கடல் – 4
அமுக்குணியுடன் பேசிக்கொண்டே மாட்டை ஒட்டியபடி தோப்புக்கு வந்தாள் மின்னொளி.
தோப்புக்கு இன்னும் ஆட்கள் வேலைக்கு வராமலிருக்க தூரத்தில் காவலுக்கு வைத்திருக்கும் நாய் மட்டும் இவளை கண்டதும் வேகமாய் வந்து இவளின் காலை சுற்றியது.
“செவல, இருடா ஆச்சிய கட்டிட்டு வரேன். மேல தவ்வாம இரு…” என அதற்கொரு அதட்டல் போட கட்டிலுக்கருகே சென்று சமத்தாய் அமர்ந்துகொண்டது செவலை.
தோப்பில் சிறு குடிசையும் பக்கத்தில் இரண்டு கயிற்று கட்டிலும் இருக்க அதில் கொண்டு வந்த சாப்பாட்டு கூடையை வைத்துவிட்டு குடிசைக்கு அருகிருந்த சிறு கொய்யாமரத்தில் கனிந்து தொங்கிக்கொண்டிருந்த பழத்தை பறித்து வந்து அமுக்குணி அமர்ந்துகொண்டான்.
“தெரியும்லே இதுக்குத்தேன் ஓங்காலு வீடு தங்கமாட்டிக்கின்னு…” என்று அவனை முறைத்தாள்.
அங்கே ஒரு மரத்தின் நிழலில் அதனை கட்டியவள் வாய்க்காலில் பாய்ந்துகொண்டிருந்த தண்ணீரை அள்ளி முகத்தில் தெளித்தவள் இரண்டு கை நிறைய அள்ளி குடித்தாள்.
முகத்தில் படிந்திருந்த நீர் திவலைகள் அவளின் அழகுக்கு மெருகேற்றின. வயது ஏற ஏற அவளின் கருமை நிறம் இப்பொழுது கோதுமை நிறத்திற்கு வந்திருந்தது. எண்ணையை அள்ளி தேய்த்து படிய வாரிய கூந்தல் இடுப்பை தாண்டி நீண்டு தொங்கியது சாட்டையை போல.
தலையில் தேய்த்திருந்த எண்ணெய் நெற்றியில், காதோரம் என வழிந்து இருக்க வரும் வழியில் வியர்த்ததில் கை கொண்டு இவள் துடைக்க துடைக்க எண்ணை முகம் முழுவதும் பரவி பளபளக்க அதுவே ஒரு அழகை தோற்றுவித்தது.
முகத்தில் எண்ணையின் மினுமினுப்போடு, நீரும் சேர கிராமத்து தேவதையின் வெளிச்சம் அவளின் முகத்தில் அப்பட்டமாய்.
“என்னாலே இந்நேரமே வெயிலு இந்த காட்டு காட்டுது? பத்தடி நடந்து வாரதுக்குள்ள நாவ வரட்டிருது…” என சொல்லி மீண்டும் ஒரு கை அள்ளி குடித்தவள்,
“என்னத்த சொல்லு நம்ம கெணத்து தண்ணிக்கே தனி ருசிலே…” என்றபடி தாவணியால் முகத்தை துடைத்துவிட்டு வந்து குடிசையின் பின்னால் இருந்த வைக்கோல்படப்பு கொட்டிலில் இருந்த வைக்கோலை கொண்டுவந்து மாட்டிற்கு போட்டுவிட்டு அமர்ந்தாள்.
“சொகம்லே. வீட்டுக்குள்ள இருக்கறத விட காத்தோட்டமா அக்கடான்னு இங்கன தோப்புல இருக்க சொகமே தனிதேன்…” என அண்ணாந்து பார்த்தபடி அவள் சொல்ல,
“ஆமாமா, தெனைக்கு கொய்யா திங்கலாம்…” அமுக்குணி வேகமாய் அவளுக்கு ஒத்து பாட அவனின் தலையில் தட்டியவள்,
“ஒழுங்கா பள்ளிக்கூடம் போவாம ஊர சுத்திட்டு இருக்கற. படிலே, இல்லனா என்னிய மாதிரி வெளங்காம போய்ட போற? அதுக்கும் சரசக்கா என்னியத்தேன் ஏசும்…” என அவனை திட்டியபடி காலை ஆட்டிக்கொண்டு அவள் பேச,
“உருப்படியா ஒண்ண ஒத்துக்கிட்ட பாரு. உருப்பட்டுருவ…” என்ற குரல் கேட்டதும் அவள் திரும்பி பார்க்க தன்னருகே இருந்த அமுக்குணியை காணவில்லை. அவன் அடுத்த பழம் பறிக்க சென்றிருந்தான்.
அந்த குரலுக்கு சொந்தக்காரனை அவள் தான் நன்கு அறிவாளே. காலடி சத்தம் இப்பொழுது அருகில் கேட்க அவசரமாய் தனது தாவணியை சரிபார்த்தவள் முந்தானையை இழுத்து சொருகிக்கொண்டாள்.
அவளின் செயலில் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அவளருகே வந்தவன்,
“ரொம்ப பண்ணாதடி, பார்த்துறக்கீத்துற போறேன். பொறவு மயங்கி ஒம்பின்னால வந்துற போறேன்…” என பல்லைக்கடித்துக்கொண்டு சொல்ல அவனை முறைத்தவளின் முகம் கோபத்தில் சிவந்தாள்.
“எங்கூர்ல இல்லாத பொண் ச்சேச்சே கொமரிகளா? அவளுகளையே திரும்பி பாக்கமாட்டேன். ஒன்னிய பாத்துடுவேனா? போயிரு அங்கிட்டு. சுத்த கிறுக்காகிருவேன்…” என விரல் நீட்டி எச்சரிக்க அவனிடம் பதில் பேசாமல்,
“லே அமுக்குணி, வாலே இங்கன…” என்று கோபத்துடன் அவனை கத்தவும் கையிலிருந்த பழங்களை போட்டுவிட்டு என்னவோ என வந்து பார்த்தான் சிறுவன்.
“அய்யாவ போயி கூட்டுவாலே…”
“அவரு வரமாட்டாரு. சோலியா இருக்காரு. என்னியத்தேன் ஆச்சிய கூட்டுப்போக சொல்லிவுட்டாரு…” அவள் கேட்காமலே பதில் பேச,
“எவன நம்பியும் நா மாட்ட அனுப்ப முடியாது. இருக்கறவன் பூராம் களவாணிப்பயலுக…” அவனை கோபமாய் பார்த்தபடி சொல்ல,
“ஆமாமா இந்த ஒத்தமாட்ட வித்துத்தேன் என் வசிறு(வயிறு) நிறையுது. மிச்சத்துல மச்சுவீட்ட கட்டி ஆள போறேன் பாரு. போடி தள்ளி…” என்று அவளை தாண்டிக்கொண்டு செல்ல,
“அமுக்குணி…” என அவள் கத்துவதை பொருட்படுத்தாதவன் அவளை அலட்சியமாய் கடக்க,
“எதுக்கு நீ இங்க வந்த? இதுக்கு நா வேற லொக்கு லொக்குன்னு அங்க இருந்து இத்த ஓட்டிட்டு நடந்து வரனுமா? ஓட்டிட்டு போறவன் வீட்டுக்குல வந்திருக்கனும்?…” அவளின் பேச்சில் எரிச்சலாய் திரும்பி பார்த்தவன்,
“இந்தாருடி அங்க வந்தா என் மருமவன் கூடவே வரேன்னுவான். மாட்ட ஓட்டிட்டு ஆஸ்பத்திரிக்கி போவேனா? அவன பாப்பேனா? சீக்குக்கு காட்ட மட்டுமா போறேன். செனைக்கு பாக்கனும். ஒன்னொன்னு ஓங்கிட்ட சொல்லனுமா? சோலிக்கழுதைய பாத்துக்கிட்டு போவியா?…”
“யக்கா, என்ன பாக்க போறாக?…” என சிறுவன் கேட்க மின்னொளி திடுக்கிட்டு போனாள்.
“தேவையாலே ஒனக்கு? கம்முன்னு போ…” என்று அவனை விரட்டியவள் அருளை முறைக்க அவனோ நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
“செனைக்கு போடறத பத்தி ஓங்கிட்ட கேட்கறான் பாரேன் கிறுக்குப்பைய…” என விஷமமாய் பேச பேச்சற்று நின்றாள் மின்னொளி. சட்டென அருள் இவ்வாறு பேசுவான் என எதிர்பார்க்காதவள் திகைத்து நிற்க அவளை கேலியாக பார்த்துக்கொண்டே மாட்டை அவிழ்த்துக்கொண்டு சென்றான் அவன்.
எப்பொழுதும் அவள் தான் அவனை மட்டம் தட்டி கோபமூட்டுவது. இன்று அவன் அவளை பேச்சில்லா மடந்தையாக மாற்றிவிட்ட இறுமாப்பில் முகம் சந்தோஷம் கொள்ள அப்புன்னகையுடன் அவன் சென்றுவிட்டான்.
“இனி என்கிட்டே வச்சுக்குவடி? பேசிக்கறேன் இனிமே” என மனதில் சூழுரைத்தபடி சென்றவனை வெறிக்க பார்த்தபடி நின்றாள் மின்னொளி.
கோபம் கோபமாய் வந்தது அவளுக்கு. முதல்நாள் வயல்க்காட்டில் கதிரறுத்து அங்கே மூட்டைகளை வைத்திருப்பதால் இரவு காவலுக்கு ஆட்களுடன் தந்தை அங்கயே இருந்துகொண்டதால் வீட்டிற்கு வந்துசெல்ல முடியாதென ராஜாத்தியிடம் முருகய்யன் தகவல் சொல்லியிருக்க மின்னொளி மாட்டை ஓட்டிக்கொண்டு வந்திருந்தாள்.
இப்பொழுது இவன் பேசி சென்ற கோபம் அவளை கடுப்பாகி இருக்க அதற்கு மேலும் அவனை அழைத்து திட்ட முடியாமல் தோப்புக்கு தேங்காய்கள் உரிக்க ஆட்கள் வந்துவிட்டனர்.
அடுத்தடுத்து வேலைகள் அணிவகுக்க இவள் சற்று அசந்து நின்றாலும் ஏய்த்துவிடுவார்கள் என்பதால் கவனமாய் கவனிக்க ஆரம்பித்தாள்.
ஆனாலும் அருளை ஆய்ந்துவிடும் வேகம் அவளுள் பற்றிக்கொண்டு எரியத்தான் செய்தது.
இவள் மதிய உணவை உண்டுவிட்டு அமர்ந்திருக்க மாட்டை ஒட்டிக்கொண்டு சுப்பு வந்திருந்தான். அவனை பார்த்தவளின் பார்வை அருள் எங்கே என்பதை போல இருக்க,
“அருளு போனு பேசிட்டு இருக்குதான். நீ புடித்தா…” என அவளிடம் பயந்துகொண்டே கயிற்றை நீட்ட,
“ஆளாளுக்கு என்ன கோட்டிபுடிச்சு திரியறீயலா? கொஞ்சமாச்சும் கூறு இருந்தா மாத்தி மாத்தி கொண்டாருவீக? புடிச்சுட்டு போனவனுக்கு கொண்டாந்து குடுக்கனும்னு இல்லையோ?…” என அவனிடம் கத்த, தூரத்தில் தேங்காய்களை உரித்த மட்டைகளை அள்ளி ட்ராக்ட்டரில் போட்டுக்கொண்டிருந்த வேலையாட்கள் திரும்பி பார்த்தனர்.
“இந்தாத்தா என்னைய எம்பிட்டு வேணாலும் வசுக்க. ஆனா எல்லாரும் முன்னுக்க பேசாதத்தா. எவனாச்சும் பொண்டாட்டிக்கிட்ட ஓதிட்டா அவ சாமியாடிருவா…” என கெஞ்சாத குறையாக கெஞ்சி,
“ஆச்சிக்கு மருந்து எல்லா வச்சு கட்டியாச்சு. மத்த எல்லாத்தையும் மாமாட்ட அருளு சொல்லிக்கிடுவானாம். இங்கனயே ஆச்சிய கட்டி வச்சிட்டு நீ வீட்டுக்கு போவியாம். மாமா வந்து சாயங்காலம் ஒட்டிக்கிட்டு வருமா. போறப்ப ஆச்சிக்கு தண்ணி வச்சிட்டு போயிருவியாம்…” என,
“மொத போயிரு…” என்று இன்னும் கடுகடுத்த குரலில் சொல்லவும்,
“அம்புட்டுத்தேன? இந்தா போயிட்டேன்…” என நகர்ந்தவனிடம்,
“இங்காரு இனி ஒருக்கா என் ஆச்சிய கூட்டிபோக வந்தேன்னு ஓ சோக்காளி வந்தான் அம்புட்டுத்தேன். வெளங்குச்சா?…”
“இத நெசமாவே அவன்கிட்ட நாந்தேன் சொல்லனுமா?…”
“ம்ம்ம்” என அவனை பார்த்த பார்வையில் அவன் ஓடியே போனான்.
தூரத்தில் நின்றிருந்த அருள் சுப்புவின் ஓட்டத்தை பார்த்து வாய்விட்டு சிரிக்க அவனருகே வந்து நின்றவன்,
“ஒன்கூட எங்கனாலும் வரேன்ல. ஆனா இந்த புள்ளைட்ட மட்டும் கோர்த்துவிடாதாலே. விட்டா அடிச்சுடுவா போல…” என புலம்ப,
“இதெல்லா ஒரு விசயமாலே. வா வா…” என அவனை தட்டிகொடுத்துக்கொண்டே அழைத்து செல்ல தூரத்தில் பார்த்திருந்தவளின் கோபம் எல்லை மீறியது.
“இன்னைக்கு இருக்குடா உனக்கு” என கருவியவள் வேலை விரைவாகவே முடிய மூன்று மணிக்கு முன்னரே கிளம்பிவிட்டாள்.
மாட்டை முருகய்யன் தான் ஓட்டிக்கொண்டு வந்துவிடுவதாக சொல்லியும் வீம்புக்கென்றே ஒட்டிக்கொண்டு சென்றாள்.
வீட்டில் அதன் கொட்டாயில் கொண்டு வந்து தண்ணீர் காண்பித்து கட்டிவிட்டு வைக்கோல் போட்டுவிட்டு உள்ளே வர இளவரசன் அழகு பாட்டியுடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
வந்ததும் பாட்டியிடம் ஒப்பிக்கவேண்டும் என்ற வேகம் தணிந்தபாடில்லை. அவளின் அரவம் கேட்டு ராஜாத்தி வந்து பார்க்க அவரை பார்த்ததும் மீண்டும் அருள் பேசியது தான் ஞாபகம் வந்தது.
அவரிடம் எதுவும் பேசமுடியாமல் கையை பிசைந்தவள் வெளியே உள்ள திண்ணையில் சென்று அமர்ந்து காலில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“எம்புட்டு சுலவமா எங்கிட்ட பேசிட்டான். வாய கிழிக்காம வந்துட்டேனே?” என தனக்குள் புலம்பியபடி அமர்ந்திருக்க ராஜாத்தி ஒரு சொம்பில் மோர் ஊற்றி கொண்டு வந்து அவளின் முன்னே வைத்துவிட்டு எதிர் திண்ணையில் அமர்ந்து பூவை தொடுக்க ஆரம்பித்தார்.
எடுத்து குடித்தவள் சிறிது நேரம் கண் மூடி சுவற்றில் சாய்ந்திருக்க அழகுபாட்டி எழுந்து வந்துவிட்டார்.
“என்னடி இன்னிக்கு வெரசா வந்துட்ட போல?…” என கேட்டுக்கொண்டே பேத்தியின் அருகே அமர அவளின் முகம் வியர்வையில் தான் இருந்தது இன்னமும்.
“செத்த காத்தாடி காத்துல உள்ள இருக்கத்தான? இங்கன ஒத்த எல அசையுதா பாரேன். காத்தே இல்ல…” என வீட்டின் முன்பு இருந்த வேப்பமரத்தை பார்த்து சொல்ல,
“ப்ச், விடுத்தா…” என அவரின் கையை தட்டிவிட்டவள்,
“இங்காரு கெழவி, வீட்டுக்கு வர ஆவாது, தோப்புல இருந்தாக்குல மாட்ட ஓட்டிட்டு போவனும்னு சொன்னதாலத்தேன் நா ஓட்டிட்டு போனேன். அங்க வந்து எவன் எவனோ சலம்பல் பன்றான். சொல்லி வை நீ பெத்தவருட்ட…”
“யத்தா ஆரு?…” என அழகு பாட்டி கேட்க ராஜாத்திக்கு புரிந்து போனது அருள் ஏதோ செய்திருக்கிறான் என்று.
“ஆரா இருந்தாக்க ஒனக்கென்ன? எங்கிட்ட ஒன்னு சொல்லுதது, போனப்போறவு ஒன்னு செய்யுதது. நல்லாயில்ல. அம்புட்டுத்தேன்…” என வெடிக்க ராஜாத்தி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
“யத்தா சோதியா வந்தது?…” அவளின் கோபத்தின் அளவில் அவனை தவிர வேறு யாராக இருக்க கூடும் என்று அவர் கண்டுபிடித்துவிட தலையை மட்டும் அசைத்து ஆமென்றாள்.
“அப்புடி என்னத்த கேட்டுட்டான்னு இங்க வந்து ஆட்டங்காட்டறவ?…” என்ற கேள்வியில் முகம் கன்ற மின்னொளி பதில் சொல்லாமல் பார்க்க,
“செரி விடுத்தா, பாரு ஓ சின்னாத்தாளுக்கு மூஞ்சி சுண்டிப்போச்சு…” என்று சொல்ல வாசலில் கேட்டுக்கு வெளியே சைக்கிள் மணி சத்தம் கேட்டது.
“பாலு கறக்க ஆளு வந்தாச்சு, வேணுனா நீ போயி ஓ சின்ன மருமவள கொஞ்சு…” என்று எழுந்தவள் இழுத்து சொருகிக்கொண்டு பின்னால் மாட்டு கொட்டாய்க்கு சென்றாள்.
பன்னிரெண்டு மாடுகளும், மூன்று காளை கன்றுகளும், எட்டு பசு கன்றுகளும் இருந்தது. இவளை பார்த்ததும் அனைத்து கன்றுக்குட்டிகளும், பசுக்களும் “ம்மா” என்று கத்த அதுவரை இருந்த நெஞ்சத்தின் வெம்மை கொஞ்சம் தணிந்ததை போல இருக்க பால் கறந்து முடிக்கும் வரை ஒரு இடத்தில் நிற்கவில்லை மின்னொளி.
முன் வாசலில் அதற்குள் சில பெண்கள் வந்து நிற்க மின்னொளி பாலை தூக்கி வரும் பொழுது ராஜாத்தி அளந்து ஊற்ற தேவையானவற்றை எடுத்து வைத்திருந்தார்.
அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள் நேரடியாக இங்கேயே வந்து பால் வாங்கி செல்வதால் அவர்களுக்கு போதிய பாலை ஊற்றிவிட்டு வீட்டுக்கும் போக மிச்சப்படும் பாலை தான் பால்காரரிடம் தருவார்கள்.
“மின்னு, நா போயி அன்னக்கா வீட்டுல கறந்துட்டு வந்துடறேன். நீ ஊத்தி முடிச்சுட்டு எடுத்து வைய்யித்தா…” என சொல்லி பால்காரர் சென்றுவிட அவர் தனியாய் கொடுத்த ஒரு பெரிய பாத்திரத்தின் பாலை ராஜாத்தியிடம் நீட்ட அதை வாங்கிகொண்டு உள்ளே சென்றார் அவர்.
“ஏத்தா மின்னு, எங்களுக்கும் ஒருமாட்டு பால எடுத்து வச்சா என்னவாம்? கொறஞ்சா போயிருவ?…” என ஒருத்தி கேட்க,
“எக்கா என்னவோ இன்னிக்கு பால் வாங்கற மாதிரில பேசுத? இங்க எல்லா மாட்டுப்பாலும் ஒன்னுதேன்…” என்றதற்கு ராஜாத்தி உள்ளே கொண்டு சென்ற திக்கில் அப்பெண் பார்வையை விட அதனை கண்டுகொண்ட மின்னொளி,
“இந்தா வேலையெல்லா எங்கிட்ட வச்சுக்காத. ஒனக்கு வேண்டான்னா பால்க்காரண்ணேட்ட வாங்கிக்க. ஒவ்வொருத்திக்கும் நா ஒத்த ஒத்த சொம்புலையா பீச்சி தர சொல்ல முடியும்? புள்ளை பாலாச்சேன்னு பாத்தா நீ விடமாட்ட போல?…” என குத்தலாய் கேட்டதும் கப்சிப்பென்று வாங்கி சென்றனர்.
பால் தர முடியாது என அவள் சொல்லிவிட்டால் எதுவும் பேச முடியாது. அன்னத்திடம் வாங்கலாம் தான். ஆனால் அவர் தண்ணீர் கலந்து தான் விற்பனை செய்வார். அதனை கொண்டே யாரும் அங்கே வாங்க விரும்பமாட்டார்கள்.
அதிலும் மின்னொளி என்றால் கடனுக்கு தருவாள். வாங்கிவிட்டு மெதுவாக கூட கொடுக்கலாம். அன்னத்திடம் அப்படி இருக்க முடியாது. பயங்கர கறார் பேர்வழி.
பால்காரரிடம் சொல்லவே வேண்டாம். அதைவிட நீர். அதற்கு மின்னொளி எவ்வளவோ தேவலை என்று தான் நினைப்பார்கள். மின்னொளி வீட்டில் முன்பிருந்தே இந்த பழக்கம் என்பதால் இன்று வரை அதனை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.
ராஜாத்தி கணக்கை எழுத எழுத அனைவருக்கும் மின்னொளி அளந்து ஊற்ற மறு பேச்சின்றி வாங்கி முடித்து அனைவரும் கிளம்பிவிட பால்காரர் வந்து பாலை வாங்கிக்கொண்டு சென்றார்.
மின்னொளி அனைத்தையும் எடுத்து சென்று கழுவி திண்ணையில் கவிழ்த்திவிட்டு கணக்கை சரிபார்த்து கடன் தனியாக, இன்றைய வரவு தனியாக என பிரித்து எழுதிவிட்டு அதனை எடுத்துக்கொண்டு உள்ளே வர ராஜாத்தி டீ போட்டு முடித்திருந்தார்.
அவள் வந்ததும் அழகு பாட்டியிடம் அவளுக்கும் சேர்த்து கொண்டுவந்து வைத்துவிட்டு இளவரசனை எழுப்ப முதலில் எழ சிணுங்கியவன் மின்னொளியை கண்டதும் வேகமாய் எழுந்து ஓடி வந்தான்.
“ஆத்தா ஆத்துக்கு…” என ஆரம்பிக்க அப்பொழுது தான் அவனிடம் சொல்லிய ஞாபகமே வர ராஜாத்தியை ஓரக்கண்ணால் இவள் பார்ப்பதை கண்ட குழந்தை,
“ஆத்தா…” என தாயை பார்க்க,
“ரொம்ப நேரமா ஆடாம வெரசா வந்துரனும் ராசா. அப்பாரு வாரதுக்குள்ள வந்துரு…” என்றவர் ஒரு பையில் துண்டும், மகனுக்கு வேறு உடையும் எடுத்து வந்து தர வாங்கிக்கொண்ட இளவரசன் மின்னொளியை பார்த்து ஆசை மின்ன புன்னகைத்தான்.
“பால குடிப்பியாம். போவோமாம். ஏஞ்சாமி?…” என அவனை மடியில் அமர்த்திக்கொண்டவள் செல்லம் கொஞ்ச இருவருமாய் ஒருவழியாய் கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்றது தான் தாமதம் முருகய்யனுக்கு அவர்கள் ஆற்றுக்கு சென்ற விபரத்தை சொல்லிவிட்டு தம்பிக்கு அழைத்துவிட்டார் ராஜாத்தி.
அத்தனை கோபம் அவருக்கு. என்றுமே மின்னொளியை இப்படி பார்த்ததே இல்லை. எதையும் வந்து பாரென நிற்கும் பெண்.
அருள் அழைப்பை ஏற்றதும் அத்தனை திட்டு. ஏன் எதற்கென கேட்காமலே அவ்வளவு பேசினார். கடைசியில்,
“ஏன் சோதி? வயசு புள்ளைக்கிட்ட என்னத்த பேசனும்னு ஒரு நீக்குபோக்கு வேணா? கோட்டி புடிச்சுதாலே ஒனக்கு?…” என வருத்தமாய் கேட்க அருளுக்கு அத்தனை கோபம்.
“எதை போய் அக்காவிடம் சொல்லியிருக்கிறாள் இவள்? கொஞ்சமும் புத்தி இல்லை” என நினைத்தவன் வழக்கம் போல ராஜாத்தி பேச பேச கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தான்.
ஆம் என்றோ, இல்லை என்றோ பேசவே இல்லை. தமக்கையிடம் மட்டும் இது அவனின் வழக்கமும் கூட. திட்டுகிறாயா திட்டு. அடிக்கிறாயா வாங்கிக்கொள்கிறேன் என்னும் பாங்கு தான் அவனிடம்.
“இதுக்கு மேல இந்த மாரி (மாதிரி) செய்யாத சோதி, மாமாவுக்கு தெரிஞ்சது நல்லா இருக்காது…” என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். கனமான மனதுடன் தமக்கை பேசியதை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான்.
ராஜாத்தி பேசிவிட்டு போனை வைத்ததும் அங்கே வந்த அழகு அவரின் முகத்தை பார்த்ததும் புரிந்துகொண்டார்.
“என்னத்துக்குடி அவன புடிச்சு ஏசற? மொறைமைக்காரன் பேசாம ஆரு பேசுவா?…”
“ஐயோ அத்த, நம்ம புள்ளைக்கு புடிக்கலங்கறப்ப அவன கண்டிச்சுத்தேன் வைக்கனும்…”
“இவ ஒருத்தி, நீ கண்டிச்சு கண்டிச்சு ரெண்டுக்கும் மத்தில கசப்பத்தேன் கொண்டார. விடு. அதுவா சரியாகும்…” என்று சொல்லிவிட்டு சென்றார் அழகு பாட்டி.
—————————————————–
தர்மராஜின் தோப்பை தாண்டி சற்று தூரத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய ஆறு இல்லை என்றாலும் சிறிதளவேணும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும்.
இப்பொழுது நீர் வரத்து மிக குறைவு. ஆழமும் இருக்காது என்பதால் இளவரசனுடன் வந்துவிட்டாள் மின்னொளி.
அவள் முன்னால் தம்பியுடன் நடக்க அவளை கவனிக்காமல் தர்மராஜும், அவனுடைய நண்பர்களின் ஒருவனான கதிரேசனும் வந்துகொண்டிருந்தனர்.
“ஏலே அந்த ராங்கிக்காரி போறா பாத்தியா?…” என அவன் கண்ணை காண்பிக்க அப்பொழுது தான் பார்த்த தர்மராஜ்,
“கதிரு வாலே போயிருவம். நீ ஒ வாய வச்சிக்கிட்டு இருக்க மாட்ட. அவ எகிறிடுவா. வாலே…”
“ப்ச், இருலே. என்ன பேசிருவா? நானும் பாக்குதேன்…” என்றவன் முதலில் விசில் அடித்துக்கொண்டே செல்ல முதலில் கண்டுகொள்ளாமல் தான் மின்னொளி சென்றாள். அதன் பின்னர் தான் கதிரேசனின் வாயில் சனி புகுந்தது. தொண்டையை கனைத்துக்கொண்டு,
“வாரே வாரே. ஒ கூட வாரே. ஏழு சென்மத்துக்கும் யே உசுர தாரேன்…” என பாட சென்றுகொண்டிருந்தவள் விருட்டென திரும்பி வந்தாள்.
“ஏலே பாடு, ஏலே இப்ப பாடுங்கறேன். என்ன பாத்து தான பாடுன?…” என கதிரேசனிடம் வர,
“நா சும்மா பாடுனேன். பாடுனா, ஒன்னப்பாத்துத்தானா? போவியா. என்ன லந்தா?…” என உதறலை மறைத்துக்கொண்டு பேச,
“சும்மாவா? காதுல பூ சுத்தாதலே. குளிக்க போறேன். கூட வாரேன்னு பாட்டா பாடுத. வெளக்கமாறு பிஞ்சுரும்…”
“என்னது, ஒன்ன பாத்து பாடுனேனா? இங்காரு மருவாதி இல்லாம பேசாதத்தா…” என சுற்றிலும் பார்த்துக்கொண்டே கைலியை மடித்துக்கட்டி அவன் பேச,
“இந்தா பகலு ஒன்னிய நல்லாவே தெரியும்டே. இந்த ஓரண்டைய இழுக்கற சோலி எங்கிட்ட வச்சுக்காத…” என்றவள் தர்மராஜ்ஜை பார்த்த பார்வையில் இருந்ததென்னவோ? அவனோ,
“வாலே போயிருவோம்னு சொன்னேனுல்ல. கேட்டியா?…” என நண்பனை இழுத்துக்கொண்டு அவன் நகர,
“கூட வாரேன்னு பாடுனா ஒடனே வந்துடறதா? வந்துட்டாலும்? கழுதையில…” என கதிரேசன் தர்மாவிடம் அவன் புலம்பிக்கொண்டே செல்ல,
“அடே பகலு…” மின்னொளியின் சத்தத்தில்,
“யத்தா, இங்க வேற பேசிக்கிட்டு இருக்கோம்த்தா நீ வேற…” என திரும்பி கூட பார்க்காமல் கத்திவிட்டு வேகமாய் சென்றுவிட தனது தம்பியை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் மின்னொளி.