கடல் – 9
மறுநாள் மாலை வழக்கம் போல தோப்பிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாள் மின்னொளி. அன்னத்தின் வீட்டை கடக்க அங்கே அவரின் வாசலில் நின்று குணசாலி பேசிக்கொண்டிருந்தாள்.
அவளை பார்த்தும் பாராதது போல மின்னொளி நடையை எட்டிப்போட இவளை கண்டுவிட்ட குணசாலி,
“என்னா மின்னு பாத்தும் பாக்காம போற?…” என வழிமறிக்க அதில் எரிச்சலானவள்,
“தெரியுதுல. பொறவு எதுக்கு வம்படியா நிப்பாட்டுதீக?…” என்றாள் வெடுக்கென்று. அவளின் கேள்வியில் முகம் விழுந்துவிட்ட குணசாலி,
“நிப்பாட்டாம?, பாத்த எடத்துல விசாரிக்காம போனா ஒ மாமேன் என்னியத்தான ஏசுவாரு. அதுக்குத்தேன். என்னதேன் இருந்தாலு நீ எனக்கு நாத்தி மவதான?…” என வேண்டுமென்றே கேட்க, இதை புரியாதவளா மின்னொளி?
“ஆமா, அதுக்கென்ன? வந்த சோலிய பாத்துட்டு போறதா விட்டுட்டு எங்கிட்ட என்னத்துக்கு ஒரசலு?…” என்று நகர பார்க்க,
“வவுறெரிஞ்சவட்ட போயி பாசத்த காமிக்க பாத்தியா? அவளே தனக்குன்னு ஒரு நல்லது நடக்கலன்னே அவுஞ்சு போயி கெடக்கா. நீ என்னத்துக்குத்தா இவட்ட வாய குடுக்க. நீ போயி ஆகவேண்டியது பாப்பியா…” என அன்னம் வார்த்தையை விட இரண்டெட்டு முன்னால் சென்றவள் திரும்பிவிட்டாள்.
“இங்க என்ன அவியுதுன்னு ஒனக்கு தெரியுமாக்கும்? இல்ல நீ பாத்தியா? ஒங்கிட்ட எதாச்சும் பேசினேனா? என்னத்துக்கு ஓரண்டைய கூட்டுத?…” என வந்துவிட்டாள் மின்னொளி.
“உள்ளத சொன்னா கொடையுதோ? நா பேசினா ஒனக்கேன் சுருக்குன்னு வருது?…” என அன்னமும் சரிக்கு சரியாய் இறங்க,
“என்னிய பேசினா நா பதிலுக்கு வராம வேற எவ வருவா? எனக்கு என்ன வந்தா ஒனக்கென்ன?…”
“வா, வந்து பாருடி. ஆமா ஒன்னைய சொல்லத்தேன் செய்யுவேன். என்னடி செய்யுவ? மூலையில ஒக்கார வக்கத்தவ ஒனக்கு இம்புட்டா?…” என வேண்டுமென்றே மின்னொளியை காயப்படுத்த அன்னம் தேவையில்லாமல் பேச மின்னொளி அதற்கு மேல் பொறுமை காக்கவில்லை.
“ஒனக்கேன் கவல கொல்லுதா? மொத ஒம்புள்ளைய ஒழுங்கா வளக்க முடியல. நீ என்னைய பேச வந்துட்ட? போயி அவன் என்ன பண்ணுதான்னு பாத்து திருத்த பாரு. பொறவு நா மூலையில மொடக்கறத வந்து பேசு. அதுவர வாப்பெட்டிய சாத்து…”
மின்னொளி படபடவென பேசிவிட்டு குணசாலி புறம் திரும்ப அவளோ இவளின் கோபத்தில் மிரண்டுபோய்,
“நா கெளம்புதேன்….” என்றதோடு அங்கிருந்து வேகமாய் நடையைக்கட்ட “அது” என்பதை போல மிதப்பாய் பார்த்த மின்னொளி அன்னத்தை பார்க்க,
“ஏன்டி…” என்று பாய்ந்துகொண்டு அவர் வர,
“செத்த அடங்குதியா? நானும் போனா போகுதுன்னு பாத்தா ரொம்பத்தான் எகத்தாளத்த கூட்டுத. நா சமயலன்னு சொன்னா ஐயோன்னு ஒக்காந்து ஒப்பாரி பாடுவேன்னு நெனச்சியா? அதுக்கு வேற ஆளப்பாரு. அதுக்கு முன்ன ஒம்புள்ளைய பாரு. பொறவு அடுத்த வீட்டு சங்கதிய தம்பட்டம் போடலாம்…” என்றுவிட்டு விடுவிடுவென நடந்துவிட்டாள்.
அன்னத்திற்கு தெரியும் மின்னொளி இல்லாததை பேசமாட்டாள் என்று. காரணமின்றி இப்படி வீதியில் வைத்து பேசிவிட என்னவாக இருக்கும் என்று ஒன்றும் புரியாமல் தலையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றார்.
தர்மராஜ் வரும் வரை அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருக்க அதற்குள் பால் கறக்க பால்காரரும் வந்துவிட வேலைகள் இருப்பதை நினைத்து வேகவேகமாய் பார்க்க ஆரம்பித்தார்.
ஆனாலும் மனதிற்குள் வண்டாய் குடைந்துகொண்டே இருந்தது மின்னொளியின் பேச்சும், குறிப்பும்.
இரவு உணவு நேரத்தில் தர்மராஜ் வரவும் அவனையே பார்த்தபடி இருந்தவர் மகனின் முகத்தில் எதையோ தேடினார். அவனோ தாயின் தொடர் ஆராயும் பார்வை எதனால் என்று புரியாமல் உள்ளுக்குள் பயந்தவன் அவஸ்தையாக,
“அம்மோவ், என்னத்துக்கு வச்ச கண்ணு வாங்காம பாக்குத? பசிக்குது…”
“ஆத்தே இருய்யா, தோ எடுத்தாரேன்…” என வேகமாய் என எழுந்தவர் வேகமாய் கையை கழுவிவிட்டு அவனுக்கு சாப்பாடு எடுத்துவைக்க செல்ல மனதில் எழுந்த குறுகுறுப்போடு வந்து அமர்ந்தான் தர்மராஜ்.
அவனோடு தனக்கும் போட்டுக்கொண்டு சாப்பிட்டவர் அவன் உண்டு முடிக்கும் நேரம் பேச்சை தொடங்கினார்.
“ஏம்யா ராசு, ஒனக்கும் அந்த சிமித்துர மின்னுக்கும் எதாச்சும் தகறாரா?…” என கேட்க திடுக்கிட்டு பார்த்தான் தர்மராஜ்.
இரு நாட்களாக மின்னொளியின் காரணமின்றிய முறைப்பும், அதற்கு முந்தைய நாள் அவளின் தோட்டத்திற்கு செல்லும் வழியில் தான் தன் நண்பர்களுடன் இருந்த நிலையையும் எண்ணி பார்த்தவனின் மனம் சடுதியில் கணக்கு போட்டது.
“அவ பார்த்திருப்பா போல. ஆனா அம்மா ஏன் கேக்குது?” என்ற யோசனையுடன் அவன் இருக்க,
“சொல்லுய்யா, அம்மா கோமிச்சுப்பேன்னு நெனைக்காத. சொல்லு…” என்று மீண்டும் கேட்க,
“அம்மோவ், அவ என்னிக்குத்தான் ஒழுங்கா பேசிருக்கா. நா அவட்ட பேசறதே இல்ல. ஒனக்கு புடிக்காதுல…” என்று பாவம் போல சொல்ல அன்னத்திற்கு இன்னும் மனது சமாதானம் ஆகவில்லை.
“நெசமாத்தேன் சொல்லுதியா? என்னனோன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது ராசா…” என பேசியவரை பார்த்து பரிதாபம் கொண்டவன் மனமோ குற்ற உணர்வில் தவித்தது.
“இப்படி இவரிடம் மறைக்கிறோமே? என்ன பிள்ளை நான்” என நினைத்தாலும் நண்பர்கள் என்று அவர்களின் அருகில் இருக்கும் பொழுது அனைத்தும் மறந்துதான் போகிறது தர்மராஜிற்கு.
குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தவனை பார்த்த அன்னம் வாஞ்சையுடன் அவனின் தலையை வருடி,
“செரிய்யா, கைய கழுவிட்டு வா. பால காச்சி கொண்டாரேன்…” என்று அவர் எழுந்துசென்றார்.
மின்னொளியின் பேச்சை விட மகனின் பேச்சையே அவர் நம்பினார். மகன் எதுவும் செய்திருக்க முடியாது என அந்த தாயின் மனம் நம்பிக்கை வைத்தது.
அவர் செல்வதை பார்த்தவன் பின் எழுந்து சென்றவன் கையை கழுவிவிட்டு கைலியில் துடைத்தபடி அங்கேயே நின்றான்.
இப்படி ஏமாற்றுகிறோமே? சொன்னதும் நம்பிய தாயின் மனதை நினைத்து மருகியவன் இனி இப்படி எந்த தவறும் செய்யக்கூடாது என்று எண்ணிகொண்டான்.
எண்ணுவதெல்லாம் நடந்துவிட்டால் விதிக்கென்ன வேலை?
பாலை குடித்துவிட்டு அன்னத்திடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து பின்னர் உறங்கினான். உறங்கும் மகனையே பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னம் மனதில் மின்னொளியின் மீதான கோபம் அதிகமாகியது.
“இருக்கட்டும் அந்த ராங்கிய பேசிக்கறேன்” என நினைத்தவருக்கு உறக்கம் மட்டும் வரவே இல்லை. மனது சமாதானமும் ஆகவில்லை.
அந்த வார இறுதியில் அனைவரும் சேர்ந்து விசேச வீட்டிற்கு கிளம்ப சீர்வரிசைகளும் வரிசைகட்டி சென்றது.
மின்னொளி முதலிலேயே சொல்லிவிட்டாள், தன் தாய் இருந்தால் எந்தளவுக்கு சிறப்பாய் செய்வாரோ அப்படி இருக்கவேண்டும் என்று.
மகள் சொல்லாமல் இருந்தால் கூட முருகய்யன் நன்றாகத்தான் செய்திருப்பார். மகளின் வாயிலிருந்து இந்த முத்துக்கள் வேறு உதிர்ந்துவிட்டது. கேட்கவும் வேண்டுமா?
அனைவரையும் வாசலில் வந்து வரவேற்றான் கணேசன். குணசாலி வேண்டுமென்றே வீட்டினுள் வேலை இருப்பதை போல காட்டி சிறிது நேரம் கழித்தே வந்தாள்.
“பாருங்க, நீங்க வாரப்பன்னு ஒரு சோலியாகிப்போச்சு. என்னத்த செய்ய? எல்லா நானே செய்ய வேண்டியதா இருக்குண்ணே…” என்று அவரை மட்டும் வரவேற்றுவிட்டு மற்றவர்களை பார்வையால் தலையசைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.
“பாத்தியா இவ கொழுப்ப. இதுக்குத்தேன் வரமாட்டேன்னு சொன்னேன். கேட்டியா?…” என அழகுப்பாட்டி பொரிய,
“சடங்கு என்ன அவுகளுக்கா? கம்முன்னு இரு கெழவி…” என மின்னொளி அதட்டவும் தான் அமைதியானார். ஆனாலும் குணசாலி இங்குமங்கும் நடந்துக்கொண்டே இருப்பதை கண்டு வாய்க்குள் முனங்கியபடி இருந்தார்.
கணேசனின் பெண்ணிற்கு தலைக்கு தண்ணீர் ஊற்றி தயார் செய்து சபைக்கு அழைத்துவர ராஜாத்தியை பார்த்தார் முருகய்யன். அவர் நகையுடன் மேடையேறினார் தம்பதி சகிதமாய்.
“அற்பனுக்கு வாழ்க்க வந்தா அர்த்தராத்திரில கொட புடிப்பாகளாம். ஒ அத்தக்காரி இப்ப என்ன புடி புடிக்க போறா பாரு…” என அழகுப்பாட்டி நீட்டி முழக்க,
“கம்முன்னு இருக்க மாட்ட…” மின்னொளி அழகு பாட்டியை விட்டு எங்கும் நகரவில்லை. வீட்டிற்குள்ளும் போகவில்லை.
வாசலில் தெருவை அடைத்து பெரிதாய் பந்தல் போட்டிருக்க அங்கேயே சிறிய மேடை ஓன்று போடப்பட்டிருந்தது.
அங்கு போட்டிருந்த சேர்களில் பாட்டியுடன் அமர்ந்துகொண்டாள். காசியாத்தாவும் அவளுடன் அங்கே சேர்ந்துகொள்ள பாட்டிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
மின்னொளிக்கு தெரியும் தான் அங்கே சென்று நின்றால் வேண்டுமென்றே குணசாலி குத்தலாய் பேசுவார் என்று. விசேஷ வீட்டில் எதற்கு சங்கடம் என அவள் எழுந்து வரவே இல்லை.
அவள் வருவாள், வம்பு பேசலாம் என காத்திருந்த குணசாலிக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்க மறுத்தாள் மின்னொளி.
அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவுற்று அனைவரும் சாப்பிட செல்ல மின்னொளி அழகுப்பாட்டியை அழைக்க,
“இவ வீட்டுல கை நனச்சா எங்கட்ட வேவுமா? எனக்கு வேணாம்த்தா…” என பிடிவாதமாய் மறுத்தவரை,
“நம்ம வீட்டுக்கு வாங்க மதினி. அங்கன ஆக்கி வெச்சிட்டுத்தேன் வந்தேன். சோதியும் இதத்தேன் சொல்லுவான். அதுவுங்காட்டி தம்பியும், ராசுவும் வேற புள்ளையோட வந்துருக்காக. எல்லாருக்கும் சேத்து கறி எடுத்துட்டு வந்துட்டான். வெடக்கோழி ஒன்னத்தையும் அடிச்சு கொழம்பு வச்சுட்டேன்…”
“ஏத்தா இத மொத சொல்லுததுக்கென்ன? வா போவலாம்…” என அழகுப்பாட்டி எழுந்துகொள்ள அவரை முறைத்தாள் மின்னொளி.
“நீயும் வாத்தா…” என அவளையும் காசியாத்தா அழைக்க,
“ஒன்னும் வேணா, நீ போ….” என அமர்ந்துகொண்டாள் அவள். அழகுப்பாட்டிக்கு போக மனமில்லை என்றாலும் வேறு வழி இல்லை என்பதால் சென்றார்.
முருகய்யனும், ராஜாத்தியும் சாப்பிட செல்லும் முன்னர் மின்னொளியை தேட குணசாலியோ,
“நீங்க போங்கண்ணே, நா அனுப்புதேன்…” என சொல்ல மற்றவர்களும் வந்துவிட அவர்களும் சென்றனர் வந்துவிடுவாள் என்று.
ஆனால் மின்னொளியை குணசாலி அழைக்கவே இல்லை. அழைத்திருந்தாலும் அவள் வந்திருக்கமாட்டாள் தான். கணேசன் கேட்டதற்கு கூட அழைத்தாகிற்று என்று சொல்லிவிட வந்தவர்களை கவனிப்பதில் இதை விட்டுவிட்டான்.
மின்னொளி அந்த வீட்டையே கண்களால் நிரப்பியபடி அமர்ந்திருந்தவள் அங்கே தன் தாயின் நிழல் இருப்பதை போன்ற பிரம்மை எழ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அதிலும் யாருமற்ற தனிமை. இது அவளாக தனக்கு போட்டுக்கொண்ட வேலி என்றிருந்தாலும் அந்த நிமிடம் அவளுக்கு யாருமில்லை என்பதை போன்ற ஒரு தோற்றம் எழ மூச்சு முட்டும் உணர்விற்கு ஆட்பட்டாள்.
அங்கே இருக்கமுடியாதென்னும் அளவிற்கு மனது பாரமாக வேகமாய் எழுந்தவள் யாருக்கும் சொல்லாமல் அந்த கூட்டத்தை கடந்து சற்று தள்ளி வர அங்கே சுப்பு தனது ஆட்டோவின் பக்கத்தில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான்.
“இந்தா வீட்டுக்கு போவனும், வண்டிய எடு…” என அதிகாரமாய் சொல்லிய போதும் அவளின் குரல் உடைந்து இருப்பதை சுப்புவால் உணரமுடியவில்லை.
“என்னது? ஏத்தா விசேசம் நடக்குது, இப்ப ஊருக்கு போவனும்னு சொல்லுத? அதுவும் ஒத்தையில…” என்றவன் அவளின் பின்னே ஆட்களை தேட யாருமில்லாமல் இவள் மட்டுமே நின்றிருந்தாள்.
“இப்ப நீ வண்டிய எடுக்குதியா? இல்ல நா வேற வண்டி பாக்கவா?…”
“இங்க வேற ஒத்த வண்டியும் இல்ல. எப்பிடி போவ?…” என்று கிண்டலாக கேட்க,
“எனக்கென்ன காலா இல்ல. போடா…” என்று சொல்லி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். அவளின் வேகத்தில் பதறிய சுப்பு சிகிரெட்டை தூக்கி வீசிவிட்டு,
“ஏத்தா இருத்தா, வாரேன்…” என வேகமாய் ஆட்டோவை கிளப்பி அவளருகே சென்று நிறுத்தினான்.
அவனுக்கு தெரியும் இவள் சொன்னால் செய்பவள் என்று. அதனாலேயே இந்த ராத்திரியில் தனியாக சென்றாலும் சென்றுவிடுவாள். ஏதாவது பிரச்சனையாகி போனால் என்ன செய்வது என பயந்து அவன் வந்துவிட்டான்.
“ஒன்னும் தேவையில்ல. அதன் வரமாட்டேன்னு சொன்னேல. பொறவு என்ன? போயிரு…” என விரல் நீட்டி மிரட்ட,
“தெரியாம சொல்லிப்புட்டேன் தாயி. மன்னிச்சிடுத்தா. வண்டில ஏறு. பத்து நிமிசத்துல கொண்டு போயி வாசல்ல விட்டுடுறேன். புண்ணியமா போவும்த்தா…” என கெஞ்ச போன்ல போகிறதென்பதை போல கிளம்பிவிட்டாள்.
ஏறியதிலிருந்து இருட்டை வெறித்துக்கொண்டு வந்தவளை முன்னால் இருந்து பார்த்தவனுக்கு பயமாகவும், பாவமாகவும் இருந்தது.
“எண்ணே…” என அவனை திடீரென மின்னொளி அழைக்க அதிசயித்துதான் போனான்.
“என்னையாத்தா?…” என நெகிழ்வாய் கேட்பதற்கு பதில் பதறி அவன் கேட்க,
“இங்க நீயில்லாம கோட்டானா இருக்குது? ஒன்னியத்தேன். ஏன் நீ அண்ணே இல்லியாக்கும்?…” அதற்கும் அவள் வெடுவெடுக்க,
“மன்னிச்சிடுத்தா, தெரியாம கேட்டுட்டேன்…” என சரண்டர் ஆனவனை பார்த்து லேசாய் புன்னகைத்தவள்,
“ஒன்னோட போன குடேன். கெழவிக்கு தாக்கல் சொல்லிக்குதேன். எம்போனும் அதுக்கிட்டதேன் இருக்குது…” என்றதும் எடுத்து நீட்டியவன் பாதையில் கவனமாக மின்னொளி தன்னுடைய எண்ணிற்கு அழைத்தாள்.
“ஆரு பேசுதது? மின்னு விசேச வீட்டுலலா இருக்குதா…” என எடுத்த எடுப்பில் அழகுப்பாட்டி பேச,
“ப்ச்ச், நாந்தேன் கெழவி…” எனவும் தன்னை வர சொல்லி தான் அழைக்கிறாள் என நினைத்து,
“ஏத்தா இப்பத்தேன் சாப்புட்டேன். இரு செத்த குறுக்க சாச்சுட்டு வாரேன்…” என சொல்ல,
“ஒன்னும் தேவையில்ல. நீ அங்கனவே மொடக்கிட்டு காலையில வந்த போதும். நா கெளம்பிட்டேன்…” என சொல்ல,
“ஆத்தே தனியாவா? என்னடி சொல்லுத?…” என பதட்டமாக,
“இப்ப என்னத்துக்கு ஆடுத? சுப்புண்ணே ஆட்டோவுலதேன் போறேன். நீயி ஒம்மவன்ட்ட தாக்கல் சொல்லிடு. தேடப்போறாக…”
“ஏன்டி அங்க ஒ அத்தக்காரி என்னத்தையாச்சும் பேசிப்போட்டாளா? எந்தல மறையாங்காட்டி அவ சோலிய காட்டிட்டாளா? அவள இன்னிக்கு சந்தி சிரிக்க வைக்கல…” என அழகுப்பாட்டி அங்கே வரிந்துகட்டிக்கொண்டு நிற்பது இங்கே இவளுக்கு தெரிய,
“கெழவி, நா சொல்லுதத முழுசா கேளு. ஆரும் ஒன்னும் பேசல. எனக்குத்தேன் அங்க இருக்க மூச்சடைக்குது. வெளங்குச்சா? பேசாம இரு. எதாச்சும் பஞ்சாயத்த இழுத்துட்டு நிக்காத…” என்று அதிகாரமாய் சொல்லவும் அழகுப்பாட்டிக்கு மனதே இல்லை.
“அவன ஒன்னிய எறக்கிட்டு ஒடனே இங்க வர சொல்லு. நா பின்னாடியே வாரேன்…” என மானது கேட்காமல் சொல்ல,
“சொன்னா கேக்க மாட்டியா? நா என்ன காட்டுக்குள்ள இருக்கபோறேனா? இல்ல இங்கன என்ன பூதமா இருக்கு? நம்ம ஊரு, நம்ம வீடு. ஒருநா அங்க நீ இரு. இந்நேரத்துக்கு ஒனக்கு எதுக்கு இங்கிட்டும் அங்கிட்டும் அல்லாட்டம்?…” என மேலும் சில நிமிடம் பேசிவிட்டு வைக்க வீடு வந்துவிட்டது.
“நாளைக்கு விடியல்ல வந்து காச வாங்கிக்கண்ணே…” என்று சொல்லி இறங்கிக்கொள்ள சுப்புவிற்கு மனதே இல்லை.
ஊரே அடங்கி இருக்க அந்த இரவும், மின்னொளியின் தனிமையும் அவனுக்கு தயக்கத்தை விதைக்க,
“ஏத்தா இருந்துக்கிடுவியா?…” என மனமே இல்லாமல் அவன் கேட்க அவனை முறைத்தாள்.
“செரி, செரி, நா கெளம்புதேன்…” என ஆட்டோவை கிளப்பிக்கொண்டு சென்றவன் இரண்டு தெரு கடந்ததும் ஆட்டோவை நிறுத்திவிட்டு அருளுக்கு அழைத்தான்.
“கோட்டிப்பயலே எங்கலே போயி தொலஞ்சே? இங்க நா ஒன்னிய சல்லட போட்டு தேடிட்டு இருக்கேன்…” என அருள் கத்த சுப்பு விஷயத்தை சொன்னான்.
“அட அறிவுகெட்டவனே, கோட்டி கோட்டிப்பயலே. ஒத்த வார்த்த எங்கிட்ட சொல்லவேண்டிதானாலே? அந்த திமிர்புடிச்சவள ராத்திரில தனியா கூட்டிப்போனதுமில்லாம ஒத்தையில விட்டுட்டு வந்துருக்க. கூறு கொஞ்சமாச்சு இருக்குதாலே?…”
“இந்தா சோதி நா என்ன பண்ணுதது? அதேன் சொன்னேம்லடா. அந்த புள்ள நடந்தே போவேன்னு நிக்கிதா…”
“அவ செய்யுவாலே, நெஞ்சுரம் புடிச்சவ. அவ எதுவுஞ்செய்யுவா…” என்று அருள் பயங்கரமாய் கோபப்பட,
“செரி நா வாரேன்லே…” என கிளம்ப பார்க்க,
“ப்ச், என்ன? அங்கன இரு. பேசாம சத்தமில்லாம ஆட்டோவுல மொடக்கு. இங்க இன்னொரு வண்டிய புடிச்சு இவுகள அனுப்ப பாக்குதேன். அக்காவும் அவுகளும் வாரவரைக்கும் அங்க இரு…” என்றவன் ராஜாத்தியை தேடினான்.
அங்கே உறவினர்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தார் ராஜாத்தி. அவரின் அருகே முருகய்யன் தன் மகனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
பேசி முடிக்கட்டும் என்று தூரத்தில் இருந்தபடி அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான் அருள்ஜோதி.
அழகுப்பாட்டி கணேசனின் வீட்டிற்கு செல்ல கிளம்ப காசியாத்தா தான் அருளிடம் சொல்லி விஷயத்தை சொல்லிவிடலாம் என்று அவரை அமைதிப்படுத்தி அருளை அழைத்தார்.
அவனும் இப்பொழுதுதான் சுப்புவிடம் பேசியதாக சொல்லி தான் பார்த்துக்கொள்வதாக சொல்லவும் தான் அழகுப்பாட்டிக்கு சற்று நிம்மதியானது.
ஆனாலும் எதுவோ மனதை அடைக்க காசியாத்தா அவரை வெகுவாய் ஆறுதல் படுத்தினார்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்த பின்னர் தான் கூட்டம் குறைய ஆரம்பிக்க ராஜாத்தியும், முருகய்யனும் கிளம்ப ஆயத்தமாகினர். மின்னொளியை, அழகுப்பாட்டியை தேட அருள் வந்து விஷயத்தை சொல்லி ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்தவன் அழகுப்பாட்டியை மறுநாள் அனுப்பிவைப்பதாக சொல்லி அனுப்பினான்.
சுப்பு அங்கிருக்கும் தைரியத்தில் அருளும் உடனே இதை அவர்களிடம் சொல்லவில்லை.
முருகய்யனும் ராஜாத்தியும் என்னவோ என பதறியபடி இளவரசனுடன் ஊரை நோக்கி சென்றனர்.
ஆனால் அவர்கள் செல்லும் முன்னரே விஷயம் விபரீதமாக அவர்களின் கை மீறி சென்றிருந்தது. அதையும் விடியும் தருவாயில் தான் உணர்ந்தனர்.