கடல் – 20
திருமணத்தின் மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு முருகய்யன் ராஜாத்தி கிளம்பிய நேரம்.
சுப்பு கன்னத்தில் கைவைத்து அருளை பார்த்துக்கொண்டிருக்க அவனோ எந்த உணர்ச்சியை வெளிப்படுத்தவென தெரியாமல் முகத்தை உர்ரென வைத்திருந்தான்.
இளவரசனின் சட்டையில் இருந்த தூசிகளை தட்டிவிட்டபடி அவனை அணைத்துக்கொண்டு மின்னொளி அவனை சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.
“வாரே சாமி, ஆத்தா வாரேன்ய்யா…” என்ற சமாதானங்கள் கூட அவனின் அழுகையை நிறுத்தவில்லை.
யாரின் சமாதானமும் எடுபடவில்லை. ராஜாத்தியின் முகத்தில் அத்தனை கோபம் இன்று. லேசாய் அடித்தும் விட்டார்.
மின்னொளியை விட்டுவிட்டு அனைவரும் தங்கள் ஊருக்கு கிளம்ப வெளியே வந்த பின்னர் அவளும் தங்களுடன் வருகிறாள் என அவளின் கையை பிடித்துக்கொண்டே இளவரசன் உடன் வர,
“செரித்தா பாத்துக்க. எதுனா ஒத்த போன போடு, வந்துருவோ…” என மின்னொளிக்கு சொல்ல தலையை ஆட்டிக்கொண்டாள்.
ராஜாத்தி அவளிடம் காட்டும் சகஜபாவனை ஏனோ மின்னொளிக்கு சட்டென்று வரவில்லை. ஒற்றை வார்த்தை பதில் தான். போக போக சரியாகிவிடும் என நினைத்துக்கொண்டார் ராஜாத்தி.
“லே சோதி, ஒங்கோவத்த கொறச்சுக்கிட்டு கொணமா நடந்துக்க. ராவுக்கு வெளிய சுத்தாம வீடு வந்து சேரு. கொஞ்சநாளிக்கு காட்டுக்கு போறச்ச எவனையாச்சு கூட்டிக்கிட்டு போ. ஒத்தையில போவாத. கோமிக்கேன்னு ஊருக்கே கேக்குதமாரி சவடாலு பேசாத…” என இன்னும் பலவேறு அறிவுரைகளை வழங்க நொந்து போனான் அருள்.
“ஏத்தா அந்த புள்ளைக்கி சொல்லுதத மாத்தி எங்கிட்ட சொல்லுத நீயி…” என சொல்ல,
“மின்னு சத்தமில்லாமத்தேன் பேசும். ஒன்னமாரியா. சொல்லுதத கம்மின்னு கேளு. அதுக்கு என்ன வேணு, வேணாமின்னு நீதேன் பாத்துக்கனு.வெளங்குச்சா?…” என
“செரித்தேன்…” என்றவனுக்கு அடுத்த சோதனை இளவரசன் கேட்டது.
“அப்ப ஆத்தா இங்கனதேன் இருக்குமா?…” என்று கேட்கும் பொழுதே முகம் சுருங்கிவிட,
“ஆமாய்யா, இங்கனதேன் இனி மின்னு இருப்பா. இனிமேங்காட்டி இதுதேன் அவ வீடு. இங்கனதேன் ஒம்மாமேன் கூட…” என முடிக்கும் முன்னர்,
“சாமிக்கி இல்ல, சாமிக்கி ஆத்தா…” என தன் நெஞ்சில் கைவைத்து “இல்லையா” என்பதை விரல்கள் விரித்து அவன் கேட்டவிதம் அனைவருக்குமே உருகிவிட்டது.
“இல்ல சாமி, ஆத்தா இருக்கேனில்ல, அப்பக்கப்ப நாமளு வருவம், மின்னுவும் வருவா…” என ராஜாத்தி சமாதானம் சொல்லி மின்னொளி தங்களுடன் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த,
“மாட்டே, ஆத்தா நீயி வா போவம். வா போவம்…” என மின்னொளியின் கையை பிடித்து இழுக்க அவளின் கொஞ்சல்கள் எதுவும் கேட்கும் மனநிலையில் இளவரசன் இல்லை.
அழுகையின் சத்தம் அதிகமாகிவிட ராஜாத்தி அவனின் முதுகில் அறைந்துவிட கையை, காலை உதறியபடி வாசலில் மண்ணில் விழுந்து உருண்டு புரள ஆரம்பித்தான் இளவரசன்.
அருள் தூக்க முயல முடியாமல் போனது. மீனை போல துள்ளியவன் யாரின் கைக்கும் சிக்காமல் அடம்பிடிக்க,
“எஞ்சாமில ஆத்தா வாரேன், இப்பவே ஒங்கூட வாரேன்…” என மின்னொளி சொல்லியதும் தான் அவளிடம் அவனாகவே வந்தான்.
தேம்பி தேம்பி அழுதவனை அணைத்துக்கொண்டவள் தனது புடவையால் அவனின் உடலை துடைத்துவிட்டு உடையில் ஒட்டியிருந்த மண் துகள்களை தட்டிவிட்டவள்,
“கெழவி நா வேணா வந்து ரெண்டுநாளக்கி இருந்துட்டு வரட்டா?…” என்றதும் அழகுப்பாட்டிக்கு கோபம் வந்ததோ இல்லையோ அருளுக்கு வந்துவிட்டது.
“கெட்டிக்கிட்டு வந்து ஒத்தநாப்பொழுது ஓடல அதுக்காங்காட்டி இவ என்னய விட்டு ஓடப்பாக்குதா…” என முணுமுணுத்தவனின் குரல் மின்னொளிக்கு கேட்டாலும் இளவரசனின் கண்ணீர் அவளை கவலையளிக்க செய்திருந்தது.
“ஏத்தா, சுத்த கோட்டித்தனமா பேசுத? ரெண்டுநாக்கப்புறம் ஒந்தம்பி ஒன்னிய விடுவானாக்கும்? செத்த நேரங்கம்மின்னு கெட…” என்ற அழகுப்பாட்டி,
“ஏலே என்ன வெடிக்க பாக்குதவே? புள்ளைய தூக்கிட்டு வா. ரெண்டு நாளுல மறுவீட்டுக்கு வருவா அன்னிக்கு பார்த்துக்க ஒம்பொண்ண. இளச விட பெருசு பவிசுதேன் பாக்கமாட்டாம கெடக்கு…”
முருகய்யனும் மகளை பிரியமுடியாது நிற்பதை பார்த்து தான் அழகுப்பாட்டி பேசியது. அதற்கு முறைத்த மின்னொளி,
“இங்கன எங்கூட இருக்கியா சாமி. என்ன சொல்லுத?…” என கேட்க,
“நேத்திக்கு ராவுக்கே ஒன்னிய இங்கன தேடுனே…” என்று கண்ணை கசக்கிக்கொண்டு மீண்டும் ஒரு அழுகைக்கு அடிப்போட,
“அடேய் ஒவ்வாப்பெட்டிய சாத்தல பாத்துக்கிடு…” என ராஜாத்தி கண்டித்து தன் அருகே இழுக்க பார்க்க,
“அதேன் நா பாத்துக்கிடுதேன்ல. சும்மா மெரட்டிக்கிட்டு…” என்ற மின்னொளி அருளை பார்த்து,
“ஒம்மருமவேன் இம்புட்டு எரையுதான், பாத்துக்கிட்டு கம்மின்னு நிக்குதீரு?…” என்று அவனையும் பேச,
“அதேன் நீ சொல்லுதேல. வேணுங்காட்டி போயிட்டு பொறவு வா…” என அவனும் பல்லை கடித்துக்கொண்டு சொல்ல காசியாத்தா எதிலும் தலை கொடுக்காமல் நின்றுகொண்டார்.
இடையிட்டு என்ன பேசினாலும் தான் பேசியதுதான் சரி என்று நிற்கும் ஆட்கள் மூவரும். அதனால் மாட்டிக்கொள்ள விருப்பம் இல்லாததை போல வெற்றிலையை அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்தவர் அழகுப்பாட்டிக்கும் கண்ணை காண்பிக்க அவரும் வந்து அமர்ந்துகொண்டார்.
“செரி பேசாம நீயு இங்கன ரெண்டுநா இருந்துட்டு அவுகளோட சேந்து வாரியா?…” என முருகய்யன் ராஜாத்தியிடம் கேட்க,
“அங்கன ஒத்தையில இருப்பீகளா?…”
“ஹ்ம்ம் இருக்கத்தேன்…” என்றவர் செல்ல மனமே இல்லாதது போல கிளம்ப ராஜாத்திக்கு வருத்தமாய் இருந்தது.
மின்னொளியும் இல்லாமல் உடன் தானும் தன் மகனும் இல்லாமல் எப்படி தனியாக அந்த வீட்டில் இருப்பார் என நினைத்த ராஜாத்தி,
“செத்த இருங்க, நானு வாரேன். இங்கன ஒக்காருங்க…” என்றவர் உள்ளே செல்ல அவரின் பின்னே மின்னொளி இளவரசனுடன் சென்றாள். அவள் என்ன சொன்னாளோ?
“நா வாரே. ஆத்தா பொறவு வாரேன்னுட்டு சொல்லிச்சு. ஆத்தா வா…” என மகன் வந்து அழைக்கவும்,
“இதோ போவம், செத்த இரு சாமி…” என்றவர் தண்ணீர் எடுத்துச்சென்று முருகய்யனுக்கு கொடுக்க அவரின் சோர்ந்த முகம் கண்டு இளவரசன் அவரின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டான்.
“ராசா அப்பாரு கூட வாரியா?…” என அவர் கேட்டவிதத்தில் மகன் வேகமாய் தலையசைக்க உடனே தூக்கிக்கொண்டு அவனுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார் முருகய்யன்.
“யம்மாடி, மழ அடிச்சு ஓஞ்சதாட்டம் என்ன ஒரு ஆட்டம் இவனுக்கு…” என அலுத்துக்கொண்டவர்,
“செரித்தா நாளமறுநா வெரசா வந்துரு. அப்பத்தேன் ஒங்கப்பார பாக்கமுடியு…” என்றவர் அருளிடம் வர அவன் கையேடுத்தே கும்பிடுவிட்டான்.
“போதுமாத்தா நீ சொன்னதெல்லா போதும். வெரசா கெளம்பு…” என சொல்ல உடன் இதை பார்த்தபடி சுப்புவுடன் நின்ற கணேசனும் சிரித்துவிட்டு,
“எட்டிப்பாத்தா எம்வீடு, நா பாத்துக்கமாட்டேனா? போத்தா…” என அவனும் சொல்லி அனுப்ப,
“மறுவீட்டுக்கு மறக்காம எல்லாரு வந்துரனும்…” என மீண்டும் மீண்டும் சொல்லி செல்ல,
“ஏலே சுப்பு போயி ஆட்டோவ கெளப்புலே, இல்லாங்கட்டி ஊரு போற வரைக்கி இத்தவே சொல்லிக்கிட்டே போவும்…” என சுப்புவை விரட்ட அனைவருக்குமே சிரிப்பு.
மின்னொளியின் கண்கள் மெலிதாய் கலங்க ஆட்டோ செல்லும் திசையையே பார்த்தபடி நின்றாள். உள்ளிருந்து இளவரசன் தனக்கு கை காண்பித்து வா என்று அழைப்பது மனதை பிசைய யாரையும் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றுவிட்டாள் மின்னொளி.
“சோதி உள்ளார போயி அவள பாருய்யா…” காசியாத்தா சொல்லவும்,
“கெழவி, நா காட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வாரேன். நேத்தே போவ வேண்டியது…”
“போயிருப்பவே நீ போயிருப்ப. இந்தாதேன் போயிருப்பா ஒங்கக்காக்காரி, ஒத்த போனுல ஆட்டோவ திருப்புதேன் பாரு…” என மிரட்ட,
“கெழவி போறப்ப ஒன்னயுஞ்சேத்து மூட்டைய கெட்டிருக்கனு. விட்டுப்பிட்டேன்…”
“என்னிய தொரத்திட்டு ஒம்பொஞ்சாதிக்கி காவலுக்கு ஆர போடுவியாம்?…”
“என்னத்துக்கு ஒன்னிய தாங்குவேனாக்கு? போத்தா காட்டுக்கு நடுவுல ஒத்த குடிசை போட எம்மாநேரம் புடிக்குதாம்? கூடவே வெச்சி பாத்துக்குவேன்த்தா. ஆருன்னு நெனச்ச?…” என்றவனின் பேச்சில் இரு பெண்மணிகளும் இணைந்து சிரிக்க,
“இந்தா கெழவி, இது கூட சேந்தா உருப்பட்டமாரித்தேன். ஒன்னுக்கே ஆகாது. இப்ப ரெண்டு தண்டட்டியும் சேந்து ரொம்ப ஆடுதீக. பாத்துக்கிடுதேன்…” என சரிக்கு சரி சண்டைக்கு நிற்பவன் போல நிற்க,
“ஏம்லே கோமிச்சிக்கிட்டே கெடக்க, சண்டய சட்டக்குள்ளையே வெச்சிக்கிட்டு சுத்திவியோ? போயி அந்த புள்ளைக்கிட்ட ஒத்த வார்த்த இந்தாம்மா இப்பிடியிப்பிடி போயிட்டு வாரேன்னு சொன்னா வேணாங்க போவுதா?…” என கணேசன் சொல்ல,
“நீயுஞ்சேந்திட்டியா? இரு போயி சொல்லிட்டு வாரேன்…”
“நீயி வாசலுக்கு வந்து நின்னு. நா வண்டிய எடுத்தாரேன்…” என்றவன் தனது பைக்கை எடுக்க செல்ல,
“கணேசா பாத்து கூட்டுப்போ சாமி…” என்ற அழகுப்பாட்டிக்கு தலையை ஆட்டிவிட்டு சென்றான்.
இதுவே காசியாத்தா சொல்லியிருந்தால் அந்தளவிற்கு கண்டுகொள்ளவே மாட்டான்.
மின்னொளியை அறையில் தேடியவன் அவளை காணாது பின்பக்கமாக செல்ல அங்கே துணிகளை அலசி பிழிந்துகொண்டிருந்தாள்.
“ஏத்தா பொறவாசலுக்கு வந்தா ஒத்த சத்தத்த குடுத்துட்டு வரமாட்டியா?…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“யே இதுவு வீட்டுக்குள்ளதான இருக்குது…” என இடக்காக கேட்டுக்கொண்டு பிழிந்த துணியை கொடியில் உலர்த்த,
“செரி, காட்டுக்கு போய் பாத்துட்டு வாரேன். ஒங்கிட்ட சொல்லிட்டு போவமின்னுதேன் தேடுனேன்…” என்றவன் அவளின் பதிலுக்காக காத்திருக்க அதற்குள் அழகுப்பாட்டி அருளை அழைத்துவிட்டார்.
“இந்தாரு புள்ள என்ன ஒன்னுஞ்சொல்ல மாட்டிக்குத?…” என,
“அதேன் கெளம்பிட்டீக தான, பாத்து போயிட்டு வாங்க…” என்றவளின் முகத்தில் என்ன இருக்கிறதென புரியாமல் பார்த்தவன்,
“நேத்து காட்டுக்கு காவலுக்கு ஒருத்தன போட்டேம்புள்ள, அவென் கொஞ்சோ செரி கெடையாது. அதேன் போயி பாத்துட்டு வரலாமின்னு…”
“நாந்தேன் ஒன்னுஞ்சொல்லலயில…” என்று திரும்பியவள் அவனின் திடீர் அணைப்பினுள் அகப்பட்டு அதே வேகத்தில் விடுதலை பெற்றவள் கன்னத்தில் முத்தமிட்டவன்,
“வந்து பேசுதேன்டி. கணேசண்ணே வந்து நிக்குது…” என்றுவிட்டு உடனே சென்றுவிட சிறு சிரிப்புடன் தலையை உலுக்கிக்கொண்டாள்.
வீட்டில் இருந்த அனைவரும் சென்றுவிடவும் ஒருமாதிரி வெறுமையான உணர்வை தாள முடியாம தான் பின்வாசலுக்கு வந்து வேலையை செய்துகொண்டிருந்தாள்.
அருள் உள்ளே தன்னுடன் வந்திருந்தால் கூட அவனுடன் இருவார்த்தை ஆறுதலாக பேசியிருந்தாலோ அவன் ஏதாவது பேசியிருந்தாலோ கூட எதுவும் தோன்றியிருக்காதோ என்னவோ?
தன் தாயின் இறப்பிற்கு முன் வந்தது இந்த வீட்டிற்கு. அதன் பின்னர் திருமணம் முடிந்த மறுநாள் தான் அவளின் வருகை.
முதல்நாள் உறவுக்கூட்டம் இருந்ததாலும் தன் வீட்டு மனிதர்கள் இருந்ததாலும் எந்த ஒரு வித்யாசமும் இன்றி வளைய வந்தவளுக்கு ஆட்களின் நடமாட்டமும், இளவரசனின் குறும்பு சேட்டையும் இன்றி வெறிச்சோடி இருந்தது.
தங்கள் வீட்டிலும் தான் அவள் யாரிடமும் அண்டி அமர்ந்து பேசுவதோ பழகுவதோ இல்லை. ஆனாலும் அவளின் கண்முன் அனைவருமே இருந்தனர்.
எத்தனை உறவுகள் இருந்தாலும் பெற்றோர் இருப்பதை போன்ற ஒரு தைரியம் வார்த்தையில் விவரிக்கமுடியாதல்லவா? அழகுப்பாட்டி, தன் தாய் தந்தைக்கு பின்னர் ராஜாத்தி. அதன் பின் உலகமாய் போனவன் தான் இளவரசன்.
இன்று அவனின் அழுகையும் பிரிவும் மின்னொளியை வருத்த அருளை தேடினாள் அவள்.
மின்னொளியின் மனது அவனின் அருகாமையை வெகுவாய் எதிர்பார்த்தது. அவனின் தோள் சாய்ந்தால் என்ன என்று எண்ணம் பிறக்க அவனை தேட அவன் இன்னும் வாசலில் தான்.
இப்படி என்றும் இருந்ததில்லை. என்றோ ஒருநாள் அந்த ஒரே நாளில் அவளின் எதிர்பார்ப்புகள் எல்லாம் மொத்தமாய் பொய்த்துப்போயிருந்தது.
இனி தனக்குதானே என்ற எண்ணமும் விஸ்வரூபம் எடுத்ததும் அன்றே. அந்த நாளில் இருந்த வலியை இன்றைக்கு நினைக்கும் போதும் காயத்தின் ஈரம் இன்னமும் ஆறாமல் தான் இருந்தது.
மீண்டும் எதிர்பார்ப்பும், ஆசைகளும் உணர்வுகளாய் ஏனோ உயிர்த்தெழ பார்க்க அது நன்மைக்கா என்று கூட பிரித்தறியமுடியாத உணர்வில் இவள் மூச்சுமுட்ட நிற்க,
“ஏத்தா மின்னு…” என வந்து நின்றார் அழகுப்பாட்டி.
“கெழவி நீ இருக்கியா?…” என்றவளின் கண்கள் விரிய தன் பாட்டியை கட்டிக்கொண்டாள் மின்னொளி.
“எல்லாரு போவவும் வெசனப்பட்டு நிக்கிதியாக்கும். அதுக்குத்தேன் காசியாத்தா என்னிய போவாதன்னா. பாக்கல போல நீயி…” என சிரிக்க,
“புள்ள அழுதுக்கிட்டே போச்சா, அதேன் மனசுக்கு பொக்குன்னு போயிருச்சு…” என கலங்கிய கண்களை துடைத்துக்கொள்ள,
“ஒங்கப்பனுக்கு தெரிஞ்சுருக்கு பாரே. நீ கலங்குவன்னு…” என சொல்லி அவளின் தலையை வருடி,
“வாத்தா போயி சோலிய பாப்பம்…” என மேலும் பேச்சை வளர்க்காமல் உள்ளே செல்ல அவளுடன் சென்றவர் காசியாத்தாவையும் சேர்த்துக்கொண்டு மதிய உணவு தயார் செய்ய உதவ ஆரம்பித்தார்.
செவ்வந்தியை அனுப்பி மதியத்திற்கு தங்களுக்கும் அங்கே சமையலா என்று குணசாலி கேட்டு வர சொல்ல,
“மேலு வளையாதவ, இன்னு பத்துநாளக்கி இங்கனதே மொறைய கழிப்பா பாரு…” என அழகுப்பாட்டி பொறும,
“ஏத்தா கம்மின்னு கெட நீயி…” என்ற மின்னொளி,
“புள்ள, இங்கனதேன் எல்லாருக்கு சாப்பாடு. அம்மாவ ஓல வெக்க வேணாமின்னு சொல்லிப்போடு. வரசொல்லி சொல்லிரு…” என்றதும் சிட்டாய் பறந்து சென்ற செவ்வந்தி சொல்லிய வேகத்தில் ஒடி வந்தாள் மீண்டும்.
“பாத்துத்தா ஒடனே ஒலயக்கிலய வெச்சிட போறா?…” என அதற்கும் அழகுப்பாட்டி நக்கலாய் சொல்ல மின்னொளியின் முறைப்பு கூட செல்லுபடி ஆகவில்லை அவரின் அடுத்த பேச்சுகளில்.
செவ்வந்தி மின்னொளியிடம் கதை பேசியபடி அவளுடனே சுற்ற அவளுக்குமே அது தான் தேவையாய் இருந்தது.
இரண்டுமணி நேரத்தில் கணேசனுடன் அருள் கோபத்துடன் உள்ளே வர என்னவென்று தெரியாமல் ஒதுங்கியே நின்றாள் தன் வீட்டில் இருப்பதை போல. தன்னைப்போல சட்டென்று அவள் அப்படி நின்றுகொள்ள அதை பார்த்து,
“தண்ணி மொண்டு வாரதுக்கு கூட ஒனக்கு பாடம் எடுக்கனுமாத்தா?…” என நடு கூடத்தில் வைத்து அருள் கத்த அவனை முறைத்தவள் பின் இப்படி நின்றிருக்க கூடாதென நினைத்து ஏதோ பிரச்சனை என யூகித்து தண்ணீரை கொடுக்க வாங்கி குடித்தவன் கீழே அமர்ந்தான்.
“ஏலே இப்ப என்ன செய்யனுங்குத? அவனே அர உசுரா ஆசுப்பத்திரில கெடக்கியான். என்னத்த பண்ணனுமுங்க?…” என கணேசன் கேட்க,
“என்ன வெசயமின்னு மொத சொல்லிப்பிட்டு பேசுறது. பதறுதுல?…” மின்னொளி எதுவும் புரியாமல் பேசுகிறார்களே என கேட்க அவளை பார்த்தவன் தன் முகத்தின் வேர்வையை கையில் துடைத்துகொள்ள அவனுக்கு ஒரு துவாலையை எடுத்துவந்து நீட்டினாள்.
கொதித்துக்கொண்டிருந்த நெஞ்சத்தின் அனலை குறைத்தது. சட்டென அவளின் கைபிடித்து தன்னருகே அமர்த்திக்கொள்ள கணேசன் கண்ணை காண்பித்து மற்றவர்களுடன் வெளியேற்றினான்.
“யோவ், இம்புட்டுபேத்துக்கு மத்தில கைய புடிச்சு இழுக்குத? கூறு இருக்கா ஒனக்கு? பாரு அம்புட்டுப்பேரும் போயிட்டாக…” என்று கடிய அவளின் சிலிர்ப்பில் லேசாய் இதழ் பிரியாமல் இவன் சிரிக்க கற்றையான மீசைக்கு அடியிலான சிரிப்பை அழகாய் கண்டுகொண்டாள் அவனின் மனைவி.
“சிரிக்காத…” என,
“கோமிக்காத புள்ள. கெரகம் நம்மள விடாதுபோல…”
“நீ ஆர சொல்லுத?…”
“அவேன்தேன் தருமே. நம்ம வயக்காட்டு பம்புசெட்டு மோட்டார ஒடச்சுப்போட்டுருக்கான். நேத்துல இருந்து வயலுக்கு தண்ணி பாவல…” என,
“அவேன்தேன் அங்க முடியாம…”
“அவேன் கூட்டாளிக செஞ்சிருக்கானுக அவேஞ்சொல்லி. கொள்ளையா காசு குடுத்தானாட்டும் இருக்கு…”
“அதேன் காவக்காக்க எவனையோ…”
“அவே ராவுக்கு குடுச்சுப்புட்டு கவுந்திட்டியான். அந்த நேரத்துல சோக்கா வேலைய முடிச்சுருக்கானுங்க…”
“நேத்தா அதுக்கு முந்துன நாளா?…”
“நேத்துதேன்…” என மீண்டும் மௌனமாக,
“நேத்து ராவுக்குன்னா பகலுல தண்ணி பாவலையா?…”
“காலையில பாச்சிட்டு வுட்டுட்டான் ராவுக்கு எடுப்பமின்னு…” என்று நிறுத்த,
“ஓமக்கென்ன கோட்டியாய்யா? ஒத்த ஒத்த கேள்விக்கா பதிலா சொல்லிக்கிட்டு இருக்குத? நானே கேக்கனுமாக்கும்? மொத்தமா இத்தா நடந்திச்சின்னு சொல்ல என்னவா ஒனக்கு? வாயில என்ன வசம்ப மெல்லுதியோ?…” என அவள் படபடவென பொரிய,
“யே புள்ள ஒரு ரோசன…”
“வாய மூடு, பெரிய ரோசன, சொல்லிட்டு ரோசன பண்ணுனா வரமாட்டேங்குதாக்கும் புத்திக்கி. ரோசானயாம் ரோசன…” என திட்டியவள் அருள் முகத்தை பார்த்துவிட்டு,
“ப்ச், நா வேற சவடாலா பேசிப்பிட்டேன். செரி, இப்ப என்ன செய்யலான்னுட்டு இருக்க?…”
“வேற மோட்டாருதேன் வாங்கோனும். அதுக்காங்காட்டி மொத காட்டுக்கு தண்ணி பாவனும். நெல்லு கதிரு அம்புட்டும் வாடிப்போயிருமாட்டு இருக்கு…”
“என்ன பண்ண இருக்கன்னு கேட்டேன்…”
“நம்மக்கு பக்கத்து காட்டுல கணேசண்ணே பேசிட்டு வாரேன்னு போயிருக்கு. அவுகட்ட சொல்லி தண்ணிய பாச்சிப்புட்டு புது மோட்டாருதேன் வாங்கனு…”
“அந்த குடிகாரன இழுத்து நாலு சாத்தாமயா வந்த? காவக்கி வெச்சா குடிச்சிட்டு சொகுசா ஒறங்குவானமா? எவேன் அவென்? அவென் வீடு எங்கன இருக்கு?…” என்று வேகமாய் எழுந்தவள் சண்டைக்கு கிளம்ப,
“ஆத்தே, அவென சாத்திடுத்தேன் வந்தேன். வீட்டுக்கு ஒரு புருசேன் தான்டி இருக்கனு. ஒக்காருடி கம்மின்னு…” என அவளை இழுத்து அமர்த்த,
“எங்கிட்ட எகிற சொல்லு, நாலு காளமாட்ட அவுத்துவிட்ட வேகத்துல பாயிதது. அங்கன ஒன்னத்தையு காணோம்…” என அதற்கும் அவள் எகிற,
“அடியேய் போதும்டி விட்டுடு தாயி. இப்ப சாப்புட்டு டவுனுக்கு போயிட்டு வாரோம். புது மோட்டாரு வாங்கனுமில்ல…” என்றவனை இன்னும் முறைத்தவண்ணம் அவள் அமர்ந்திருக்க,
“செரியாகிடும்டி, வெருக்குன்னு பாக்காத…” என அவளை தோளோடு அணைத்துக்கொண்டவன் சமாதானம் செய்யும் பொருட்டு பேச,
“என்னவோ பண்ணு…” என்றவள்,
“எம்புட்டு காசு ஆவும்? கேட்டுக்கிட்டியா?…” என சட்டென நிதிமந்திரி அவதாரம் எடுக்க,
“நம்ம காட்டுக்கு வாட்சு அதிகந்தேன். அத்த பொறுத்துதேன் வெல சொல்லுவானுங்க. இப்ப கொறஞ்சது பத்தாயிரமாச்சும் ஆவும். கூட வந்தாலு வரலா…” என்றவன் அவள் கேட்டதற்கெல்லாம் மறுக்காமல் பதில் சொல்ல,
“சோதி…” என்றான் வெளியே இருந்து கணேசன்.
“மொத அவுக எல்லாத்தையும் சாப்புட வர சொல்லு. நா போயி எடுத்து வெக்கேன்…” என்று அவனின் பிடியில் இருந்து விலகி எழ அருளும் எழுந்து வெளியே சென்றான் அவர்களை அழைக்க.
குணசாலிக்கு வாசலில் நின்றவாறு சத்தமிட்டு அழைப்புவிடுத்துவிட்டு கணேசனும் உள்ளே சென்றான்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் கிளம்பி செல்ல காட்டில் இப்படி ஆகிவிட்டதை பேச்சுவாக்கில் கேள்விப்பட்ட குணசாலி மின்னொளி வந்த ராசியாகத்தான் இருக்குமென காசியாத்தாவிடம் தனியாக சொல்லி அதற்கு வேறு வாங்கிக்கட்டிக்கொண்டு சென்றாள்.
இன்னும் இரண்டு நாளில் மறுவீடு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு மறுநாள் இரவே அடித்துப்பிடித்து கிளம்பினார்கள் அருளும் மின்னொளியும்.