கடல் – 3
ஐந்து வருடங்கள் கழித்து…
“இளா அக்கா தோப்புக்கு போறேன். சொல்லிடு…” என்ற மின்னொளி, ராஜாத்தி நிற்பதை கவனித்து விட்டு தலையை வார,
“நானும் வரேன், கூட்டிப்போத்தா…” என மின்னொளியின் தாவணியை பிடித்து இழுத்தான் நான்கு வயது இளவரசன். முருகய்யன், ராஜாத்தியின் புதல்வன்.
தம்பியின் பாசத்தில் அவனருகே குனிந்தவள் அவனுக்கு தலைக்கு எண்ணை வைத்து சீவிவிட்டபடி,
“அங்கன வேக்காடு தொண்ட வத்திடும் சாமி. நா போயிட்டு மூணு மணிவாக்கில வந்திருவேனாம். நாம ஆத்துக்கு போவோமாம்…” என ஆசை காட்ட குழந்தை கண்களை விரித்தது.
“ஆத்தா நெசமா?…” என கையை விரித்து கேட்க அவனை செல்லம் கொஞ்சியவள்,
“நெசந்தேன். அக்கா பொய் சொல்லுவனா?…” என சொல்லிவிட்டு வேகமாய் அடுக்களைக்குள் சென்றாள்.
குழந்தைக்கு தட்டில் சாதம் போட்டு ரசமும், பருப்பும் வைத்து வந்தவள் அவனை வெளியில் திண்ணையில் அமரவைத்து ஊட்டிவிட்டாள்.
இளவரசனுக்கு தாய்க்கு தாயாகவே மாறிப்போனாள் மின்னொளி. அதை ராஜாத்தியும் தடுக்கவில்லை. முருகய்யனுக்கு இந்தளவிலாவது ஒரு ஒட்டுதலுடன் இருக்கிறாளே தன் பெண் என நினைத்துக்கொண்டார்.
அழகு பாட்டிக்கு தான் மின்னொளி இப்படியே இருந்துவிடுவாளோ என்கிற அச்சம். கோவில்களுக்கு விளக்கேற்று, பரிகாரம் செய், விரதம் இரு” என எத்தனையோ சொல்லிப்பார்த்துவிட்டார்.
பேத்தி இன்னமும் பூப்பெய்தவில்லை என்பது அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. ஊர்க்காரர்கள் யாரும் முகத்திற்கு நேராக சொல்லவில்லை என்றாலும் பேசாமல் இருக்கமாட்டார்கள் என்று நன்றாகவே தெரியும்.
யாராவது அப்படி அக்கறையுடன் பேசினால் கூட பொங்கிவிடுவாள் மின்னொளி. அவளின் வாய்க்கு அஞ்சியே ஒருவரும் அவளிடம் இதுகுறித்து பேசுவதை வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
ராஜாத்தியிடமும், முருகய்யனிடமும் இன்னமும் அதே போல தான் நடந்துகொள்கிறாள். ஒற்றை பார்வையில் அவர்களை தள்ளிவைத்து பார்க்கும் அவளை புரிந்துகொள்ள தான் எவருமில்லை.
இதில் நடந்த ஒரே நன்மை இளவரசன் பிறந்த பின்னர் ராஜாத்தியை நன்றாக பார்த்துக்கொள்கிறார் முருகய்யன். இருவருக்கும் நெருக்கம் அதிகமென்று சொல்லமுடியாவிட்டாலும் முன்பு போல யாரிடமும் சொல்லியோ, இல்லை பயந்து அவரிடம் பேசுவதில்லை ராஜாத்தி.
நேரடியாகவும், உரிமையுடனும் பேசுமளவிற்கு அவர்கள் இருவரின் உறவு முன்னேறி உள்ளது. இதுவும் மின்னொளிக்கு நன்றாகவே தெரியும்.
அழகு பாட்டிக்கு மருமகள் மேல் தீராத அன்பு. இரண்டாவதாக வந்தாலும் மூத்தாரின் மகளை இப்படி தாங்கும் பெண் கிடைப்பது அரிதென்று வருகிறவர், போகிறவரிடமெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்துபோவார்.
ராஜாத்தியின் பிரசவம் வீட்டிலேயே வைத்து பார்க்கப்பட்டது. அதிலும் குழந்தை பிறந்ததும் மின்னொளியின் கையில் குழந்தையை கொடுக்க சொல்லி ராஜாத்தி சொல்ல ஊரார் அனைவருக்குமே வியப்பு.
“இதென்னடியாத்தா அதிசயமா இருக்குது? அவ என்னன்னா மூஞ்சிலையே முழிப்பேனான்னு ஒதுங்கறா?, இவ என்னனா மவ மவன்னு உருகறா?…” என வந்திருந்த பெண்கள் மூக்கின் மேல் விரலை வைத்தனர்.
வாசலில் ஆண்களுடன் நின்றுகொண்டிருந்தான் அருள்ஜோதி. இதனை அரசால் புரசலாய் கேட்டிருந்த அருளுக்கு தான் பற்றிக்கொண்டு வந்தது.
“இவ கையில குடுத்து வாங்கிட்டாலும்?” என கடுப்பானவன் அதனை காண்பிக்க முடியாது முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நின்றான்.
அவனின் கவலைக்கு வேலையே வைக்காமல் மின்னொளி குழந்தையை முருகய்யனின் கையில் கொடுக்க சொல்லிவிட ஆசையாய் வாங்கினார் அவர்.
இதனை பார்த்திருந்த காசியாத்தாவும், ராஜாத்தியும் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்குமே கண்கள் கலங்கியது.
மின்னொளியின் ஒதுக்கத்தின் பின்னர் கிடைத்த தன் குழந்தை. அதிலும் ஆண் வாரிசு. பார்த்தது பார்த்து பூரித்துப்போவார் முருகய்யன். மகளிடம் கிடைக்காத பாசத்தையும் அருகாமையையும் மகனிடம் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.
இன்றும் அதனை மறக்காமல் தன் நெஞ்சப்பெட்டகத்தினுள் பத்திரமாய் வைத்திருந்தார் ராஜாத்தி.
“சாப்ட்டாச்சா? சேட்ட பண்ணாம இருப்பியாம். அக்கா வருவேனாம், என்ன சாமி…” என அவனிடம் சொல்லிவிட்டு கையை கழுவிவிட்டு தனக்கு வைத்துக்கொண்டு சாப்பிட்டு எழுந்தவள் ஒரு தூக்குவாளியில் கட்டிக்கொண்டு கிளம்பினாள்.
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவளின் வாழ்க்கையில் எதுவும் மாறவில்லை. இளவரசனின் வருகையை தவிர.
“என்னக்கா சொல்லாம கெளம்பிட்ட?…” என வேகமாய் வந்தான் பத்துவயது சிறுவன்.
“ஏலே அமுக்குணி, இதுக்கென்ன மைக்செட்டாலே போடுவாக? போறது மாடு மேய்க்க. தாரதம்பட்ட ஒன்னுதேன் கொறச்சலு?…”
“நாம போறதே தாரதம்பட்ட கட்டுனாப்லதேன்…” என்றவனின் தலையில் குட்டியவள்,
“இந்தா இந்த வாளிய புடி…” எனவும் அதை வாங்கியவன் நாசியின் அருகே கொண்டுசென்று வாசம் பிடிக்க,
“ஏலே ஒனக்குஞ்சேத்துதேன் சோறு கட்டினேன்…” என அவனிடம் சொல்லி,
“ஏம்லே பள்ளிக்கூடம் போவ இடும்பு பண்ணுதியாம்? சரசக்கா சொல்லுச்சு. ஒழுங்கா போலே. பொறத்தால மாடுதேன் மேய்க்கோனும். பாத்துக்கிடு…”
“அதெல்லாம் பாத்துக்கிடுவோம்…” என்றவன் பெரியமனிதனை போல அவளுடன் நடக்க இருவருமாய் பேசிக்கொண்டே தோப்புக்கு செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
———————————————————————–
“அன்னோ ஒ மவே இன்னுமா அந்த பயலுவலோட சுத்துதான்?…” என பக்கத்துவீட்டு பெண் கேட்க,
“என்னடி சொல்லுத?…” துவைத்த துணிகளை பிழிந்து கொடியில் உலர்த்திக்கொண்டிருந்தார் அன்னம்.
“நெசமாத்தேன் சொல்லுதேன் அன்னோ, நேத்திக்கு கொட்டாயிக்கு புதுப்படம் வந்திருக்குன்னு புள்ளைக கேட்டுச்சுன்னு இந்த மனுஷன் கூட்டிட்டு போனாரு. வார வழியில மேக்கால கொட்டாரத்துக்கு பக்கத்து சுவத்துல அவனுங்க கூட நின்னுட்டு கூடி பேசிட்டிருந்துச்சு நம்ம ராசு…”
“ஆத்தே, யத்தா நீ நல்லா பாத்தியா? ராவுக்கு உங்கறதுக்குள்ள எம்புள்ள வந்துட்டானேடி?…” என கையில் இருந்த மகனின் சட்டையை அப்படியே போட்டுவிட்டு அப்பெண்ணிடம் வந்து நிற்க பாவமாய் போனது அவளுக்கு.
“சொல்லுதேன்னு கோமிக்காத அன்னோ, பாவம் நீயி. அவனை சூதுவாது தெரியாம வளத்து வச்சிட்ட. கொஞ்சமாச்சும் புத்தி சொல்லி வையி. வயசுப்பையன். அவனுங்க சவகாசத்துல சீரழிஞ்சு போயிடாம…” என்றுவிட்டு சென்றுவிட்டவளை வெறிக்க வெறிக்க பார்த்தபடி நின்றார் அன்னம்.
அன்னம் முருகய்யனின் தூரத்து உறவு. ஆனால் பேச்சுவார்த்தை இல்லாமலே இத்தனை வருடங்களை கடந்துவிட்டார்.
வயல்வரப்பில் ஏற்பட்ட இடத்தகராரில் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் செல்லும் நிலமை ஆகிவிட அன்னத்தால் மறக்கமுடியவில்லை. புகார் கொடுத்ததே அன்னம் என்கிற பொழுது இதில் முருகய்யன் என்ன செய்ய முடியும்?
“தங்கச்சியாச்சே, புருஷன எழந்தவன்னு கொஞ்சமாச்சும் தயவு தாட்சணியம் பாத்துச்சா? தப்பு எம்மேல இருந்தாட்டி என்ன? கையம்புட்டு நெலம்தேன். நெலத்த விட்டுகுடுத்துச்சா? காசு கேட்டா குடுத்திருப்பேனே அதுக்கு…” என இன்றும் கூட மகன் தர்மராஜிடம் புலம்புவார்.
போதாததிற்கு மின்னொளியை கண்டாலே ஆகாது. அவளுமே இவரை கண்டால் வம்பிழுப்பதும் வாய் பேசுவதுமாகவே தான் இருக்க வெறுப்பு தான் அவள் மீது வளர்ந்தது.
அவருக்கே தெரியவில்லை, ஒரு நாள் அவளை கேட்டு தானே அவளின் வீடுதேடி செல்லவிருப்பதை.
கணவன் என்ற உறவும் தவறிவிட ஒற்றை பெண்ணாய் மகனை பொத்தி பொத்தி வளர்க்க அவனோ தாயிற்கு மட்டுமல்லாது எல்லோருக்குமே கொஞ்சம் பயந்த சுபாவமாய் வளர்ந்து நிற்க அன்னத்திற்கு இப்பொழுது தலைவேதனை.
யாரிடமும் அத்தனை இலகுவாய் பழகாதவன் சிறிது சிறிதாய் ஊரில் அவனின் வயது இளைஞர்களிடம் பேச ஆரம்பிக்க அப்படியாவது இயல்பாய் பழகட்டும் என்று அன்னமும் விட்டுவிட அதுவே தவறாகி போனது.
தர்மராஜ் எந்த கெட்டப்பழக்கங்களும் இல்லை என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இவன் பெயரும் அடிபட ஆரம்பித்தது.
அதன் பின்னர் பேசாதே என்றாலும் அப்போதைக்கு சரி என்றுவிட்டு பின் அன்னத்திற்கு தெரியாமல் பேச ஆரம்பித்தான் தர்மராஜ். அவன் ஒதுங்கினாலும் அவனின் கூட்டாளிகள் ஒதுங்கவிடவில்லை.
“இன்னிக்கு வரட்டும், சாத்தற சாத்துல கம்முன்னு வீட்டோட கெடக்கனும்…” என கோபத்துடன் கொண்டையை அள்ளி முடிந்தபடி வேலையை தொடர ஆரம்பித்தார்.
“இவனை என்னன்னு சரிக்கட்ட போறேனோ?” என்னும் கவலை அவரை அரித்தது. மனம் கலங்கினாலும் கொஞ்சம் தைரியமாகவே இருந்தார் அன்னம்.
துணிகளை காயபோட்டுவிட்டு வாசலில் விழுந்துகிடந்த மரத்தின் காய்ந்த இலைகளை கூட்டி ஓரமாய் குவித்து வைத்திருக்க மின்னொளி தங்களின் பசுமாட்டை ஒட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள். உடன் அமுக்குணியும்.
அவளை பார்த்ததும் முகத்தை சுளித்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல திரும்பிய அன்னம் எத்தேர்ச்சையாக திரும்பி பார்க்க சரியாய் அன்னத்தின் வீட்டு வாசலில் நடுமத்தியில் சாணியை போட்டது. அவ்வளவு தான், அன்னம் சிலிர்த்துக்கொண்டு வந்தார்.
“ஏன்டி ஓட்டிட்டு போற மாட்ட ஓரமா நவத்தாம வாச மேல தான் விடுவியோ?…” என்று கத்த அவரை நக்கலாய் பார்த்தவள்,
“அட பாரேன், ஒ வீட்டு வளவுதேன் யே ஆச்சிக்கு வாகாருக்கு போல. அதேன் இங்கன விட்டுருக்கு….” என தாவணியை இழுத்து சொருகினாள் மின்னொளி.
“சொல்லுவடி சொல்லுவ யே சீமாட்டி. இப்பத்தேன் குறுக்கொடிய கூட்டி குமிச்சிருக்கேன். இப்ப வந்து வீதில போடாம…”
“ஏத்த? ஒ வீட்டு மாடு ஓரமா போடுன்னா போடுமாக்கும்? அப்பிடினா அத்த சொல்லிகுடேன். எம்மாட்டுக்கும் சொல்லுவேன்ல…” என கிண்டலாய் பேச,
“ஏட்டி மொத வாப்பெட்டிய மூடு…” என்று பார்வையால் எரித்தார் அன்னம்.
“நெம்பத்தேன். சாணிய எடுத்து பத்தரப்படுத்திக்க அத்தே. நாளைக்கி காலையில கரைச்சு வாசத்தெளிக்க ஆவும்ல…” என தோளில் இடித்துவிட்டு மீண்டும் மாட்டை ஓட்டி செல்ல அன்னத்திற்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
“அடியேய், நா வச்சிருக்கேன்டி பத்து மாடு. ஒங்கிட்டவா நிக்கனும்?…” என்ற அன்னத்தின் குரல் கேட்டாலும் சிரிப்புடன் தலையை சிலுப்பியபடி சிரித்துக்கொண்டே சென்றாள் மின்னொளி.
அவளுக்கு அன்னத்தின் வாயை கிளறி அவரிடம் சண்டையிடுவதென்றால் அப்படி ஒரு உற்சாகம். அதுவும் அவராகவே வந்து வாய் கொடுத்துவிட்டு வாங்கியும் கட்டிக்கொள்வார்.
“என்னக்கா, இன்னிக்கும் தாளிச்சிட்டு போய்ட்டாளா ஒம்மருமவ?…” எதிர்வீட்டு காமாட்சி கேட்டபடி வர,
“எவ, இவ யே மருமவளா? ஆஞ்சுபுடுவேன் பார்த்துக்க, எனக்கு பொடுபொடுன்னு வருது வாய்க்கு. அவக்கிட்ட என்னத்துக்குன்னு கம்முன்னு கெடக்கேன்…” என்றார் ஆற்றமாட்டாமல்.
“அவதேன் உன்னிய பாத்தாலே வம்புக்குன்னு நிப்பா. நீ யே வாய குடுக்கவ?…” என காமாட்சி இலவச அறிவுரை வழங்க அவளையும்,
“ஆமா, நீ பாத்த. போவியா. அவவ சோலி கழுதைய பாத்துட்டு போறதா விட்டுட்டு இங்கனதேன் வந்து குவிவாளுக…” முறைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றார் அன்னம்.
நடந்தது எதுவும் தெரியாத தர்மராஜ் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான். வரும் வழியில் டீக்கடையில்,
“ஏலே மாப்ள, இங்கன வாரும்…” என சைக்கிளில் வந்துகொண்டிருந்த தர்மராஜை சத்தமிட்டு அழைத்த மூர்த்தியிடம் சென்று வண்டியுடன் நின்றான்.
“சொல்லுங்க மாமா…” என அவன் பதமாய் கேட்க அவனை பார்வையால் அளவிட்டார் மூர்த்தி.
நன்றாய் எண்ணை தடவி படிய வாரிய தலையும், நெற்றியில் திருநீறும் பூசி அப்பாவி களையுடன் அவன் நின்றிருந்த விதம் மூர்த்தியை கவர்ந்தது.
“என்னாச்சு மாமா?…” என்றான் மீண்டும்.
“நேத்து சாமத்துல உன்ன கொட்டாரத்துக்கு மேக்கால பாத்தேனே? அந்நேரத்துக்கு ஒமக்கு அங்க என்னைய்யா சோலி?…” என கேட்டதும் அவனின் முகம் மாறிவிட்டது.
“அவிங்க என் சோக்காளிக மாமா…”
“நல்லதனமா தெரியலைல்லியா, அத்தேன் கேட்டேன்…” என்றவரை பார்த்தவனின் முகமாற்றம் அவருக்கு கவலையை விளைவித்தது.
“இங்காரு மாப்ள, அன்னம் ரொம்ப சிரமப்பட்டு உன்ன வளத்திருக்கா. நீபாட்டுக்கு ஆக்கங்கெட்டத்தனமா நடந்து அவள தலகுனியமட்டு பண்ணிப்புடாதப்பா. அம்புட்டுத்தேன் நா சொல்லுவேன். வெளங்குதா?…”
“அந்தமாரிலாம் இல்ல மாமோவ். சும்மா பேசிக்கிட்டுதேன்…”
“அவனுங்க சுத்த கோட்டிக்காரனுவ. என்னத்தையாச்சும் செஞ்சுபுட்டு ஒன்னிய கைய நீட்டி போட்டானுவன்னா என்னாலே பண்ணுவ? சுத்த வெவரங்கெட்டவனா நீ?…” என்றார் சற்று கடுமையாக.
“இல்ல மாமோவ், நா பாத்துகிடுதேன்…”
“செரி செரி, என்னது அது பையில?…” என அவர் கேட்க,
“கறி வாங்கிட்டு போறேன். நேத்தே அம்மா சொல்லுச்சு…”
“வெரசா போ மாப்ள. விடிஞ்சு இம்புட்டு நேரஞ்செண்டு கறி வாங்குனா நல்லதாவா இருக்கும்?…”
“இல்ல மாமா, சொல்லித்தேன் வெச்சிருந்தேன்…”
“செரி, செரி, பாத்து சூதானமா இருந்துக்கப்பே. அதுதேன் வேணும். ஏற்கனவே அன்னத்த மின்னு சீண்டிட்டு போய்ட்டா. காத்தலையே ஒரே கரைச்சல். உன்னட்டதேன் புலம்பும். பாத்துக்க…” என்று நகர்ந்துவிட ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் தர்மராஜ்.
வீட்டிற்குள் நுழையும் பொழுதே அன்னம் கோபத்துடன் சட்டி பானைகளை உருட்டிக்கொண்டிருந்தார். தர்மராஜின் உடல் லேசாய் நடுங்கியது.
மூர்த்திக்கே தெரிந்திருகிறது, அம்மாவுக்கு தெரியாமலா இருக்கும் என பயத்துடன் தான் உள்ளே வந்தான்.
“அம்மோவ், கறி…” என நீட்ட அவனை முறைத்தவர்,
“ராத்திரி இங்கனதேன்ல நீ மொடக்கின. நா பாத்துட்டுதேன் லைட்ட அமத்திட்டு கொண்டிய மாட்டிட்டு போனேன். அதுக்கு பொறவு எங்கலே போன?…” என கோபமாக ஆரம்பிக்கவுமே பயந்துபோனான்.
“இல்லம்மோவ், இல்லம்மோவ்…” என பின்னாலேயே செல்ல அன்னத்திற்கு கண்கள் கலங்கி போனது.
“அய்யா ராசா இங்கன வாயா…” என கீழே தரையில் அமர்ந்தவர் அவனின் கை நீட்டி அழைக்க மறுக்காமல் அருகே சென்றவனின் தலையை கோதியவர்,
“அம்மா சொல்லுதேன்ல கேளுயா. அவிங்க மோசமானவனுங்க. ஒ நல்லதுக்குத்தேன் சொல்லுதேன். புரியுதாப்பு… என்றவர் குரலில் தெரிந்த அப்பட்டமான பரிதவிப்பில் தடுமாறினான் தர்மராஜ்.
அவனுக்கும் தெரியும் அவனின் தோழமைகளின் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களும், பேச்சுக்களும். ஆனாலும் அவர்களை விட்டுகொடுக்க முடியாமலும், அவர்களிடம் ஏன் செய்கிறாய், கூடாது என்று சொல்ல தைரியமற்றவனாகவும் இருந்தான்.
“அம்மா சொல்லிட்டே இருக்குதேன். நீ வெறிச்சிட்டு இருக்க? செரின்னு ஒத்த வாத்த உதுக்கறியா? இம்புட்டுத்தானா நா ஒனக்கு?…”
“ஐயோ இல்லம்மோவ், நாஞ்சொல்லுதத கேளு. அவிங்க பாக்கத்தேன்…” என சமாளிப்பாய் சொல்லும் முன்னமே அன்னம் முறைக்க,
“செரிம்மா, கேக்குதேன். மொத்தமா அத்துவிட முடியாதுல. கொறச்சுக்குதேன். செரித்தான?…” என்றதுமே மனம் கனிந்தவர்,
“ஏம்லே ஒனக்கு கறி வாங்கியாற இம்பிட்டு நேரமாலே?…”
“மதியத்துக்குத்தேன? அதேன் பைய வாங்கியாந்தேன்…”
“கூறுகெட்டவனே, மத்தியான கறிக்கஞ்சிக்கு இப்பவே காச்சி வச்சிட்டு காட்டுக்கு போவேணாவா?…” என பேசிக்கொண்டே வேக வேகமாய் வெங்காயத்தை எடுத்து உரிக்க ஆரம்பிக்க அவருக்கு உதவியாய் சமையலில் நின்றான் தர்மராஜ்.
அதை செய்யாதே, இதை செய்யாதே என சொல்லி சொல்லி வளர்த்ததனாலோ என்னவோ தர்மராஜிற்கு சுயமாய் எதையும் செய்யும் தைரியம் இருந்ததே இல்லை. அன்னம் மீது கொள்ளை பிரியம். அதனை வைத்தே அன்னம் அவனை தன் கைக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
இதுவரை அவருக்கு இப்படி கவலை இல்லவே இல்லை. ஆனால் இப்பொழுது சமீபமாக கேள்விப்படும் விஷயங்கள் அவரின் காதுக்கு உவப்பானதாக இல்லாமல் போக எதிர்காலத்தை பற்றிய பயம் குரல்வளையை கவ்விப்பிடித்தது.
தெரிந்தவர்களிடம் உறவுகளிடம் சொல்லி புலம்பவே ஆரம்பித்துவிட்டார். எப்படி இவனுக்கொரு திருமணம் செய்துவைக்க போகிறேனோ? என.
அவரின் கவலை தர்மராஜிற்கும் புரியாமல் இல்லை. ஆனால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவனுக்கே தெரியவில்லை.
அன்னம் சொன்னால் செய்வான். தாய் சொல்லி கேட்காத ஒன்று இந்த சவகாசம் மட்டுமே. இன்னமும் ஒழுக்கம் தவறாதவன் தான். பாலில் கலந்தது துளி விஷமாக இருந்தாலும் மொத்தமும் விஷம் தானே.
அவனின் நண்பர்கள் விஷம் போன்றவர்கள் என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொண்டார் அன்னம். அவர்களிடமிருந்து பிரிப்பதற்குள் இன்னும் பல்வேறு சோதனைகளை அவன் கடக்கவிருக்கிறான் என்று உணராமல் போனார்.