கடல் – 29
“மின்னு என்ன பேசுத? ஒன்னிய நாங்க கவனிக்கலங்குதியா?…” என ராஜாத்தி ஆரம்பிக்க,
“எக்கா இப்ப என்னத்துக்கு ஊர கூட்டுத? கம்மின்னு இரேன். நீ எரயுததுல என்னவோன்னு எல்லாரு வந்துற போறாக. வீட்டு வெவகாரம் தெருவுக்கு போயிரும்…” என கடினமான குரலில் அருள் சத்தம் போட்டுவிட மடமடவென கண்ணீர் இறங்கிவிட்டது ராஜாத்திக்கு.
“லே சோதி, நீயா பேசுத? பேசுலே பேசு. ஒம்பொஞ்சாதி அவள நாங்க கெவனிக்கலன்னு சொல்லுதா. அத்த கேட்டுக்குடுக்க ஒனக்கு ஒரைக்கல. என்னிய சாடுத…”
“ராசு செத்த கம்மின்னு இருத்தா. புள்ள என்னவோ மருவுது. பேசாம இரு…” என முருகய்யனும் சொல்ல,
“என்னியவே எல்லாரு அடக்குதீயலே. அவ பேசுததுக்கு என்னன்னு கேக்க ஒருத்தருக்காச்சும் தெகிரியமிருக்கா?…” என ராஜாத்தி பேச,
“என்ன கேக்கனுங்குதீய? சொல்லுங்க…” என நேரடியாக மின்னொளி ராஜாத்தியின் அருகே வந்தாள்.
அவளின் உடல்மொழியில் ஏதோ அசாதாரண அசைவு தெரிய அருளுக்கு திக்கென்று ஆனது.
“இப்ப எதுக்குடி இம்புட்டு வேவமா நடக்குதவ? மூச்சு வாங்காத. கம்மின்னு உள்ள போ…” என அவளை துரத்த பார்க்க அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள்,
“நா பேசிக்கிடுதேன். நீங்க செத்த கம்மின்னு இரும்…” என அவனை அடக்கியவள்,
“கேளுங்க…” என ராஜாத்தியை பார்த்து நிக்க,
“வேணா ராசு, அவளுக்குத்தேன் புடிக்கலன்னு சொல்லுதாள. விட்டேன்டி. திரும்ப பேசி வெவகாரம் வேணாம்டி…” என காசியாத்தா எச்சரிக்கை செய்ய,
“என்னத்த பேச வேணாங்குத? இவளுக்காவ நானு என்ன பாடுபட்டுக்கிட்டு வாரேன். இவ என்னடான்னா மனுசியா கூட மதிக்கமாட்டேன்னு இருக்கா. செரி சின்னப்புள்ள, நாமதேன் விட்டுக்குடுத்து போவமின்னு பொறுத்து பொருத்து போனா இவ தலமேல நிக்குதா. இப்ப என்னத்துக்கு வளகாப்பு வேணாமா?…”
“வேணாமின்னா வேணாந்தேன். யே எதுக்குன்னு கேக்காதீங்க. ஒங்கள நா மதிக்காம அப்பிடி என்ன பண்ணிட்டனாம்? சொல்லுங்க?…”
“சொல்லுவேன்டி, யே சொல்லமாட்டாம? எல்லாஞ்சொல்லுதேன். எனக்கு தேவதேன். ஒனக்காக நா வந்தே பாரு. என்னிய நீ இதுக்கு மேலவும் பேசுவ. வேற எவளாச்சு சின்னாத்தாவா வந்தா ஒன்னிய ஒழுங்கா பாத்துக்கிட மாட்டான்னு நா வந்தேனில்ல. நீ பேசுவ…” என்றதும் மின்னொளி நிதானம் இழக்க ஆரம்பித்தாள்.
“யக்கா போது. இத்தோட நிப்பாட்டு. அவ வேணாங்குதால. நிறுத்திக்க. இப்ப என்ன வளகாப்பு வேணா. அம்புட்டுத்தேன். இத்தோட விடு. இனி இத்த பேச ஒண்ணுமில்ல…” என அருள் சத்தம் போட,
“சோதி நா அவக்கிட்ட பேசிக்கிடுதேன். நானு பொறுத்து பொறுத்துதேன் பாத்துக்கிட்டேன். ஆனா இவ என்னடான்னா. அம்மா இல்லாத புள்ள. நாமதேன் அனுசரனையா போவனும்னின்னு பாவமேன்னு நெனச்சா?…”
“என்ன சொன்னீக? எனக்காவ வந்தீயளா? நானா வர சொன்னே? என்னிய பாவம் பாக்குத அளவுக்கு நா அப்பிடி என்ன கீழ போயிட்டேனாம்? நானா வளந்தேன். நானா நின்னேன். நானா எவ்வேலைய பாத்தேன். இதுல நீங்க என்ன வந்தீங்க?…” என மின்னொளி கேட்க,
“மின்னு அவதேன் கோட்டி புடிச்சதாட்டம் கேக்குதான்னா நீயுமா புள்ள. விடுத்தா. கோமிக்காதத்தா ஒடம்புக்கு ஆவாது…” என அழகுப்பாட்டி மின்னொளியை பிடிக்க அவளுக்கு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.
“ராசு, அவளுக்கு முடியாங்காட்டி நீ எதுவு பேசக்கூடாது. சும்மா கெடக்க மாட்ட. கூட கோட்ட பேசிக்கிட்டே இருக்க. பாரு புள்ளைக்கு மூச்சு வாங்குது…” என முருகய்யனும் திட்டிவிட,
“ஆமா, இங்கன நா பேசுதது ஒருத்தவகளுக்கும் ஆவலை. ஒமக்காவத்தான பேசுதேன். ஒங்க மான, மருவாதிக்குத்தேன் பேசுதேன். இப்ப நீங்க கம்மின்னு இருங்க…” என பேசிய ராஜாத்தி,
“எவ்வாழ்க்கைய பணய வெச்சு இவளுக்காவ நானு…”
“போதும், போதும். இன்னொருவாட்டி எனக்காவன்னு சொன்னீங்க அம்புட்டுத்தேன்….” என காதை பொத்திக்கொண்ட மின்னொளி கத்திய கத்தலில் குணசாலி வந்துவிட்டாள்.
அவளிடம் கணேசன் சொல்லவே இல்லை இப்படி பேச வருகிறார்கள் போகிறேன் என்று. காட்டில் இருப்பான் என நினைத்திருக்க அருளின் வீட்டில் சத்தம் அதிகமாக கேட்க செவ்வந்தி பள்ளிக்கூடம் சென்றிருக்க குணசாலியே வந்துவிட்டாள் வேடிக்கை பார்க்க.
வந்ததும் பிரச்சனை என புரியவும் சத்தமில்லாமல் வந்து நின்றுகொண்டாள் ஒரு ஓரத்தில்.
“என்னத்த இப்ப பேசிட்டீய. ஆனா இத்த பேசாம எங்கப்பார கட்டிக்கிட்டு வந்ததுல இருந்து ஒனக்காக எப்பிடி வந்துட்டேன் பாரு பாருன்னு எனக்கு காமிச்சு குடுத்தே இருந்திய. எனக்கு அம்மாவா வாரதா சொல்லிட்டு உண்மைக்கும் எனக்கு சின்னம்மாவா தான் வந்து நின்னீய. நா ஒனக்காவ இப்பிடி வந்துட்டேன். அதனால நீயி நா சொல்லுத மாரிதேன் இருக்கனுமின்னு இருந்துச்சு ஒங்க நடப்பு எல்லா…”
“இப்பிடி எல்லா பேசிப்போடுவீயன்னுதேன் எங்கம்மா என்னிய அப்பவே ஒருத்தவிய கையவு நீயி பாத்துக்கிட்டு நிக்க கூடாதுன்னு அப்பவே சொல்லிவிட்டுருச்சு போல. இந்தா சொல்லிட்டீயல. நா எங்கப்பார கட்டிக்கிங்கன்னு சொன்னேனா? சொல்லுங்க…”
“ஒளி…” அருள் அவளருகே வந்து கையை பிடிக்க,
“நா பேசுத வரைக்கி ஒருத்தரு பேசக்கூடாது ஆமா…” என அனைவரையும் எச்சரித்தவள்,
“சொல்லுங்க நீங்க. எங்கப்பார கேட்டினாத்தேன் சோறு திம்பேன்னு சொன்னேனா? இல்ல எங்கம்மா ஒங்க கால புடிச்சாகளா? இல்ல எங்கப்பாருதேன் கட்டுனா ஒங்களத்தேன் ஆச்சுன்னு கட்டுனாரா? நீங்களா ஒன்ன நெனச்சு எங்கப்பார புடிவாதமா நின்னு கெட்டிக்கிட்டதுக்கு நாங்க பழியா?…”
“அந்த வீட்டுல ஒன்னிய சுத்தி சுத்தி வந்தேமில்ல நீயி பேசுவடி…” என ராஜாத்தி அவளின் பேச்சில் அழுகையுடன் சொல்ல,
“சொல்லிக்காமிக்கிததுக்கு செய்யாமலே இருக்கலா. என்னத்த எனக்காக செஞ்சீக? நீங்க பண்ணுன ஒன்னோன்னுலையு ஒனக்காக என் வாழ்க்கைய தியாகம் பண்ணுனேன்னு எனக்கு காமிச்சுக்குடுத்துட்டே இருந்தீக. அதத்தேன் நீங்க செஞ்சிய. அத்த மட்டுந்தேன் செஞ்சீய…”
“ஒங்க வாழ்க்கைய வாழுங்கன்னு ந ஒதுங்கித்தென கெடந்தேன். அம்மா செத்தப்ப கூட அணைச்சு ஆறுதலா பேச ஆருமில்லாம அநாதகணக்கா ஒத்தையில நின்னேனில. சொல்லுதீயலே ஒனக்காகதேன் கட்டிக்கிட்டு வந்தேன்னு. அப்ப எங்க போச்சு ஒங்க பாசமெல்லா?…” என கேட்கவும் ராஜாத்தி வாயடைத்து போனார்.
“மின்னு…” அழகுப்பாட்டி அதிர்ச்சியாய் பார்க்க,
“கெழவி மூச். பேசாத…” என வாயில் விரலை வைத்து எச்சரிக்க முருகய்யன் எழுந்து நின்றுவிட்டார்.
“நீயுந்தேன் கெழவி. ஒனக்கு ஒம்மவேன் அழுக முக்கியோ. இவுகளுக்கு புருசென். அப்ப அங்கன நா ஆரு கெழவி? நா ஒம்பேத்தி இல்லியா? எனக்காவன்னு வந்தவக கூட என்னிய பாக்கல. அங்கயே என்னிய தூக்கி வளத்த என்ன பெத்தவரும் பாக்கல, நீயும் பாக்கல. பொறவு நா எப்படி இருப்பேன்?…”
“இனி எனக்காவன்னு ஒருத்தவுகளு ஒத்த வார்த்த பேச கூடாது சொல்லிப்பிட்டேன். சொல்ல சொல்ல வெறியேருது எனக்கு. நா இருக்கேன்னு சொல்லவேண்டிய நேரத்துல ஒத்த மனுசக எங்கூட இல்ல. நாந்தேன வெலகி போனே? யே நீக எம்சனக(என் ஜனங்க) இல்லியா?…” என்றவள் முருகய்யன் அருகே வந்து,
“ஒங்க மவ தான. பெத்தீயல. ஒத்த அற வுட்டு என்னிய பேச வெக்கிததுக்கு என்ன? அப்ப ஒங்களுக்கே உரிம இல்லன்னு மனசுல பதிஞ்சிக்கிடுச்சு இல்ல?…” என கேட்க முருகய்யன் முகத்தை மூடிக்கொண்டு சின்ன பிள்ளை போல அழ,
“ஒன்னிய தேடுனேன் கெழவி. நீயாச்சும் வருவன்னு. மவன பாத்த. மவனோட மவன பாத்த. என்னைய நட்டாத்துல நீயி கூட விட்டுட்ட தெரியுமா? அம்மா இல்லனா ஆராங்காட்டியு அனாதன்னு எனக்கு அம்புட்டுகிடுச்சு. ஊருக்காவ அத்தன பாத்தியே. நா என்ன நெனக்கிதேன்னு பாத்தியா?…”
“எனக்கு நானே தண்ணிய ஊத்திக்கிட்டு உடுப்ப மாத்திக்கிட்டு வந்தா எவ்வீட்டுல என்னிய சாப்புட்டியான்னு கேக்க நாதியத்தவளா ஒத்தையில கெடந்தேன். ஒனக்கு நா எப்பிடி இருக்கேன்னு பாக்க முடியல. ஊருக்காரவுக முன்னாடி நா வந்தா என்னிய பேசுவாகன்னுற. அப்ப எனக்கு பேச ஆருமில்ல…”
“வாரவ போறவலாம் என்னிய பேசலா. கேக்கமாட்டீய ஒருத்தரும். ஆனா நீங்க சொல்லுதப்பலாம் நா மாத்தரம் அந்த ஊருக்கு மின்ன பல்ல காட்டிக்கிட்டு வந்து ஒக்காந்து ஒங்க வம்மவளமைய சொரண அத்துப்போனவளாட்டம் வாங்கிக்கனும். இல்ல…”
“நா தெரியாமத்தேன் கேக்குதேன். எல்லார மாரியும்தேன் நானு கட்டிக்கிட்டு வந்தேன். மாசமானே. ஆனா என்னவோ எனக்கு நடக்காத ஒன்னு நடந்தா மாரி அத்த நானு பத்தரமா பாத்துக்கனுமின்னு அத்தன சொல்லுதீயலே. நீயெல்லா மாசமாவறதே பெருசு. ஒனக்கு கெடைக்காதது கெடச்சிருக்குன்னு ஒவ்வொரு தடவையு யே என்னிய நெனக்கும்படி பேசுதீய?…”
“என்னியவே எனக்கு ஏதோ இருக்குன்னு நெனைக்க வெச்சிருவீக. அப்பிடித்தான? யே நா எல்லா அம்மா ஆவறது அம்புட்டு பெரிய ஒலக அதிசயமோ? இல்ல உனக்கு புள்ள பாக்கியம் கெடச்சதே பெருசு. அதனால நாங்க சொல்லுததத்தேன் கேக்கனுமின்னு சொல்ல வாரியளா?…” என விளாசினாள்.
அவளின் மனதில் இருந்த அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எரிமலையாய் வெடித்து சிதறிக்கொண்டிருந்தது. யார் எவர் என பார்க்கவில்லை. இத்தனை பேசவேண்டும் என்று மின்னொளி நினைக்கவில்லை. ராஜாத்தி பேச வைத்துவிட்டார்.
“ஊருல பேசுவாக, ஊருல கேப்பாக இத்தன சொல்லுதீயலே? அந்த ஊருதேன் என்னிய ஏசுச்சு. அந்த ஊருதேன் என்னிய கலியாணத்துக்கு ஆவாதவன்னு என்காது படவே கேலி பண்ணுச்சு. அந்த ஊருக்காவ நா இந்த சடங்க செய்யனுமோ?…”
“ஊருக்கா நீங்க வாழ்ந்தீங்க? ஊருக்கா பெத்தீங்க? ஊரு சொன்னா கேட்டுக்கிடனு. இனியு அப்டியே இருக்கத்தான? என்னத்துக்கு மறுக்கா மறுக்க ஊருக்கு எனக்கு வளைய பூட்டுதீக? விடுங்கன்னா கேக்கனு. இம்புட்டு நா எல்லாத்தையும் பாத்தீகள? ஊருல வாராக, ஊருல பேசுதாக, ஊருல நெனைக்கிதாக. ஊரு கேட்டா, சொன்னா எல்லாத்தையு செஞ்சிரனும் இல்ல…”
“அப்ப என்னிய என்னத்துக்கு பெத்தீக? எங்கம்மா போனப்பவே என்னிய அத்தோட ஏத்தி எரிச்சுருக்கவேண்டி தான?…” என மூச்சு வாங்க வாங்க அவள் பேச இடுப்போரம் சுருக்கென வலி தைத்தது. அதை எல்லாம் உணர அவளுக்கு எங்கே நேரம்?
“மனசு கொதிக்க கொதிக்க பேசுவாகளாம். அவுகளே வந்து குளிர குளிர சந்தனத்த பூசுனா ஒடனே நானு வாங்கிக்கனும். எல்லாமே மாறிடும். அவுக பேசுனது எல்லாமே அழிஞ்சிரும். இல்ல. நேத்திக்கி எனக்கு சாபம் குடுக்கற மாரி பேசிட்டு இன்னிக்கு அந்த வாயால ஆசி குடுத்தா அப்ப எது நடக்கும்ங்கறீங்க?…”
“போது எனக்கு நடக்க வேண்டிய எதுவு அப்ப நடக்கல. இது நடக்காம போனதால எனக்கு ஒன்னு வெசனமில்ல. எம்புருசனும், எனக்கு அம்மாளுக்கு அம்மாவா யே ஆத்தாவும் எனக்கு செஞ்சிட்டாக. மனசு நெறஞ்சி போச்சு. என்னிய இத்தோட விட்டா போதுங்கறேன்…” என கையெடுத்து கும்பிட்டவள்,
“எம்புள்ளைக்கி அம்மாவா, எம்புருசனோட வாழனுமின்னு நெனைக்கிதேன். இனிமேங்காட்டி இப்பிடி பேசி என்னிய மொத்தமா உருவழிச்சுப்போடாதீய…” என்றவள் பேசிவிட்டு வெளியேறிவிட ஆணியடித்ததை போல அவரவர் நின்ற இடத்தை விடு நகரவே இல்லை.
மின்னொளி பேச பேச குணசாலி கூட கண்கள் கலங்கிவிட்டாள். அமைதியாய் அனைவரும் நிற்க,
“அவ வேணாமின்னா விட்டுப்போடறத விட்டுப்பிட்டு இப்படி அவள பேச வச்சு பாக்குதீய. நெறமாசக்காரிட்ட என்னத்த பேசனுமின்னு கூடவா தெரியாது?…” என்ற குணசாலி,
“போயி அவள சமாதானம் செய்ய பாருங்க. சொவமா புள்ளைய பெத்து வரட்டும்…” என்ற குணசாலியின் பேச்சில் நிமிர்ந்து பார்த்த ராஜாத்தி,
“பாத்தியாத்தா என்ன பேச்சு பேசிட்டான்னு. நா அவளுக்காவ…” என்ற ராஜாத்தியை முடிக்கவிடாத அருள்,
“யக்கா, போதும். இனி ஒத்த வார்த்த அவளுக்காவன்னு பேசுன, பாத்துக்கிடு. உண்மைக்கு அவளுக்காவ நீ எதுவு பண்ணல. அவதேன் ஒனக்காக நெறைய செஞ்சிருக்கா. நீயி ஒங்குடும்பமின்னு நல்லாத்தேன் பொழச்சிருக்க. இல்லன்னு சொல்லிடுவியா நீயி? அத்த மறந்துட்டு பேசினோமின்னா நாமலாம் மனுசகளே இல்ல…” என்ற அருளின் கத்தலில் மிரண்டுபோனார் ராஜாத்தி.