஒம்பொஞ்சாதிக்குத்தேன்…” என இடித்துரைக்க பதிலுக்கு வாயை திறக்கும் முன்னர்,
“ஏ கெழவி ஏ அம்மாளுக்கும் இந்த அழிச்சாட்டியந்தானா ஒம்புள்ள? நா ஏ அம்மா வவுத்துல இருக்கப்ப என்னலா செஞ்சீகன்னு கண்ணார பாக்கவேணா? ஒருவேள என்ன பெத்தவளையும் இந்தமாரித்தேன் கெஞ்சவுட்டீகளா?…”
மின்னொளியின் வார்த்தையில் சர்வமும் அடங்கிப்போனது முருகய்யனுக்கு. முத்துநகையை எப்படியெல்லாம் தாங்கினோம் என்று நினைக்கும் பொழுதே அவரின் நெஞ்சம் அன்றைய நாட்களின் மகிழ்ச்சியில் இன்று விம்மியது.
அப்படி எல்லாம் ராஜாத்தியை முத்துநகையின் இடத்தில் வைத்து கொண்டாட முடியுமா என்ற யோசனையுடன் மனைவியை பார்த்தார். அவரின் முகத்தில் என்ன கண்டாரோ,
“இதுக்குத்தேன் எதும் வேணாமின்னு கெடந்தேன். ஒருத்தவகளும் கேட்கலையே” ராசாத்தியை பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் நடந்துவிட்டதே. மாற்ற முடியுமா?
“செரிம்மா, என்ன செய்யனுமோ செய்யி…”
“கெழவி…” மின்னொளி மீண்டும் குரலை உயர்த்த,
“ராசு ஒந்தம்பிக்கு சேதி சொல்லிரு. ஒனக்கு என்னிக்கி ஒத்துதோ செஞ்சிக்கலா…” என்று மனைவியை பார்த்து சொல்லியவர் மகளின் முகம் பார்க்க அவள் ஒரு திருப்தியான முகத்தோடு அழகுக்கும், தனக்கும் பாயை விரித்தாள் படுப்பதற்கு.
தன் பக்கமே திரும்பாமல் செல்லும் மகளையே பார்த்திருந்தவர் தாயின் பக்கம் திரும்பி,
“எம்மா புள்ள நல்லா சாப்பிட்டுச்சா?. மொகம் கெறக்கமா இருக்கே…” என சந்தேகம் கொண்டு கேட்க,
“பொழப்ப பாருலே. அவ நல்லாவே தின்னுட்டா. போ…” என்று அவரை அனுப்ப இதை கேட்டபடி அவளுக்கெதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தாயின் படத்தை பார்த்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள் மின்னொளி.
“ஒம்புருசன் மேல தான் ஒனக்கு எம்புட்டு பிரியம்? ஒ ஆயுசையும் சேத்து அந்தாளுக்கு குடுத்து அவர பார்த்துக்க ஒருத்திய வம்படியா கட்டிவச்சுட்டு செவனேன்னு போய்ட்ட. என்ன பாத்துக்க நீ இருக்கனுமின்னு ஒனக்கு தோணவே இல்லையிலம்மா. எம்மேல ஒனக்கு ஆசையே இல்லியா?” என ஏக்கமாய் நினைத்துக்கொண்டாள்.
நித்திரையின் பொழுதில் நித்தமும் தோன்றும் சிந்தனையில் உழன்றுகொண்டே உழைப்பின் அலுப்பில் நன்றாக உறங்கிபோனாள் மின்னொளி.