கடல் – 1
அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடு வாசலை துறந்து வாடிவாசல் திறந்து வைத்தோருக்கான திருவிழா. கொம்பு சீவிய காளைகளை தொட்டு தழுவி அணைத்து அடக்கும் காளையர்களின் கொண்டாட்டத்தருணம்.
களத்தில் சிங்கமென வீரத்தின் கர்ஜிப்பை ஒவ்வொரு இளைஞனின் முகத்திலும் காண தவம் கிடக்கும் மக்கள் திரள். தங்களின் சந்தோஷத்தை ஆராவாரத்தை சப்தமாய் எழுப்பி அகில உலகையும் கட்டிவைத்திருக்கும் ஏறுதழுவுதல் அங்கே மிகசிறப்பாய் நடந்துகொண்டிருந்தது.
“சூப்பர்ரா சூப்பர்ரா, தொட்டுப்பார் தொட்டுப்பார். மாட்ட பிடிச்சு பாரு. பிடிச்சு பாரு. ஒருத்தன் பிடி, ஒருத்தன் பிடி. டேய் வால பிடிக்காத. தம்பி அவன வெளியேத்து. போப்பா நீயி…” என்ற வர்ணனை குரலில் உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் சிலிர்த்து கொண்டனர்.
அலங்காநல்லூர் வாடிவாசலில் மக்கள் கூட்டம் அலைகடலென நிரம்பிக்கிடந்தது. ஒவ்வொருவரின் சந்தோஷ கரகோஷங்களும் விசில் சத்தமும் எட்டுத்திசையிலும் முழக்கம் எழுப்பி மொத்த மதுரையையும் ஆர்ப்பரிக்க செய்துகொண்டிருந்தது.
களத்தில் இருக்கும் காளையர்களுக்கு மட்டுமல்ல அதனை பார்க்க வந்திருப்பவர்களுக்கும் சிலிர்த்தது அங்கு நடந்துகொண்டிருந்த ஏறுதழுவுதலில்.
ஒவ்வொரு காளைகளும் கூர் சீவிய கொம்புடன் கூர்மையான விழிகளுடன் அடக்க வந்தவர்களை அடங்க செய்துகொண்டிருக்க அதனை அடக்கும் முனைப்புடன் நம் காளையர்கள்.
நம் பாரம்பரியமும், வீரமும் பெருமைகொண்டு தலைநிமிர்ந்து நின்றது. அத்தனை பேர் மத்தியிலும் சுற்றி சுழன்று அடிக்கும் அந்த காளையின் கம்பீரமும் வீரமும் அத்தனை அழகு.
“யெப்பா மாடு சுத்துமாடுப்பா. அருமைய்யா அருமை. நொறுக்குதுடா. யெப்பா மாடு ஜெயிச்சிருச்சுப்பா. தம்பி உங்களுக்கு பொங்கல் வாழ்த்து. மாட்டுக்காரன் வந்து ப்ரைஸ வாங்கிக்கப்பா…”
“இந்த ஆட்டத்த பாக்கத்தானய்யா இத்தனப்பாடு. ஆஹ்ஹா ஆஹ்ஹா…”
காளை ஒன்று துள்ளிக்குதித்துக்கொண்டு வாடிவாசல் தாண்ட கூர்மையான சீவிய கொம்புடன் முட்டி மோத காத்திருக்க அந்த காளையை ஒத்த காளையனாய் அருள்ஜோதி. லாகவமாய் அதன் திமிலை பற்றியவன் அதன் சுற்றுக்கெல்லாம் அதனோடு திமிலை கட்டிக்கொண்டு சுற்ற மூன்று சுற்றுகள் சுற்றி முடிக்க,
“அருமையான பிடிய்யா அருமையான பிடிய்யா. பிடிச்சுக்கோ. பிடிச்சுக்கோ. மாடு பிடிபட்டது. வந்து ப்ரைஸ வாங்கிக்கப்பா. வாப்பா…” என வர்ணனைக்குரல் அவனை அழைக்க காலை விந்திக்கொண்டு நடந்தான் அவன்.
“எப்பா கையில, தொடையில கிழிச்சிருக்குப்பா…” என்ற பலரின் கூச்சலில் லேசாய் கண்களை சிமிட்டி சிமிட்டி விழிக்க ஆரம்பித்தான் அருள்ஜோதி. ஆனாலும் முகத்தில் வெற்றியின் களிப்பு.
யாராலும் அடக்கமுடியா காளையை அடக்கிவிட்ட பெருமிதம். மிதமான புன்னகையுடன் தனக்கொன்றுமில்லை என்ற கையசைப்புடன் அவன் பரிசை வாங்கிக்கொள்ள அடுத்த காளை வாடிவாசலை சீறிக்கொண்டு வெளியேறியது.
“போதும் அருளு, ஒ அக்காளுக்கும், ஆத்தாளுக்கும் தெரிஞ்சா சாமியாடிருவாளுங்க. ஆசுப்பத்திரிக்கி போயி மருந்து கெட்டிட்டு கெளம்புவோம்…” அவனின் உடன் வந்தவனும் நண்பனுமான சுப்பிரமணி சொல்ல,
“ஏலே எவன்டா அவே சுத்த கோட்டித்தனமா பேசுதவேன்? இத காட்டிக்கிட்டு போனா அம்புட்டுப்பிடமாட்டேனா? இன்னிக்கி இங்க ரா தங்கிட்டு நாளைக்கி போவம்…”
“தெகிரியம்லே ஒனக்கு…” சுப்பு முறைக்க,
“வேற என்னாலே செய்ய? காளைய அமுக்கனும்னாவே ரத்தமெல்லா சூடாகிப்போவுது. இதுல சல்லிக்கட்டுக்கு போவாதன்னு வீட்டுல அக்காவும் ஆத்தாவும் வெய்யுது. அவுகளுக்காக போவவேணான்னு தோணுனாலும் இங்கன கொடியேத்திப்புட்டா மனசு நெல கொள்ளமாட்டிக்கு…”
பெருமூச்சுடன் அருள்ஜோதி சொல்ல சுப்புவுக்கு அவனை நன்கு அறியுமாதலால் சிரிப்புடன் அவனை தாங்கிக்கொண்டான். அதற்குள் முதலுதவிக்கு அவனை அழைத்துக்கொண்டு தடுப்புகளை தாண்டிக்கொண்டு சென்றனர். அங்கே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு அங்கே அனுமதிக்கப்பட்டான் அருள்.
“தையல் போடனும். ரெண்டு நாள் இங்க அட்மிட் பண்ணிடலாம்…” அவனுக்கு சிகிச்சை வழங்கும் டாக்டர் சொல்ல சுப்பு அலறிவிட்டான்.
கையில் நன்றாக கிழித்திருக்க ஐந்தாறு தையல் போட்டிருந்தனர். தொடையில் தையல் போடுமளவு இல்லையென்றாலும் காயம் ஆழமே.
“ஆத்தே நாசமா போச்சு. டாக்டரு, இவே அக்காரு யே சங்க உறிஞ்சிப்புடும். நாளைக்கி நாங்க போவுதோம். அம்புட்டுத்தேன்…” அதிகாரமாக சுப்பு சொல்ல,
“அதெல்லாம் இவுகட்ட கேட்பியோ? வாய அடக்குலே…” என அவனுக்கொரு அதட்டல் போட்ட அருள் டாக்டரை பார்த்து,
“ஊசி ஏத்தி மருந்து கெட்டின வர போதும், ஒம்ம வேலைய போய் பாரும்…” என தெனாவெட்டாக பேச,
“ஹேய் யூ, என்ன மேன் மரியாதை இல்லாம பேசுற?…” டாக்டருக்கு கோபம் வந்துவிட,
“ப்ச், ஏலே சுப்பு ஒறக்கம் கண்ண கட்டுதுலே…” என்று கண்ணை மூடிக்கொள்ள,
“டாக்டரு அந்தா ஒருத்தே குத்துப்பட்டு வரான். போய் மருந்த கட்டும்…” என்று டாக்டரை திசைமாற்ற,
“காட்டுப்பயலுக…” என்ற முணுமுணுப்புடன் டாக்டர் நகர அதை கேட்ட அருள் புன்னகைக்க,
“என்ன மச்சா ஒனக்கு கோவமே வரல?…” ஆச்சர்யபாவம் கொண்டு கேட்டான் சுப்பு.
“காட்டுக்குள்ள வளந்தா காட்டுப்பயலுவன்னு சொல்லுதான். ஆமான்னு நெஞ்ச நிமித்தி காமிக்கனும்லே. இதுக்கு போயி என்னத்துக்கு கோமிக்க?…”
“எல்லா நல்லாத்தேன் இருக்கு? நாளைக்கி போனா மட்டும் ஆத்தா கண்டுக்காதாக்கும்? அப்ப அம்பிடமாட்டியோ?…”
“ஏத்தி கட்டற வேட்டிய எறக்கி கட்டிட்டா போச்சு?…” அதற்கும் வழி கிடைத்தவனாக சொல்ல சுப்பு வாயெல்லாம் சிரிப்பாய் தலையாட்டினான்.
“நாளைக்கு போறப்ப மிலிட்டரி ஓட்டல்ல சாப்புட்டு போவோம். செரியா?…” என அருள் கேட்டதும் சுப்புவும் வாயில் பல்லை தவிர வேறில்லை. அப்படி ஒரு மகிழ்ச்சி முகத்தில்.
இருபத்தியொன்று வயது இளைஞனின் சிற்சில சந்தோஷங்கள் இவைகள். அதை அப்படியே பிரதிபலித்தனர் இருவரும். பயமறியாது தான். ஆனாலும் பயத்தை காட்டிக்கொள்ளாமல் அந்த நிமிடத்தை சந்தோஷமாய் அனுபவித்தனர்.
“ஆனாலும் வலிச்சாலும் காட்டிக்க மாட்டிக்க பாத்தியா? கெத்துடா மச்சா நீயி…” சுப்பு உண்மையாகத்தான் சொன்னான். ஆனால் கேட்ட அருளுக்கோ அது ஒரு போதை.
மீண்டும் மீண்டும் அப்படியான வார்த்தைகளை கேட்கவே எதையாவது செய்வான் தைரியமாக. அந்த போதையில் சில நொடிகளேனும் மிதந்து களிப்பான்.
மறுநாள் டாக்டர் சொல்ல சொல்ல கேட்காது மதியத்திற்கு மேல் கிளம்பியேவிட்டான். கையில், தொடையில் வலி தான். ஆனாலும் அதை அனாயசமாக தாங்கினான்.
“நான் சொல்றதை கேளுங்கண்ணே, தையலு பிரிஞ்சிட போவுது. ரெண்டு நாளு தான?…” அங்கு வேலைபார்க்கும் ஒரு நர்ஸ் வந்து சொல்லியும் கேட்கவில்லை.
“நாலஞ்சு தையலு என்னாவ போவுது தங்கச்சி. அதெல்லா ஒண்ணுமாவாதுத்தா…” என்றுவிட்டு கிளம்பிவிட்டான். அவனுக்கான மருந்துகளை எழுதிக்கொடுத்ததோடு தன் வேலைகளை முடித்துக்கொண்டு நகர்ந்தாள் நர்ஸ்.
மதுரையை ஒரு சுற்று சுற்றிவிட்டு இரவு ஊர் அடங்கிய பின்னர் வந்து சேர்ந்தவர்கள் பரிசு பொருட்களை இருவருக்குமாக பிரித்துக்கொண்டனர். சத்தமில்லாமல் சுப்புவின் வீட்டிற்குள் கொண்டுபோய் வைத்துவிட்டு வர,
“மாட்ட அடக்கி குத்துப்பட்டவன் நீயி. எனக்கெதுக்குலே பிரைசு?…” என வழக்கமாய் கேட்கும் கேள்வியை சுப்பு கேட்க அவனை முறைத்தான் அருள்.
“இரு மச்சா நானு கூட வாறன். இத ஒத்தையில தூக்கிட்டு போவியா நீ?…” என அவனுடன் சேர்ந்து நடந்தான் சுப்பு.
“தங்க காசெல்லாம் நீயே வச்சுக்கன்னா அதுக்கும் கேக்கமாட்டிக்க…” பெருமையான அலுப்புடன் சுப்பு சொல்ல,
“உனக்கு தரேன்னு நா எப்பலே சொன்னேன்?…” என்று அவனின் ஆசை நெஞ்சிற்கு சத்தமில்லாமல் குண்டை வைக்க திக்கென்று பார்த்தான் சுப்பு.
“என்ன லுக்கு? வாவே…” என சிரிப்புடன் அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு நடந்தான்.
“போனவாட்டிய விட இந்த தரம் பிரைசு கம்மிதான?…”
“கொம்பு கிழிக்காம இருந்தா இன்னும் அடக்கிருக்கலாம்தேன்…”
“அதுதே அடங்காதுல எதுக்குலே அத போயி தொட்ட?…”
“அடங்காதத அடக்குறதுலதே சொகம். பாத்தல எல்லாரு என்னிய பாத்தத. சும்மா ஜிவ்வுன்னு இருந்திச்சுல…” என்று சட்டையின் காலரை உயர்த்திவிட,
“கெத்து மச்சா நீயி…” என மீண்டும் சுப்பு அவனுக்கு புகழாரம் சூட்ட அருளின் வீடு வந்துவிட்டது. மரத்தடுப்பை தாண்டிக்கொண்டு சத்தமெழுப்பாமல் உள்ளே செல்ல வாசலில் விளக்கு சட்டென ஒளிவிட அங்கே கோபத்துடன் ராஜாத்தி அமர்ந்திருந்தார்.
“ஆத்தே அக்கா…” என்ற அலறலுடன் சுப்பு தலைதெறிக்க ஓட ஓடிய வேகத்தில் வாசலில் போட்டிருந்த மரத்தடுப்பில் வேஷ்டி மாட்டிக்கொள்ள அதை எடுக்க கூட தோன்றாமல் அப்படியே ஓடினான்.
“லே வெளங்காதவனே வேட்டிய எடுத்துட்டு போவே…” என அருள் கத்த,
“ராத்திரில ஒருத்தனும் பாக்கமாட்டா மச்சா, நீயி பொழச்சுக்கடி…” என்ற சத்தம் காற்றில் மிதந்து இவனின் காதை அடையவும் ராஜாத்தி விளக்குமாற்றால் இவனை அடிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
“நல்லா இருப்பியாடா நீ? என்ன இங்க குறையுதுன்னு நெறக்க அங்க போனியாம்? உன்னோட இதே பொழப்பா போச்சு. ஒரேடியா போன கூட அந்த கெழவிய நா கூடிக்கொண்டு வெச்சிக்கிவேன். நீ என்னனா நித்தம் கொலையா கொல்லுத. ஏன்டா? ஏன்டா?…” என சொல்லி சொல்லி கோபம் தீருமட்டும் அடித்தார்.
ஐந்து மாத வயிற்றுடன் மூச்சு வாங்க தன் தமக்கை அடிக்க தலை கவிழ்ந்து அதனை ஏற்று நின்றான் அருள்ஜோதி.
அடித்து ஓய்ந்தவர் வாசல் படிக்கட்டில் தொய்ந்து அமரவும் அவரருகே சென்று கையை பிடித்துவிட்டான்.
அவனின் கண்ணீர் துளிகள் ராசாத்தியின் கன்னம் நனைக்க மேல் வாசலில் நின்றுகொண்டு கண்ணீருடன் இவர்களை பார்த்தார் இவர்களின் தாய் பொன்னியம்மாள் என்ற பெயர்கொண்ட காசி ஆத்தா.
காசி என்பது அவர்களின் குடும்ப பெயர். பொன்னியின் தாத்தா அந்த காலத்திலேயே தனது கடைசி கால யாத்திரையாக காசிக்கு சென்று வந்ததனால் காசிக்கு போன குடும்பம் காசிக்கு போன குடும்பம் என்ற பெயர் மருவி கடைசியில் காசி வீடு என மாறி அவரின் பேத்தி காசி வீட்டு பொன்னி, காசி பொன்னி, இப்பொழுது கடைசியில் காசியாத்தா.
“ஆத்தாவுக்கு நீ மாட்ட அடக்க போனேன்னு தெரிஞ்சதுல இருந்து ஒரே அழுவ. நா உசுர கையில புடிச்சுட்டு பதறிட்டு வாரேன். ஏம்லே கோட்டிபுடிச்சவனாட்டம் அத்த கட்டிக்கிட்டு அழுவற. எத்தனவாட்டி சொல்லிருப்பேன்? போன போட்டாலும் அமத்தி வெச்சிருக்க…”
ராஜாத்தி மீண்டும் கன்னத்தில் அடித்தவர் அவனின் கையை பிடிக்க அது தையல் போட்ட இடமாக இருக்க தன்னையறியாமல் சட்டென்று உண்டான அழுத்தம் கொடுத்த வலியில் பதறி ஆத்தீயென கத்திவிட்டான்.
“என்னலே என்னாச்சி?…” என அவனுக்கு மேல் பதறிய ராஜாத்தி வெளிச்சத்தில் அவனை இழுத்துவர,
“ப்ச், த்தா விடுத்தா…” என உதறினான் கையை.
“ஏலே ஒழுங்கா காமிக்கல…” என மிரட்ட ஒரு அலுப்புடன் சட்டையை கழட்டினான்.
கட்டுப்போடப்பட்டிருந்த கையை பார்த்ததும் பெண்கள் இருவரும் பதறிப்போயினர்.
“ஆத்தீ அட பாவிப்பயலே இதுக்காலே உன்னிய வளத்தே? இப்பிடி கூறுபோட்டுக்கிட்டு வந்திருக்க? அப்பனில்லா புள்ளன்னு ஒம்போக்குக்கு வளஞ்சேன் பாரு…” என தலையில் அடித்துக்கொண்டு காசியாத்தா அழ அருள்ஜோதிக்கு என்னவோ போல் இருந்தது.
“மின்னலு எளப்பமா சொன்னா மாடுபிடிக்க தெரியாதவனெல்லா களத்துக்குள்ள நிக்கிதான்னு. எனக்கு அப்பவே சுருக்குன்னிச்சு. பாத்தியா? இது தேவையாலே ஒனக்கு?…”
அதுவரை இருவரின் அழுகையில் கரைந்துகொண்டிருந்தவனின் உடல் இறுகியது. அதுவும் அவள் சொல்லியிருந்த விதம் அவனை ஆத்திரம் கொள்ள செய்ய கோபத்தை காட்டமுடியாது ராசாத்தியின் கண்ணீர் தடுத்தது.
எப்பொழுதும் இப்படித்தான். அவனின் விஷயத்தில் தலையிடுவதே அவளின் வேலையாக இருக்கிறது என கோபம் கொள்வான். ஆனால் என்ன பிரயோஜனம்? அதை காட்டத்தான் முடியாது.
இருவருக்கும் இடையில் நிற்பது ராஜாத்தி. தன் அக்கா. தாயிற்கு சமம். அவரின் முகத்திற்காக மட்டுமே அவளை பொறுத்துக்கொண்டு போகிறான்.
“எக்கா சும்மா அழுவாத, அதே ஒண்ணுமாவலைல. பின்ன எதுக்கு கண்ணுல தண்ணி வடிச்சிட்டு நிக்கித? நல்லா மாடுமாதிரி ஒ முன்னாடி நிக்கிதேன்ல…” என சொல்லி முடிக்க அதற்கும் ஒரு அறை கன்னத்தில் வாங்கினான்.
“ஒம்மோட எனக்கூட்ட ஒனக்கு மாடுதேன் அம்பிட்டுச்சாக்கும்? இன்னொருக்க காலெடுத்து வைய்யிலே பொறவு தெரியு சேதி…” என காளியென மிரட்டலாய் பேசிவிட்டு உள்ளே சென்றார்.
“மாசமாருக்க புள்ளைய இங்கிட்டுமங்குட்டும் அலையவெச்சிட்டியே? ஏம்லே போ போயி அவளுக்கு வட்டில சோத்த வச்சு குடு. திங்காம கெடக்கா…” என காசியாத்தா சொல்ல,
“என்னது திங்காமவா? வீட்டுல நீ என்னத்துக்கு இருக்கியாம் தெண்டத்துக்கு? அத்த கூட கெவனியாம மூலையில முடங்கினியாக்கும்? ஒன்னையெல்லாம்…” என்று தாயை வைதுவிட்டு(திட்டிவிட்டு) வேகமாய் உள்ளே சென்றவன் சாதத்தை தட்டில் போட்டு குழம்பை ஊற்றி பிசைந்துகொண்டு வந்தவன்,
“ஆத்தா சாடில இருந்து ஊறுகா எடுத்தா. உப்பு பருப்புக்கு அக்கா ஊறுகா தான திங்கும்…” என காசியாத்தாவையும் வேலை வாங்கிவிட்டு ராஜாத்தியின் அருகே அமர்ந்தவன்,
“எந்திக்கா, எந்திங்கேன்ல. மொத திம்பியாம். பொறவு திட்டுவியாம்…” என்று இடித்து தமக்கையை எழுப்பியவன் ராஜாத்தி பேச வாய் திறக்க ஒரு உருண்டையை திணித்தான்.
“போவ மாட்டேமின்னு ஒத்த வார்த்த சொல்லுதியா?…”
“சரி போவல. பேசாம சாப்புடு…” என்றவன்,
“நீ வந்திக்கறது தெரிஞ்சிருந்தா வரப்பவே மிலிட்டரி ஓட்டல்ல இருந்து எதாச்சும் வாங்கியாந்திருப்பேன். கவுச்சின்னா உனக்கு உசுராச்சே…” அடுத்த வாய் ஊட்டினான்.
“நீ சாப்பிட்டியா அங்க?…” ராஜாத்தி வசதியாய் அமர்ந்துகொண்டு கேட்க,
“அதெல்லா மூச்சு அடைக்க திண்ணாச்சு. சுப்புவ கூட்டிட்டு கறிக்கஞ்சி வாங்கி குடுக்காம இருந்தா மூக்கால அழுதே கரைஞ்சிடுவானுல…” என சிரிக்க அவனுடன் சேர்ந்து சிரித்தார் ராஜாத்தி.
“செரி, செரி. விடியவும் சேவல அடிச்சிருவோம்…” என்றதும்,
“இல்ல சோதி, என்னிய கொண்டுபோயி வீட்டுல விட்டுடு. அவுக தனியா இருப்பாக. நாளைக்கு உரமூட்ட எறக்க டவுனுக்கு போவனும்னு சொன்னாரு. மின்னலு தனியா இருப்பா…” என்றதும் அருளின் கோபம் தலைக்கேறியது.
“அந்த வாயாடி ஊரையே வந்துபாருன்னுவா. தனியா இருப்பான்னு நீ பாவம் பாக்குதியாக்கும்?…” கேலி போல சொன்னாலும் அவள் மீதான கோபம் அவனின் வார்த்தையில் தெறித்து விழ,
“சோதி…” கண்டிக்கும் குரலில் அவர் சொல்ல,
“மதினி வந்து பாத்துச்சா?…” என பேச்சை மாற்றினான்.
“ப்ச், விடு சோதி. வந்தா வரட்டும். நா போயி பாக்கல…” ராஜாத்தி சலிப்பான குரலில் சொல்ல,
“அவ அவ ஆத்தா வீட்டுக்கு குடும்பமா போயிருக்குதா. ஒ அண்ணனும் கூடத்தென் வாலப்பிடிச்சதாட்டம் போயிருக்கான். இங்க இல்ல…” தகவலாய் காசியாத்தா சொல்ல,
“இல்லனாலும் வீடு தங்கிடும். அட போத்தா…” என்றவன் சிறிது நேரம் தன் அக்காவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மாத்திரைகளை போட்டுவிட்டு உறங்கிவிட ராஜாத்திக்கு தான் உறக்கமின்றி போனது.
ஏனோ அருள்ஜோதியை நினைக்க நினைக்க அத்தனை கவலை. மனதிற்குள் தன் உணர்வுகளை மென்று முழுங்கினார்.
மறுநாள் சொல்ல சொல்ல கேட்காமல் விடியலிலேயே கிளம்பிவிட்டார். அருள் தன் அக்காவிற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அவருடன் சென்றான்.
அவர்கள ஊரிலிருந்து பத்துகிலோமீட்டார் தொலைவு தான். அதனால் சுப்புவின் ஆட்டோவிலேயே சென்றனர்.
வீட்டை அடைந்ததும் தான் உண்டாகியிருப்பதை மறந்து சிறுபெண்ணை போல உள்ளே ஓடினார்.
“வாத்தா, என்னத்துக்கு இம்புட்டு வெரசா வந்தவ? ரெண்டுநாப்பொழுது தங்கிட்டு வரத்தான?…” அழகம்மா பாட்டி சொல்ல,
“அவுக எங்கத்தே?…” என்றார் ராஜாத்தி.
“இம்புட்டு நேரமா இங்க இருந்தியான்? இப்பத்தேன் தோப்புக்கு மருந்து வெக்கனும்னு போனான்…” என காதில் தண்டட்டி ஆட சேலையை இழுத்து சொறுகிக்கொண்டு அரிசி களைந்த தண்ணீரை கொண்டு வாசலில் வைத்திருந்த தொட்டியில் ஊற்றினார்.
“மின்னலு…” ராஜாத்தி கேட்க,
“அவ களையெடுக்க ஆளுகளுக்கு சொல்ல போயிருக்கா….” என்ற பாட்டி,
“இந்தா ராசாத்தி, செத்த ஒக்காரு. வந்ததுல இருந்து துள்ளுறவ?…” என சொல்லியும் சேலையை சொருகிக்கொண்டு அவருக்கு ஒத்தாசையாக வேலைகளை பார்க்க அருள்ஜோதிக்கு கடுப்பாக இருந்தது.
அங்கு நிற்க பிடிக்காது ராசாத்தியை பார்த்து கிளம்புவதாய் கண்ணசைக்க அவரோ அவனை நகலவிடவில்லை. வேக வேகமாய் சமையலை முடித்துக்கொண்டு அவனுக்கு பரிமாற,
“நீயும் ஒக்காருக்கா…” என்றான்.
“அவுக வரவாங்காட்டி சாப்புடுதேன். நீ தின்னு…” என அதட்டல் போட சாதம் இறங்கவில்லை அவனின் தொண்டையில். பெயருக்கு உண்டுவிட்டு கையை கழுவிவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்பிவிட ராஜாத்தி செல்லும் அவனையே பார்த்திருந்தார்.
ஆட்டோவில் செல்லும் வழியெல்லாம் அத்தனை பேச்சு பேசுனான். சுப்புவிற்கே கடுப்பாகிவிட்டது.
“லே, நீ இங்கன உசும்பினா ஒடனே செரியாகிடுமா? சும்மா சலம்பலா பேசிக்கிட்டு…” என சுப்பு சொல்ல வெளியே பார்த்துக்கொண்டிருந்த அருள் தூரத்தில் வயலில் நடந்துகொண்டிருந்த பெண்ணை பார்க்கவும் பார்வையில் அத்தனை கூர்மை.
“அந்தா போறா பாரு சீமை சித்தராங்கி. நிறுத்துடா வண்டிய…” என ஆட்டோவில் இருந்து குதித்துக்கொண்டு இறங்க வயல் வரப்பில் தூரத்தில் அவள் ஆட்டோ நிற்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தாள்.
அவள் மின்னொளி.
அவளை பார்த்ததும் கோபத்துடன் கட்டியிருந்த கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு நாக்கை மடித்துக்கொண்டு வேகமாய் அவளை நோக்கி வர அவளின் முகத்தில் சிறிதும் அச்சமில்லை.
தொடையில் வேறு சுருக்கென்னும் வலி. தையல் போட்டிருந்த இடது கையை அதிகம் அலட்டாமல் வலது கையை நீட்டியபடி வந்தான்.
“என்ன தெகிரியம்டி ஒனக்கு. மாடுபிடிக்க போனத அக்காக்கிட்ட வத்தி வச்சிருக்க?…” என பாய அவனை இகழ்ச்சியாய் பார்த்தவள்,
“மாட்ட பிடிக்கவா? ஹ நீ கோழில புடிச்சுக்கிட்டு மண்ண தடவிக்கிட்டு கெடந்த? அதத்தேன் சொன்னே. மாட்ட புடிச்சேன்னு பெருமையாக்கும்? போவியா…” என்று அவள் திரும்ப அவளின் கையை பற்றி நிறுத்த போனவன் பின் தன் கையை பின்னால் இழுத்துக்கொண்டு பல்லை கடித்தான்.
“நீ எங்கிட்டயே ஓரண்டைய கூட்டுதல்ல. ஒன்னிய…” என இன்னும் நெருங்க அசையாது நின்றாள் அவள்.
“அக்காக்கிட்ட போயி சொல்லிருக்கியே என்ன மனுசிடி நீ?…”
“நா ஒன்னும் ஒ அக்காக்கிட்ட சொல்லல. கெழவிட்ட சொன்னேன். அது கேட்டிருக்கு. நா என்னத்த பண்ணே?…” மிதப்பாய் அவளும் பதில் சொல்ல,
“ஒ கழுத்த திருகி போட்டா என்னன்னு வருது. அக்கா மூஞ்சிக்காக, கொமரிக்கிட்ட வச்சுக்க கூடாதேன்னு பாக்குதேன்…” விரல் நீட்டி அவன் எச்சரிக்க,
“கொமரிக்கிட்ட வச்சுக்காதன்னு நா ஒனக்கு சொல்லல. போ போ…” என இன்னும் அடங்காமல் மின்னொளி வார்த்தையை விட அருளுக்கு அவளை எப்படியாவது காயப்படுத்திவிடும் வேகம்.
“நா என்னவோ வாய் தவறிட்டா நீயும் கொமரின்னு ஒத்துக்குவியோ? சமையாம கொமரியாவியோ?…” அவனின் வார்த்தையில் தான் அத்தனை எள்ளல்.
வேண்டுமென்றே அவளை வேதனைப்படுத்த அவன் சொல்ல அவனை தீயாய் உறுத்து விழித்தாள் பதினாறு வயது நிறைவுறும் தருவாயில் நின்ற பெண்ணவள்.