கடல் – 22
முத்துநகை மகளுக்கு பட்டுப்பாவாடை சட்டை போட்டுவிட்டு தலைக்கு பூவை சூட்டிக்கொண்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கணேசனுக்கு திருமணம் ஆகியிருந்தது. முத்துநகை தான் பார்த்து முடித்து வைத்தது. வசதி வாய்ப்பு என்று எதையும் பார்க்கவில்லை. தாய் தகப்பனின்றி இப்பொழுது தானுமின்றி தனித்து இருக்கும் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டி திருமணத்தை முடித்துவைத்தார்.
அன்று கணேசனை மறுவீட்டிற்கு அழைத்துச்செல்ல குணசாலியின் வீட்டினர் வருவதாக இருந்தது. முத்துநகை இரவு காசியாத்தா வீட்டில் தான் தங்கினார்கள் மின்னொளியும், முத்துநகையும்.
திருமணத்திற்கு வந்ததில் இருந்து ராஜாத்தி முத்துநகையை விடவே இல்லை. மின்னொளியை கூட்டிக்கொண்டே சுற்றிக்கொண்டு வந்தாள்.
பின்னே முத்துநகை என்றாவது ஒருநாள் தான் வந்து தங்குவதே. அதிலும் மின்னொளி பிறந்த பொழுது வந்து அதிகமாக தங்கியது. அதன்பின்னர் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து காலை வந்து மாலை கிளம்புவது என்பதில் வந்து நின்றது.
இப்படி வந்து தங்கும் நேரம் ராஜாத்திக்கு, அருளுக்கு எல்லாம் கையும் ஓடாது காலும் ஓடாது. வைத்து கொண்டாடிவிடுவார்கள்.
“கொமரி ஏன்டி அவள இழுத்திக்கிட்டே ஊரெல்லா சுத்துத? நாளிக்கே ஒன்னிய கெட்டுததுக்கு சம்பந்த பேச வந்தாகன்னா இதத்தேன் மொதல்ல விசாரிப்பாக. சும்மா கெடக்க மாட்டியா?…” என முத்துநகை கண்டிக்க,
“அதெல்லா வெசாரிக்காத நல்ல மாப்புள்ளையா அக்காளுக்க பாக்கமாட்டேனா?…” என அப்பொழுதே சவடால் பேசினான் அருள்ஜோதி.
ராஜாத்திக்கு திருமண வயது வந்துவிட்டதால் அதிகப்படியாக வரன்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் அருள் ஒத்துக்கொண்டால் தானே?
[the_ad id=”6605″]
இது சரியில்லை, அது நொட்டை என கழித்துக்கொண்டே இருக்கிறான். காசியத்தாவிற்கும் அவனின் செயலில் கோபம் தான்.
“இத்தன கழிப்பு இருக்கப்படாது சோதி, பொறவு நம்மள கழிக்கித நெலமைக்கிதேன் போவம். வாரதுல ஒன்னு ரெண்டு அப்பிடியிப்பிடித்தேன் இருக்கும். அதுக்காங்காட்டி ஆளுவிட்டா மாப்புள்ள செய்யுவ? ஒன்னுத்துக்கும் ஆவறதில்ல…” என திட்டி தீர்த்தும் பார்த்துவிட்டார் காசியாத்தா.
முருகய்யன் கூட கூப்பிட்டு பேசி பார்க்க அருள் மசியவே இல்லை. கேள்வி கேட்டவரிடமே,
“உங்கள மாரி ஒருத்தர கொண்டாரும் மாமோவ், அக்காவ கெட்டிவெக்கிதேன். பொறவு எங்கக்கா முத்தக்கா மாரி வளமா வாழுமில்ல…” என்று அவன் சொல்லிய நேரமோ என்னவோ தேவதைகள் உடனடியாக தாதஸ்து சொல்லிவிட்டனர் போலும்.
கடைசியில் முருகய்யன் மாதிரி இல்லை. முருகய்யனே தன் அக்காவின் மாப்பிள்ளை ஆகிவிட வெறுத்துவிட்டான் அருள்.
காசியாத்தாவிற்கு அடுத்தபடியாக முத்துநகையை தான் தாய் ஸ்தானத்தில் வைத்திருந்தான் அருள். அவர் சொன்னால் மட்டுமே சற்று அடங்கி போவான்.
“அருளு, அப்பிடி சொல்லாதய்யா, எல்லாத்துக்கு ஒரு வயசு இருக்குல. நாமதே தெரிஞ்சு நடக்கனு…” என சற்று அழுத்தமான குரலில் கண்டித்து சொல்ல அங்கே முத்துநகை பேச்சிற்கு மறுப்பு இல்லை.
“கொஞ்ச கோவத்த கொற அருளு. பொறவு எம்பொண்ண நா எப்பிடி ஒனக்கு கெட்டி வெக்கிததாம்?…” என்று கிண்டலாய் பேச,
“என்னத்துக்கு? இந்த அரிசிமூட்டாய நா தூக்கி சொமக்காங்காட்டி என்னவாம்? போதுந்தாயி எனக்கு கலியாணமே வேணாம்த்தா…” என்று அவனும் கேலியாய் சொல்லி மின்னொளியின் கன்னத்தை வலிக்கும் படி கிள்ளிவைக்க இவர்கள் பேச்சில் எதிலும் தலையிடாமல் ராஜாத்தியிடம் கதை பேசிக்கொண்டிருந்தவள்,
“விடு மாமா வலிக்கு…” என சிணுங்கியபடி கன்னத்தை தடவிக்கொள்ள,
“செரித்தா, செரித்தா மாமேன்தேன…. என்று அவனும் அவளின் கன்னத்தை தேய்த்துவிட்டான்.
முத்துநகை கணேசன் இருவரும் காசியாத்தாவின் கணவரின் அண்ணன் பிள்ளைகள். முத்துநகை திருமணத்திற்கு முன்பே அவரின் தாயும், தந்தையும் இறந்துவிட காசியாத்தா தான் அவர்களுக்கு எல்லாமுமாகி போனார்.
சிறு வயதிலேயே கணவனை இழந்து நின்ற காசியாத்தா என்னதான் தன் வழி சொத்துபத்து என்று இருந்தாலும் தன் பிள்ளைகளை எந்த குறைவுமின்றி வளர்த்தாலும் உயிருடன் இருந்தவரை தாயும் தந்தையுமாய் முத்துநகையின் பெற்றோர் தான் ஒரு அரண் போல காத்தனர்.
அந்த உணர்வு என்றும் உண்டு அவருக்கு. முத்துநகைக்கு எப்பொழுதும் காசியாத்தாவிடம் உரிமை அதிகம். அதிலும் ராஜாத்தி, அருள் என்றால் கொள்ளை பிரியம்.
முத்துநகைக்கு திருமணத்திற்கு முருகய்யனை பார்த்து முடித்துவைத்ததும் காசியாத்தாவே. இன்றுவரை முத்துநகை, கணேசனை தாய்க்கு தாயாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.
“இன்னு எம்புட்டு நேரத்துக்குடி ஒக்காந்து வாயாடிட்டு இருப்பீக? முத்து ஒம்புருசென் அப்பவே வந்துட்டாரு. போயி பாத்தியா?…” என்று காசியாத்தா சத்தம் போட,
“இந்தா போறே ஆத்தா…” என்ற முத்துநகை,
“ராசு, இவளுக்கு இந்த சடைய நல்லா இறுக்கன்னு பின்னுடி. அவுந்துட்டே வருது. ஒழுங்கா வராங்காட்டி அம்புட்டையு அவுத்து குதிரவாலா போட்டுவிடு. சும்மா சிலுப்பிக்கிட்டே கெடக்கா…” என மகளின் தலையில் செல்லமாய் கொட்டுவைத்தவர் கணவனை காண சென்றார்.
“எக்கா மாமனுக்கு மோரு கரச்சிருக்கே. ஊத்தி கொண்டுபோத்தா…” என ராஜாத்தி சொல்லிய சத்தம் கணேசன் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த முருகய்யனுக்கே கேட்டது.
முத்துநகை மோரை ஒரு சொம்பில் ஊற்றிக்கொண்டு செல்ல சிரிப்புடன் அதனை வாங்கிக்கொண்டவர்,
“ஒந்தங்கச்சி வாப்பெட்டிய சாத்துதாளா பாத்துக்கிடு. ரேடியோவுக்கு கொழாயி கெட்டவே வேணா. தூக்கி போஸ்ட்டுக்கம்பியில ஒக்காத்திவுட்டா ஊரே கேக்கும்படியா பாடிடுவா…” என்று கிண்டல் பேச அவரை முறைத்த முத்துநகை,
“அத்தே வந்துருக்கலா. நீகளாச்சும் சொல்லி கூட்டியாந்துருக்கலாமில்ல…” என கேட்க,
“அதுதேன் வரலங்குதுல. விடுத்தா. செரி போயி ஒந்தம்பியவு, அந்த புள்ளையவு விட்டுட்டு ராவுக்கு நம்ம வீட்டுக்குதேன? இல்ல இன்னிக்கும் இங்கனவே ரா தங்கலா?…” என கேட்க,
“மொத இத்த குடிச்சுட்டு பொறவு பேசுங்க. நா போயி எந்தம்பிய பாத்துட்டு வாரேன்…”
“அடியே செத்த நில்லு, அவே என்னிய ஆரோ மாறி பாத்துட்டு போயிட்டான். என்னனு கூட கேக்காம. செத்த பொறு, தானா வெளியில வரட்டு. பாத்துக்கிடு…” என்று வேறு முருகய்யன் கேலி பேச,
“ஒம்ம வாப்பெட்டிய மொத சாத்தும்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தே,
“கணேசா…” என அழைக்க அடுத்த நொடி வந்து நின்றான் அவன்.
“சொல்லுக்கா, வந்துட்டியா?…” என கேட்டு வீட்டிற்குள்ளேயும் ஒரு பார்வையை வைத்துக்கொண்டான்.
“வராம? இந்தாருக்க வீட்டுல இருந்து இங்கன வர எம்புட்டு தொலவுடா?…” என சிரித்தவர்,
“செரி, அத்த விடு, எத்தன மணிக்கி வாரதா சொன்னாக? ஒனக்கு போனு போட்டாவுகளா?…”
“இல்லக்கா, ஆனா மத்தியான சாப்பாட்டுக்கு வந்துருவாக போல…”
“எதுல வாராக? அன்னிக்கு போறப்ப அவுகட்ட கேட்டுக்கிட்டியா?…” என்றதற்கு கணேசன் தலையை சொரிய,
[the_ad id=”6605″]
“சுத்தந்தேன். அடேய், என்னத்த நீயி பேசுன. நா கேட்டதுக்கு மருமவேன்ட்ட பேசிக்கிடுதோமின்னு சொல்லிப்பிட்டாக. பொறவு என்னத்த நா கேக்க?…” என தம்பியிடம் ரகசியம் பேசினார் முத்துநகை.
பின்னே இந்த திருமணத்தை நடத்தியது முத்துநகை. செலவு மொத்தமும் முத்துநகை பார்க்க முருகய்யன் தலைமையேற்று நடத்திவைக்க பெண்ணின் வீட்டார் மனைவியை மதிக்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வரும் தானே?
முத்துநகைக்கே ஆச்சர்யம் தான் அவர்களின் நடவடிக்கையில். தாலி ஏறும் வரைக்கும் முத்துநகையை குளிப்பாட்டியவர்கள் அதன் பின்னான பார்வையும் பேச்சும் வேறாகி போனது.
முத்துநகைக்கு புரிந்தாலும் அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? தன் உடன்பிறந்த தம்பியாகிற்றே. அதற்காகவே செய்வதை முழுமையாக செய்துவிட்டு அவன் பாடு என்று தான் ஒதுங்கி நின்று கணேசனை வாழவைக்கவே நினைத்தார்.
“எக்கா அவுக அவக்கிட்ட எதாச்சு சொல்லிருக்காவுகளான்னு கேட்டு வாரேன். இரேன்…” என்றான் இறைஞ்சுதளுடன்.
புதிதாய் திருமணம், புது மனைவி, அவனும் தான் என்ன செய்வான். அவனின் போக்கிற்கே விட்டுவிட்டார்.
“என்னடி சொல்லுதான் ஒந்தம்பி? அதுக்காங்காட்டி பொண்டாட்டிக்கிட்ட கேட்டு வாரானாக்கும்?…”
“அட செத்த கம்மின்னுதேன் இருங்களே. நீரு மட்டும் ஒம்ம பொண்டாட்டி சொல்லுதத கேக்க இனிக்கிது. இதுவே எந்தம்பியாங்காட்டி ஒமக்கு கசக்குதோ?…” என்று சொல்லவும் அசடு வழிந்தார் முருகய்யன்.
“யே என்ன புள்ள இது வெட்டவெளியில, சத்தத்த கொறவேன்…” என முத்துநகையை அதட்டி அடக்க அவரின் கலகலத்த புன்னகையை பார்த்தவரின் நெஞ்சம் குளிர்ந்து.
“என்னபுள்ள வெச்சிருக்க, இந்த சிரிப்புக்கு எம்புட்டு வேணா கேக்கலாந்தேன் புள்ள…” என மயங்கிப்போய் அவர் சொல்ல,
“இன்னு செத்த நாளுல நம்ம மின்னு பெரியமனுசி ஆயிருவா. அதுக்காங்காட்டி வரிக்கும் நீங்க இப்பிடி ஒளறிக்கிட்டே கெடங்க, ரொம்ப நல்லாத்தேன் இருக்கும்…” என்று முத்துநகையும் சொல்ல,
“எக்கா…” என வந்துவிட்டான் கணேசன்.
“என்னாலே பேசிட்டியா?…”
“ஆங், அவுக சாப்பாட்டு நேரத்துக்கு வந்துருவாகளாம். அத்த மட்டுந்தேன் சொல்லுதா…”
“இந்தா புள்ள, சாப்பாட்டு நேரத்துக்கின்னா பஸுல வாராவுகளா?…” என முருகய்யன் கேட்க உள்ளிருந்து இவற்றை கவனித்துக்கொண்டிருந்த குணசாலி ஓவென அழுக ஆரம்பித்ததும் பதறிப்போய் உள்ளே சென்றார்கள் மூவரும்.
“இந்தா புள்ள என்னத்துக்கு அழுவுத? என்னாச்சி?…” என கேட்க,
“எங்க வீட்டு சனங்க பஸுலதேன் வருவாகன்னு இளப்பமா பேசுதீக. தெரிஞ்சிதேன என்னிய கெட்டுனீங்க. இப்பக்கி அம்புட்டு கொறச்சலாவா போச்சு…” என்று ஒரு பிரச்சனைக்கு அடி போட மூவரும் பதறிவிட்டனர்.
“இந்தாத்தா ஆரும் கொறச்சி பேசல. சாப்புடுத நேரத்துக்கின்னா பஸுக்கு வருவாகளா இருக்குமின்னுதேன் பேசிக்கிட்டு இருந்தோம். இதுல என்னத்த கொறவ கண்டுட்ட?…” என முருகய்யன் சற்று கோபமாகவே கேட்டுவிட குணசாலிக்கு கோபம் கனன்றது.
“இது கொறவில்லாம? பாத்துக்கிடுங்க, அண்ணே என்ன பேசுதாகன்னு…” என கணேசனிடம் கண்ணை கசக்கி நிற்க அவனுக்கே அவளின் பேச்சில் உடன்பாடில்லை.
“இப்ப என்னத்துக்கு கண்ண கசக்குதவ? அவுக பொதுவாத்தேன் சொன்னாக. நீதேன் கொறவா நெனைக்கித. வண்டியமத்தி வந்தா நேரத்துக்கு வந்துருப்பாவுகன்னுதேன் மாமா சொல்ல வாராரு. அத்த வெளங்கிக்காம நீயி…” என்று அவனும் சொல்ல குரலில் எரிச்சல் இருந்ததை குணசாலி கண்டுகொண்டாள்.
“மன்னிச்சிக்கிடுங்க அண்ணே, நா என்ன செய்யுவே? சொல்லும். எங்க வீட்டுல வண்டியமத்தி வரமுடியல. நீங்களும் சொல்லவும்தேன் மனசுக்கு ஆறல…” என்று மன்னிப்பு கேட்பதை போல அழ ஆரம்பிக்க முத்துநகைக்கு பரிதாபமாக போனது.
“ரெண்டுவேரும் கம்மின்னு இருங்க. அவளே வெசனப்பட்டுக்கிட்டு இருக்குதா. லே கணேசா, அருளுக்கு சொல்லி ஒத்த வண்டிய அமைத்த சொல்லு, மறுவீடு போறப்ப பஸுல போன நல்லாவா இருக்கும்?…” என முத்துநகை சொல்ல குணசாலியின் மனது குதூகலமானது.
[the_ad id=”6605″]
இதற்கு தானே இத்தனை ஆர்ப்பாட்டமும். ஊருக்கு சென்று இறங்கும் பொழுது மதிப்பாய் செல்லலாம் என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாக இருக்க,
“ஐயோ மதினி, எதுக்கு செலவு. இந்தாருக்க ஊருக்கு…”
“இந்தா கம்மின்னு இரு. நாங்க பாத்துக்கிடுதோம்…” என்று முத்துநகை அவளின் கன்னத்தை தட்டிவிட்டு செல்ல மற்றவர்களும் சென்றதும் தான் தன் முகத்தை மாற்றினாள் குணசாலி.
“வந்துட்டா வவிசுல…” என முத்துநகையை நினைத்து கறுவினாள்.
திருமணம் ஆனதிலிருந்து என் அக்கா அப்படி, என் அக்கா இப்படி, அவர்கள் வீடு அப்படி என்று பெருமை சொல்லி சொல்லியே கணேசன் குணசாலியின் மனதில் வஞ்சத்தை விதைத்தான்.
ஏற்கனவே தன் முன்னால் தன்னைவிட மேலாய் எவரும் இருந்துவிட்டால் பொறுக்காது குணசாலிக்கு. அதிலும் தன் குடும்பமும் ஏழ்மையான குடும்பம் வேறு. அதுவே உறுத்தலாய் என்றும் இருந்துகொண்டே இருக்கும்.
இப்பொழுது முத்துநகை அழகும், ஆடம்பரமும் நிறைந்த வாழ்வு வாழ்வது குணசாலியின் கண்களை உறுத்தியது.
“அப்பா…” என ஒடி வந்து தந்தையின் கால்களை கட்டிக்கொண்ட மின்னொளியை பார்த்த முருகய்யன்,
“எஞ்சாமி வந்தாச்சா? அப்பாவ தேடுனீகளா?…” என்று அவளின் தலையை வருடி கேட்க,
“நானா? இல்ல, நா சின்னம்மா கூட வெளாண்டே…” என்றாள் மகள்.
“இல்லியா? ஆனாங்காட்டி ஆத்தா சொல்லுச்சே…” என முருகய்யன் மகள் தன்னை தேடினேன் என்று சொல்லிவிடமாட்டாளா என்றே வார்த்தையை வளர்க்க மின்னொளி தாயை பார்த்தாள்.
அவரின் பின்னால் இருந்து முத்துநகை ஆமாம் சொல்லு என்பதாக சைகைகள் காண்பிக்க எப்பொழுதும் தாய் சொல்லியதை தட்டாத பெண்,
“ஹா ஆமா, ஆமா…” என வேகமாய் பலமாய் தலையை ஆட்ட அதுவே சொல்லியது மனைவியின் வேலை என்று. பொய்யென்று தெரிந்தும் மகிழ்ந்து போனார்.
“செரித்தா, இங்கனவே ராசு கூட ஒக்காரு. நாங்க போயி சாப்பாடு ஆகிடுச்சான்னு பாத்துட்டு வாரோம்…”என சொல்லியவர்,
“வர வர ஒன்னிய விட வாயி சாஸ்தியா போச்சி எம்புள்ளைக்கி…” என ராஜாத்தியின் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு வேறு அவர் செல்ல,
“எக்கா பாத்தியா ஒம்புருசன? எம்மேல கொஞ்சங்காட்டி கூட பயமில்ல. இருக்கட்டு கெவனிச்சிக்கிடுதேன்…” என இடுப்பில் கை வைத்து முறைப்புடன் சொல்லிய ராஜாத்தியை பார்த்த முத்துநகை சிரிப்புடன் நகர்ந்து சென்றார்.
அதற்குள் கணேசன் அருளிடம் சொல்லி அனைவரும் செல்ல வேனிற்கு சொல்லிவிட்டு வருமாறு அனுப்பினான்.
“இந்தா அருளு வெறுங்கையோட போனா அவென் இங்கன வண்டிய கொண்டாருவானா? இந்தா முன்பணமா இந்த காச கையில திணிச்சி நல்லா சுத்தம்பண்ணி கொண்டார சொல்லு…” என அதற்கும் முத்துநகை பணத்தை கொடுத்துவிட அருள் குணசாலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் சென்றான்.
அவனுக்கு குணசாலியை தன் அண்ணனுக்கு முடிப்பதில் துளியும் விருப்பமில்லை. பேசி முடித்த பின்னர் முத்துநகையிடம் சொல்லி பார்த்தான். கணேசன் காதிலேயே வாங்கவில்லை. குணசாலியை பார்த்ததில் இருந்து அவன் தான் கனவில் மிதந்தானே?
இப்பொழுதும் அருள் பார்த்துவிட்டு செல்ல அதற்கும் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் குணசாலி.
“அவென் சும்மா பாத்தாலே மொறைக்கித மாரித்தேன் இருக்கும். நீயா நெனச்சிக்கிடாத…” என தம்பியையும் அந்த நேரம் விட்டுகொடுக்காமல் பேச பல்லை கடித்தாள் குணசாலி.
மதிய உணவு நேரம் குணசாலியின் வீட்டினர் வந்துவிட கறிவிருந்து சாப்பிட்டு முடித்து சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பினார்கள் கணேசனை மறுவீட்டிற்கு அனுப்ப.
முருகய்யன் வேலை இருப்பதாக வரவில்லை என்று முதலிலேயே சொல்லிவிட மற்றவர்கள் கிளம்பினார்கள்.