கடல் – 24
முத்துநகை தவறி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. நாட்கள் ராஜாத்திக்குதான் நத்தை வேகத்தில் நகர்ந்ததே தவிர மின்னொளிக்கு அவள் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் வேலைகளுக்கு மின்னல் வேகத்தில் தான் நகர்ந்தது.
அவர் இறந்த வீட்டில் மின்னொளியை யாரேனும் மடிதாங்கி இருந்தால் அவளின் இறுக்கங்களை தளர்த்தி கண்ணீரில் தனது துயரங்களை நிச்சயம் கரைத்திருப்பாள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை.
ராஜாத்தி உடைந்துபோய் கதறி அழுத முருகய்யனை தேற்ற முடியாமல் தவிக்க ஊரே அவரின் அழுகையில் கண்ணீர் சிந்தியது.
அழகுப்பாட்டி காசியாத்தாவை கட்டிக்கொண்டு அழ இப்படி குடும்பத்தினர் கூட மின்னொளியை பார்க்கவில்லை.
கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த தாயின் முகத்தை சில நொடிகள் பார்த்திருந்துவிட்டு அவர் இருந்த அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.
கடைசியாக அவரை ஸ்பரிசித்திருந்த போர்வையையும் புடவையையும் அள்ளிக்கொண்டவள் அதனுள் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
ஊர் மொத்தமும் கூடியிருக்க இவளை கவனிப்பார் தான் இல்லை. அதன் பின்னர் சடங்குகளுக்குதான் அழைத்தனர். இயந்திரம் போல வந்து செய்துவிட்டு விலகிவிட அதன் பின்னர் அவளை நெருங்கும் குடும்பத்தை விட்டு வெகு தொலைவிற்கு சென்றுவிட்டிருந்தாள் மனதளவில்.
தன்னால் தான் தாய் அந்த கழிவு நீர் குழியில் விழுந்து இப்படி ஒரேடியாக தன்னை விட்டு சென்றுவிட்டார். அன்று மட்டும் தான் அங்கே போகவேண்டும் என சொல்லாமல் இருந்திருந்தால் அவர் தன்னுடன் இருந்திருப்பாரே என்ற குற்ற உணர்வு தாயின் எந்த ஒரு சொல்லையும் தட்டாமல் செய்ய வைத்தது.
முன்பே முத்துநகையின் முகத்தை பார்த்து நடப்பவள், முடியாத பொழுது அதனை மீறிவிடுவாளா என்ன? சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தங்கள் குடும்ப புகைப்படத்தை பார்த்தவள் அதனை எடுத்து வந்து மடியில் வைத்துக்கொண்டு,
“சொன்னதெல்லா கேட்டேந்தானம்மோவ். பொறவு என்னிய வுட்டு நீயி மட்டு யே போன?…” என விடாது கேட்டுக்கொண்டே இருந்தாள் மின்னொளி.
அழகுப்பாட்டி வெகு நேரத்திற்கு பின்புதான் தன்னை கவனித்துவிட்டு கூட்டத்தில் தேவையில்லாமல் ஆறுதல் என்கிற பெயரில் எதையாவது சொல்லி அவளை எதுவும் பேசிவிடுவார்கள், அதனால் இருந்துகொள்ளட்டும் என்று நினைத்து விட்டுவிட்டார்.
ஒற்றை பார்வையில் தன் விலகளை பார்வையிலேயே அவள் உணர்த்த மனைவியும் இழந்து மகளும் தவிர்க்க கடைசியில் ராஜாத்தியிடம் தன் ஆறுதலை தேடிக்கொண்டார் முருகய்யன்.
பெரிதாய் இருவரும் அன்னியோனியமான பேச்சுவார்த்தைகள் இல்லை என்றாலும் மனைவி என்று ஏற்றுக்கொள்ள ராஜாத்திக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
முத்துநகை இருந்தவரை தாமரை இல்லை நீராக எப்படி ஒட்டாமல் இருந்தாளோ அவர் பிரிந்த பிறகு அதைவிட அதிகமான விலகல் தன்மையுடன் தான் நடந்துகொண்டாள்.
ஒரு வருடம் நன்றாகவே பழகி இருந்தது அவளுக்கு. சட்டென மீண்டும் மாறவோ அவர்களுடன் கூடவோ முடியாமல் கொஞ்சம் தவித்துதான் போனாள் எனலாம்.
முத்துநகையின் கடைசி யாத்திரையில் தான் அருளை மீண்டும் அவள் கண்டது. கிட்டத்தட்ட அவனை பார்த்தும் ஒரு வருடம் ஆகிவிட்டிருக்க இவளை பார்த்தது சற்று வேதனையுடன் முகம் திருப்பிக்கொண்டான் அவன்.
தாயின்றி வாடும் கன்றுக்குட்டியாய் அவனுக்கு அந்த நிமிடம் தோன்றியவளை ஆறுதல் சொல்ல முடியாமல் கூட்டத்தோடு அமர்ந்துகொண்டான்.
அவனின் மனதிலும் குற்றவுணர்வு பொங்கிக்கொண்டிருந்தது. தான் தடுத்தாலும் திருமணமே ஆகிவிட்டிருக்க தான் இத்தனை பிடிவாதமாய் முத்துநகையை பார்க்காமல் இருந்திருக்க கூடாதோ என கவலையுடன் தான் இருந்தான்.
அதன் பின்னர் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றான் தன் தமக்கைக்காக. பழைய படிதான் அவனால் பேச இயலவில்லை. முருகய்யனிடம் சுத்தமாக பேச்சுவார்த்தை இல்லை.
மின்னொளியிடம் என்ன செய்கிறாய், சாப்பிட்டாயா என்று நான்கு முறை மட்டுமே ஒற்றை வார்த்தையில் பேசியிருக்க அப்போதுதான் அவள் வீட்டில் யாரிடமும் பேசாதது அவனுக்கு புரிந்தது.
ராஜாத்தியை அழைத்து தனியாக கேட்டதும் இத்தனை நாள் பேசாமல் இருந்த தன் தம்பி தன்னிடம் பேசிவிட்டான் என்ற வேகத்தில் மின்னொளி மீதான ஆதங்கத்தில் மின்னொளி தன்னிடமும் வீட்டில் யாரிடமும் சரியாக பேசுவதில்லை.
அதிலும் திருமணம் ஆன பின்னர் தன்னிடம் பேசுவதே இல்லை என்று சொல்லிவிட அருளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“இவளுக்குத்தேன் நீயி பண்ணையம் பாக்க அந்த மனுசென கெட்டிக்கிட்டு வந்தியாக்கும்? இவ மூஞ்சிய திருப்புதாளா? ஒன்னிய கெட்டுனதுல என்ன கொறஞ்சு போச்சாம் அவளுக்கு?…” என்று ஏகத்துக்கும் கத்த அதனை கேட்டு வெளியே வந்த மின்னொளி அவனை முறைத்து பார்த்தாள்.
“நீயி சொன்னதும் செரின்னு கேட்டுக்கிட்டு இதேன் சாக்குன்னு ஒந்தலையில அம்புட்டு சொமையைவு ஏத்திவிட்டு அந்த மவராசி போயி சேந்துட்டா. இப்ப இவ பங்குக்கு ஒன்னிய ஒதுக்குதாளாக்கும்?…” என்று எள்ளலாய் அருள் சொல்லவும் மின்னொளி அதற்கு மேல் வாயை மூடிக்கொண்டு இருப்பது உசிதமில்லை என்று ஆரம்பித்தாள்.
“வந்தமா வந்த சோலிய பாத்தமான்னு இருக்கனு. ரொம்ப பேசாம வாப்பெட்டிய சாத்திட்டு கெளம்புத வழிய பாரு. இது எவ்வீடு, பாத்துக்கிடு…” என அவனை விட எள்ளலாய் பேசிவிட்டு செல்ல,
“பாத்தியா பாத்து பாத்து வளத்த நம்மளவே என்ன பேச்சு பேசுதான்னு. இதுக்குத்தேன் ரெண்டாந்தாரமானியோ? ஒன்னியவே தூக்கி வீசிப்புடுவா…” என்றவனை முறைத்த ராஜாத்தி,
“நீயி கம்மின்னு இருந்தா அவ யே ஒன்னிய பேசுதா? நீயி பேசின, அவளு பேசினா. இன்னொருக்க அவள பேசின பாத்துக்கிடு….” என்று எச்சரிக்க,
“நீயி திருந்தமாட்ட, அவ புத்திய காட்டிட்டா பாத்தியா? வெசமா வளந்து நிக்கிதா…” என்று ராஜாத்தியை திட்டிவிட்டு அருள் சென்றுவிட்டான்.
அதன் பின்னர் பார்க்கும் நேரமெல்லாம் முட்டிக்கொண்டது இருவருக்கும். தன் வீடு வெளியே செல் என்பதை போல சொல்லிவிட்டாளே என அருளும், தன் தாய் சுமையை வேண்டுமென்றே ஏற்றிவிட்டதை போல பேசிவிட்டான் என்ற கோபம் மின்னொளிக்கும்.
அவனும் வார்த்தையை விட அவளும் அவனுக்கு மேல் பேச ஆரம்பித்தாள். பேச்சுக்கள் என்பதே இல்லாமல் இருந்தவள் இப்படி சண்டையிடவாவது வாயை திறந்தாள்.
வீட்டில் தான் ஒருவரிடத்திலும் பேசமாட்டாள். ஆனால் வெளியில் யாரேனும் வம்பிழுத்தாலோ கிண்டலாக பேசினாலோ உண்டில்லை என்று பார்த்துவிட்டுத்தான் மறுவேலை.
தனக்கான வேலைகள் அனைத்தையும் தானே செய்ய ஏற்கனவே பழகி இருந்ததால் பக்கத்து டவுனிற்கு செல்வதற்கு கூட யாரின் உதவியையும் நாடமாட்டாள்.
முதலில் பயந்து மறுத்த முருகய்யனும் ராஜாத்தியும் அவள் செய்த செயலால் தானாகவே விட்டுவிட்டனர்.
மூன்று நாட்கள் போல மின்னொளி தன் தாயின் அறையிலேயே தங்கிக்கொண்டு வெளியில் கூட வராமல் இருக்க,
“எத்தே அவள போயிட்டு வர சொல்லுங்க, தனியா அனுப்ப பயந்துதேன் வேணாமின்னோம். அதுக்கின்னு மொத்தத்துக்கே வராம இருந்தா சுருக்குன்னு குத்துது. பாத்து சூதானமா போய்ட்டு வரட்டும்…” என்றதும் தான் அவள் வெளியே வந்தாள்.
“என்ன இடும்புடி ஒனக்கு? அவ ஒ நல்லதுக்கித்தேனே சொல்லுதா?…” என அழகுப்பாட்டி திட்ட,
“வீட்டுக்குள்ளாற இருந்தா கூடத்தேன் பாதுகாப்பு. அதுக்காங்காட்டி வெளியில போவாம இருந்தா செரியா?…”
“ஒங்கிட்ட பேச முடியுமாத்தா?…”
“அட என்ன கெழவி, வெளில போனாலு தப்பு, போவலன்னாலு தப்பு. என்ன செய்ய சொல்லுத?…” என சலிப்பதை போல சொல்ல,
“செரித்தேன், கெளம்புத்தா…” என்றுவிட்டார் அழகுப்பாட்டி.
இப்படி எந்த கேள்வி கேட்டாலும் அழகுப்பாட்டியை முன்னிறுத்தியே மின்னொளி பதில் சொல்ல ராஜாத்தியும், முருகய்யனும் அவளை எப்படி அணுகுவதென்றே தெரியாமல் முழித்தனர்.
அதன் பின்னர் முதலில் அவள் சென்று வரும் வரை ஒருவித படபடப்புடன் இருப்பவர்கள் அதன் பின்னர் அந்த கவலையும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது.
முருகய்யனுக்கு மகளின் விலகலுக்கு காரணம் இந்த திருமணம் தான் என்ற குற்றவுணர்வு இருந்துகொண்டே தான் இருந்தது.
அவளிடம் சாதாரணமாக கூட நெருங்க முடியாமல் பேச முடியாமல் இருக்க கடைசியில் அதுவே நிரந்தரமாகிப்போனது.
இதை எல்லாம் புரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க பழகிக்கொண்டாள் மின்னொளி.
பதினாறு வயது ஆகியும் அவள் பூபெய்தாமல் இருக்க ஊருக்குள் ஆயிரம் பேச்சுக்கள் ஏளனமாக சுற்ற அதையும் காதுகொடுத்து கேட்டலும் நேரடியாக பேசுபவரிடம் முகத்தை காண்பித்து விலகிவிடுவாள்.
அதே நேரம் முதுகுக்கு பின் பேசினால் இவ்வளவு தான் உன் தைரியம், செய்துகொள் என்று இருந்துகொள்வாள்.
எப்பொழுது என்ன நினைக்கிறாள் என்றே கணிக்கமுடியாத ஒருத்தியாக வலம் வர அழகுப்பாட்டியே இப்படி இருக்கிறாளே என கவலை கொண்டார்.
என்னதான் தந்தையுடன் பேசவில்லை என்றாலும் அவரின் வேலைப்பளுவை மட்டுமல்ல அவரின் சுமைகளை பாதியாக குறைத்து தான் சுமக்க ஆரம்பித்தாள்.
சில நேரங்களில் தாயின் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிகொள்வாள். யாரும் அங்கே நுழைவதை அவள் விரும்பவே இல்லை.
அது தனக்கும் தன் தாயிற்குமான தனி உலகமாக அவளே வரித்துக்கொண்ட தனிமை. அதை விரும்பியே ஏற்றாள்.
“ஒனக்கு அப்பாரு தான புடிக்குது அம்மோவ். அதேன் அந்த மனுசென் கலங்குனா கூட ஒனக்கு பொறுக்கமாட்டிக்கி. கொடுத்து வெச்ச மனுசென். இந்த வயசுலயும் அவர தாங்க பொண்டாட்டி, பாத்துக்க புள்ள, அம்மான்னு எல்லா வாய்க்கப்பட்டிருக்காரு. நல்ல ராசில பொறந்த மனுசென்…”
“என்னிய பாரு, பாதி வயசுல ஒன்னிய தொலச்சேன், ஒம்மனசு நோவ கூடாதுன்னு அப்பன தள்ளி வெச்சேன். இனி ஆரு இருக்கா? இதுக்குத்தேன் தனியா இருந்தாலு தன்னம்பிக்க வேணும்னியா. போம்மோவ்…” என நேரில் பேசுவதை போல பேசி பேசி தன் தனிமையை தாயுடன் தணித்துக்கொள்வாள்.
மின்னொளி விலகி விலகி சென்றாலும் ராஜாத்தி அவளை இழுத்துப்பிடிப்பதே வேலையாய் வைத்திருந்தார்.
ஆனாலும் மின்னொளியை அவரின் கைப்பிடிக்குள் கொண்டு வரத்தான் முடியவில்லை. அதற்கு பதிலாக முருகய்யன் ராஜாத்தியின் அன்பில் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நாளும் வந்தது. அது இளவரசன் பிறந்த அன்று.
முன்பே அவரின் மீது அன்புதான். தன்னை திருமணம் செய்ய பிடிவாதமாய் இருந்து காரியத்தை சாதித்துக்கொண்டதாக நினைத்து கோபமுடன் இருந்தவர் அதன் பின்னர் ராஜாத்தியின் பொறுமையில் மனது அவரின் பால் சென்றது.
வளைகாப்பு முடிந்து தன் வீட்டிற்கு சென்ற ராஜாத்தி மூன்று நாட்களுக்கு மேல் தங்கவில்லை. அதில் காசியாத்தாவுக்கு வருத்தம் என்றால் அருளுக்கு பயங்கர கோபம்.
“ஒன்னிய வெச்சு பாத்துக்க கூட வக்கில்லன்னு நெனைக்கிதியா?…”என்று பேசியவன் அத்தனை வருடங்களுக்கு பின் மீண்டும் தன் அக்காவிற்காக முருகய்யனிடம் சண்டைக்கு பாய்ந்தான்.
“இங்காரு மாப்ள, அவதேன் இருக்கமாட்டேனுதா. நா என்னத்தய்யா சொல்ல?…” என முருகய்யன் பரிதாபமாய் சொல்ல,
“ஒம்மக்கிட்ட போயி பேச வந்தே பாருங்க…” என்று முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டான்.
“லே சோதி வயசு பொண்ணுலே மின்னலு, எப்பவேணா சமையலாமின்னு இருக்குதா. அங்க வீட்டுல பொம்பள இருக்கவேணாமா?…” என சொல்ல அதுவே இன்னமும் அவளின் மேல் கோபத்தை ஏற்றியது.
பின் அரைமனதாக கொண்டுவந்து விட்டுவிட்டு சென்றவன் எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிடு என சொல்லி சென்றான்.