கடல் – 7
ஒரு மாதம் கடந்திருந்தது. மின்னொளியின் பாதங்களில் காயத்தின் சுவடுகள் இன்னும் அப்பட்டமாய் இருந்தது.
ராஜாத்தி அவளை எந்த வேலையும் பார்க்கவிடவில்லை. காலையும் மாலையும் முதல் வாரம் ராஜாத்தியே வருபவர்களுக்கு பாலை ஊற்றிவிட்டு கணக்கையும் எழுதிவிடுவார். அதனை மின்னொளியிடம் தந்துவிட மற்றதை அவள் சரி பார்ப்பாள்.
அதன் பின் வீட்டில் முடிந்தளவு வேலைகளை அழகுப்பாட்டியிடம் சொல்லி பங்கிட்டு செய்தவளுக்கு வீட்டிற்குள்ளேயே இருப்பது கால்களை கட்டிப்போட்டதை போல இருந்தது.
மறுவாரத்தில் இருந்து பால் ஊற்ற அவளே வந்து அமர்ந்துகொண்டாள். அனைவரும் வந்து அவளிடம் ஓரிருவார்த்தை பேசிவிட்டு தான் சென்றனர். அதையும் ராஜாத்திக்கு அஞ்சி அந்த ஓரிரண்டு வார்த்தைகளுடன் நிறுத்திக்கொண்டனர்.
காசியாத்தா கூட மறுநாள் வந்துவிட்டார் அவளை காண்பதற்கு. அனைவரும் பார்த்து பார்த்து அவளை கவனிக்க அதிலும் முருகய்யன் வேறு மகளின் கால் சரியாகிவிட்டதா என நொடிக்கொருதரம் பார்த்து வைத்தார்.
வயல்வரப்பு, காய்கறி தோட்டம், தோப்பு என பம்பரமென சலிக்காமல் சுற்றுக்கொண்டு வருபவள் ஓரிடத்தில் முடங்கி கிடப்பது வேறு அவரை வருத்தியது.
“கெழவி நீ பெத்தவருட்ட சொல்லிவைய்யி. என்னத்துக்கு மூக்க சீந்திட்டு சுத்தறாரு? எல்லாஞ்சரியாகிடும். இவரு கண்ண கசக்குனா மாத்திரம் என் நோவு தீந்துடுமா? ஏங்கெழவி?…” என அலுத்துக்கொள்ள,
“அவனுக்கு உசுருடி நீயி. அப்பிடித்தேன் இருப்பான். நீ ஏம்த்தா கண்டுக்கறவ?…” என பதிலுக்கு பேச மின்னொளி முறைப்புடன் நகர்ந்துவிடுவாள்.
இதில் ராஜாத்தி பார்த்த வேலை அதைவிட கவனம். அருளை அங்கே வர அனுமதிக்கவே இல்லை. அதையும் மீறி இளவரசனை பார்க்கவென வந்துவிட்டால் ராஜாத்திக்கு ஏனோ அத்தனை படபடப்பாய் இருக்கும்.
சுப்பு சொல்லி அருள் கேட்டதிலிருந்து அவனும் மின்னொளியை அதன் பின்னர் எப்படி இருக்கிறாள் என பார்க்கவோ கேட்கவோ இல்லை.
நடந்ததை சுப்பு சொல்லாமல் இருந்திருந்தாலே அவன் அப்படித்தான் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பான்.
அனைத்தையும் சொல்லி அக்காவின் பயத்தையும் அவன் சுட்டிக்காண்பிக்க முதலில் ராஜாத்தியின் பயத்தினால் பரிதாபம் கொண்டவன் பின்பு அந்த பரிதாபம் கோபமாக மாற ஆரம்பித்தது.
அதற்கு சிகரம் வைத்ததை போல ராஜாத்தி நடந்து கொண்டது வேறு அவனை பயங்கர கோபமாக்கியது.
அன்று வழக்கம் போல இளவரசனை பார்க்க வர இவனின் வருகையை கண்டு வழக்கமான கலக்கம் ராஜாத்திக்கு.
மின்னொளி எங்கே என அவர் பார்வையால் தேட வீட்டிற்கு பின்னால் உள்ள மாட்டுத்தொழுவத்தில் அவள் இருப்பதை கண்டுகொண்டார்.
வந்தவனை வா என்று கூட சொல்லாமல் அவர் மின்னொளியை பார்வையால் துழாவ அருளுக்கு சுள்ளென பேச வாய் வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. ஆனால் அங்கே வைத்து வேண்டாம் என அடக்கிகொண்டான்.
“இந்தாக்கா ஆத்தா கருவாடு, மாங்கா போட்டு உப்புச்சாறு செஞ்சுச்சு. இங்க வாரேன்னு தெரிஞ்சாங்கடடி ஒனக்கும் ஊத்தி குடுத்துவுட்டுச்சு…” என கொண்டுவந்ததை நீட்டியவன் இளவரசனை தேட,
“என்ன சோதி? என்ன தேடற?…” என்றார் ராஜாத்தி. அவரை முறைத்தவன்,
“என் மருமவனை தேடறேன். நீ ஆரைன்னு நெனச்ச?…” என நேரடியாக கேட்க,
“அவனா, பின்னாடிதேன் இருப்பானாட்டு இருக்கும். நா போயி கூட்டிவாரேன்…”
“ஒன்னு வேணா, அவனே வரட்டும்…” என சொல்லி தரையில் அமர்ந்தவன் தன் அக்காவை பார்க்க,
“சோலி ஒன்னுமில்லியாக்கும்? ஒக்கார சொன்னா சுடுதண்ணிய கொட்டினவனாட்டம் பறப்ப. இன்னிக்கு என்னவாம்?…” அவன் கிளம்பிவிட்டால் தேவலை என்னும் தினுசில் என்ன பேசுகிறோம் என தெரியாமலே பேசிவைக்க முணுக்கென்று கோபமானது அவனுக்கு.
வேகமாய் எழுந்தவன் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பதில் பேசாமல் கிளம்ப அதனை பார்த்து அவனின் வேகத்தில் ராஜாத்தி பயந்துபோனார்.
“சோதி வந்து…” என சமாதானம் செய்ய வர,
“இனி இங்க வந்தா என்னன்னு கேளு…” என வெளியேறப்போக,
“வாய்யா சோதி. இன்னிக்குத்தேன் உன்னைய நெனச்சுட்டே இருந்தேன். வரசொல்லன்னும்னுட்டு. நல்லதா போச்சு…” என அழகுப்பாட்டி வந்துவிட அவரிடம் முகம் திருப்ப முடியாமல்,
“சொல்லுத்தா என்ன விசயம்ன்னு…” என அவரிடம் பார்வையை திருப்ப,
“பெருசா ஒண்ணுமில்லைய்யா, பின்னால கொட்டாயில ஓட்ட விழுந்துபோச்சு. ஓல மேய ஆளு அம்புடமாட்டிக்குது. இங்க இருக்க ஒருத்தே ஏனோதானோன்னுதேன் மேயுவான். அதேன் ஒனக்கு தெரிஞ்சவனா இருந்தா சோலி சுளுவா இருக்கும் பாரு…” என சொல்ல அருள் யோசித்தான்.
“ஏம்த்தே அவரு வரவும் சொல்லுங்காட்டி என்ன? சோதிக்கு சோலி கெடக்கும்ல. நம்மவீட்டு சோலியவே பாத்துக்கிட்டு இருந்தா போதுமா? அவேன் கெளம்பட்டும்…” என பட்டென முகத்தை சுருக்கிக்கொண்டு பேச,
“இந்தாருடா, இதென்னடி புதுசா? யே ஒந்தம்பிட்ட சொன்னா ஒங்கோரு கொறஞ்சிருமாக்கும்…” என்று அழகுப்பாட்டியும் பட்டென வார்த்தையை விட அருள் தான் திடுக்கிட்டு போனான்.
இத்தனை வருடங்களில் மாமியார் மருமகளுக்கு இடையில் எந்தவித சங்கடங்களும் இன்றி தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த பாதையில் இன்று சிறு சலசலப்பு ஆரம்பித்துவிட்டது.
காரணம் தன் அக்கா என்று வருந்தியவன் ராஜாத்தியை முறைக்க அவரின் கண்கள் கலங்கிவிட்டது. அதில் இன்னுமே அவனின் கோபம் அதிகமாகியது.
“சரிய்யா, தப்புத்தேன். நா எம்புள்ளைட்டையே சொல்லிக்குதேன். நீ ஒன்னோட சோலிய பாரும்மைய்யா…” என சொல்ல,
“ஐயோ அத்தே, அவனுக்கு…” ராஜாத்தி பதற,
“இருக்கட்டும்த்தா, எல்லாருக்கும் கொள்ள சோலி இருக்கத்தேன் செய்யும். ஏதோ சொல்லிட்டேன். செரி விடு…” என்று சொல்லிக்கொண்டிருக்க இளவரசன் வந்துவிட்டான்.
“மாமோய்…” என துள்ளிக்கொண்டு வந்தவன் அப்படியே அவன் மேல் ஏற அருளும் வாரி தூக்கி அணைத்துக்கொண்டான்.
“சாமி, நல்லாருக்கியாய்யா…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் அருளின் கையை பிடித்து இழுத்தபடி,
“வா மாமா, பின்னாடி போவோம். அங்க வெளாட. ஆத்தா அங்க ஆத்தா…” என்று பிரித்து பிரித்து அவன் சொல்ல அவன் மின்னொளியை சொல்கிறான் என புரிந்த அருள்,
“மாமாவுக்கு சோலி கெடக்குய்யா. பொறவு வருவேனா. செரியா…” என அவனை செல்லம் கொஞ்ச முருகய்யனும் வந்துவிட்டார்.
“வா மாப்ள…” என வரவேற்றதும் அப்போது தான் தன் தம்பியை வாவென கூட அழைக்காததை ராஜாத்தி உணர்ந்தார்.
மன்னிக்கும் பாவனையில் அருளை பார்க்க அவன் கண்டுகொள்ளவே இல்லை. முருகய்யனுக்கு தலையசைப்பை தந்துவிட்டு அமைதியாக நின்றான்.
“அய்யா…” என அழகுப்பாட்டி முருகய்யனை அழைத்து,
“கொட்டாயி ஒழுவுது சாமி. ஓட்ட விழுந்துருக்கு. கூர மேயனும். மேயரவன்ட்ட நல்ல ஓலையா கொண்டார சொல்லிடு. இல்லனா ஒம்மவளே அந்த சோலிய பாத்துடுவா…” என மகனை மட்டுமே பார்த்து சொல்ல அருளுக்கு சுறுசுறுவென ஏறியது.
“ப்ச், கெழவி அதேன் எங்கிட்ட சொல்லிட்டல. பொறவு எதுக்கு அவுகட்ட ஒருக்கா? ஒரு கொட்டாயிக்கி எத்தனபேத்த மேய விடுவ? கம்முன்னு இருக்கமாட்ட?…” என குரலுயர்த்தி அருள் சத்தமிட ராஜாத்தி அரண்டுபோனார்.
முருகய்யன் புரியாமல் பார்க்க அழகுப்பாட்டிக்கு அவனின் உரிமையான அதட்டல் அந்த நிமிடம் அத்தனை நிம்மதியை கொடுத்தது.
“ஏம்லே ஒனக்குத்தேன்…” என்றவரை பார்வையால் மிரட்டி வாயடைக்கசெய்து,
“மூச், கம்முன்னு இருக்கனும். சொல்லிட்டல. பாத்துக்கிடுவேன்…” என அதட்டல் போட்டு ராஜாத்தியை பார்த்தவன் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு,
“மோர் இருந்தா கொண்டாக்கா அவுகளுக்கும் சேர்த்து…” என முருகய்யனுக்கும் சொல்ல,
“உக்காரு மாப்ள, நின்னுக்கிட்டே இருக்க…” என்றவரை மறுக்கமுடியாமல் அமர்ந்ததும் தேங்காய் ஏற்றுமதியை பற்றி பேச ஆரம்பித்தார்.
சட்டென அவர்களுக்கு மோரை கடைய உள்ளே செல்ல அழகுப்பாட்டி அங்கேயே அமர்ந்துகொண்டார்.
இருவருக்கும் மோரை பெரிய மண்குடுவையில் ஊற்றி கொண்டுவந்து தர வாங்கி குடித்துக்கொண்டே அவரின் கேள்விளுக்கு பதில் பேசிக்கொண்டிருந்தான்.
ராஜாத்தி இளவரசனை தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.
அதே நேரம் பின்வாசலில் இருந்து உள்ளே வந்த மின்னொளி அருள் இருப்பதை கண்டும் காணாததை போல அவனை தாண்டிக்கொண்டு அடுக்களையை நோக்கி தண்ணீர் குடிக்க சென்றாள்.
அவளின் கொலுசொலியில் சிறிது கவனம் சிதறியவனின் மனது அவனறியாது அவளின் கால்கள் எப்படி இருக்கிறதென அறிய விழைய தூக்கி சொருகிய பாவாடையின் கீழ் நன்றாய் தெரிந்த பாதத்தை உற்று நோக்கினான்.
அவனின் பார்வை மொத்தமும் அவள் நடந்துசெல்வதிலேயே நிலைக்க தன்னை தாண்டி செல்லும் வரை யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் மின்னொளி காலை மட்டுமே பார்த்தான்.
காயம் நன்றாக ஆறி மேல் தோல் கருப்பாய் லேசாக அங்குமிங்கும் உரிந்து இருந்தது. மற்றபடி பெரிதாய் எதுவும் இல்லாமல் போக அருளின் மனது ஏதோ ஒரு வகையில் சமாதானம் ஆனது.
முகத்தில் சிறு நிம்மதியும் ஆசுவாசமும் பரவ மீண்டும் முருகய்யனிடம் கவனத்தை செலுத்தினான்.
மின்னொளி தண்ணீரை குடித்துவிட்டு அங்கிருந்த காய்கறி குப்பைகளையும், ஒரு வாளியில் தவிடையும் நிரப்பி அதையும் தூக்கிக்கொண்டு மீண்டும் அருள் இருக்கும் இடத்தை தாண்டிக்கொண்டு செல்ல பிடிக்காமல் முன்வாசல் வழியாக அவள் வெளியேறிவிட்டாள்.
அவள் தலையை கண்டதிலிருந்து தன் தம்பியின் முகத்தையே ஆராய்ந்தவண்ணம் இருந்த ராஜாத்தியின் மனது இருண்டது அருளின் அந்த சிறு செயலில்.
அருள் அறியாமல் ராஜாத்தி கவனித்தார் என்றால் ராஜாத்தி அறியாமல் அவர்கள் இருவரையும் அழகுப்பாட்டி கவனித்தார்.
அருள் மின்னொளியின் காலை கவனித்ததும், அவனின் கவனிப்பை கண்டு ராஜாத்தி அதிர்ந்ததும் என இரண்டையும் ஒரே சேர பார்த்தவருக்கு கவலையும், சந்தோஷமும் ஒருங்கே தோன்றியது.
தன் ஆசை பெரிதுதான் என்றாலும் அவரால் ஆசைப்படாமல் இருக்கமுடியவில்லை. முன்பெல்லாம் இந்த எண்ணம் அவருக்கு தோன்றவில்லை. சமீபமாய் அருளையும், மின்னொளியையும் சேர்த்த பேச்சு என்று எழுந்ததோ அன்றிலிருந்தே மனதிற்குள் உறங்காமல் நிறைந்திருந்தது இந்நினைவுகளும், ஆசையும்.
அதே நேரம் ராஜாத்தியின் எண்ணத்தையும் தவறென்று அவரால் சொல்லமுடியவில்லை. ஒரு சகோதரியாக தன் தம்பியின் எதிர்கால கலக்கம் அவருக்கு உள்ளதை சரியாக புரிந்துகொண்டாலும் ராஜாத்தியின் மேல் வருத்தம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை அவரால்.
பேத்தியா? மருமகளா? என்று வருகையில் அவரின் முழு மனதும் பேத்தி மட்டுமே. அவளின் எதிர்கால வாழ்வு மட்டுமே. ஆனால் இவை எல்லாம் நிகழவேண்டுமே?
ஒரு பெருமூச்சுடன் அருளை அவர் பார்த்தபடி இருக்க ராஜாத்திக்கு தான் அவனை அங்கே இருக்கவிட முடியவில்லை. மீண்டும் மின்னொளி வருவாளோ என பதறி பார்த்து பின் தம்பியிடம்,
“கெளம்பனும்னு சொன்னியே. நேரமாவாலையாலே?…” என கேட்க,
“அவனே சாவாதானமா ஒக்காந்துருக்கான். செத்த நேரம்ந்தேன் செலாத்தலா ஒக்காரட்டுமே. நீயேன்டி முடுக்கப்பாக்குதவ?…” அழகுப்பாட்டி வாயை திறக்க ராஜாத்தி மௌனமாகிவிட்டார்.
“அதானே? ஏம்த்தா மத்தியான நேரமாவுதுல. சாப்புட்டு போவட்டும். எதுக்கு வெரட்டுற மாதிரி பேசுத?…” என முருகய்யனும் கேட்க அருளுக்கே எரிச்சலாகிபோனது ராஜாத்தியின் செய்கையில்.
“என் மேல் என்ன ஒரு நம்பிக்கை இவளுக்கு?” என கோபம் கோபமாய் வந்தது அவனுக்கு.
“இல்ல, நாந்தேன் வந்ததும் பொறப்புடனும்னு சொன்னே. அதேன் அக்கா சொல்லுச்சு. சோலி கெடப்புல கெடக்கு…” என தமக்கையை விட்டுகொடுக்காமல் அவன் பேச,
“செரித்தேன் அப்ப…” என முருகய்யன் சொல்லியதும் அருள் எழுந்துகொண்டான். அழகுப்பாட்டியை பார்த்தவன்,
“ரெண்டுநாளுல ஆளு புடிச்சு அனுப்பிவிடுதேன். பாத்துக்கிடுங்க…” என பொதுவாய் சொல்லுவதை போல சொல்லி வாசலுக்கு செல்ல அவனின் பின்னே ஓடினார் ராஜாத்தி.
அப்பொழுதும் விடாமல் மின்னொளி முன்பக்கம் இருக்கிறாளா என தேடி தம்பியை பார்க்க அதற்கும் மேல் பொறுக்கமாட்டாமல் அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான் அருள்.
“ஏம்த்தா உனக்கென்ன கோட்டியா புடிச்சுக்குது? சுத்த வெவரங்கெட்டகணக்கா சுத்திவார?…” என்று வாசலில் வைத்து கத்த,
“எதுக்குலே எரையுத? கம்முன்னு பேசமாட்ட?…” என ராஜாத்தி சுற்றிலும் பார்த்துவிட்டு கேட்க,
“என்னிய பாத்தா அந்த ராங்கிக்காரி பின்னாடி சுத்தற மாதிரி தெரியுதோ?…” என்றான் இன்னும் குறையாத கோபத்துடன்.
“கோமிக்காதலே சோதி?…”
“இல்ல பொம்பளசோக்குக்கு அலையுதவனா? அசிங்கப்படுத்துத நீ…” என வருத்தமும் கோபமுமாய் சொல்ல,
“என்ன வார்த்தல பேசுத? நாக்க வெட்டிப்புடுவேன்…”
“நீ ஏம் பேச வெக்கித? இனி ஒன்ன பாக்க கூட இந்த பக்கம் வந்தேனா என்னன்னு கேளு…”
“சோதி, இருய்யா…” ராஜாத்திக்கு கண்ணீரே வந்துவிட்டது.
“ப்ச், இந்தா கண்ண தொட மொத. ஆராச்சும் பாத்து என்னன்னு கேட்கமுன்ன. ஒனக்கு என்னதேன் ஆச்சு?…” என அரட்டி பின் ஆயாசமாய் கேட்டுவிட்டு மேலும் திட்டமுடியாமல் ஒரு கையால் தன் தலையை அவன் அழுத்தமாய் பற்றிக்கொண்டு நின்றான்.
“இப்ப என்ன? நா என்னிக்காச்சும் அவக்கிட்ட பல்ல காட்டிருக்கேனா? இல்ல எசவா பேசிருக்கனா? அன்னிக்கு ஒம்புருஷன் இருந்திருந்தா இந்த பக்கம் கூட வந்திருக்கமாட்டேன். அவரும் இல்ல. அவளுக்கு ஒண்ணுன்னா நீதான கெடந்து சீரழியுவ? ஒனக்குவேண்டித்தேன் அவள தூக்கிட்டு ஓடுனேன். இல்லன்னா பச்சப்புள்ளைய வச்சுக்கிட்டு நீதேன் பாடுபடனும்…”
“சோதி ஊர்ல…”
“எவனும் என்னவும் பேசுதான். எல்லாத்தையும் காதுல போடுவியா? இங்காரு மொத நீ நெலையா நில்லு. எதையாச்சும் நெனச்சுட்டு கூறுகெட்டவளாட்டம் இருக்காத…” என அவரின் கண்ணீரை துடைக்க,
“நெசமாத்தேன் சொல்லுதியா?…”
“நீ வந்து அவள கட்டுன்னு என் தலையில கல்ல தூக்கி போடாம இருந்தா போதும்த்தா. பெரும்புண்ணியம்தேன்…” என சிரிக்க,
“நானா? ஒனக்குத்தேன் கோட்டிலே. நா என்னத்துக்கு சொல்லபோறேன்?…”
“ஒன்னிய நம்பமுடியாதுத்தா. நம்பவே முடியாது…”
“போலே சோலிய பாத்துக்கிட்டு…” என சஞ்சலம் மறந்து அவனை மிரட்ட,
“அதத்தேன் வந்தாங்காட்டிருந்தே சொல்லுதியே. சோலிக்குத்தேன் போறேன்…” என்றவன்,
“இங்காருத்தா, கெழவி ஒன்ன மவளா பாத்துட்டுருக்கு. அதுக்காண்டினாலும் கம்முன்னு இரு. எப்ப இருந்து இம்புட்டு பேசுத நீ? எனக்கே ஆடிப்போச்சு. பாவமில்ல அது…” என அழகுப்பாட்டிக்கு பரிந்து பேச,
“செரிதேன், நா பாத்துக்கிடுதேன் சோதி. இப்ப எதுவும் நெனப்புல இல்ல. நீதேன் சொல்லிட்டியே…” என தெளிவாய் பார்க்க,
“அப்ப நாளான்னிக்கு ஓலவேய நானும் கூட வந்தா ஒண்ணுமில்லங்கற…”
“இங்க வர நீ என்னைய கேட்கனுமாக்கும்? கூடிப்போச்சுலே…” என்று அவனின் முதுகில் அடிக்க சிரித்தபடி அங்கிருந்து சென்றான் அருள்.
அவன் சென்ற பின்பு உள்ளே சென்ற ராஜாத்தி அனைவருக்கும் உணவை எடுத்து வைக்க அவரின் முகத்தில் இருந்த சிறு மகிழ்வே அழகுப்பாட்டிக்கு மனதினுள் யோசனையை கொடுத்தது.
மனதினுள் தங்களது குலதெய்வத்தை வேண்டியவர் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு பேத்தியை தேடி சென்றார்.
மேலும் இரண்டு மாதங்கள் கடக்க அன்று மின்னொளி காய்கறி தோட்டத்திற்கு சென்று உரமிட்டு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டிற்கு தேவையானதை பறித்துக்கொண்டு வர வரும் வழியில் கிணற்றடியின் பின்னால் இருந்த மோட்டார் ரூமினுள் இருந்து ஏதேதோ சில சப்தம் கிசுகிசுப்பாய் கேட்டது.
“லே அமுக்குணி இங்க யாரோ சலம்பிட்டு கெடக்கானுவ…” என்றதும் அவன் எட்டிப்பார்க்க முனைய,
“டேய் சட்டுன்னு எட்டிப்பாக்காத. பொறு…” என்றவள் வேறு யாரும் தூரத்தில் இருக்கிறார்களா என்று தேட அங்காங்கே சிலர் கடடுவேலை பார்த்தபடி இருந்தனர்.
“லே, கூப்பிடற சத்தத்துக்கு கூட்டம் சேரும்தேன். எட்டி எவேன் எவேன் இருக்கான்னு பாரு…” என சொல்லவும் மெதுவாய் எட்டிப்பார்த்துவிட்டு வந்தவன்,
“எக்கா, எல்லாவனும் நல்லா சரக்கு ஏத்திருக்கானுங்க போல. அன்னம் மவேன் கூட கெறங்கி கெடக்கான்…” என்றதும் ஆச்சர்யமாய் பார்த்தவள்,
“எவ்வளோ தெகிரியம் இருந்தா தோட்டத்துக்கிட்ட தண்ணியடிப்பானுங்க…” என தாவணியை இடுப்பில் சொருகிக்கொண்டு அனைவரையும் அழைக்க பார்க்க,
“எக்கா, எக்கா, பாவம்க்கா தருமன். சோக்காளிக செரியில்ல. அவென் அம்மாவுக்கு தெரிஞ்சா அம்புட்டுத்தேன். வாக்கா நாம போயிடுவோம்….”
“என்னவே ரொம்ப பிழியிற? என்ன அவென் காத்து ஒனக்கடிக்குதோ? ஒங்கம்மாட்ட சொல்லிப்போடுவேன்…”
“அட கேளுக்கா, பாவத்த. நமக்கு என்னத்துக்கு? வான்றேன்ல…” என அவளை இழுத்துக்கொண்டு சென்றான். ஆனாலும் மின்னொளிக்கு தர்மராஜின் மேல் அத்தனை கோபம்.
என்ன வளர்ந்திருக்கிறான் இவன் என? அதை விட என்ன வளர்த்திருக்கிறார் இவனை என்று அன்னத்தின் மீதும் கோபம்.