அர்ஜுன் மனம் தெளியவும் இரு கைகளயும் கொண்டு முகம் மூடிக் கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.
மலரத் துடிக்கும் மொட்டாய் அவன் கைகளிள் தவழ்ந்தவள் அவனின் திடீர் விலகலில் ஏதோ ஒரு வித்தியாசம் உணர வேதாவும் கண்களைத் திறந்தாள். அவள் கண்டது எழுந்து அமர்ந்திருந்த அர்ஜுனைத் தான்.
“என்ன ஆச்சு அஜூ? என்ன இப்ப, இப்படி எழுந்து உட்காந்து இருக்கீங்க?” எங்கோ உயரத்தில் காற்றில் மிதந்தவள் அங்கிருந்து தடுமாறிக் கீழே விழுந்த உணர்வு. தன்னை சரி செய்து கொண்டவள் அவளும் எழுந்து அமர்ந்தாள்.
பதிலில்லை அவனிடம். மீண்டும் கேட்டாள், “அஜூ என்ன?” உணர்வுக் குவியலாய் அவளின் குரல்.
“நீ தூங்கு வேதா, எனக்கு டைம் ஆகும். நாளைக்குப் பேசலாம்.”
“பதில் சொல்லுங்க, என்ன ஆச்சு? ” குரலில் சொல்லியே ஆக வேண்டும் என்ற பிடிவாதம். ஏதேதோ மனம் எண்ணி இருக்க, எதுவும் இல்லாமல் அவன் அமர்ந்திருந்த நிலை அவளுக்கு ஏன் என்று விளங்கவில்லை.
“இன்னைக்கு வேண்டாம் நாளைக்குப் பேசலாம். நீ தூங்கு” சொன்னவன் சட்டென எழுந்தான்.
“நாளைக்குப் பேசுறத இன்னைக்கே பேசலாமே?”
“இதென்ன பிடிவாதம் சக்கர?” இந்த இரவின் இன்ப நிகழ்வுகளை அவனுக்குத் தொலைக்கும் எண்ணமில்லை. ஆனால் தொடரும் எண்ணமுமில்லை.
“நீங்கதான் சொல்லமாட்டேன்னு பிடிவாதம் பண்றீங்க? நான் என்னன்னு கேட்டா தப்பா?” அவளின் ஓராயிரம் உணர்வுகளும் மொத்தமாய் கோபமாய் உருக் கொண்டது.
அவளின் கோபம் மெல்ல அவனையும் பற்ற “இதென்ன எப்பவும் உடனே சொல்லுன்னு கேட்கிற பழக்கம். நான் நாளைக்குச் சொன்னாக் கேட்க மாட்டியா?”
“இப்ப என்ன நடந்துச்சு, ஏன் திடீர்ன்னு இப்படி பேசுறீங்க அஜூ?”
“இப்ப என்ன? என்ன நடந்துச்சு? எதுவும் நடக்கல. நடக்கவும் வேணாம் போதுமா? நான் இதைப்பத்தி யோசிக்கணும். நீ கேட்டதை சொல்லியாச்சு. போ, போய் தூங்கு பேசாம.” சொன்னவன் விறுவிறுவென எழுந்து நடந்து மறுபடி கதவைத் திறந்து கொண்டு மேல் மாடத்திற்கு வந்து நின்றான்.
அவன் செல்வதைக் கண்டவள் அவளும் எழுந்து அவனருகில் வந்து நின்றாள்.
“அஜூ உங்கள ஏதோ டிஸ்டர்ப் பண்ணுது, என்னன்னு என்கிட்ட ஷேர் பண்ணலாம் தானே?”
“அதான் நீ கேட்டத நான் சொல்லீட்டேனே வேதா. இது இன்னைக்கு வேண்டாம்ன்னு. அதான். கொஞ்ச நேரம் என்ன தனியா விடு. நான் என்ன சரி பண்ணிக்கிட்டு வந்து தூங்குறேன்.”
அவன் கரணம் சொல்ல மறுக்க மீண்டும் கோபம் அவளுள், “ஏன் இன்னைக்கு வேண்டாம். எனக்குக் காரணம் சொல்லுங்க?. ஏன்னு தெரியாம என்னால தூங்க முடியாது.”
“நீ இன்னும் குழந்தை இல்ல வேதா. இந்த சப்ஜெக்ட் எல்லாம் உனக்கும் தெரிஞ்சு தானே இருக்கும். இன்னைக்கு வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம். புரிஞ்சுக்கோ. ஐ டோன்ட் ஹேவ் எனி ப்ரொடெக்ஷன். அண்ட் மொர்ஓவர் வி ஆர் நாட் ப்ரிபேர்ட் டு ஹவ் எ பேபி.”
அவன் சொன்னதன் பொருள் விளங்கவே அவளுக்குச் சில நிமிடம் எடுத்தது.
விளங்கிய பொழுது மீண்டும் எல்லை கடக்கும் கோபம்.
“ஏன் ஏன் குழந்தை வேண்டாம். கல்யாணம் ஆனா இதெல்லாம் நடக்குறது தானே? இதுக்கு நீங்க என்ன ப்ரிபேர் பண்ணனும்?”
“வேதா நீ கோவப்பட்டு எனக்கும் கோவம் வர வைக்காத. இன்னைக்கு நமக்கு ஸ்பெஷல் டே. அத ஸ்பாயில் பண்ணாத.”
“நீங்கதான் என்னோட மொத்த சந்தோஷத்தையும் ஸ்பாயில் பண்ணிடீங்க. நான் கேள்வி கேட்டா தப்பா?”
“கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு சக்கர. எதையும் யோசிக்காம செய்யாத. அப்புறம் நம்ம தானே கஷ்ட்டப் படணும்”
“எனக்கும் அதுதான் புரியலை அஜூ, குழந்தை எப்படி கஷ்டமா ஆகும்? குழந்தைங்க எப்பவும் இஷ்டம் தானே ஆகும்.”
“ஏய், நான் என்ன குழந்தையே நமக்கு வேண்டாம்ன்னா சொல்றேன். இப்ப வேண்டாம்ன்னு தானே சொல்றேன்.”
“அது தான் ஏன்?” என்ன முயன்றதும் அவளின் கோபம் எல்லைக் கடக்க குரலும் ஏறத் தொடங்கியது.
“சரி கத்தலை, கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க? ஏன் இப்ப வேண்டாம்?”
அந்த நிமிடம் அவன் வாழ்வில் இடர் தரும் ஏதோ ஒரு கோள் அவனுள் புகுந்து பேச வைத்தது. மனதில் நினைத்ததைச் சொல்லி இருந்தால், அவன் வரும் காலங்களில் பட இருக்கும் துன்பமெல்லாம் தூசியாய் தட்டி அவன் மனைவி விலக்கி இருப்பாள். ஆனால் என்றும் விதி வலியது. யாரும் இதற்குத் தப்ப முடியாது.
“ஏன் சக்கர நம்ம அடுத்த கல்யாண நாளைக்குள்ள பேபி வந்துட்டா, என்னடா உனக்கு அவசரம்னு சிரிக்க மாட்டாங்க. அசிங்கமா இருக்காது.”
‘அசிங்கமா’ இந்த ஒரு வார்த்தை தான் அவனின் மொத்த நாளையும் சிதைக்க என்று அவன் நாவிலிருந்து வந்த ஒற்றைச் சொல். கேட்டதும் வேதா என்ன உணர்ந்தாள் என்று அவளே உணரும் முன் வெடித்துச் சிதறி இருந்தாள்.
“ஹே, நான் என்ன சொல்லவர்றேன்னா, புரியாம நீயா ஏதாவது சொல்லாத வேதா. இன்னும் கோபம்தான் வருது.”
“கோவம் வரும் உங்களுக்கு. அதெப்படி குழந்தை மட்டும் வேணாம். ஆனா மத்ததெல்லாம் வேணும்.”
“ஐ திங்க் நீ இதை ரொம்ப காம்ப்ளிகேட் பண்ற. நீ நினைக்கிற அளவு இது பெரிய விஷயம் இல்ல.”
“அப்ப பேசாம உங்க அம்மா கிட்டச் சொல்லுங்களேன் ஏன் வந்து என்கிட்டே பேசுறீங்க?”
“வேதா, நீ அதிகம் பேசுற, ப்ளீஸ் போய் தூங்கு. இன்னும் பேசிப் பேசி மூட கெடுக்காத. ரொம்ப டையர்டா இருக்கு. இப்பவே பதினொன்றரை ஆகுது வா. தூங்கப் போகலாம்.”
“அதெப்படி அஜூ இவ்ளோ பேசிட்டு ஒண்ணுமே இல்லாத மாதிரி தூங்கப் போகலாம்னு கூப்பிடறீங்க.”
இத்துடன் முடித்திருக்கலாம். ஆனால் வேதாவும் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தாள்.
“ஏன் அர்ஜுன் கல்யாணம் பண்ணி என்னையும் இப்படி கஷ்டப்படுத்துறதுக்கு, நீங்க ஏன் வேற மாதிரி யோசிச்சிருக்கக் கூடாது?”
“வேற மாதிரின்னா? என்ன சொல்ல வர்ற தெளிவாச் சொல்லு.”
“லிவிங் டுகெதர் அப்படி?” குரலில் கிண்டல் அதிகமிருக்க, அர்ஜுனும் தன் பொறுமையின் எல்லை கடக்க கர்ஜிக்கத் தொடங்கினான்.
“ஏய், என்ன பார்த்தா உனக்கு அப்படித் தெரியுதா? நான் சொல்ல நினைச்சதை இன்னும் சொல்லவும் இல்ல நீ கேட்கத் தயாராவும் இல்ல. இனி நான் சொல்லவும் மாட்டேன். போடி. இந்த கல்யாணம் உனக்கு அவ்வளவு ஈஸியா போச்சுல்ல. ச்சி… என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிருக்க நீ. “
“ஹ்ம், குழந்தை பெத்துக்கிறத அசிங்கம்ன்னு சொன்னவங்க கிட்ட இப்படித்தான் பேச முடியும். வேற என்ன கேக்க?”
“இனி நீ எதுவும் கேட்கவும் வேண்டாம். நான் உனக்கு பதில் சொல்லவும் இல்ல. தேவையில்லாததைப் பேசி என்னையும் கடுப்பாக்காத.” என்றவன் வேகமாகச் சென்று குளியலறைக்குள் நுழைந்தான்.
வேதாவிற்கு எதுவும் விளங்கவில்லை. கண்கள் மட்டும் நீர் நிரம்பிச் சிந்தத் தொடங்கியது. திருமணம் குழந்தை இவை எல்லாம் இயற்கை என்று எண்ணி இருந்தாள். இதில் அவன் சொல்ல வருவது என்ன எனக் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு முன்னமே அவளின் தடைப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாய் சண்டையிட்டிருந்தாள்.
தான் பேசியது நிச்சயம் அதிகப்படி எனத் தெரிந்தாலும் உள்ளுக்குள் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
எழுந்து மீண்டும் அறைக்குள் வந்தவள் கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். கண்ணீர் அவள் கட்டுப்பாடில்லாமல் கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது. இன்றைய நாளின் இன்பம் மொத்தமும் தங்களின் இந்த அதிகப்படியான வாக்குவாதத்தில் தொலைந்ததை எண்ணியபடி படுத்திருந்தாள்.
குளியலறையின் உள்ளே நீரின் அடியில் நின்றும் அர்ஜுனின் கோபம் குறைந்ததாய் தெரியவில்லை. இன்னுமிருந்தால் தான் அவளைக் கை நீட்டிவிடும் அபாயம் தோன்றவே அங்கிருந்து வந்திருந்தான்.
உறவுகள் எல்லாம் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி அவளைக் கைபிடித்து ஒரு நாள் ஆகுமுன்னே இத்தனை சண்டை அவசியமில்லை என இப்பொழுது தோன்றியது.
இனி நடந்ததை எண்ணி வீண். அவளை எப்படி சமாதானம் செய்யலாம் என எண்ணமிட்டபடி மீண்டும் உடை மாற்றி அறைக்கு வந்தான்.
வேதாவோ கட்டிலில் இவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள். இனி அவளைத் தொந்தரவு செய்வது சரியில்லை என எண்ணிக் கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
அவளின் மேலிருந்து வந்த சுகந்தமும் அறையின் சந்தன வாசமும் அவனுக்கு மீண்டும் வேறு சிந்தனைகளைத் தூண்ட, தொடங்கிய இன்பத்தைத் தொலைத்து மேலும் சிக்கலாக்கிக் கொண்ட தன் மடத்தனத்தை எண்ணியபடி கண்களை மூடினான்.
உள்ளத்தில் உள்ளதை உரைப்பதென்பது மிக எளிதானது. ஆனால் உணர்வுகளை உரைப்பது என்றுமே எளிதல்ல. உணர்வுகள் என்றும் சூட்சமமானவை. அதைக் கையாள முடியாமல் இருவரும் இன்று தோற்று தாங்களே தங்களைக் காயப்படுத்திக் கொண்டனர்.
இனி வரும் இரவுகளேனும் இவர்களுக்கு இன்பம் சேர்க்குமா?