பார்ட் – 2
அவர்கள் செல்லும் முன்பு ஆயிரம் பத்திரங்கள் சொல்லித்தான் அனுப்பினார் முருகய்யன்.
குணசாலியின் குடும்பத்தினர் மிக சொற்பமே வந்திருந்தனர். எட்டுபேர் மட்டும். மீண்டும் பஸில் அழைத்துசென்றுவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு வந்திருக்க கணேசன் வீட்டில் வேன் நிற்பதை பார்த்ததும் முழுதாக மகிழ்ந்துபோகாமல்,
“ஒம்மதினிக்காரி ரொம்பத்தேன் வவிசு காட்டுதா. அதுக்காங்காட்டிதேன் வண்டியமத்திருப்பா. யே பஸுல வந்தா பகுமானோ கொறையுதாக்கு?…” என்று குணசாலியிடம் கேட்க,
“செத்த சும்மாத்தேன் இருங்களேன். நானே இந்த வண்டியமத்த வம்பாடுபட்டுட்டே. சொகுசா வாராத விட்டுப்போட்டு…” என்று அடிக்குரலில் சீற வாயை மூடிக்கொண்டனர்.
வேன் கிளம்பியதிலிருந்து கணேசனும் அருளும் மின்னொளியுடன் வம்பிழுத்தபடி பேசிக்கொண்டு வர ராஜாத்தியும், முத்துநகையும் சலசலத்துக்கொண்டே வந்தனர். இடையிடையே காசியாத்தாவும் இவர்களின் பேச்சில் கலந்துகொள்ள எரிச்சலில் குணசாலி கண்களை மூடிக்கொண்டாள்.
ஆனாலும் கணேசன் தன்னிடம் என்ன ஏதேன கேட்காமல் அவனின் குடும்பத்துடன் சந்தோஷமாய் வருவதை பொறுக்கமுடியாமல்,
“செத்த நேரம் கம்மின்னு வாங்களேன். தலைய பொளக்குது…” என்று வேறு சொல்லிவிட முகம் சுருங்கிப்போனது அனைவருக்கும்.
“அது” என்பதை போல குணசாலி வீட்டினர் மிதப்பாய் பார்த்து வைக்க கணேசன் சங்கடத்துடன் நெளிய,
[the_ad id=”6605″]
“எண்ணே வண்டில பேசக்கூடாதின்னா மொதவே சொல்லிருந்தா நாங்க ஆரும் வந்துருக்கமாட்டோமில்ல. நீயே வண்டியமத்தி சத்தமில்லாம மதினிய கூட்டிட்டு வந்துருக்க வேண்டியதான? என்னிக்கோ ஒருநாதேன் அக்காவு, பாப்பாவு வாராக. இன்னிக்கு ஒன்னிய விட்டுட்டு ஊருக்கு போனா அதுவும் கெளம்பிரும். தேடி போயி பேசுவியா நீயி?…”
அருள் திறந்த வாயை மூடவில்லை. அத்தனை பேச்சு பேசினான். அதிலும் வண்டியை நீ அமர்த்தவில்லை என்று வேறு சொல்லிவிட அது கணேசனுக்கு பெரிதாக இல்லை.
குணசாலிக்கு கௌரவ குறைச்சலாகி போனது. அவமானத்தில் முகம் கன்ற கணேசனை பார்க்க அவனும் முறைக்கத்தான் செய்தான்.
“தல வலிக்கின்னுதேன் சொன்னேன். அதுக்காங்காட்டி கூட வாய தொறக்க கூடாதோ? பாத்துக்கிடுங்க ஒங்க தம்பி ஏசுறத…” என வராத கண்ணீரை துடைக்க,
“வண்டிய நிறுத்துண்ணே, நா எறங்கிக்கறேன், ஒங்கிட்ட பேசுனதுக்கு அவுகள ஏசுனேன்னு சொல்லுறாக, நா வரல. நீகளே போயிட்டு வாங்க…” என்று பிடிவாதம் பிடிக்க அதன் பின்னர் யாரும் குணசாலியை கண்டுகொள்ளவில்லை.
அருளை சமாதானம் செய்து அவனை அமரவைப்பதிலேயே நேரமாக ஊரை நெருங்கும் சமயம் ஆகிவிட கணேசன் குணசாலியை தான் திட்டினான்.
“அவென் பேசுததுக்கு…” என்று அவள் பேச,
“ஏய் அவென் என் தம்பிடி, நீயி செத்த நேரம் கம்மின்னு வரல எந்தம்பியோட நானு எறங்கிருவேன் பாத்துக்கிடு…” என்ற மிரட்டலில் சத்தமின்றி அமர்ந்துகொண்டாள்.
“இந்தாடி ஒம்புருசன இப்பக்கே ஒழுங்கா முந்தானையில முடிச்சுக்க. இல்ல ஒம்பாடு திண்டாட்டந்தேன்…” என சொந்தங்கள் வேறு தூபம் போட குணசாலி வாயே திறக்கவில்லை.
சரியாக ஊரை நெருங்கியதும் அருளை அமரவைத்து காசியாத்தா சத்தம் போட முத்துநகை தான் காப்பாற்றினார்.
குணசாலி ஊரில் திருவிழா களைகட்டி இருந்தது. அருள் கோவிலுக்கு போவோம் என்று சொல்ல முதலில் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து வேண்டுமானால் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்வோம் என்று முத்துநகை சொல்லிவிட்டார்.
குணசாலியின் வீடு வந்ததும் ஆரத்தி சுற்றி வரவேற்று இவர்களை அமர்த்திவிட்டு குடும்பம் மொத்தமும் மகளை மட்டும் சீராட்ட வந்திருந்தவர்களுக்கு இருக்கவா வேண்டாமா என்னும் எண்ணமே வந்துவிட்டது.
பின்னே கடனே என்று ஒரு டீ, சிறு கிண்ணத்தில் லட்டும், கொஞ்சம் மிக்சரும் மட்டுமே.
“நல்லாத்தேன் கெவனிப்பு. இந்தாருண்ணே ஒனக்கு ராசா மருவாதி கெடைக்கும் போ…” என்று அதையும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் கிண்டலாய் பேசி சிரிக்க அந்த சூழ்நிலையையும் அவர்களின் ஒற்றுமை தான் இலகுவாய் எடுத்துக்கொள்ள வைத்தது.
இரவு உணவை முடித்துத்தான் அனுப்புவார்கள் மறுவீடென்றால். இங்கே அது உண்டா இல்லையா என்று கூட தெரியவில்லை.
“ஊருல கொடையாங்காட்டி தெரியுது…” என அவர்களிடம் பொதுவாய் காசியாத்தா கேட்க,
“ஆமாங்க…” என்று மட்டுமே பதில்.
இருந்து சாமி கும்பிட்டு செல்லலாம் என்று ஒரு வார்த்தையும் இல்லை. அதை பற்றி ஒன்றும் சொல்லவும் இல்லை.
“நல்ல எடத்துல பாத்தடி ஆத்தா. இல்லாத ஊட்டு புள்ள பதவிசா இருக்குமின்னு பாத்தா வந்துபாருன்னுவாளாட்டம் இருக்கே…” என காசியாத்தா முத்துநகை காதை கடிக்க,
“ஏத்தா கம்மின்னு இரு. இப்ப இத்த பேசி ஆவப்போறது என்ன?…”
“என்னவா? இந்தாருக்க கோவிலுக்கு அழச்சு சொல்லங்காட்டி முத்து கொட்டுதாக்கும்?…” என்று நொடிக்க,
“ஆத்தா, இப்ப என்ன, போறப்ப நாம போவம். இவுக சொல்லித்தேன் போவனுமா?…” என்ற முத்துநகை அதற்கு மேல் எங்கே இருக்க முடியாமல் எழுந்துகொண்டார்.
அவரும் எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்திருப்பது. அந்த ஊரில் அக்கம்பக்கத்தினர் வந்து பேசினால் கூட யாராவது வந்து பேச்சை கத்தரித்து அழைத்து சென்றுவிட கொஞ்சம் சுணங்கித்தான் போனார்.
“அவசரப்பட்டுவிட்டோமோ?” என மனதளவில் வாடியவர் தன் அருளுடன் பேசிக்கொண்டிருந்த தம்பியை பார்த்தார்.
“இனி இதை நினைக்க கூடாது. தன் வீட்டிற்கு வரட்டும் . கொஞ்சம் கொஞ்சமாக புரியவைத்துவிடலாம்” என நினைத்து மனதை தேற்றிக்கொண்டார்.
“செரி நாங்க கெளம்புதோம்…” என முத்துநகை பொதுவாய் மரியாதைக்காக சொல்ல அதற்கும் உடனடியாக அனைவரும் சரி என்று சொல்லி தலையை அசைத்துவிட கணேசனுக்கு என்ன இது என்பதை போல் ஆனது.
குணசாலியை பார்க்க அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் மனமோ பேசி முடிக்க வந்த பொழுது இந்ததற்கும் இப்பொழுதிற்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதை போல தோன்ற அமைதியாக நின்றான்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இவர்கள் கிளம்ப கணேசனிடம் வந்த முத்துநகை அவனை தனியாக அழைத்து,
“இந்தாலே இந்த காச கையில வெச்சிக்க, அவளுக்கு எதாச்சும் வாங்கி குடு…”
“எங்கிட்ட இருக்குத்தா. என்ன நீயி?…” என கணேசன் சொல்ல,
“இருந்தா வாங்கிக்க மாட்டியாலே? அம்புட்டு வளந்துட்டியோ?…” என்றவரை மறுத்து பேசாமல் வாங்கிக்கொண்டான் கணேசன்.
“கணேசா பழகாத சனம். சிலபேரு அப்பிடி இப்பிடித்தேன் இருப்பாக. நாமதேன் கொஞ்ச நீக்குபோக்கா போவனும். வெளங்குதா?…” என்று சொல்ல,
“எக்கா ஒனக்கு சாப்புட?…” என்றவனின் கன்னம் பற்றியவர்,
“ஏலே இதுக்காலே கலங்குத? போற வழியில எதவாச்சு வாங்கிக்கறோ இல்லன்னா ஊருக்கே போக போறோம். அம்புட்டுத்தேன்…” என சொல்லியவர் குணசாலியின் அம்மாவிடம் வந்து,
“என்னிக்கு திரும்ப அழைக்கனுமின்னு சொன்னீகன்னா வர தோதா இருக்கும்…” என்று கேட்க,
[the_ad id=”6605″]
“நாங்க பொறவு பேசி மவகிட்ட சொல்லுதோம்…” என்று முடித்துக்கொள்ள அதன் பின்னர் எதுவும் பேசாமல் கிளம்பிட்டார் முத்துநகை.
“ஒங்க வீட்டாளுக பண்ணுதது ஒன்னுஞ்செரியில்ல புள்ள…” என்று வேன் கிளம்பவும் கணேசன் குணசாலியிடம் சொல்ல அவள் பதில் சொல்லும் முன்னர் அக்கம்பக்கத்தினர் என பார்க்க வந்துவிட்டனர்.
“என்னடியாத்தா இது ராத்திரிக்கு கைய நனைக்காம கூட கெளம்பிட்டாக?…” என்று அக்கம்பக்கத்தினர் சொல்ல,
“அவுகளுக்கு சோலி கெடக்காமுத்தா. அதேன் பொறப்பட்டுட்டாக. இல்லன்னே ஊருக்கே விருந்துதேன் போடனுமின்னு இருந்தோ…” என்று வாய் கூசாமல் பொய் பேச கணேசனுக்கு எரிச்சலாய் இருந்தது.
குணசாலியை திருமணம் செய்யும் முன்பு கண்ணுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் இப்பொழுது மிக பெரிதாய் தெரிந்தது. ஆனாலும் வந்த இடத்தில் எதற்கு என்று அமைதியாக இருந்துகொண்டான்.
ஊர் திரும்பும் முன்னர் மின்னொளியும், ராஜாத்தியும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று சொல்ல முத்துநகைக்கு இறைபக்தி அதிகம் என்பதால் அவரும் மறுக்காமல் சரி என்றார்.
கோவில் ஊரின் நுழைவாயிலேயே அமைந்திருக்க திருவிழா என்பதால் கூட்டம் அலைமோதியது.
ஊர்மக்களில் பெரும்பாலோனோர் அங்கே தான் இருந்தனர். மாலை நேரம் இன்னமும் இரவு கவிழவில்லை.
முதலில் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு அதன் பின்னர் ராட்டினங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தனர். மின்னொளி ஒரு கையில் பலூனும், மறு கையில் பஞ்சுமிட்டாயையும் பிடித்தபடி நடந்து வர உடன் ராஜாத்தி வந்தாள்.
காசியாத்தா முத்துநகையுடன் வர அவர்களுடன் அருள் வந்தான் பேசியபடி.
“இந்த புள்ளைக எங்கிட்டு போச்சுக?…” என முத்துநகை தேட,
“இருக்கா நா பாத்துட்டு வாரேன்…” என்றவனை தடுத்த முத்துநகை,
“இருலே அருளு, மொத ஆத்தாவ வேனுக்கு கொண்டிவிடு. மொகமே கெறக்கமா கெடக்கு. அதால நடக்கமுடியல பாரு. குடிக்க எதாச்சும் வாங்கி குடுத்து விட்டுட்டு வா. இல்லனா அதுக்குள்ளே நானே வாரேன் அதுகள கூட்டிக்கிட்டு…” என முத்துநகை அருளை காசியாத்தாவுடன் அனுப்பிவிட்டு இவர்களை தேடி வந்தார்.
இவர்களை விட்டு சற்று தள்ளி குடைராட்டினம் இருக்கும் பகுதிக்கு அருகே வர கூட்டமும் அங்கே குறைவாக இருக்க மின்னொளியின் கையில் இருந்த பலூன் பறந்து அருகில் இருந்த பெரிய குளம் போன்ற இடத்தின் பக்கத்தில் விழ.
“போச்சு பலூனு போச்சு…” என மின்னொளி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு ராஜாத்தியை பார்க்க,
“இந்தாதேன் கெடக்கு, இருத்தா எடுத்தாரேன்…” என தன் தாவணியை பாவாடையுடன் பிடித்துக்கொண்டு சற்று குப்பை மேடை கிடந்த இடத்துற்குள் செல்ல கால் வழுக்க ஆரம்பித்தது.
“ஏத்தா மின்னு அங்கனவே நில்லு, வராத…” என்றபடி ராஜாத்தி செல்ல அங்கே வந்துவிட்ட முத்துநகை மின்னொளியை பார்த்துவிட்டு வேகமாய் அவளருகே வர ராஜாத்தியை பார்த்தபடி இருந்த மகளிடம்,
“ராசு எங்க பாப்பா?…” என கேட்க,
“பலூனு பறந்து போச்சும்மோவ், அதேன் சின்னம்மா எடுக்க போயிருக்கா…” என கை நீட்டி காண்பிக்க,
“ஆத்தே இவளுக்கு கோட்டியா புடிச்சுருக்கு. குப்பக்குள்ள போறா. ஒனக்கு வேணுமின்னா வேற வாங்கித்தர மாட்டேனாக்கும்? என்ன பாப்பா நீயி?…” என்றபடி ராஜாத்தியை அழைக்க திரும்பி பார்த்தவள் வழுக்கி கீழே விழ வேகமாய் ஓடிய முத்துநகை ராஜாத்தியை எழுப்பிய நொடி ராஜாத்தியின் கால்கள் சகதியில் மாட்டிக்கொண்டது.
“ஆத்தே, காவாத்தண்ணி. என்னடி பண்ணி வெச்சிருக்க? ஆத்தாக்கு தெரிஞ்சிச்சி…” என பதட்டத்துடன் அவளை வெளியே இழுக்க,
“எக்கா லேசா சவதிதேன். இந்தா வந்துருவேனுல்ல…” என இலகுவாக சொல்ல,
“என்ன பொண்ணுகளா பண்ணுதீக, இது ஊரு காவா தண்ணியு, அந்த கம்பெனியோட கழிவு தண்ணியு. அம்புட்டு வெசம்…” என சொல்லிக்கொண்டு இரண்டு மூன்றுபேர் வந்து ராஜாத்தியை பிடிக்க பார்க்க,
“நீ கைய விட்டு போம்மா…” என முத்துநகையை போக சொல்ல உடன் மேலும் இரண்டுபேர் வந்துவிட ஒரு வேகத்தில் ராஜாத்தியை வெளியே இழுத்த முத்துநகை இழுத்த வேகத்தில் தடுமாறி மொத்தமாய் அதனுள் விழுந்துவிட்டார்.
இதை எதிர்பாராத ஊர்மக்கள் திரண்டுவிட வெளியே வந்த ராஜாத்தி மின்னொளியை பிடித்துக்கொள்ள கூட்டம் கூடிவிட்டது. வேனில் தாயை அமர்த்திவிட்டு இவர்களை தேடி வந்த அருளும் என்னவென வந்து பார்ப்பதற்கு முன்னர் அனைத்தும் கைமீறி சென்றுவிட்டது.
ஊரில் இதற்கென இருப்பவனை அழைத்து சாக்கடைக்குள் இறங்க வைத்து முத்துநகையை தூக்கும் முன்னர் அவரின் உடலுறுப்புகள் மொத்தத்தையும் கழிவு நீர் ஆட்கொண்டுவிட்டது.
எதிர்பாராத நிகழ்வு சட்டென கணேசனுக்கு அழைத்து சொல்லிய அருள் தன் அக்காவை தேடி உள்ளே இறங்க பார்க்க ஊர்மக்கள் விடவே இல்லை.
மின்னொளி அதிர்ச்சியில் உறைந்துவிட ராஜாத்தியும், அருளும் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தனர்.
ஆம்புலன்ஸ் வந்துவிட உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் முத்துநகை சேர்க்கப்பட்டு எத்தனை முயற்சி செய்தும் அவரை முழுதாய் திருப்பி தர முடியவில்லை.
கழிவு நீர் தாக்கம் அவரை உருகுலைத்துவிட்டது. முருகய்யன் வேரறுந்த மரம் போல ஆகிவிட்டார். கை கால்கள் செயலிழந்து உடல் நிறமே மாறி பார்ப்பதற்கு அவர்தானா என சந்தேகிக்கும் விதமாய் ஆகிப்போனார் முத்துநகை.
அதிலும் அவரின் மரணம் எப்போது வேண்டுமென்று வேணாலும் நிகழலாம் என்று வேறு சொல்லியிருக்க ஒவ்வொரு நாளும் விடியும் நேரம் அத்தனை வேதனையுடன் பயத்துடன் தான் விடியும்.
அதிலும் மின்னொளி மொத்தமாய் மாறி போனாள். தன்னால் தானோ என்கிற நினைவு வேறு அவளை வாட்ட மற்றவர்கள் முத்துநகை மீதான நினைவில் மின்னொளியை கவனிக்க மறந்தனர்.
[the_ad id=”6605″]
மின்னொளியின் உலகமே முத்துநகை மட்டும் தான் என்றளவில் சுருங்கிவிட அழகுப்பாட்டி கூட முத்துநகை இருக்கும் வரை மின்னொளி அவளுடனே இருக்கட்டும் என்று சொல்லிவிட அவளின் துக்கத்தை கூட பகிர்ந்துகொள்வாரோ தேற்றுவாரோ யாருமின்றி தவித்துப்போனாள்.
மற்றவர்களிடம் பேச்சுக்கள் சுருங்கி முத்துநகை விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவரிடம் மட்டுமே பேசிக்கொண்டே இருப்பாள்.
முத்துநகை தான் உயிருடன் இருக்கும் பொழுதே முருகய்யனுக்கு இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருக்க முருகய்யன் வருக்க பெரும் சண்டை வெடித்து பின் முத்துநகையின் வற்புறுத்தலுக்காக அரைமனதுடன் ஒப்புதலுடன் சம்மதித்தார் முருகய்யன்.
இவை எதுவும் மின்னொளியின் காதிற்குள் செல்லாதவாரு பார்த்துக்கொண்டனர் பெரியவர்கள்.
மின்னொளிக்கு அடுத்த அதிர்ச்சியாக ராஜாத்தி முருகய்யனை தான் திருமணம் செய்வேன் என்று வந்து நின்றது தான். இதனை எதிர்பார்க்கவே இல்லை.
தன்னை விட வயதில் கொஞ்சமே பெரியவரான ராஜாத்தி தன் தாயிடத்திலா? அந்த நினைவே அதிர்வாய் இருக்க ஜீரணிக்க முடியாமல் மறுக்கவும் முடியாமல் தனக்குள்ளேயே போராட ஆரம்பித்தாள் அந்த பதிமூன்று வயது மின்னொளி.