உள்ளத்தின் ஓரத்தில் ஓராயிரம் ஆசைகள். கொட்டிக் கிடக்கும் காதல் கனவுகள். இவை எல்லாம் இவர்களின் இன்ப வாழ்வாய் மாறும் இடத்தில் அவள்.
மெல்லிய உடல் நடுக்கம், வெட்கச் சூட்டில் முகத்தில் பூத்த வியர்வை முத்துக்கள், படபடக்கும் இதயம் என வேதா புதுப்பெண்ணின் அத்தனை உணர்வுகளுடனும் அர்ஜுனின் அறைக்குள் நுழைந்தாள்.
சந்தன வாசம் அறையெங்கும் மணம் வீசியது. சீர்வரிசையாய் வைத்த புது கட்டில் மெத்தை. அறையில் இவளின் பொருட்களும் புதிதாய் இடம் பிடித்திருக்க இன்னும் திருத்தமாய் அடுக்க வேண்டுமோ? கண்டதும் கண்டுகொண்டாள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று.
அர்ஜுன் இலகுவான இரவு உடையில் கையில் கைப்பேசியுடன் மெத்தையில் அமர்ந்திருந்தான்.
வேதா அறையின் உள்ளே வரவும் கைப்பேசியை அருகில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு எழுந்து வந்தான்.
“உள்ள வா வேதா, அங்கயே நின்னு என்ன பார்த்திட்டு இருக்க?”
“ஹ்ம்ம், இதோ”
கதவைத் தாளிட்டு உள்ளே வந்தாள்.
“வா வா வந்து உட்காரு.” கட்டிலில் அமர வைத்தான்.
“என்ன வேதா உட்காருன்னு சொன்னதும் உட்காந்துட்ட?”
“வேற … வேற என்ன செய்யணும்?”
“நீ படமெல்லாம் பார்த்ததில்லையா?”
“..”
“பால் கொண்டு வரல, என் கால்ல விழுந்து ஆசிர்வாதமெல்லாம் வாங்கல?” மெல்லிய சிரிப்புடன் கேட்டான்.
மேலும் என்ன பேச என இருவருக்குள்ளும் தயக்கம். அர்ஜுன் பார்வையால் அறையை அளக்க, அவளோ அவளின் கை விரல்களை அளந்து கொண்டிருந்தாள். சில நிமிட மௌனத்திற்கு பிறகு மீண்டும் அவனே தொடங்கினான்.
“இனி இது உன்னோட இடம், நம்மோட இடம். நீயும் நானும் மட்டும்”
“ஹ்ம்ம்”, ‘நம்ம மட்டுமாமே? அப்ப நம்ம பசங்களை என்ன பண்ணுவாங்க இந்த அஜூ?’ மனம் கேட்ட கேள்வியில், ‘பசங்களா?’ மீண்டும் ஒருமுறை மனதிற்குள் சொல்லிப் பார்க்க முகமெங்கும் புன்னகைப் பூக்களின் வாசம்.
“என்ன சக்கரைக்குச் சத்தமே வரல?”
“இல்ல இல்ல ஒன்னும் இல்ல.”
தயக்கங்கள் மட்டுமே அவளிடத்தில். ஏதேதோ பேசத் தோன்றினாலும் பேசும் எண்ணமிருந்தாலும், பேசும் வழி மறைக்கும் தயக்கங்கள். நேற்றுவரை இல்லாத புதுப் புது மாற்றங்கள் மனதிலும் உடலிலும்.
இனி வாழ்வை வடிவமைக்கும் இடத்தில் இவர்கள். மகன் மகள் என்னும் நிலை மாறி, தம்பதியராக ஓரிடத்தில். இனி இவர்கள் வாழ்வின் எல்லாப் பக்கங்களும் இவர்கள் சுயமாய் எழுதப் போகின்றனர். இன்ப துன்பமெல்லாம் இவர்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகளாய் மாறுமிடம் இது.
“அப்போ என்ன யோசனை வேதாவுக்கு?”
“இல்ல இந்த ரூம் அரேஞ்சுமெண்ட்ஸ் எல்லாம் மாத்தணும் போல?” அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டுமே.
“நான் அதக் கேட்கல… “
“வேற என்ன?”
“நீங்க இந்த ரூம்ல ஏதோ வேணும்னு ஆசைப்பட்டு கேட்டீங்க, அதை இன்னும் பார்க்கலையே.”
“நானா? என்ன கேட்டேன்?” அவர்கள் இருவரைத் தவிர வேறு எதுவும் அவள் நினைவில் இல்லை.
“இல்ல அன்னைக்கு ஒரு நாள் பேசும் போது எனக்கு ரொம்ப ஆசை, இங்க வந்ததும் முதல்ல அதைத்தான் பார்ப்பேன்னு சொன்ன?”
“ஹ்ம்ம், அந்த ராதா கிருஷ்ணன் சிலை எங்க? இங்க தானே இருந்தது?” நினைவு வந்தவளாய் கேட்டாள்.
“வா காட்டுறேன். பால்கனியில் இருக்கு.”
“ஹ்ம்ம்.”
இருவரும் எழுந்து மேல்மாடத்துக்குச் சென்றனர். விளக்கை உயிர்ப்பிக்க மேல்மாடத்தின் ஒரு ஓரத்தில் அவள் விருப்பப்பட்டுக் கேட்ட ராதா கிருஷ்ணன் சிலை. அருகில் செயற்கை நீரூற்றுடன் சேர்த்துப் பொருத்தி இருந்தான்.
குழலூதும் கண்ணன். அவனின் கைகளைப் பிடித்து தோளில் சாய்ந்து அவன் முகம் பார்த்து காதலால் மயங்கி நிற்கும் கண்ணனின் ராதா. கொள்ளை அழகு.
செயற்கை நீரூற்றை உயிர்ப்பிக்க, மஞ்சள் நிற ஒளியுடன் நீரூற்று கொட்டத் துவங்க அந்த இடம் அந்த நேரம் இருவர் மனதிலும் கவிதையாய்.
“பிடிச்சிருக்கா?” மெல்ல கைகளைப் பற்றிக்கொண்டான்.
“ஹ்ம்ம் ரொம்பப் பிடிச்சிருக்கு அஜூ.” கண்களைப் பார்த்தது பதில் சொன்னாள்.
அவன் கண்களில் தெரியும் உணர்வுகளைப் படிக்க முயல வெட்கம் அவளுக்குத் தடையாய். அவளின் தடைகள் அவனைத் தகர்த்தெரியச் சொல்லியதோ? வலக்கரம் இரண்டும் இணைந்திருக்க அவனின் இடக்கரம் கொண்டு தோளோடு அணைத்துக் கொண்டான். கண்கள் இரண்டும் இன்னும் ஏதோ கதை பேசியபடி இருக்க,
“சக்கர நீ ரொம்ப அழகுடி”
“ம்ஹ்ம்”
“உன்னோட இந்தக் கண்ணு, அது எப்பவும் சிரிச்சுகிட்டே.”
“ஹ்ம்ம்”
அவனின் கண்கள் அவளின் கண்களைத் தாண்டி இறங்க, அவளின் கண்களில் வெட்கம் இன்னும் மிக, முகம் செம்மை கொள்ளப் பார்வை நிலம் நோக்கியது.
“சக்கரக்கட்டி என்னைப் பாரேன்”
மீண்டும் கண்கள் கலக்க
“நீங்க என்ன ஏன் அப்படிக் கூப்பிடறீங்க?” தயக்கங்கள் தடை செய்த போதும் அறியத் தூண்டும் ஆவலில் கேட்டாள்.
“எப்படி?”
“சக்கர, சக்கரக்கட்டின்னு?”
“அதான் அன்னைக்கே சொன்னேனே.”
“இல்ல வேற எதோ, ” என்ன முயன்றும் அவளின் குரல் மாறுபாடுகளைத் தவிர்க்க முடியவில்லை. அன்றே சொன்னானே திருமணத்திற்குப் பிறகு சொல்வேன் என்று.
“சொல்லனுமா?”
“ஹ்ம்ம்”
அவளின் பிணைத்திருந்த கையில் மென்முத்தமிட்டு,
“உள்ள போகலாம் வா. இங்க நிக்கிறது பக்கத்து வீட்ல இருந்து பார்க்க முடியும்.”
விளக்கை அணைத்துக் கதவை மூடித் திரையிட்டு மீண்டும் அறைக்குள் வந்தனர். வேதா ஒப்பனை மேசையின் அருகில் நின்று கண்ணாடியில் முகம் பார்த்திருந்தாள்.
அவள் அருகினில் வந்த அர்ஜுன் அவளை நெருங்கிப் பின்னோடு அணைக்க அவளின் உடலில் சிறு நடுக்கம். நிற்கவும் முடியாத ஒரு நடுக்கம், இன்பம் தரும் நடுக்கம் அது.
கைகள் தானாய் நாற்காலியைப் பற்ற இடையில் தவழும் அவன் கைகளின் இறுக்கம் இன்னும் இன்னும் அதிகமாகியது. அவன் மூச்சுக் காற்றின் வெப்பம் அவளின் முதுகில் பட்டு உடலையும் எரிக்க, அவன் உதடுகள் கழுத்தின் ஓரம் முத்த ஊர்வலம் நடத்தத் தொடங்கியது.
வார்த்தைகள் மறந்து கண்கள் மூடி உடலும் உடலும், உடல் மொழி பேசும் நேரம்.
உதடுகள் உரசக் காதின் அருகில் மெல்லிய மயக்கும் குரல், “சக்கர”.
“ம்” இந்த ஒற்றைச் சொல் சொல்ல, இவ்வளவு கடினமென இன்றுதான் உணர்ந்தாள்.
மீண்டும் அதே மயக்கும் குரல், “சக்கரக்கட்டி”.
நாற்காலியைப் பற்றிய கைகள் இன்னும் இறுக உடலின் கூச்சம் ஏறி, இன்னும் உடல் குறுக நின்றாள். ஆனால் இம்முறை ‘ம்’ என்ற ஒற்றைச் சொல்லும், சொல்லும் நிலை இல்லை போலும். மயக்கம் மட்டுமே மங்கையிடம்.
“என் கையில் உறிகிக் கரைஞ்சு நிக்கிற இந்த சர்க்கரை எனக்கு எல்லா நாளும் வேணும். எப்பவும் நம்ம கூடவே இருக்கிற அந்த சர்க்கரை மாதிரியே, தினம் தினம்.
காது மடல்களில் இதழ் உரச அவன் சொல்லிய சொற்கள் செவிகளில் சேர்ந்ததோ இல்லையோ ஆனால் கண்கள் மூடி கனவுகள் சூழ நின்ற அவளின் இதயம் சென்று சேர்ந்தது.
“சக்கர, ஏதாவது பேசு டா.” இன்னும் இன்னும் அவன் ஏதேதோ பேச அவளிடம் பதில் ஒன்றும் இல்லை.
மீண்டும் இதழ்கள் உரசக் காது மடலோரம் மெல்லிய முணுமுணுப்பாய் பாடத் தொடங்கினான்..
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு சுகங்கள் இருமடங்கு
மனசு மயங்கும் மெளன கீதம்
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து
அவன் குரல் செவிகளில் பட்டு இதயம் சேர, அவளை அவன் முகம் நோக்கித் திருப்பினான். இருவரும் முகம் பார்த்துக் கொள்ள, கண்கள் மட்டும் தான் பெற்றதோ இணையுடன் இணையும் வரத்தை.
இதழ்களும் அந்தப் பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி நாட்கள் பல ஆகி விட்டதே. அந்த பெருந்தவத்தின் பலனாய் கிடைத்த வரம். இன்று அவள் மூச்சுக்குக் காற்றுக்கு ஏங்கும் நிமிடம் வரைத் தொடர்ந்தது. இதயத்தின் உணர்வுகள் இதழ் வழி பேசியது.
எந்த தவத்தின் பலனும் ஒரு நாளில் முடிவதில்லையே? தவம் செய்தவன் மீண்டும் மீண்டும் வரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.
அதன் பலன் என்னவோ மீண்டு வர முடியாத இன்னும் பல இன்பத் தவங்களுக்கு வழிவகுத்தது.
நதியின் வேகம் கடலில் கலந்து சங்கமிக்கிறது. ஆழ்கடல் அந்த நதியைத் தனக்குள் விரும்பி ஏற்றுத் தன்னுடன் கலந்து விடுகிறது. ஆற்றின் வேகமும் ஆழ்கடலின் விருப்பமும் இங்குச் சங்கமிக்கும் நேரம்.
மனமும் உடலும் மயங்கி நதி கடலில் கலக்க வேண்டிய பொழுது, அவனின் உடல் மொழியில் சிறு மாற்றம். தெளிவில்லாத எதோ எண்ண அலைகள் அவனுள்ளே. தடுமாற்றமெல்லாம் நொடிப் பொழுதே.
சிந்தனை தெளிய அவளை விடுத்துச் சட்டென எழுந்து அமர்ந்தான்.