கடல் – 23
முத்துநகை அறையில் காசியாத்தா புடவை தலைப்பை கையில் பிடித்துக்கொண்டு வாயை மூடியபடி அழுதுகொண்டிருக்க அவரருகே ராஜாத்தி பிடிவாதமான முகத்துடன் நின்றிருந்தாள்.
“என்ன ராசு இதெல்லா? நெனப்பு வேறயா இருக்கே? கூறு உள்ளவ பேசற பேச்சாடி?…” என முத்துநகை திட்ட,
“நாஞ்சொல்லுததுதேன், ஆரு என்ன சொன்னாலு நா கேக்கமாட்டே…” என்று வந்ததிலிருந்து சொல்லியதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க,
“நல்லாருப்பியாடி நல்லாருப்பியா? இன்னிக்கித்தேன் இத்த நெனைக்கிதியா நீயி?…” என்று சொல்லி சொல்லி ராஜாத்தியை அடிக்க அப்படியாவது ரோஷப்பட்டு வேண்டாம் என்று சொல்லிவிடுவாள் என பார்த்தால்,
“நீயி என்னிய இப்பிடி பேசுனா நா மருவிட்டு வேணான்னு சொல்லிடுவேன்னு நெனச்சியா? செரி, இருக்கட்டு. நீயி சொல்லிதேல அப்பிடியே வெச்சுக்க. ஆனா நா சொல்லுததுதேன்…”
“ராசு இங்க வாத்தா…” என அளித்த முத்துநகை அவளின் கையை கூட பிடிக்கமுடியாது துவண்டு போய் இருக்க ராஜாத்தியாய் முத்துநகையின் கையை நடுங்கும் கரத்தை பிடித்து தன் கைகளுக்குள் வைத்து பொத்திக்கொண்டவள்,
“இங்காருக்கா ஒம்மேல ஆணையா சொல்லுதேன். நீயி வேணாமின்ன கூட இத்தென் யே முடிவு. என்னிய விட எவளும் நம்ம புள்ளைய பாத்துக்க மாட்டா. வாரவ என்ன கொணமோ? எம்பேச்ச கேளுத்தா…” என ராஜாத்தி சொல்ல,
“அடியே ஒவ்வயசென்ன? அந்த மனுசென் வயசென்ன? பேசுத பேச்சு கோட்டிப்புடிச்சதாட்டம்…” என கோபமாய் சொல்ல,
“ஓஹோ, அப்ப ஒம்புருசெனுக்கு நீ பொண்ணு பாக்குதியே ஆரு வயசுல பாக்குதியாம்?…” என கேட்ட ராஜாத்தி,
“செரி நீ எவள வேணா கெட்டி வெய்யி. ஆனா எனக்கு கலியாணமின்னு ஒன்னு ஆச்சுனா அது ஒம்புருசென் கூடத்தேன்னு எம்மனசுல பதிஞ்சிக்கிடுச்சு. அத்த மாத்த முடியாது. பாத்துக்கிடு…”
“ஏன்டி ஏன்டி நா சொல்லுதத கேக்க மாட்டிக்குத?…” ஆயாசமாய் முத்துநகை கேட்க காசியாத்தாவிற்கு ஒன்றுமட்டும் புரிந்து போனது இனி தன் மகளின் மனதை மாற்றுவதென்பது இயலாத ஒன்று என்று.
முத்துநகை சொன்னால் கேட்பாள் என நினைத்து தான் இங்கே அழைத்து வந்தது. ஆனால் அவளிடமே இத்தனை பிடிவாதமாய் பேச காசியாத்தா மனதை தேற்ற ஆரம்பித்தார்.
இனி இதுதான் நடக்க இருக்கிறது என்பதை அனுமானம் செய்தவர் மகளை நினைத்து பெருமை கொள்ளவா? இல்லை முருகய்யனோடு அவளின் எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளவா? என்று புரியாமல் மௌனமாய் நிற்க,
“ரொம்பத்தேன் இடும்பு பண்ணுதத்தா நீயி…” முத்துநகைக்கு வேறு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
அவ்வளவு நேரம் பேசிய களைப்பு உடலிலும் மனதிலும் அதிகமான சோர்வை ஏற்படுத்த மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டார்.
“இங்காருக்கா நா ஆருக்கிட்டயும் போயி கெட்டி வெய்யின்னு நிக்கமாட்டே. இனிமேக்கு காலமுச்சூடும் நா இப்பிடியே இருந்துட்டு போறே. அதுக்கு ஒருத்தரு ஒன்னும்ஞ்சொல்ல கூடாது சொல்லிப்பிட்டேன்…” என முடித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி மின்னொளியை தேடி செல்ல அவள் பின்னால் அழகுப்பாட்டியுடன் இருந்தாள்.
“என்னத்தா பேசிட்டியா ஒங்கக்காட்ட…” என்ற அழகுப்பாட்டி,
[the_ad id=”6605″]
“நீயி இந்த மாடுகளுக்கு வெக்கொலு அள்ளி போடு. ஒங்கம்மாளுக்கு குடிக்க எதாச்சு குடுத்துட்டு வரேன். வந்த வேவத்துல மூஞ்சியே செரியில்லாம முத்துட்ட பேச போயிட்டா…” என பேசிக்கொண்டே உள்ளே செல்ல மின்னொளியும் ராஜாத்தியும் சேர்ந்து அங்கிருந்த வைக்கோல் படப்பில் இருந்து மாடுகளுக்கு உருவி போட்டுக்கொண்டிருந்தனர்.
“யே மின்னு, பள்ளிக்கூடத்துக்கு போவமாட்டேன்னுற? அதேன் அம்மா இப்ப நல்லா இருக்காகள்ள. நானுந்தேன் பாக்குதேனில்ல. பொறவு என்னடி ஒனக்கு இடும்பு?…” என கேட்க,
“அம்மா எந்திச்சு ஒக்காரட்டு சின்னம்மா பொறவு நா பள்ளிக்கூடத்துக்கு போவே. அத்துவரைக்கி அம்மாவோடத்தேன்…”
“நல்லா படிக்கித புள்ள, நீயி செய்யிறது செரியில்ல புள்ள…”
“போ சின்னம்மா, அம்மாவுக்கி செரியாவட்டும். பொறவு படிச்சிக்கிடுதேன்…” என சொல்லிவிட ராஜாத்தி மேலும் எதுவும் சொல்லவில்லை.
அவளிடம் எப்படி சொல்லுவாள் இனி உன் தாய் எழுந்துகொள்ளவே முடியாதென? ஆயுசு கம்மி என? கண்ணீர் முட்டியது ராஜாத்திக்கு.
முதலில் தான் திருமணம் முடிந்து வந்ததும் எப்படியாவது பேசி சரிக்கட்டி மின்னொளியை பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
காசியாத்தாவிற்கு குடிக்க கருப்பட்டி காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்த அழகுப்பாட்டியிடம் முத்துநகை ராஜாத்தியின் எண்ணத்தை சொல்ல அவர் நெஞ்சை பிடித்துவிட்டார்.
“என்ன நெஞ்சழுத்தம்டி அவளுக்கு?. இந்தா வாரேன்…” என அழகுப்பாட்டி கோபமாய் பேச,
“யத்தே செத்த பொறுங்க…” என்று முழுமையாக சொல்லி முடிக்க கண்ணீர் வந்துவிட்டது.
“ஏத்தா என்னத்த சொன்னாலு மனசு ஆறுமா? வாழவேண்டிய குருத்துத்தா…” என்றவர் பின் காசியாத்தாவிடம் கேட்க அவர் ஓரளவிற்கு அந்த திருமணத்தை நடத்துவதென்று தயாராகிவிட்டார்.
மூன்று பெண்களும் சேர்ந்து முடிவெடுத்த பின்னர் தான் முருகய்யனிடமும், அருளிடமுமே தெரிவித்தனர்.
முருகய்யன் முடியவே முடியாதென மறுக்க ராஜாத்தியின் பிடிவாதம் அறிந்து அவளை அடித்தேவிட்டார்.
“இங்காருங்க அவள கெட்டினாவாச்சும் செத்த நாளிக்கி நா உசுரோட இருப்பெனாட்டு இருக்கு. இல்லாங்காட்டி இத்த நெனச்சே நா செத்துருவேன்…” என்ற முத்துநகை மிரட்டலுக்கு பலமான சக்தி இருக்க அதன் பின்னர் வாயை திறக்கவோ மறுக்கவோ வழியின்றி போனது முருகய்யனுக்கு.
ஆனால் வெறுப்பு மொத்தமும் ராஜாத்தியின் புறம் திரும்பிவிட்டது. ஊரினர் என்ன பேசுவார்கள் என்பதை விட தன் மனது இதை ஏற்கமுடியாமல் தவித்ததை சொல்லியும் முத்துநகை மசியவில்லை.
அருளோ அதற்கு மேல். ராஜாத்தியிடம் மன்றாடியவன் அவரின் பிடிவாதத்தில் அப்பொழுது பேச்சை நிறுத்தியவன் தான். அவர்கள் திருமணம் முடியும் வரை பேசவே இல்லை.
மின்னொளிக்காக இந்த திருமணம் என்று வேறு சொல்ல மொத்த கோபமும் காரணமின்றி அவளின் மேல் திரும்பியது.
“அதே குதிரு கணக்கா வளந்துட்டால. இன்னுங்காட்டி அவள என்னத்த வளக்க? வேணா நம்ம வீட்டுக்கே கூட்டி வந்து வளத்துப்போம். அந்தாளுக்கு வேற ஆரையும் பேசட்டு, முடிக்கட்டு. ஒனக்கு வேணாம்த்தா இந்த வாழ்க்க. ஐயோ இப்பிடி ஆவுமின்னு தெரிஞ்சிருந்தா ஒனக்கு மொதவே எவனையாச்சும் பாத்து கெட்டி வெச்சிருப்பேனே…” என்று அழ,
“இதுக்குத்தேன் நீயி எல்லாத்தையும் தட்டிகழிச்ச போலுக்கும்…” என ராஜாத்தி சொல்ல முருகய்யனிடம் பேசி பார்க்கலாம் என்று செல்ல அவரோ பேசவே மறுத்துவிட்டார்.
இதனால் அவரை மாமா ஏன்று கூப்பிடுவதையும் நிறுத்தியவனுக்கு தன் அக்கா என்று வரும் பொழுது அவனுக்கு மற்ற அனைவருமே எதிரியாய் போனார்கள். முத்துநகையை பார்க்க கூட வருவதை தவிர்த்தான்.
ஏன் கணேசனிடம் கூட பேச்சுக்கள் குறைந்துபோனது. ஒருவித இறுக்கத்துடனே தான் அருள் சுற்றி வந்தான். எதிலும் ஒரு பிடிப்பில்லாத தன்மை. காசியாத்தாவிடம் கூட என்னவென்றால் என்ன என்பதாக தான் இருந்தது அவனின் பேச்சு.
முருகய்யன், ராஜாத்தி திருமண பேச்சு ஊருக்குள் பலவித பேச்சுக்களையும் கிண்டல் கேலிகளையும் எழுப்பியது.
போதாத குறைக்கு ராஜாத்தியை காப்பாத்த சென்று தான் முத்துநகைக்கு இந்த நிலைமை, அதுவே திட்டமிட்டதாக இருக்குமோ என்ற சில வரைமுறையற்ற பேச்சுக்களும் பரவ அது அருளின் காதை எட்ட ஆடித்தீர்த்துவிட்டான் அவன்.
இத்தனை களேபரங்கள் நடந்தும் மின்னொளிக்கு திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு வரைக்கும் இதனை தெரியாமலே பார்த்துக்கொண்டனர்.
இன்னும் பத்து நாளில் கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம். ஊரார் யாருக்கும் அழைப்பில்லை. வீட்டினர் மட்டுமே என்று முருகய்யன் பிடிவாதமாய் சொல்லிவிட்டார். கடைசி முறையாக மனைவியிடம் கேட்டு பார்க்கலாம் என்று வர,
“யே ராசியே இப்பிடித்தானாட்டு இருக்கு. எங்கலியாணத்துக்கு எங்காத்தா, அப்பாரு ரெண்டுபேருமே இல்ல. இப்ப எம்மவளுக்கு. அவளுக்கு அம்மா இல்லாம கலியாணம் நடக்கனுமா? நா இப்பிடி கெடக்குதத பாத்துமா ஒமக்கு ஒத்துக்க மனசு வரல?…” என்று முத்துநகை கண்ணீர் விட முருகய்யன் துடித்துப்போனார்.
வழக்கம் போல தாயுடனும் தந்தையின் அரவணைப்பிலும் நாட்களை கழித்துக்கொண்டிருக்க வர வர முருகய்யன் தன்னிடம் சரியாக பேசாமல் இருப்பதை கண்டுகொண்டவள்,
“மேலுக்கு முடியலயாப்பா? யே ஒரு வாட்டமா இருக்குதீக?…” என்று கேட்டுவிட அவர் முத்துநகையை தான் பார்த்தார்.
“நா பேசிக்குதேன், நீங்க கெளம்புக…” என்று அனுப்பியவர் மகளை அருகில் அழைக்க வெளியே வந்தவரோ அழகுப்பாட்டியிடம் வந்து புலம்பியபடி அமர்ந்திருந்தார் முருகய்யன்.
[the_ad id=”6605″]
“எம்மவ கேக்குதாம்மா என்னிய கெவனிச்சு, நா என்னத்த சொல்லுவே? வெவரம் தெரியாத புள்ளையாங்காட்டினா கூட எதையாச்சு சொல்லி சரிக்கட்டலா. ஆனா எம்புள்ள எங்கம்மாமாரி அறிஞ்ச புள்ள. அப்பிடியே உக்கி போயி கெடக்கேன்…” என்று சொல்ல,
“ஏலே சாமி அப்பிடி பேசாதய்யா, போற உசுருக்கு நிம்மதியா குடுத்துரு சாமி. ஒம்பொஞ்சாதி கடசி கடசியா கேட்டது. நெறவேத்துய்யா…” என தாயும் கையேந்தி கேட்க இனி யாரிடம் சொல்லி புலம்புவார் முருகய்யன்?
மனதிற்குள்ளேயே வைத்து மருகிக்கொண்டிருந்தார். தன் முன்னால் திருமணத்தை பற்றி கேள்விப்பட்டவர்கள் முகத்தின் முன்பு “வயசுப்புள்ளைக்கு தாயின்னு ஒருத்தி இருக்கனுமப்பு” என்று பேசிவிட்டு முதுகிற்கு பின் “பொண்டாட்டி இல்லாம இருக்க முடியலங்காட்டி இருக்கு. அதேன் மொத பொஞ்சாதி கண்ண மூடமின்ன இன்னொண்ண தேடுதான்” என்று வாய் கூசாமல் பேசவும் செய்கிறார்கள்.
இவற்றை கண்டும் காணாமல் தான் கடக்க பழகி இருந்தார் முருகய்யன். வேறு வழியும் இருக்கவில்லை அவருக்கு.
“கதவ சாத்திட்டு வாத்தா…” என்ற முத்துநகை மகள் தன்னருகே வந்து அமர்ந்ததும் அவள் சரியாக தான் சொல்ல வருவதை புரிந்துகொள்ள வேண்டுமே என்கிற அலைப்புருதல் அவரின் முகத்தில் பரவ அதனை வெகு இலகுவாக கண்டுகொண்டாள் மின்னொளி.
“என்னம்மோவ் வரசொல்லிப்பிட்டு என்னியவே பாக்குத? நா நல்லாத்தேன் இருக்கே…” என தாய்க்கு கூடுதல் தகவலாய் சொல்ல அதில் புன்னகைத்தார் முத்துநகை.
“தாயி, அம்மா சொல்லுதத நீயி செரியா புரியனுமாத்தா. அதுக்குத்தேன் உள்ளுக்குள்ள வெசனமா கெடக்கு…” என தொண்டையடைக்க அவர் பேச,
“அம்மோவ், வெசனப்படாத, நீயி எதுனாலு சொல்லு. கேக்குதே. ஒனக்கு ஒண்ணுமில்லியே. இரு நா போயி அப்பார வர சொல்லுதேன். ஆசுப்பத்திரிக்கி போவம்…” என மகள் பதற,
“ஒன்னுமில்லத்தா நல்லாத்தேன் இருக்கே. நீயி ஒக்காரு…” என்றவரின் தொண்டை வரண்டு போவதை போல இருக்க தண்ணீருக்கு கண்களை சுழற்றியவர்,
“ஒளி ஆத்தாவுக்கு தண்ணி தா தாயி…” என கேட்டதும் எடுத்துவந்து புகட்டினாள் மின்னொளி.
“அம்மோவ் எனக்கு பயந்துவருது. அப்பாரு எங்கனனு பாத்துட்டு வாரேன்…” என்றவள்,
“இல்ல, இங்கன இருந்தே கொரலு குடுக்கேன்…” என கதவை திறக்க பக,
“இந்தா இருங்கறேன்ல, ஒங்கிட்ட பேசத்தேன் ஒங்கப்பாவ அனுப்பிவெச்சேன்…” என அவளை நிறுத்த,
“என்னன்னு சட்டுன்னு சொல்லுத்தா, நெஞ்சுக்கூடு படபடங்குது…” என மகள் தன் கையை பிடித்துக்கொள்ள மின்னொளியின் உள்ளங்கை வேர்த்துவிட்டிருந்தது.
“அப்பா செத்த நாளா எப்பிடி இருக்காரு ஒளி…” என கேட்கவும்,
“நல்லாவே இல்லம்மோவ், பாவமா கெடக்கு. நீயுந்தேன் பாத்தியல…” என மகளின் கண்கள் கலங்கிவிட,
“அதுக்குத்தேன் அம்மா ஒரு ரோசன வச்சிருக்கேன்…” என பீடிகை போட மின்னொளி பதிலின்றி பார்த்தாள்.
“அப்பாருக்கு ஒரு கலியாணத்த பண்ணுவோமின்னு நெனைக்கிதே தாயி. ஒன்னிய பாத்துக்க ஒரு அம்மாவா ஒருத்திய கொண்டாறலாமின்னு…” என அவர் முடிக்கவும் இல்லை அதற்குள் மின்னொளி மறுத்திருந்தாள்.
“அதெல்லா ஒன்னு வேணாம்மோவ். அதேன் நீயி இருக்கல. நீ பாத்துக்கிடு போதுமாட்டு இருக்கு…” என பட்டென்று மறுக்க முத்துநகை பதறிப்போனார்.
“அப்பிடி சொல்லாதத்தா அப்பாவுக்கு ஆரு இருக்கா? அவருக்காச்சும் பாத்துக்கனுமில்ல…” என சொல்ல,
“அதே கெழவி இருக்கு, நீயி இருக்க. நா இருக்கேன்த்தா. நா பாத்துக்கிட மாட்டேனா? வேணாம்த்தா…” என சொல்ல அவளிடம் உடைத்து சொல்லமுடியாமல் பரிதவித்தார் முத்துநகை.
[the_ad id=”6605″]
மகளை கூட பார்த்துவிடலாம். முத்துநகைக்கு அல்லவா தெரியும் கணவனை. தான் இல்லை என்றால் அந்த நினைவிலேயே உருக்குலைந்து போய்விடுவார் என்று. கடைசியில் மகள் அல்லவா அனாதையாகி போவாள்.
ராஜாத்தி என்றால் இன்னமுமே நிம்மதி. முருகய்யனை பற்றி நன்றாகவே தெரிந்தவள். அவள் பார்த்துக்கொள்வாள் கணவனை என்று நினைத்தார்.
அப்போதும் மகள், அவளின் மனது இது எதுவும் அவருக்கு ஒரு பொருட்டில்லை. மகள் சமாளிப்பாள் என்று தான் நினைத்தார்.
எதையும் எதிர்க்கொண்டு சமாளிப்பது என்பதும், உரிமைக்கான உணர்ச்சிகள் என்பதும் வேறு வேறு என புரியாமல் போனார் முத்துநகை.
“அம்மா சொல்லுதாதா கேளு ஒளி, ஒங்கப்பாருக்கு ஆரு பாத்தாலு பொஞ்சாதி பாக்குத மாறி வராதுத்தா…”
“அப்ப நீயி ஆராம்?…” என கோபத்தில் கேட்க,