“எம்புட்டு நாளிக்கு நா இருப்பேனாம் புள்ள? இப்பிடியே கெடக்குததுல நானே அத்து போயிருவே…” என்ற அழுகையுடனான பேச்சு மின்னொளியை உலுக்கியது.
“அம்மோவ்…” என பதறியவள்,
“இனி இதுமேட்டிக்கி பேசாதத்தா, எனக்கு கோவமா வருது. நீயி எந்திப்ப ஆமா…” என தாயின் கண்ணீரை துடைத்துவிட்டவளின் மனது அலையலையாய் உணர்வுகள் பொங்க என்ன செய்வதென புரியாமல் அமர்ந்திருந்தாள்.
தாய் சொல்லவருவது புரிந்து புரியாத மாதிரி ஒரு வித உணர்வு அவளை ஆட்டுவிக்க பரிதாபமாய் தாயை பார்த்தாள்.
“அப்பா நீயி எந்திக்கவே மாட்டியாம்மோவ்?…” என உடைந்த குரலுடன் மகள் கேட்க அவள் அழுகையை அடக்குகிறாள் என்பதை நன்றாக உணர்ந்தார் முத்துநகை.
மகள் அழுவதை என்றுமே அவர் விரும்பமாட்டார். அதனால் மின்னொளி அழுகை என்பது மிகவும் அரிது. இன்றும் தாய்க்காக அழுகையை கட்டுப்படுத்த மகள் கண்ணீர் விட்டுவிட்டால் கூட தேவலை என நினைத்த முத்துநகை அவளின் முகத்தை பார்க்க முடியாமல் தவிக்க,
“அப்ப இனி எனக்கு சோறு ஊட்டவு மாட்டியாம்மோவ்…” என உதடு துடிக்க அவள் கேட்டவிதத்தில் வெடித்து அழுதுவிட்டார் முத்துநகை. தன் கண்களில் வழிந்த கண்ணீரை கூட துடைக்க முடியாமல் அந்த இயலாமை வேறு அவரை துன்புறுத்த தாயின் அழுகையில் மிரண்டு போனாள் மின்னொளி.
“அம்மோவ், அழாத. அப்பாவுக்கு கலியாணத்த பண்ணி வெய்யி. நா வேணாமின்னு சொல்லமாட்டே. சத்தியங்காட்டி சொல்லவே மாட்டே. அழுவாதம்மோவ்…” என அவரை கட்டிக்கொண்டு அழுத மகளின் கன்னத்தில் அத்தனை முத்தங்கள் பதித்தார் முத்துநகை.
“எம்புள்ளைய கெட்டிப்புடிக்க கூட வக்கில்லாதவளா போனேனே…” என சொல்லி சொல்லி புலம்ப தானே தாய் கட்டிக்கொண்டு சிறிது நேரமேனும் அவருடன் படுத்துக்கொண்டு மின்னொளி.
அதன் பின் மின்னொளி திருமண விஷயமாக எதையும் பேசவும் இல்லை. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
அதிலும் மணப்பெண் ராஜாத்தி என்று சொல்லவும் அது பேரதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் தன் தாயை வேதனைப்படுத்தவோ கண்ணீர் சிந்தவோ விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் அனைத்து உணர்ச்சிகளையும் தன்னுள் அடக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது தான் அருள் அங்கே வந்து செல்வது அறவே நின்று போனது ஏன் என்று ஓரளவிற்கு விளங்கியது.
வளர்ந்த பெண், அதிலும் புத்திசாலி பெண். அனைத்தையும் புரிந்துகொண்டாள் தன் தாயிற்காக. தன் தந்தையிற்காக.
பத்து நாட்கள் மட்டுமே இருப்பதல ராஜாத்தியும் வந்து செல்லவில்லை. அந்தளவிற்கு நிம்மதியாக இருந்தாள் மின்னொளி.
தனக்கு ஒரு விளையாட்டு தோழியை போல இதுவரை இருந்தவள் தனது அம்மா ஸ்தானத்தில். நினைக்க கூட விரும்பவில்லை.
திருமணத்தன்று கணேசன் மின்னொளியை கோவிலுக்கு அழைத்துச்செல்ல வர பிடிவாதமாய் மறுத்துவிட்டாள் அவள்.
[the_ad id=”6605″]
யார் சொல்லியும், என்ன முயன்றும் அவளை முத்துநகையை விட்டு அகற்ற முடியவில்லை. மகளின் முகம் பார்த்தே அவளின் உணர்வுகளை அவதானித்த முத்துநகையும் அவள் தன்னுடனே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
இதில் குணசாலி வேறு குத்தலாய் பேசி வைக்க இருந்த மனநிலையில் அவளை கண்டிக்க கூட முடியவில்லை ஒருவராலும்.
அருள் கடனே என்று திருமணத்தில் சடங்குகளை கவனித்துக்கொண்டிருந்தான். அவன் முகத்திலும், முருகய்யன் முகத்திலும் கொஞ்சமும் சுரத்தில்லை.
மற்றவர்களாவது எப்படியோ நடப்பது நல்லவிதமாக நடந்தால் போதும் என்றளவில் சற்று நிம்மதி இருந்தது.
திருமணம் முடிந்து நேராக வீட்டிற்கு வந்த பின்னர் மறுவீடு அது இதுவென எந்த சடங்குகளுக்கும் முருகய்யன் ஒத்துழைக்கவில்லை.
இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்புடன் சொல்லி கட்டாயப்படுத்தவும் யாருக்கும் தைரியமில்லை.
ராஜாத்தி மின்னொளியை தேடி செல்ல அவள் முத்துநகையை அணைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்க பார்த்துவிட்டு சத்தம் காட்டாமல் கதவை சாற்றிவிட்டு வந்துவிட்டாள்.
வீட்டில் அனைவரும் வந்துவிட்ட சத்தத்தில் அமர்ந்திருந்தவள் வேகமாய் தாயுடன் படுத்து கண்களை மூடிக்கொண்டாள் மின்னொளி. கண்களை திறந்து தாயை பார்க்க மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அதன் பிண்டு அடுத்த போராட்டம் ஆரம்பித்தது. ராஜாத்தியின் கைகளால் எதையும் வாங்கிக்கொள்ள மறுத்தார் முருகய்யன். அவளை கண் முன்னே வரவே விடவில்லை.
போதாதற்கு மின்னொளி வேறு ராஜாத்தியிடம் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தானாக சென்று எத்தனை முயன்றும் பிடிகொடுக்கவே இல்லை மின்னொளி.
வேண்டுமென்று அப்படி செய்யவில்லை. இரண்டாம் திருமணம், மாற்றாந்தாய் என்றால் என்னவென ஓரளவு புரிந்திருக்கத்தான் செய்தாள். ஆனாலும் அது ராஜாத்தி என்பதை ஏற்கத்தான் முடியாமல் போனது மின்னொளிக்கு.
இவற்றை எல்லாம் பார்த்த காசியாத்தா பயந்தே போனார். என்னதான் மின்னொளிக்காக திருமணம் என்றாலும் அந்த திருமண வாழ்வை வாழ நாளானாலும் ஒரு அனுசரணை வேண்டாமா புருஷன், பொண்டாட்டி இடையே.
இங்கே வெறுப்பும், கோபமும் அல்லவா நிறைந்திருக்கிறது. இப்படியே போனால் மகள் எங்கே வாழாமலே போய்விடுவாளோ என்று அஞ்சினார் அவர்.
முருகய்யன் மகளின் முகம் பார்த்து நிற்க ராஜாத்தி அவர்கள் இருவரின் முகம் பார்த்து நிற்க என்று காலம் இப்படியே போய்விட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட அழகுப்பாட்டி தான் ஒரு முடிவுக்கு வந்தார்.
“ஏலே கல்யாணமாயி இம்புட்டு நா ஆச்சு. இன்னு கூடத்துல படுத்தா வெளங்குமா? இனி போயி நீயி ஒம்பொஞ்சாதியோட அந்த அறக்குள்ள படு. நா கூடத்துல மொடக்குதேன்…” என தன் ஜாகையை கூடத்திற்கு மாற்றினார் அழகுப்பாட்டி.
அப்பொழுதும் அதற்கும் ராஜாத்தி தான் காரணம் என அவரிடம் காய்ந்தார் முருகய்யன். பேச்சுக்கள் குறைந்து ஆளே பாதியாக மாறிவிட்டார். முருகய்யன் எத்தனை பேசினாலும் தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டாள் ராஜாத்தி.
அனைத்தும் முத்துநகை மீதான அன்பும் பாசமும் என்பதை உணர்ந்துதான் இருந்தாள். அவளால் தாங்க முடியாதது மின்னொளியின் பாராமுகம் தான்.
அதை மேலும் பெரிதாக்குவதை போல காசியாத்தா முத்துநகையிடம் முருகய்யன், ராஜாத்தி விலகளை சொல்லி புலம்ப மின்னொளி அவர்களை விட்டு மொத்தமாய் விலக அதுவே பெரும் காரணியாக மாறிப்போனது.
மகளுக்கு சாப்பிட அவித்த கடலையை உரித்து கொடுத்துக்கொண்டிருந்தார் முருகய்யன். மின்னொளியும் வாங்கி சாப்பிட்டபடி அமைதியாக இருக்க இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தவர்,
“தாயி, ஆத்தாவுக்கு தொண்ட கரகரன்னுது. கொஞ்ச சுடுதண்ணி வாங்கியாத்தா…” என சொல்லி அனுப்பிவிட்டவர் மகள் சென்றதும்,
[the_ad id=”6605″]
“தாலிய கெட்டி கூட்டியாந்துட்டு இப்பிடி பழிக்கு நடந்துக்கறது நல்லாவா இருக்கு?…” என கேட்க முருகய்யன் எதை பற்றி பேசுகிறார் என்பது புரிந்து மௌனமாக அமர்ந்திருக்க,
“செரியில்லங்க. நமக்குங்காட்டி ஒத்த பொண்ணு இருக்கா. அம்புட்டுத்தேன் சொல்லுவே…” என்றதும் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார் முருகய்யன்.
முத்துநகைக்கு தெரியும் மகளை கொண்டு இவர் ராஜாத்தியை அதிகமாக விலக்கி வைக்கிறார் என்பது. அதனால் என்ன செய்வதென்ற யோசனையில் மீண்டும் மகளிடமே பேச நினைத்தார்.
மற்றவர்களுக்காக மற்றவர்களுக்காக என நினைத்து நினைத்தே பெற்ற மகளை மனதளவில் வதைத்துக்கொண்டிருந்தார் முத்துநகை.
“ஒளி, அம்மா ஒங்கிட்ட இன்னொன்னு கேட்பேன் புள்ள…”
“விசயத்த சொல்லாம என்னன்னு மட்டும் சொல்லும்மோவ். நா மாட்டேங்க மாட்டேன்…” என தாயிற்கு வாக்களித்தவள் மனதளவில் பெரிய அடி வாங்க காத்திருந்தாள்.
“நீயி எது வேணாலு இனி அத்தேக்கிட்ட கேளுத்தா. அப்பார வேசடை(தொந்தரவு) பண்ணப்பிடாது. வெளங்குதா?…” என கேட்க ஏன் எதற்கென கேட்காமல் சரி என்று தலையாட்டினாள் மகள்.
எங்கே அதற்கும் கேள்வி கேட்டு அன்று போல அழ ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து போனவள் சரி என்பதை தவிர வேறு சொல்லவில்லை.
“இனி அப்பாவும் தனக்கு நெருக்கமில்லையா” என்னும் நினைவு கலக்கம் தந்தாலும் அமைதியாக இருக்க அதனை கண்டுகொண்ட முத்துநகை,
“என்னிக்கினாலும் அவரு ஒனக்கு அப்பாதேன் ஒளி. ஆனா நா அந்தப்புள்ளைக்கு வாக்கு குடுத்து கட்டிவச்சிட்டேன். அவளும் வாழனுமில்ல. இந்த வீட்டுல ஒனக்கு நானு, அத்தே, அப்பாருன்னு இருக்குதோம். அந்த புள்ளைக்கி?…”
“நீ கொஞ்சூண்டு உன் உரிமைய விட்டுக்குடுக்கதால அப்பாரு இல்லன்னா ஆகிடும்? புரியுராத்தா? எந்த தாயின் வார்த்தையை கப்பென்று பற்றிக்கொண்டவள் அதன் பின்கொள்ள வருசம் போனாங்காட்டி கூட ஒளி அப்பாரு அவருதேன?…” என்று வாஞ்சையாக மகளை பார்க்க,
“என்னனாலு செய்யுதேன். நீயி மட்டு கூடவே இரும்மோவ்…” என தேன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள் மின்னொளி.
அதன் பின்னர் முருகைய்யனை நெருங்கவில்லை. தாயிடம் மட்டுமே அவளின் பேச்சும், சிரிப்பும், கவலையும் எதுவாக இருந்தாலும். அந்த நேரத்தில் மகளை மனதளவில் சோர்வடையை செய்யாமல் நல்வழியில் நடத்த ஆரம்பித்தார் முத்துநகை.
முருகய்யனை அணுகாமல் இருப்பதனால் வருந்தாமல் இருக்க அவளை திசைமாற்றினார். முத்துநகையை விட்டுவிட்டு பள்ளிக்கு செல்லமுடியாதென பிடிவாதமாக மறுத்துவிட அதற்கு மேல் வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் முத்துநகை.
[the_ad id=”6605″]
ஆனால் வாழ்க்கை பாடத்தை சொல்லிக்கொடுத்து முத்துநகை மகளை சிறுக சிறுக செதுக்க ஆரம்பித்தார். யார் இல்லை என்றாலும் தனித்து வாழ்ந்து காட்டும் அளவிற்கு மகளை ஊக்கமூட்டி அவளை அந்த வயதிலேயே அனைவரையும் பார்த்துக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துவிட்டார்.
எந்த சூழ்நிலையிலும் எதையும் கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்தார்.
எவரும் அறியாமல் அந்த வீட்டில் அனைருக்கும் தாயாய் மாறினாள். புரிந்துணர்வு என்றுமே மின்னொளியுடன் பிறந்தது. அதனால் அவளை அவளே தேற்றிக்கொள்ள பெரிதாய் பிரயத்தனப்பட தேவையில்லை அவளுக்கு.
இதில் யாருமே ஏன் முத்துநகையே கவனிக்காத ஒன்று அவளுக்குள்ளும் ஒரு குழந்தை உள்ளம் இருப்பதை எவருமே அறியாமல் போனது தான் மின்னொளி மேலும் கடினமாக காரணமாக அமைந்தது.
ஒரு வருடத்திற்கு பின்னர் அதற்கு வித்திட்டது முத்துநகையின் மரணம். ஒரு நாள் இரவில் மகளிடம் பேசிக்கொண்டே உறங்கியவர் விழிக்கவே இல்லை.
தாயின் பிரிவு மின்னொளியை பலமாய் தாக்க தோள் சாய்ந்து அழ கூட எவருமில்லாததை அன்று தான் உணர்ந்தாள் மின்னொளி.
அவரவர் துக்கத்தில் இருக்க ராஜாத்தி கூட முருகய்யனை தான் பார்த்தாரே தவிர மின்னொளியை நினைக்காமல் போனார்.