மாதமாதம் வழக்கமாக செல்லும் பரிசோதனைக்கு செல்ல அங்கே மருத்துவமனையில் மின்னொளிக்கு அதிகளவு அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக சொல்லி அவளின் மனதை பாதிப்பதை போல நடக்க வேண்டாம் என்றும் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் சொல்லி அனுப்ப இன்னும் கவனமாக கவனிக்க ஆரம்பித்தார் காசியாத்தா. அருள் பார்த்து பார்த்து அவளை தாங்கினான்.
ஒன்பதாம் மாதமும் வந்துவிட அருளுக்காய் மனது கேட்காமல் அன்று மாலை வீட்டிற்கு வரும் நேரம் வளையல்கள் நிறைய வாங்கி வந்திருந்தான்.
“என்னய்யா இதெல்லா?…” என கேட்டாலும் மின்னொளியின் கண்கள் அதனை ஆசையுடன் தழுவியது.
“ஒனக்குத்தான் புள்ள. நீதேன் எதுவு வேணாங்குதியே. அதேன். இத்த போட்டுப்பாக்கனுமின்னு தோணுச்சி. வாங்கியாந்தேன். போடுவ தான?…” என மறுத்துவிடுவாளோ என்று நினைத்து கேட்க,
“ஒனக்கு ஆசன்னா எல்லாறையு கூப்புட்டு கூட செய்யி மாமா. நா வேணாங்கல…” என அவனுக்காக சொல்ல,
“இந்தா ஆருக்காகவு நீயி செய்ய சொல்ல வேணா? நீயே நெனச்சதுதேன். இப்ப நானு நெனைக்க ஆரம்பிச்சுட்டே. இப்ப புள்ளைக்கி இந்த சத்தங்கேட்டா நல்லதுன்னாக. மாசமாருக்க பொண்ணுக்கு மனசு லேசாவுமின்னும் சொன்னாக. அதேன் வாங்கியாந்தேன். நீயி இரு. நா போயி குளிச்சுட்டு வாரேன்…” என்றவன் சொல்லி செல்ல,
“மின்னு…” என வந்தார் காசியாத்தா.
“ஆத்தா…” என இடுப்பை பிடித்துக்கொண்டு அவள் மெதுவாய் எழுந்து நின்றாள்.
“வவுரு நல்லாத்தேன் மலர்ந்துருச்சுத்தா. நாளைக்கே புள்ள பொறந்துருங்காட்டி. செத்த சூதானமா இருக்கனும்…” என சொல்லவுமே மின்னொளி காசியாத்தாவை பார்க்க,
“நெசமாலுமே பயத்துக்கு சொல்லலத்தா. இத்தன மாசாத்த விட இப்பத்தேன் கவனமா இருக்கனுமின்னு சொன்னே. இது எல்லாருக்கு சொல்லுததுதேன்….” என அவள் பயந்துவிடுவாளோ என நினைத்து அவர் பதற மென்மையாய் புன்னகைத்தாள் மின்னொளி.
“அதெல்ல இல்லைத்தா. நீயி சொல்லு…” என கேட்க,
“தண்ணி சுட வெச்சிட்டேன். வந்தியனா இடுப்புக்கு ஊத்திவிடுவேன்….” என்றவர் கட்டிலில் இருந்த கண்ணாடி வளையல்களை பார்க்க,
“அது மாமேன் வாங்கிட்டு வந்துச்சுத்தா…” என மின்னொளி அவரின் பார்வையை கண்டு சொல்ல,
“போட்டுட்டியா மின்னு?…” என்றார். இல்லை என அவள் தலையசைக்கவும்,
“செத்த இரு, போடாத…” என்றவர் வேகமாய் செல்ல அவரின் பின்னே அவளும் வந்தாள்.
“என்ன கெழவிய தொடுத்துட்டு போவற?…” என அருள் வரவும் விஷயத்தை சொல்லியவளுடன் அருளும் சென்றான்.
“என்ன கெழவி செய்யுத?…” என கேட்க,
“லே சோதி பின்னால அடுப்புல வெந்நீ காயுது. தண்ணிய கலக்காம அத்த வலையில(பானையில்) ஊத்திக்க. மின்னுக்கு வெளக்கெண்ணய வவுத்துல, இடுப்புல தடவிவிட்டு பொறுக்க பொறுக்க ஊத்திவிடு. மேலுக்கு ஊத்தாத. இடுப்புல இருந்து மட்டு ஊத்தி கூட்டிட்டு வா…” என சொல்ல,
“ஏத்தா நீதான செய்யிவ…”
“இன்னிக்கு நீயி செய்யிலே. போ. பொழுது சாயமின்ன ஊத்து. இல்ல சளி கெட்டிக்கும். வெறு பானைய அதுல போடாத தண்ணி ஊத்தி போடு. ராவுக்கு காலுக்கு ஒத்தனங்குடுக்க ஆவும். வெறக வெளியில எடுத்து அமத்து. அப்பத்தேன் கங்குலயே கெடக்கும்…” என அவர்களை விரட்டிவிட்டு அடுப்பில் வேலையை அவசர அவசரமாக பார்த்தார் காசியாத்தா.
குளியலறைக்கு வந்தவன் எப்படி தேய்க்க என்று எண்ணெய் கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நிற்க,
“நாளைக்கி முடிப்பியா?…” என கேட்டு கிண்டல் செய்தாள் மின்னொளி. அவளை முறைத்தவன்,
“இரு போயி தண்ணிய தூக்கிட்டு வாரேன்…” என எண்ணெய் கிண்ணத்தை அங்கே வைத்தவன் மீண்டும் வரும் நேரம் புடவையை களைந்துவிட்டு உள் பாவாடையை வயிற்றுக்கு கீழே நன்றாக இறக்கி விட்டு நின்றாள் மின்னொளி.
முடியை தூக்கி கொண்டையிட்டு இடுப்பில் கைவைத்தபடி அவள் நின்ற கோலம் கணவனாய் அவனின் உணர்வுகளை உசுப்பேற்ற,
“காலநேரமில்லாம இந்த ஆத்தா என்னிய சோதிக்கிது…” என வாய்விட்டு புலம்ப அவனின் கையில் எண்ணெய் கிண்ணத்தை எடுத்து கொடுத்தாள்.
எண்ணையை வயிறு முழுவதும் தடவியவன் அந்த வெளிச்சத்தில் தன் குழந்தையின் பாதங்கள் நன்றாக தெரிய இவனின் கைகள் செல்லும் திசையெல்லாம் குழந்தையின் கால்களும் கைகளும் ஊர்வலம் போய் அவனின் கைகளுக்கு முத்தம் வைத்தது.
இவனும் உணர்ச்சிக்குவியலாய் மாறிப்போனான் அந்த ஸ்பரிசத்தில். குழந்தையுடன் குழந்தையாக மாறி இவனும் விளையாட வயிற்றுக்குள் இருந்த பிள்ளையோ கொண்டாட்டத்தில் தாயின் வயிற்றை எட்டி உதைக்க மின்னொளி சிணுங்கினாள்.
“யோவ் போதுமய்யா. தண்ணி இந்த சூட்டோடதேன் ஊத்தனுமின்னு ஆத்தா சொல்லும். இல்லனா சளி கெட்டிக்குமா…” என சிரிப்புடன் சொல்ல,
“இருடி, புள்ளைய பாத்தியா யே கையி தெரியுது அதுக்கு. அதேன் குதியாட்டம் போடுது பாரு…” என உருகிப்போய் சொல்ல,
“அப்ப நானு இங்கனவே இப்பிடியே நிக்கவா?…” என அவள் முறைக்கவும் தான் ஐயோ என நினைத்தவன்,
“இந்தா ஊத்துதேன்த்தா…” என தண்ணீரை அள்ளி அவளின் இடுப்பில் ஊற்ற முதலில் சுட்டது ஊற்ற ஊற்ற உடலில் களைப்பு எல்லாம் கரைந்தது போல இதமாய் இலகுவாக இருந்தது.
“சொடக்கு எடுத்தாங்காட்டி இருக்குது. அந்த மஞ்சள எடுத்து இடுப்புல பூசு. அப்பத்தேன் அந்த எண்ண வாட போவும்…” என ஆசுவாசமாய் சொல்ல அவள் சொல்லியதை போல செய்தவன் முடித்துவிட்டு துடைக்க துவாலையை நீட்டியவன்,
“கீழ எண்ணையா கெடக்குடி. மாத்திருவியா?…” என்றதற்கு,
“நா என்ன இன்னிக்குத்தேன் புதுசா ஊத்துதேனா? அட போயா…” என அவனை விரட்டிவிட்டு மெதுவாய் உடை மாற்றி வெளியே வந்தாள்.
அங்கே மின்னொளி அறையில் தட்டில் மூன்றுவகையான சாதமும், பாயாசமும் இன்னொரு தட்டில் பூவும், பழமும் இருக்க இன்னொன்றில் அருள் வாங்கி வந்த வளையல்கள் அதனுடன் சந்தனம், குங்குமம்.
குளிக்க சென்ற நேரத்தில் காசியாத்தா செய்த ஏற்பாடு இது என புரிந்து கொண்டவள் அவரை கட்டிக்கொள்ள,
“எல்லாருக்கு இந்த ஆச இருக்கத்தேன் செய்யும்த்தா. நீ என்னத்தையோ நெனச்சு வேணாங்குத. ஆனாலு இத்த செஞ்சா மனசுக்கு நெறவா இருக்கும்ல. அதேன். ஒனக்கொன்னும் சடவில்லையே…” என கேட்க சந்தோஷத்தில் கண்ணீர் வந்துவிட்டது.
“ஆரு வர வேணா, நாமலே செய்யுவோம். அம்புட்டுத்தேன். நல்லநாளு என்னத்துக்கு பாக்க? எல்லா நாளு நல்ல நாளுதேன்…” என்றவர் அவளை அமர வைத்து அருளை சந்தனம் பூச சொல்ல,
“ஆத்தா எனக்கு நீயி மொத வெய்யேன்…” என காசியாத்தாவை தன் தாய் ஸ்தானத்தில் கொண்டு வந்தாள் மின்னொளி.
அதை விட என்ன வேண்டும் காசியாத்தாவிற்கும் அருளுக்கும். மகிழ்ச்சியுடன் நிறைந்த மனதுடன் அவர் முதலில் செய்ய அதன் பின் அருள் வளையலை வரிசையாக அடுக்கினான்.
அந்த சிறிய குடும்பத்தில் அந்த நிகழ்வு ஆராவாரமின்றி அழகான அந்த தருணம் அர்த்தமுள்ளதாய் ஆனது.
கை நிறைய வளையல்கள் அருளிடம் காட்டி காட்டி குதூகலித்தாள் மின்னொளி. அவளின் அந்த புன்னகைக்காகவே எதையும் செய்யலாம் என பார்த்து பார்த்து ரசித்தான் அருள்ஜோதி.
பிரசவத்திற்கு என்று கொடுத்த நாட்களில் இன்னும் இருபது நாளே எஞ்சி இருக்க மீண்டும் அன்று வளைகாப்பை நடத்துவதை பற்றி கேட்க ராஜாத்தி அழகுப்பாட்டியையும் முருகய்யனையும் கூட்டிக்கொண்டு வந்தவர் கணேசனையும் அழைத்துவிட்டார் பஞ்சாயத்திற்கு.
அவர்கள் வரும் நேரம் காலை உணவை முடித்துவிட்டு மின்னொளி அசதியில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்க காட்டிற்கு சென்றிருந்த அருள் அடித்துப்பிடித்து வீட்டிற்கு வந்துவிட்டான் இவர்களின் வரவை அறிந்து.
கணேசன் தான் சொல்லியிருந்தான், ராஜாத்தி பேசுவதற்காக வருவதாய் சொல்லி தன்னை அழைத்திருப்பதை பற்றி.
ஏற்கனவே மின்னொளியின் மன அழுத்தம் அறிந்திருந்தவன் இப்பொழுது வந்து உரிமை அது இதுவென தன் அக்கா பேசும் முன்னர் தடுக்கவேண்டும். பிரச்சனை ஆகாமல் பார்க்க வேண்டும் என ஓடி வந்திருந்தான்.
இவர்கள் வருவதற்கு முன் வந்தவன் காசியாத்தாவிடம் விஷயத்தை சொல்ல அவருக்கு என்ன சொல்லி சமாளிக்க என யோசனை ஆனது. கணேசனும் வந்துவிட,
“மின்னு எங்க சின்னம்மா?…” என்றான்.
“அவ ஒறங்குதாய்யா. ராசு வந்து என்ன பேசுவாளோ?…” என காசியாத்தா பதற,
“ஏத்தா ராசு நெனைக்கிதது செரித்தேன். மொறையா செய்யனும். அதுவு ஊர கூட்டி செய்யனுமின்னு நெனைக்கிததுல என்ன தப்பு?…” என கணேசனும் கேட்க அவனுக்கு சொல்லி புரிய வைக்கும் முன்னர் ராஜாத்தி வந்துவிட்டார் குடும்பத்துடன்.
அவர்களை அமரவைத்து பேசிக்கொண்டிருக்க யாரும் அறியாமல் இளவரசன் சென்று மின்னொளியை எழுப்பிவிட்டான். மெதுவாய் எழுந்து அவள் வெளியே வர ராஜாத்தியும் அப்போது தான் பேச்சை ஆரம்பித்தார்.
“ஆத்தா, ஆவாதபோவாதத பேசாத. வெசயத்த பேசுவம். என்னதேன் நெனைக்குதீய? மாசமே முடிய போவுது. இன்னு நாலு நாளுல ஒரு நல்ல நாளு இருக்குன்னு பாத்துருக்கு. செரின்னு சொல்லுததுக்குத்தான?…” என கேட்ட ராஜாத்தி அப்பொழுதுதான் மின்னொளி கையில் இருந்த வளையல்களை பார்த்தார்.
“ஆத்தே அப்ப நீகளே பூட்டிட்டீகளா?…” என நெஞ்சில் கை வைத்தபடி அவர் எழுந்து நிற்க முருகய்யனும், அழகுப்பாட்டியும் கூட அப்பொழுதுதான் பார்த்தனர்.
கை நிறைய வளையலுடன் உறங்கி எழுந்த களைப்புடன் முகம் சோர்வாய் இருந்தாலும் பார்க்க தெவிட்டவில்லை மின்னொளியின் சுடர்விடும் அழகு.
“நா என்ன சொல்லுதேன். நீங்க இப்பிடி பாக்குதீக. பாருங்க அவுகளே வளையல போட்டுட்டாக. அப்ப நாம என்னத்துக்கு?…” என்ற ராஜாத்தி கோபத்தில் யோசிக்காமல் வார்த்தையை விட்டார்.
“அம்மா இல்லாத புள்ளைய நட்டாத்துல விட்டுட்டாகன்னு பேசத்தேன் இப்பிடி பண்ணுனீகளா?…” என கேட்டுவிட அனைவருமே ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டனர்.
அருள் மின்னொளியை பார்க்க காசியாத்தாவிற்கு கோபம் வந்துவிட்டது. அழகுப்பாட்டியே இதை எதிர்பார்க்கவில்லை ராஜாத்தியிடம். முருகய்யன் கண்கள் கலங்கிவிட,
“ராசு கம்மின்னு இருக்கமாட்டியா? என்னடி பேசுத?…” என காசியாத்தா அடக்க,
“எல்லாருக்கு நா அம்மா இல்லாத புள்ளன்னு இன்னிக்கிதேன் தெரியுதோ?…” என்றாள் மின்னொளி சீற்றத்தை அடக்கிய குரலில்.