கடல் – 8
தர்மராஜனை பற்றி அன்னத்திடம் முதலில் சொல்லிவிடவேண்டும் என்றுதான் நினைத்தாள் மின்னொளி. ஆனால் தான் சொல்வதை நம்பாமல் தன்னிடமே பாய்வார் என்பதால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக்கொண்டாள் அவள்.
ஆனாலும் அவனை பார்க்கும் நேரமெல்லாம் முறைப்புடனே தான் பார்த்து செல்வாள். இவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் அவனும் கடந்துவிடுவான்.
இரண்டு நாட்கள் கழித்து மின்னொளியின் தாய்மாமன் கணேசன் தன் மனைவியுடன் வீட்டிற்கு வந்திருந்தான்.
இளவரசன் பிறந்த அன்று பார்க்க வந்தது. அதன் பின்னர் இன்றுதான் வருகிறான். முத்துநகை இறப்பிற்கு பின்னால் முழுவதுமாக அங்கு வருவதை நிறுத்தியவன் ஏதேனும் விசேசம் என்றால் மட்டுமே அங்கு வந்து சென்றான்.
அதுவும் மூன்றாம் மனிதனை போல தான் வந்து செல்வான். அதிலும் அவன் மனைவி தங்களுக்கு கீழ் தான் அனைவரும் என்னும் எண்ணம் கொண்டவள்.
கணேசனை திண்ணையில் அமர்ந்திருந்த அழகுப்பாட்டி அவர்கள் உள்ளே வரும் முன்பே பார்த்துவிட்டார்.
வாசலில் எவருடனோ பேசிக்கொண்டு நிற்பவர்களின் வருகையை நம்பமுடியாமல் பார்த்தவர்,
“ஏத்தா ராசு, இங்கன செத்த வாயேன்…” என உள்ளே குரல் கொடுக்க அப்போதுதான் சிறிது நேரம் தூங்கலாம் என செல்லவிருந்த ராஜாத்தி என்னவோ என ஓடிவந்தார்.
“சொல்லுங்கத்தே…” என்று கேட்டதும் வாசலை கை கட்டியவர்,
“பவிசுக்கு பொறந்தவனுக்கு இங்கன என்ன சோலியம்? அதுவும் அந்த பட்டத்துராணிய கூட்டிட்டு வந்துருக்கான்…”
“தெரியலயேத்த?…”
“காரணமாத்தேன் இருக்கும். எரும வாங்கமுன்ன நெய்யிக்கு வெல சொல்லுதவனாச்சே. சும்மாவா? சூதானமா பேசுறதா…”
“எதுக்கும் நா அவுகளுக்கு போன போட்டு சொல்லிருதேன்…” என்று உள்ளே செல்ல போக முருகய்யன் வண்டி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார்.
“ராசு அவனே வந்துட்டான் பாரு. வாரப்பவே தாக்கல் சொல்லிட்டுத்தேன் வந்துருக்கான் போல…” என வெற்றிலையை மடித்து வாய்க்குள் அதக்கிக்கொண்டார்.
முருகய்யன் வண்டியை ஓரமாக நிறுத்தவும் கணேசனும் அவன் மனைவியும் உள்ளே வரவும் சரியாக இருக்க.
“வா கணேசா, இப்பத்தான் வீட்டுக்கு வார வழி தெரிஞ்சதாக்கும். வாத்தா…” என வரவேற்று அவனின் மனைவியையும் சேர்த்து அழைக்க,
“அப்பப்ப வந்தாத்தேன் மட்டுமருவாதி எல்லா. இல்லாட்டி தொழுவத்துல கட்டின மாடா மதிச்சுடமாட்டீக…” என கணேசன் மனைவி குணசாலி பேச,
“என்னத்தா இப்புடி சொல்லுத?…”
“ப்ச், எத்தா…” என கணேசன் லேசாய் கடிந்து பேச ஆரம்பிக்க அவளின் முறைப்பில் கண்டிப்பை கைவிட்டவனாய் முகத்தை கெஞ்சல் பதத்திற்கு மாற்றினான்.
கணேசன் காரியவாதி. தனக்கு காரியமாகவேண்டும் என்பதில் கண்ணாய் இருப்பவன். ஆனாலும் பாசமும் இருக்கத்தான் செய்யும். அதை மறுப்பதற்கில்லை.
“வாங்கண்ணே, வாங்க மதினி. புள்ளை நல்லா இருக்காளா?…” என ராஜாத்தி கேட்கவும்,
“நல்லா இருக்கோம் ராசு. எங்க மருமவன காணோம்?…” என கணேசன் பதில் பேச குணசாலியோ முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“புள்ள மின்னு கூட தோட்டத்துக்கு போனான். வார நேரம்தேன்…” என்றார் ராஜாத்தி.
“ராசு குடிக்க எதாச்சும் கொண்டாத்தா?…” முருகய்யன் சொல்லி அவர்களை உள்ளே அழைக்க,
“வா கணேசா, எங்காரியத்துக்குத்தேன் வருவன்னு நெனச்சேன். பரவால்ல முன்னக்கூட்டியே வந்துட்ட…” என அழகுப்பாட்டி நக்கலாய் பேச,
“அட ஏம்த்தே?…” என சலிப்புடன் அவன் சொல்ல,
“இங்க வந்து வந்து ஓயாம ஒங்கள பாத்துக்கிட்டு இருந்தா எம்வீட்டு சோலிய ஆரு பாக்கறதாம்? வரவேண்டிய காரியத்துக்கு வராமலா போயிருவோம்…”
“அதான பல்லு அம்புட்டும் பதிலா கெட்டி வச்சிருப்பியே. ஒன்கிட்ட பேசி செவிக்க முடியுமாக்கும்?…” என அழகுப்பாட்டியும் பேச,
“ப்ச் என்னத்தா வந்தவுகட்ட வம்பு வளத்துக்கிட்டு?…” என்ற முருகய்யன் அவர்களை உள்ளே கூட்டிவர ராஜாத்தி தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
“சோறாக்கிட்டியா ராசு…” என மனைவியிடம் கேட்க,
“இதோ பேசிட்டே இருங்க சோறு மட்டும் வடிச்சிடறேன். கொழம்பு காய் எல்லாம் இருக்கு…” என வேகமாய் சமைக்க கிளம்ப,
“எங்களுக்கு அதுக்கெல்லா நேரமில்ல அண்ணே. ஒரு நல்லவிசயத்த சொல்லிட்டு அழைச்சுட்டு போலாம்னுதேன் வந்தோம்…” என்று வேண்டுமென்றே சொல்லிய குணசாலி கணேசனின் கையை சுரண்ட,
“அட இருக்கட்டும்த்தா எப்பவாச்சும் வாரீக. சாப்புடாம போனா நல்லாருக்காது…” என முருகய்யன் அத்தனை தன்மையாக பேசினார்.
“இருந்தாலும் வந்த விசயத்த மொத சொல்லிட்டு பொறவு சாப்புடறோம்…” என்ற கணேசன் ராஜாத்தியை அழைக்க கையை புடவை தலைப்பில் துடைத்தபடி வந்து நின்றார் அவர்.
“ஒங்க மருமவ பெரியமனுசியாகிட்டா. வார கடைசில தலைக்கி தண்ணி ஊத்தலாம்னு சோசியரு நேரம் கணிச்சு குடுத்துட்டாரு. மொத ஓங்கட்ட தான சொல்லனும். இவளுக்கென்ன அண்ணனா? தம்பியா? எதுனாலும் எடுத்துச்செய்ய மாமேன்னு மொறைக்கி நீங்க தான இருக்கீக…” என்றதும் மகிழ்ந்து போனார் முருகய்யன்.
இதை கேட்டுக்கொண்டிருந்த ராஜாத்திக்கும் அழகுப்பாட்டிக்கும் சட்டென மின்னொளி நினைவு தான்.
ஆனாலும் அதனை கண்பித்துக்கொள்ளாமல் சிரித்தமுகத்துடன் இருக்க நொடிநேர மாற்றமானாலும் குணசாலியுடைய கழுகு கண்களுக்கு அது தப்பவில்லை.
கடுகடுவென்று வந்தது அவளுக்கு. பட்டென பேச முடியாது மௌனமாய் நின்றாள். ஏதாவது பேசி செய்முறைக்கு வராமலோ? இல்லை செய்முறை குறைவாகவோ செய்துவிட்டால் என்ன செய்வது என்று வாயை கஷ்டப்பட்டு அடக்கினாள்.
“எல்லாரும் குடும்பத்தோட வந்துடனும். நீங்கதேன் இருந்து அம்புட்டும் நடத்திக்குடுக்கனும்…” என கணேசன் முருகய்யனின் கையை பிடித்துக்கொள்ள,
“அதுக்கென்ன கணேசா செஞ்சிட்டா போச்சு. என்னன்னா செய்யனும்னு சொல்லு. மாமன் அங்க வந்து எறக்கிடுதேன்…” என வெள்ளந்தியாக சொல்ல,
“அதான அவுகளுக்கு என்ன தெரியும்? இங்கன அப்படி ஒரு நல்ல சமாச்சாரம் நடந்தாத்தான என்ன செய்யறதுன்னு தெரிய? இங்க அதுக்குத்தேன் நாதியில்லாம போச்சு. என்ன மொறன்னு நாமதேன் எடுத்து சொல்லனும். அப்பத்தான அவுகளுக்கும் சபைக்கி நவுடுல கௌரவமா இருக்கும்…”
வேண்டுமென்றே பரிதாபம் கொள்வதை போல குணசாலி சொல்லி காண்பிக்க மற்ற அனைவரின் முகமும் சிறுத்துவிட்டது.
ராஜாத்திக்கு அப்படி ஒரு கோபம் அவர் எதுவோ பேச வரும் முன்னரே முருகய்யன் ஒற்றை பார்வை பார்க்க கலங்கிய கண்களுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
“இந்தாடி…” என வந்த அழகுப்பாட்டியையும் அடக்கியவர் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள படாதபாடுப்பட்டுப்போனார்.
அவரின் சங்கடம் புரிந்த கணேசன் மனைவியை ஒன்றும் சொல்லமுடியாமல் என்ன சொல்லி இவர்களை சமாதானப்படுத்துவதென புரியாமல் சில நொடி தடுமாறி பின்,
“மாமா அவ ஏதோ…” என்று வர,
“அட விடு மாப்ள, பொதுவா சொல்லிருக்கும் தங்கச்சி. நீ வா, வந்து ஒக்காரு. நீயும் ஒக்காருத்தா. மத்தத பேசுவோம்…” என அவர்களை உபசரித்தார்.
தன் ஆசை மனைவியின் உடன்பிறந்தவனின் குடும்பம் அல்லவா? பார்த்து பார்த்து கவனித்தார்.
இரண்டாம் அறைக்குள் அவர்களை அழைத்து வந்தவர் புதிதாய் வாங்கியிருந்த மரசோபாவில் அமர வைத்து பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டிருக்க குணசாலியின் பார்வை அந்த வீட்டை வலம் வந்தது.
அந்த சோபாவின் வேலைப்பாடு அத்தனை கவர்ந்திழுத்தது அவளை. அதை கைகளால் தடவிக்கொண்டே பார்த்தாள்.
அது மின்னொளி காலில் காயமான பொழுது முருகய்யனால் வாங்கிப்போடப்பட்டது.
சட்டென அமர்ந்து எழ வசதியா இருப்பதற்காக வீட்டிற்கு இன்னும் சில அத்தியாவசிய சாமான்களை வாங்கியிருந்தார். அது அந்த வீட்டின் எளிமையை இன்னமும் பகட்டாய் அழகாய் காண்பித்தது.
“என்னண்ணே வீடே மாறிப்போய் இருக்கு? கட்டிலு, அலமாரி, சோபாசெட்டுன்னு…” என கேட்க,
“அதுவாத்தா நம்ம மின்னு காலுல வடிகஞ்சி கொட்டிருச்சு…”
“ஆத்தே இது எப்ப?…” என அன்று தான் நடந்ததை போல வேண்டுமென்றே பதறியபடி கேட்க மனைவியின் நடிப்பில் கணேசனே அசந்துவிட்டான்.
பின்னே காசியாத்தா மின்னொளியை பார்க்க கிளம்பும் முன்னரே வந்து தகவலை சொல்லி பார்க்க போவதாகவும் சொல்லியிருக்க “தனக்கென்ன வேலை இல்லையா? இப்படி தேவையில்லாத விஷயத்தை வந்து ஏன் சொல்கிறீர்கள்?” என கேட்டு சண்டைக்கு கிளம்பியிருந்தாள்.
அவளின் வாய்க்கு பயந்தே காசியாத்தா தான் மட்டும் வந்துவிட்டார். போய் பார்த்துவிட்டு வரலாம் என்ற கணேசனையும் தடுத்துவிட்டாள். இப்பொழுது எதுவுமே தெரியாததை போல அவள் நடந்துகொள்ள வேடிக்கை பார்த்தான் அவள் கணவன்.
“அது ஆச்சுத்தா கொள்ள நாளு. இப்ப எதுக்கு? அப்ப வாங்கிப்போட்டதுதேன். வீட்டுக்கும் தேவப்படுதுல. ஆளு சனம் வந்துபோயி இருக்க எம்புட்டு நாளைக்கித்தேன் ஒன்னும் வாங்காம இருக்க?…” என கேட்க,
“சரிதான், எல்லா நல்லாருக்கு மாமா…” என கணேசன் சொல்ல குணசாலி வாயே திறக்கவில்லை.
என்றுமே அந்த வீட்டின் செழுமையில் அவளுக்கு ஒரு கண் தான். தனி அறைகள் இல்லை என்றாலும் மிக பெரிய வீடும் அதன் கட்டமைப்பும் அவளின் கண்களை உறுத்திக்கொண்டே தான் இருக்கும்.
ஆனாலும் அந்த ஏக்கத்தை ஆசையை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டாள். எதுவோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்ததை போல தான் முகத்தை வைத்துக்கொள்வாள்.
இன்றும் சுருங்கிய முகத்தோடு அலட்சியமாக பார்வையை சுழற்ற தூரத்தில் இரண்டு கட்டிலும் மெத்தையும் இருக்க அதையும் பார்த்தவளுக்கு எரிந்தது.
சற்று தள்ளி அடுக்களையில் ராஜாத்தி வேலை பார்ப்பதும் தெரிந்தது. இவளுக்கு வாழ்வை பாரேன் என எரிச்சலாய் பார்த்தாள்.
எப்போதும் ராஜாத்தியையும் பிடிக்காது, முத்துநகையையும் பிடிக்காது குணசாலிக்கு. முத்துநகை இருந்தவரை கணேசன் கூட அக்காவின் பாட்டுத்தான் பெருமையாய் பாடுவான்.
அதனை கொண்டே அவரை வெறுத்தவள் ராஜாத்தியை இரண்டாவதாக முருகய்யன் திருமணம் செய்ததால் மின்னொளியின் பொறுப்பு தங்களை சேர்ந்துவிடுமோ என அஞ்சி முத்துநகை இறப்பின் பின்னர் கணேசனை முழுதாய் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டாள்.
இன்றுவரை கணேசன் குணசாலி சொல்படிதான் நடப்பது. சிறிதளவு பாசம் இருந்தாலும் காட்டுவதற்கு யோசித்தான்.
முதலிலெல்லாம் இப்படியான பொருட்கள் அந்த வீட்டை நிறைக்காமல் இருக்கும் பொழுதே அத்தனை அம்சமாக இருக்கும். இப்பொழுது இவைகளை வைக்கவும் இன்னும் மெருகேறியதை போல தோற்றமளிக்க குணசாலியின் நெஞ்சம் வஞ்சமாய் பார்த்தது அவற்றை.
“என்ன மதினி நின்னுக்கிட்டே இருக்கீக? ஒக்காருங்க…” என இவள் நிற்பதை பார்த்து ராஜாத்தி வேகமாய் வந்து கேட்டார். ராஜாத்தியை மேலோட்டமாய் பார்த்த குணசாலி,
“நாங்க கெளம்ப வேணாமா? இப்படித்தேன் ஆடி அசஞ்சு வருவியா?…” என மிதப்பாய் கேட்க,
“இதோ முடிஞ்சிருச்சு மதினி, முட்டைய அட ஊத்திருக்கேன். எடுத்துட்டு வாரேன்…” என வேகமாய் சொல்லிவிட்டு ஓட குணசாலி கணேசனின் அருகே வந்து அமர்ந்தாள்.
ராஜாத்தியை விட மூன்று வயது இளையவள் தான். ஆனால் அண்ணனை கட்டியிருக்கும் காரணத்தால் அவளை மரியாதையுடன் தான் அழைக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்திருந்தாள்.
அதனால் எங்கும் எப்பொழுதும் குணசாலி தனக்கான மரியாதையை கேட்டேனும் பெற தவறுவதில்லை. அவளின் குணமறிந்து இவள் இப்படித்தான் என்னும் விதமாய் போனால் போகிறதென்னும் மரியாதை தான் அவளுக்கு வழங்கப்பட்டது.
முருகய்யன் வீட்டிலிருந்து சீர்வரிசை வரவேண்டும் என எதிர்பார்ப்பவள் அதை தான் கேட்காமலே அவர்கள் செய்யவேண்டும் என்றும் எதிர்பார்ப்பாள்.
கேட்கமாட்டேன், ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாய் இருக்கவேண்டும். இருந்தே ஆகவேண்டும். இதுதான் குணசாலி குணா இயல்பு.
சமையலை முடித்துவிட்டு பின்னால் உள்ள வாழை மரத்திலிருந்து இலைகளை கொண்டுவந்து கழுவிவிட்டு உணவு வகைகளையும் எடுத்துக்கொண்டு வந்தார் ராஜாத்தி.
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த குணசாலி எழுந்து சென்று தானும் உதவுகிறேன் என வரவே இல்லை. அந்த வீட்டின் எஜமானி போல அமர்ந்திருந்தாள்.
“அண்ணே வாங்க…” என ராஜாத்தி அழைத்ததும் கை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தனர்.
ஒரு குழம்பும் காயும் மட்டுமே என்று சொல்லியிருக்க அங்கோ சிறு விருந்தே தயாராக இருந்தது. சாதம் தயாராகும் முன்னர் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துவிட்டிருந்தார் ராஜாத்தி. உடன் பாயாசமும் கூட.
இப்படித்தான் செய்யவேண்டும் என்று தான் முருகய்யன் விரும்புவார். அதுவும் என்றாவது வரும் உறவு இவர்கள். நன்றாக கவனித்து அனுப்பினால் தான் மரியாதை என்பதால்.
உணவு வகைகளை பார்த்ததும் ஒருவித மெச்சுதல் குணசாலி முகத்தில் படர அதனை சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டவள் ஏதோ பரவாயில்லை என்பதை போல பார்த்தாள்.
முருகய்யனும் அவர்களுடன் அமர அனைவருக்கும் பரிமாறினார் ராஜாத்தி. இவற்றை தூரத்தில் இருந்து பொருமும் மனதுடன் பார்த்தபடி அழகுப்பாட்டி இருக்க,
“என்ன ராசு இது இந்த காயி அவியவே இல்ல? வெந்தத வேகாதத ஏனோதானோன்னு போடுதியோ?…” என வேண்டுமென்றே குறை கண்டுபிடிக்க,
“வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சமாக்கும்? உள்ளத அள்ளிக்கிட்டு போவியா? வந்துட்டா சிமித்திர…” என திண்ணையில் அமர்ந்திருந்த அழகுப்பாட்டி வாசலில் யாரையோ சொல்வதை போல சொல்ல குணசாலியின் முகம் கருத்தது.
அவளுக்கு தெரியும் தன்னை தான் சொல்கிறார் என்று. ஆனாலும் நேரடியா கேட்டு தானே அவமானத்தை தேடிக்கொள்ள வேண்டுமா என பல்லைக்கடிக்க,
“ஆத்தா, என்ன அங்க?…” முருகய்யன் கேட்க,
“வைக்கோலு ஓசி வேணுமின்னு வந்தா கம்முன்னு அள்ளிக்கிட்டு போவத்தான? எந்த காட்டு அருப்பு? மாடு திங்குமா? வவுறு நெறையுமான்னு வெளக்கமெல்லா கேட்டுக்கிட்டு நிக்கிதா இவ. வாங்க வந்தது ஓசி. நாய்க்கு எகத்தாளத்த பாரேன். அதேன் கம்முன்னு போறியா இல்ல வெறுங்கையா ஒதறிட்டு போறியான்னு கேட்டுக்கிட்டு இருக்கே…”
“செரி செரி, செத்த சத்தத்த கொற…” என்றுவிட்டு திரும்பியவர்,
“அட அங்கன என்னத்தையோ பாடுபேசுது…” என்று அவர்களை சாப்பிட சொல்ல குணசாலி ஒரு நிமிடம் பதறி போனாள்.
செய்முறை செய்ய தன் வீட்டில் அந்தளவுக்கு வசதி இல்லை. இவர்களானால் குறையாமல் சபை நிறைக்க செய்துவிடுவார்கள். ஏன் செலவை கூட ஏற்றுகொள்வார்கள்.
இப்பொழுது தேவையில்லாமல் பேசி இதையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்து அங்கிருந்து எட்டி அழகுப்பாட்டியை பார்க்க அவரோ பார்வையால் மிரட்டினார். கோபம் வந்தாலும் குணசாலி அமைதியாக சாப்பிட்டாள். வேறு வழி?
கையை கழுவிக்கொண்டு மீண்டும் வெளி திண்ணையில் வந்து அமர மின்னொளி இளவரசனுடன் வந்தாள். அவளை பார்த்த கணேசன் எழுந்து நின்று,
“நல்லாருக்கியாத்தா…” என கேட்க அவனை எதிர்பார்க்காதவள் மெலிதாய் புன்னகைத்து,
“நல்லாருக்கேன் மாமா…” என்றாள்.
கணேசன் மீது எப்பொழுதுமே மரியாதை தான். அது தன் தாயுடன் பிறந்தவர் என்பதாலா? இல்லை அவரை போன்ற ஜாடை என்பதாலா? ஏதோ ஒன்று கணேசன் பேசினால் நின்று இரண்டொரு வார்த்தை மரியாதையுடன் பேசிவிடுவாள். ஆனால் தானாக சென்று பேசமாட்டாள்.
“எதுக்கு வந்துருக்கோம்னும் ஒங்க மருமவட்ட சொல்லுதது…” என குணசாலி வேண்டுமென்றே சொல்ல சங்கடமாய் அவளை பார்த்தான் கணேசன்.
“இவரு சொல்லமாட்டாரு…” என நொடித்த குணசாலி,
“இந்தா மின்னு, எம்மவ செவ்வந்தி பெரியமனுசி ஆகிட்டா. அதுக்கு அழைக்கத்தேன் வந்தோம். இந்த வாரக்கடைசில தண்ணி ஊத்தறோம். நீயும் கூட வரலாம்…” என வாயை வைத்துக்கொண்டு இல்லாமல் குணசாலி பேச,
“அவ வரலையினா இந்த வீட்டுல இருந்து ஒரு சனம் வராது. ஒனக்கு தோதாகுமா?…” என அழகுப்பாட்டி விட்டேனா பார் என பேச,
“அட என்னத்தே அவதேன் கோட்டிப்புடிச்சு பேசுதான்னா நீங்களுமா? மின்னு வராம எப்புடி?…” என கணேசன் தாங்கி பேசி மனைவியை அமைதியாக இரேன் என்பதை போல பார்க்க அதற்கு மேல் பேச குணசாலி என்ன பைத்தியமா?
“அய்ய நா அந்தமேனிக்கா சொன்னேன்? இந்த புள்ள பொழுதுக்கு காடு,கரன்னு கெடையா கெடக்கும். நா இப்பிடி சொன்னாத்தேன் சுருக்குன்னு உரிமப்பட்டு வரும். அதேன்…” என சமாளிப்பாய் சொல்லி,
“மின்னு வராம இருந்துறாதத்தா. ஒத்த மாமேன் மவ. அவ சடங்குக்கு நீயி இல்லனா எப்புடி? ஒங்கம்மா இருந்தா ஒன்னிய இப்பிடி விட்டுருப்பாகளா?….” என சரியான இடம் பார்த்து அடிக்க அதற்கு மேல் மின்னொளி அங்கே நிற்கவில்லை.
“வாய வச்சுக்கிட்டு சும்மா கெடக்கமாட்டியாத்தா? ஒன்னிய யாரு அவ அம்மா பேச்ச எடுக்க சொன்னா?…” என கோபமாய் பேசியது கணேசன் அல்ல முருகய்யனே.
இதை எதிர்பார்க்காத குணசாலிக்கு பதட்டமாகிவிட்டது. இன்றைக்கென பார்த்து தன் வாயில் இப்படியாகப்பட்ட வார்த்தைகள் வரவேண்டுமா? என நினைத்து பயந்து பார்க்க,
“மாமா…” கணேசனின் தன்மையான அழைப்பில்,
“இம்புட்டு நேரம் கம்மின்னு தான இருந்தேன். ஒத்த வார்த்த பேசிருப்பேனா? எம்பொண்டாட்டி தம்பின்ற ஒத்த சொந்தம்ந்தேன் கட்டிப்போட்டுருக்கு மாப்ள. அதுக்குத்தேன் இந்த புள்ள பேச்ச கண்டும் காணாம போறேன். ஆனா எம்புள்ளைக்கு நேரா அது கலங்குறதாட்டம் பேசி வச்சா நா பொறுக்கமாட்டேன் பாத்துக்க…”
முருகய்யன் சொல்லியவிதம் குணசாலியை பலமாய் தாக்க அவரின் காலில் விழுந்துவிட்டாள் அவள்.
“அண்ணே கூடப்பொறந்த பொறப்பா மன்னிச்சுக்கிடுங்க. யே வாயில வசம்பத்தேன் தேய்க்கனும். கூறில்லாம பேசிப்போட்டேன். வேணுமின்னு இல்லண்ணே…” என கண்ணீர் விட,
“த்தா ப்ச், எந்தித்தா, இந்தா எந்திங்கறேன்ல. இந்த வீட்டுக்கு வந்துட்டு கண்ணீரோட போவாத. மனசே ஆறாது. கண்ணா தொட…”
“மன்னிச்சிட்டேன்னு ஒத்த வார்த்த சொல்லுண்ணே…” என விடாமல் நீலிக்கண்ணீர் வடிக்க,
“செரி விடு. என்னத்துக்கு பெரிய வார்த்தலாம் பேசிக்கிட்டு கெடக்க? விசேசத்துக்கு எல்லாரு நெசமா வருவோம். வெசனப்படாத. போயி புள்ளைய பாத்துக்க. நாங்க வாரோம்…” என சமாதானமாய் சொல்லிய முருகய்யன்,
“ராசு உள்ள கூட்டிப்போயி தண்ணி குடுத்து அனுப்புத்தா…” என சொல்லவும் ராஜாத்தியும் அவர் சொல்லியதை போலவே செய்தார். கூடவே குங்குமம் வைத்து புடவையும் பூவும், மஞ்சள் குங்குமத்துடன் தட்டில் வைத்து தந்து,
“நா குடுத்தேன்னு மருமவட்ட குடுத்துருங்க…” மதினியை விடுத்து வெறுமனே சொல்ல அதை கண்டுகொண்ட குணசாலி,
“என்னய்யா அழ வச்சீங்க? பார்த்துக்கறேன்” என மனதினுள் கறுவிக்கொண்டாள்.
“செரி, நாங்க கெளம்புதோம்…” என அவரிடம் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு சொல்லி வெளியே முகமெல்லாம் புன்னகையுடன் சொல்லிவிட்டு கிளம்பினாள். அவர்கள் சென்றதும்,
“இவளாம் என்ன சென்மமோ?…” என அழகுப்பாட்டி எரிச்சலாய் பேச,
“விடுத்தா நம்ம மொறைய நாம செஞ்சிட்டு வந்துருவோம். நீ புள்ளைய போயி பாத்து பேசு. அதுபாட்டுக்கு வெறிச்சுட்டு இருக்க போவுது…” என தாயை உள்ளே அனுப்பியவர் மனது மகளை எண்ணி கவலை கொண்டது.
அவருக்கு தெரியவில்லை இன்னும் மின்னொளி கடக்கவேண்டிய துன்பங்கள் எத்தனையோ இருக்கிறதென.
அதற்கு முதற்புள்ளியாய் பிள்ளையார் சுழியாய் இந்த சடங்கு வைபோகம் அமையவிருக்கிறது என்பதையும் அவர் அறியவில்லை.