கடல் – 6
திடீரென இப்படி கூட்டத்தின் மத்தியில் இந்த பேச்சை எடுத்ததும் ராஜாத்தி ஸ்தம்பித்து நின்றார். போதாததிற்கு மற்றவர்களும் அப்பெண்ணிற்கு ஒத்துப்பாட்டு பாடியபடி,
“செரிதான் ராசு, எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு. ஒனக்கு அடுத்தவ தம்பி பொண்டாட்டியா வாரதுக்கு இது தேவலயில்ல…” என இன்னொருத்தி சொல்ல,
“அட ஆமாக்கா. நெசந்தேன் நீ சொல்லுதது. மின்னுக்கு மாப்பிள பாத்தாலும் ஆயிரத்தெட்டு விளக்கத்த சொல்லி கெட்டிவக்கிததுக்கு தம்பிய கட்டிவச்சா வெளிய தெரியாம போய்டும் பாரு. நல்லா யோசி…”
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பேசி திருமணத்தை இன்றைக்கே நிச்சயம் செய்துவிடும் அளவுக்கு யோசனை பேசினார்கள். பேச்சு அதிகமாக அதிர்ந்துபோன ராஜாத்தி,
“வாய மூடுதீகளா? மொத அவவ முதுகுல உள்ள மூட்டய தொவச்சுட்டு வாங்க. பொறவு அடுத்த வீட்டு அழுக்க வெளுக்கலாம். வந்துட்டாளுக. கொறையாமில்ல கொற. எங்க புள்ளைக்கு மாப்பிள தேட ஒங்கள யாரையும் அழைக்கல. போயி சோலிக்கழுதைய பாருங்க…” என ராஜாத்தி போட்ட சத்தத்தில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அழகுபாட்டியின் முகமே வாடிவிட்டது. ஒரு பேச்சுக்கென்றாலும் மருமகள் யோசிப்போம் என சொல்வாரென பார்க்க ராஜாத்தியோ அந்த பேச்சையே கத்தரித்து அனுப்பிவிட மனது விண்டுபோனது அவருக்கு.
சொந்தத்திலேயே எடுக்க யோசிக்கையில் வெளியில் எப்படி? என்னும் ஆயாசம் மனதில் மண்ட கவலையுடன் பார்த்தார் மகனை.
இதை எதையும் காதில் வாங்கியிறாத அருள் மின்னொளியுடன் உள்ளே நுழைந்தவன் அவளை எங்கே இறக்கிவிட என சுற்றிலும் பார்த்தான்.
வீடு மிக பெரிதாக இருந்தாலும் தனித்தனி அறைகள் என்பது இரண்டே இரண்டு தான் இருந்தது. மத்த அனைத்தும் பெரிய பெரிய வரவேற்பு அறைபோல தான் இருக்கும்.
மின்னொளி, அழகுபாட்டி இருவரும் அங்கே ஹாலில் தான் உறங்குவார்கள். ஒரு அறையில் ராஜாத்தியும், முருகய்யனும் இருக்க இன்னொன்று மின்னொளியின் தாய் பயன்படுத்திய அறை. அதை யாரும் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. மின்னொளி அதற்கு விடவும் இல்லை.
அங்கே தான் கட்டிலும் இருந்தது. கீழே விடமுடியாது என்பதால் கையில் அவளை வைத்துக்கொண்டே இவன் யோசனையாக இருக்க,
“மொத என்ன எறக்கிவிடுலே, சொமந்துக்கிட்டு சுத்திப்பாத்துக்கிட்டு நிக்கித?…” என கடுப்படித்தாள் மின்னொளி.
அவளுக்கு இன்னும் எத்தனை நேரம் தான் அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு இருப்பது என்ற கோபமும், அவனின் மேல் உராய்ந்துகொண்டு இருக்கும் அவஸ்தையும் அப்படி பேச வைக்க அவளை முறைத்தான்.
“இந்தாருடி என் வாய புடுங்காத. பொறவு எதாச்சும் பேசிப்புடுவேன். அந்தா போச்சு, இந்த போச்சுன்னு எங்கக்கால கூப்புட்டு ஒப்பாரி வச்சு என்னை ஏச்சு வாங்க வெக்காத…”
“கீழ எறக்குன்னா நீ விடமாட்டிக்க. பேசாம என்ன செய்யுவேனாம்?…”
“விட்டா போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். எனக்கென்ன வேண்டுதலாடி ஒன்னிய சொமக்கனும்னு? தலநோவு ஒன்னோட…” என்றவன் அவளை அங்கேயே முற்றம் போன்ற இடத்தில் தூணில் சாய்ந்தபடி கீழே அமர வைத்துவிட்டு தலையணை ஒன்றை எடுத்து வந்து இரு கால்களுக்கும் அடியில் வைத்தான்.
அதிலும் அவளுக்கு வலித்துவிடுமோ என அத்தனை மெதுவாய் பார்த்து பார்த்து எடுத்து வைத்தவன் ஒரு டேபிள் பேனையும் கொண்டு வந்து அவளுக்கருகில் வைத்து சுழலவிட்டான்.
அவனின் செயல்களை கண்கொட்டாமல் பார்த்தவள் அருள் தன்னை நிமிர்ந்து பார்க்கவும் முறைத்தாள்.
“இனியாச்சும் பொட்டப்புள்ளை ஒடுக்கசடக்கமா இருக்க பாரு. சும்மா குதிரையாட்டம் குதிச்சுட்டு போகாம…”
“நீ வாய மூடுலே. என்னச்சொல்ல உனக்கென்ன வந்தது? ஒம்வீட்டு சோலிய பாத்துட்டு போ…” என அவள் கத்த அவளின் இயலாமையை கண்டு குதூகலமானவன் இடுப்பில் கைவைத்தபடி,
“ஏஞ்சொல்ல மாட்ட. நெல்லுமூட்டாய தூக்குனமாதிரில தூக்கிட்டு ஓடுனேன். நீ சொல்லத்தேம் செய்யுவ…”
“உன்னாலதேன் எனக்கிப்பிடி ஆச்சு. அப்ப சொமக்கத்தேன் வேணும்…”
“என்ன என்னாலையா? நா என்னத்த பண்ணேன்?…”
“ஆமா, உன்ன பாத்ததும் அத்தன கோவம் எனக்கு. உன்னால தான் பானைய கீழ போட்டேன். அதான் எனக்கு கால் வெந்துடுச்சு…”
“இது நல்ல கதையா இருக்குடி. நா சும்மா அக்காள பாத்துட்டு போவ வந்தா. நொண்டிக்குதிரைக்கி சறுக்கினது சாக்காட்டம் நீ சோத்த கவுத்ததுக்கு நானா?…”
“ஆமா, நீ தான். நீதான்லே. இன்னிக்கு நீ பேசுனது, நீ பேசுன அந்த அந்த…” என திணறியவளை வியப்பாக பார்த்தவன்,
“உன்ன யாருடி என்னிய நினைச்சுட்டு சட்டிய புடிக்க சொன்னா?…” என வேண்டுமென்றே சீண்ட,
“நல்லா வாயில வந்துடும் பார்த்துக்க. கெரகம் இன்னிக்கு நீ அந்த பேச்சு பேசாட்டி…” என்றவள் காலை ஒரு வேகத்தில் அசைக்க வலி உயிர்போனது. அதை காட்டிக்கொள்ளாமல் அவனை வீராப்பாய் முறைக்க அருளுக்கு சிரிப்பு வந்தது.
“பேசுனேன், பேசுனேன்னா? என்னத்த பேசுனேன்? அத சொல்லுடி யே அக்கா மவளே…” என வேஷ்டியை மடித்துக்கட்ட,
“போடா வெளில போடா மொத. என் காலு சரியாவட்டும், உன் கால்ல கஞ்சி சட்டிய கவுக்கறேனா இல்லியான்னு பாருலே…” என விரல் நீட்டி அவள் எச்சரிக்க அதை கண்டு வாய்விட்டு சிரித்தான் அருள்.
வெளியில் இருந்து உள்ளே நுழைந்தவர்கள் பார்த்த காட்சி இதுவே. வாயை பிளந்து பார்த்தனர்.
என்றும் மின்னொளியின் முகத்தில் தான் அருளின் மீதான எகத்தாள சிரிப்பு இருக்கும். அவள் மீதான கோபம் அருளின் முகத்தில் வெறுப்பாய் வெடிக்கும்.
இன்றானால் அதற்கு நேர்மாறாய் இருவரும் இருக்க ராஜாத்தியின் நெஞ்சதிற்குள் திடுக்கென்று ஆனது. அதிலும் அருளின் முகத்தில் இருந்த அந்த இலகுத்தன்மையும், விரிந்த புன்னகையும் மனதை பிரட்டியது.
அழகுபாட்டிக்கு இதனை பார்த்ததும் சற்றுமுன் நெஞ்சத்தில் இருந்த தகிப்பு மறைந்து குளிர்ந்துபோனது. அவருள்ளும் ஆசை துளிர்விட மகனை பார்த்தார். அவர் இதையெல்லாம் புரிந்தால் தானே?
முருகய்யன் ராஜாத்தியிடம் வாங்கி வந்திருந்த மருந்துகளை கொடுக்க தனது திகைப்பை மறைத்துக்கொண்டவர் அதை வாங்கி என்ன ஏதேன கேட்டுக்கொண்டார். இவர்களை பார்த்ததும் மின்னொளியை விட்டு தள்ளி வந்த அருள்,
“நா கெளம்புதேன்க்கா. நெம்ப நேரமாச்சு…”
“இரு மாப்ள, சாப்புட்டு போலாம்…” என அவனின் கையை பிடித்து தடுத்தவர்,
“ராசு, சோறாக்கிட்டியா?…”
“கை அலம்பிட்டு ஒக்காருங்க. எடுத்தாறேன்…” என உள்ளே சென்றார் ராஜாத்தி.
அருள் பதிலெதுவும் பேசாமல் சாப்பிட அமர வெளியில் இருந்த சுப்புவையும் அழைத்து சேர்ந்தே சாப்பிட்டனர்.
அருள் மருமகனை மடியில் வைத்துக்கொண்டு அவனுக்கு ஊட்டியபடி சாப்பிட அழகு பாட்டி மின்னொளியின் அருகில் அமர்ந்திருந்தார்.
உணவு முடிந்ததும் சிறிது நேரம் அக்காவிடம் பேசியவன் வெளியே வர அவனுடன் சேர்ந்து முருகய்யனும் வந்தார்.
“இன்னைக்கு என்னடா இது எல்லா புதுசா இருக்கு? இந்த மனுசனும் சேந்து வாராரு” என அதிசயித்தபடி ஆட்டோவை நெருங்கியவன் பின் யோசனையுடன் தமக்கையை பார்த்தான்.
“சொல்லு சோதி, என்ன யோசிக்கிறவே?…” என தம்பியின் முகத்தை படிக்க,
“இல்ல, அந்த புள்ள கீழ ஒக்கார, எந்திக்க செரமப்படும். ஒரு வயரு கட்டிலு வாங்கிபோட்டா சுளுவா இருக்கும் பாரு. அதேன்…” என்றதும் ராஜாத்திக்கு இன்னமுமே மனது கலக்கம் கொண்டது.
தன் தம்பி அருளா? இது என ஆச்சர்யப்பட கூட முடியாது மனது எதை எதையோ நினைத்து அலைகழிப்பாய் இருக்க முருகய்யனுக்கோ சந்தோஷமாக இருந்தது.
“நா கூட யோசிக்கல மாப்ள. பாத்துகிடுதேன்ய்யா. நம்ம பயலுக்கு ஒத்த போன போட்டா இப்பவே கொண்டாந்து எறக்கிப்புடுவான். இந்தா பேசிட்டு வாரேன்…” என சட்டையில் இருந்த போனை எடுத்து யாருக்கோ அழைத்தபடி அவர் நகர,
“ஏன்த்தா ஒரு மாதிரி இருக்க? மேலுக்கு முடியலியா?…” என்றான் கரிசனமாய் அக்காவிடம்.
“ஆஹ, இல்லயே. இல்லய்யா. ஒண்ணுமில்ல…” என அத்தனை சொல்ல அருளுக்கு புரியவில்லை என்றாலும் சுப்புவிற்கு ஓரளவு யூகிக்க முடிந்தது.
அவனுக்குமே அனைத்துமே ஏதோ மந்திரகோலால் சுழற்றியபடி நடப்பதை போலவே இருந்தது. இப்போதைக்கு அங்கே வைத்து எதுவும் பேசாமல் மௌனமாய் நிற்க,
“நெசமாதேன் சொல்லுதியா? பாத்தா தெரியலியே…” என்றான் அப்பொழுதும் விடாமல்.
“அட என்னாலே சும்மா பினாத்திட்டு. கோட்டியாலே? கெளம்பு மொத…” என அவனை விரட்ட,
“செரிக்கா. பாத்துக்க. நாளைக்கி அம்மா வந்தாலும் வரும். காலு நிக்காது அதுக்கு…” என கூடுதல் தகவலாய் சொல்லிவிட்டுவேறு செல்ல அதுவும் வேறு ராஜாத்தியை யோசானையாக்கியது.
மின்னொளியின் பெயரை கேட்டாலோ, அவள் சம்பந்தமாக எதையும் பேசினாலோ, அவளுக்கு எதையும் வாங்கேவேண்டும் என்றாலோ கூட அத்தனை கத்துவான் அருள்.
இப்பொழுது இப்படி அவனே தாயை அனுப்புகிறேன் என்பதை போல பேச தலைசுற்றி தான் போனார் ராஜாத்தி.
ஏற்கனவே ஊர்மக்கள் சற்றுமுன் பேசியதில் கோபமாகியவர் இப்பொழுது அருள் அதனை ஆமோதிப்பதை போல நடந்துகொள்வது கலக்கத்தை உண்டு பண்ணியது.
இத்தனை வருடங்களில் இப்படி ஒரு எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை. அதுவும் இருவரும் எதிரிகள் போல ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு நிற்பது அதற்கு அவசியத்தையே ஏற்படுத்தவில்லை.
ஒரே நாளில் தம்பியிடம் இந்த மாற்றத்தை ராஜாத்தி எதிர்பார்க்கவில்லை. அதையும் மீறி அவனின் எதிர்காலம் உடன்பிறப்பாய் ராசாத்தியை பயமுறுத்தியது இன்றைய நிகழ்வுகளால்.
மின்னொளியை வெறுக்கவில்லை. தாயாய் தான் அவளுக்கிருக்க ஆசைப்பட்டார். அதே நேரம் இதை ஒரு நினைப்புக்கென கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பென தவித்துத்தான் போனார்.
“என்ன ராசு கெளம்பிட்டானா?…” என முருகய்யன் வந்து கேட்க,
“இப்பத்தேன்…” என ஆட்டோ சென்ற திசையை ராஜாத்தி பார்க்க,
“வாட்டமா தெரியிறயே, என்ன புள்ள?…” என கணவனாய் கேட்க அதில் கலங்கிய மனதை மறைத்துவிட்டு அப்போதைக்கு அந்த வார்த்தையில் மகிழ்ந்தவர்,
“ஒண்ணுமில்ல, சும்மாதேன்…”
“செரி செரி. நீ போயி செத்த ஒக்காரு. புள்ள ஓறங்கிடாம. இன்னு செத்த நேரத்துல கட்டிலு வந்துரும்…”
“சொல்லிட்டீகளா?…” என கேட்டுக்கொண்டே திண்ணையில் வந்து அமர,
“ஆமாத்தா, ரெண்டா சொல்லிட்டேன். ஆத்தாவும் படுத்துக்கும்ல…”
“அத்தே என்னிக்கு கட்டில்ல படுத்துருக்காக? கட்டாந்தரையில கட்டைய சாச்சாத்தேன் ஒறக்கமே அண்டும்பாக…” மாமியாரை அறிந்தவராய் ராஜாத்தி சொல்ல,
“இருக்கட்டும்த்தா, ஒண்ணுக்கு ரெண்டு இருந்தா நாளைக்கி நல்லதுகெட்டதுக்கு ஆகிக்கும்ல…” என்று சொல்ல அதற்குள் மகன் தூக்கம் வருவதாய் கண்ணை கசக்கிக்கொண்டு வந்து நிற்க,
“இருய்யா இத்துனூண்டு பால குடிச்சுட்டு ஓறங்குவியாம்…” என சொல்லியபடி மகனை இடுப்பில் சுமந்துகொண்டு உள்ளே சென்றார் ராஜாத்தி.
அங்கே அதே தூணில் அழகுபாட்டியுடன் பேசியபடி மின்னொளி அமர்ந்திருக்க அவளுக்கு கொடுக்கவேண்டிய மாத்திரைகளுடன் பாலையும் ஆற்றிக்கொண்டு கொண்டுவந்து வைத்துவிட்டு அவளிடம் போடவேண்டியதை நீட்ட அவளும் மருந்தை விழுங்கி பாலை குடித்துவிட,
“எத்தே கட்டிலுக்கு சொல்லிருக்காக. பாய போட்டுடாதீங்க. இப்ப வந்துருமாம்….” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
மின்னொளி அதனை கேட்டுக்கொண்டே தூணில் கண்ணை மூடி சாய்ந்துவிட அழகுபாட்டி பேத்தியின் தலையை வருடிவிட்டார்.
“ரொம்ப துடிச்சுட்டியாத்தா?…”
“அட இல்ல கெழவி. கொஞ்சந்தேன் வலி. தாங்கமட்டும்தேன்…” என்றவள் முகத்தை அவ்வப்போது சுருக்கிக்கொண்டே தான் இருந்தாள்.
அவளிடம் மேலும் பேச்சுக்கொடுக்காமல் அவளையே பார்த்தபடி பாட்டி அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் கட்டில் வந்துவிட்டது.
ஆனால் அருள் சொல்லியது போல வயர் கட்டில் இல்லாது மரக்கட்டிலே வந்துவிட கூடுதலாய் மெத்தையும்.
“மாமோய், மொதவே சொல்லிருந்தா நல்லா டிசையினு பாத்து செஞ்சே கொண்டாந்துருப்பேன். அவசரத்துக்கு இருக்க கட்டில கொண்டாந்துட்டேன். முன்னபின்னதேன் இருக்கும். வசுபுடாத…” என கடையின் உரிமையாளன் சொல்ல,
“தெரியாதாம்லே. இருக்கட்டும். பொறவு பாத்துக்கிடுவோம்…” என சொல்லி கட்டிலை எங்கே போடவென ராஜாத்தியை பார்க்க அவர் இடத்தை காண்பித்து பிடித்து மாட்ட சொல்ல கடகடவென வேலை நடந்தது.
தலையணைகள் போர்வைகள் என அனைத்தும் புதிதாய் அங்கிருந்தே கொண்டு வரப்பட்டிருக்க அதையும் விரித்து பரப்பிவிட்டார் ராஜாத்தி.
பின் ராஜாத்தி ஒரு கை பிடிக்க வலியை தாங்கிக்கொண்டு மெதுவாய் நடந்து கட்டிலில் அமர மற்றவர்களை கூட்டிக்கொண்டு முருகய்யன் வெளியேற அதன் பின்னர் மின்னொளி படுத்துக்கொண்டாள்.
காலுக்கடியில் தலையணை வைத்தால் பரவாயில்லை என்பதை போல இருக்க இன்னொன்றை எடுத்து அவளே வைக்க பார்க்க காலை தூக்கமுடியவில்லை.
கட்டில் கொண்டுவந்தவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த முருகய்யன் மகளின் சிரமம் பார்த்து வேகமாய் ஓடிவந்து மகளின் காலை தூக்கி தலையணையை வைத்துவிட்டு,
“ராசு…” என கோபத்துடன் கத்தினார்.
இளவரசனை உறங்கவைக்க உள்ளே சென்றிருந்தவர் என்னவோ என பதறிக்கொண்டு ஓடிவர மின்னொளியே அரண்டுபோனாள் அவரின் கத்தலில்.
“என்னாச்சு மாமா?…” என வந்த ராஜாத்தியை உறுத்து விழித்தவர்,
“உள்ள என்னத்த பறிக்கடி போன? இங்க எம்மவ காலுக்கு மெத்த வைக்க செரமப்படுதா. அத்த பாக்காம அதுக்குள்ளே ஒறக்கம் கட்டிருச்சோ?…” என நடு வீட்டில் வைத்து சண்டையிட அதை பொறுக்கமாட்டாத மின்னொளி,
“கெழவி…” என அழுத்தமாய் அழைக்க பின்னால் சென்றிருந்தவரை காணாது முருகய்யனும் பார்க்க,
“அத்தே கொல்லப்பக்கம் போயிருக்காங்க…” என்றார் அழுகையுடன். கண்களில் அப்படி ஒரு கண்ணீர்.
“அவுக இருந்தா மட்டும் பாத்துக்கிட முடியுமா? ஒனக்கென்ன உள்ள சோலி?…” அதற்கும் பேச,
“புள்ள கண்ணா கசக்கிட்டு ஒறக்கம்னு இடும்பு பண்ணிட்டான். அதேன் அவன படுக்கவச்சிட்டு வரலாம்னு…” என்றதும் முருகய்யனின் கோபம் சற்றே மட்டுப்பட,
“கவனமா இருக்கனும் ராசு. புரியுதா?…” என எச்சரித்துவிட்டு செல்ல மின்னொளியை நெருங்கியவர் அவளின் காலில் தலையணையை சரியாய் வைத்துவிட்டு போர்வையை எடுக்க அதனை வாங்கியவள்,
“நீங்க போங்க…” என்றாள் மின்னொளி. கோபமாய் சொல்கிறாளோ என அதற்கும் பதறி அவர் பார்க்க என்றைக்கும் போலத்தான் இருந்தது அவளின் முகம்.
“போங்கன்றேன்ல…” மீண்டும் சொல்ல வெகு வருடங்களுக்கு பின் முதன்முதலில் அவளின் பேச்சு அவரிடம். சற்றே கனிவாய் இருந்ததை போன்ற தோற்றம் அந்த குரலில். அமைதியாக சென்றுவிட்டார் ராஜாத்தி.
மகனை தட்டிகொடுத்தபடி அவர் படுத்திருக்க அரைமணி நேரம் கழித்து உள்ளே வந்த முருகய்யன் சட்டையை கழற்றிவிட்டு கைவைத்த பனியனும், கைலியுமாய் மாறி,
“ராசு, நீ இங்கன புள்ளையோட ஒறங்கு. நா அங்கன படுத்துக்கிதேன். புள்ளைக்கு ராத்திரிக்கு எந்திச்சு தண்ணிகின்னி வேணுமுன்னா மோந்து குடுக்க ஆளு வேணு. செரியா?…” என்றுவிட்டு பாய் தலையணை, போர்வையுடன் வெளியேறிவிட ராஜாத்திக்கு உறக்கமே வரவில்லை.
அங்கே ஹாலில் ராஜாத்தி சொல்லியதை போல தான் அழகு பாட்டி தரையில் படுத்திருந்தார். தாயை பார்த்ததும் அவரருகே தனக்கு விரிப்பை போட்டுவிட்டு வந்து படுக்க,
“ஏம்லே அதேன் கட்டிலு இருக்குல. அங்க மொடக்கறது…” என பாட்டி சொல்ல,
“யே நீ மொடக்கத்தான?…” மகனும் சொல்ல,
“போலே கோட்டிப்பயலே…” என்று திரும்பி படுத்துக்கொண்டார்.
இவை அனைத்தையும் மூடிய விழிகளுக்குள் உணர்ந்தபடி உறங்காமல் மின்னொளி.
——————————————————-
“நெசமாவாலே சொல்லுத? அந்நேரமே ஒத்த கொரலு குடுத்திருந்தேனா சொன்னவ வாய் வெத்தலபாக்கு போட்டுருக்கும்ல. என்னத்துக்குல புடிசாமியாட்டம் நின்னியாம்?…” என சுப்புவை மொத்தினான் அருள்.
“எனக்கென்னலே தெரியும்? நீ இன்னிக்கு செரியே இல்ல. எனக்கே நீதானான்னே இருந்துச்சு…” என்றான் இன்னமும் ஆச்சர்யம் குறையாதவனாக.
“நீ என்னவே சரியான கூவ. அக்கா வெசனப்படுமேன்னுட்டுத்தேன் அவள தூக்கிட்டு போனேன். இல்லனா யாரு இருக்கா அங்கன பாக்க. அதுவும் ரெண்டு காலுலையும் கவுத்திருக்கா ராங்கிபுடிச்சவ…”
“இங்காரு அருளு, அதேன் அக்கா மூஞ்சியே செரியில்ல. ஒருமாரியாய்ட்டு…” என்றவன்,
“நீயும் அந்த புள்ளைக்கிட்ட அனுசரணயா பேசினியா, எனக்கே அப்பிடித்தானோன்னு தோணிட்டுலே. லே அருளு, நெசத்த சொல்லுலே. ஒ மனசுக்குள்ள அந்தமாரி ஏதும்…”
“மொத ஒ திருவாய்க்கால சாத்துலே. பேசறான் பேச்சு. போயும் போயும் அவளப்போயி…” என்றவன் அதை கேட்பதையும், கற்பனையிலும் நினைத்துப்பார்க்க விரும்பாதவனாக,
“வேற பேசுலே. அந்த பேச்சே புடிக்கல…” என்றவனை விச்சித்திரமாய் பார்த்தான் சுப்பு.
பின்னே முறைப்பெண் மின்னொளி என்றாலே எரிமலையென வெடித்து சிதறுபவன் இன்று நமுத்துப்போன பட்டாசாய் பேசியவிதம் சுப்புவை திகைக்கத்தானே செய்யும்.
“இதுதான் லவ்வோ? இப்பிடித்தான் இருக்குமோ? ஐயோ இதையெல்லாம் பாக்க விடாமலே பதினெட்டு வயசுல புடிச்சு கண்ணாலம் கட்டி வச்சுட்டானுங்களே? நா என்ன செய்யிவேன்…” என்ற புலம்பலை மனதிற்குள்ளேயே புலம்பியபடி ஊரை நோக்கி செலுத்தினான் ஆட்டோவை.