திருமணம் முடிந்து இரண்டு மாதங்களைத் தொடப் போகிறது. கல்யாணக் கொண்டாட்டங்களும் விருந்து முறைகளும் மெல்லக் குறைந்து கணவன் மனைவியாய் கால ஓட்டத்தில் இணைந்தனர் இவர்களும்.
இன்னும் அர்ஜுன் வேதா நிலைப்பாட்டில் பெரும் மாறுதல்கள் இல்லை. அதற்காக சண்டை சச்சரவுகளும் இல்லை. அவரவரின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தனர்.
தான் படிக்க நினைக்கிறேன் எனச் சொன்னதும் அர்ஜுன் அவளைத் தொந்தரவு செய்ய எண்ண வில்லை.
அவன் தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என்ற எண்ணமே அவளுக்கும் மனதை வாட்ட நடப்பவை நடக்கட்டும் என விட்டிருந்தாள். அதன் பலன்? நாளை அர்ஜுனின் அமெரிக்கப் பயணம். தனியாக அவன் மட்டும்.
இரவு உணவு நேரம் முடிந்து தங்களின் அறையில் வேதா மட்டும் தனிமையில் நின்றிருந்தாள். அர்ஜுன் இன்னும் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க இவள் மட்டும் மேலே வந்து விட்டாள்.
சில நெருக்கடியான நேரங்களில் சொல்லப்படாத விளக்கங்களும் வீணாய் போகின்றன. அப்படி சொல்லப்படாமல் வீணாகிப் போன விளக்கங்களுடன் உழன்று கொண்டிருந்தாள் வேதா.
அறைக்குள் வந்ததும் மனதினை அடைக்கும் துக்கம். எங்கே தவறினோம் இருவரும் என மீண்டும் ஒரு அலசல்? இது போல் பல ஆயிரம் முறை மனதில் செய்து பார்த்த அலசல் தான். அதற்கான விடைகளும் பல, அவளின் மனதில்.
‘இனி இத சரி செய்யவே முடியாதில்ல’ எண்ணியதும் கண்ணீர் அவளின் கன்னம் தொட்டிருந்தது.
‘அன்னைக்கு அவங்க பேச வந்தப்போ படிக்கப் போறேன்னு சொல்லிருக்கக் கூடாதோ? அன்னைக்கு கண்டிப்பா படிக்கணும்னு நான் சொல்லலையே? எனக்கு ஃப்யூச்சர் பிளான் இதுன்னு சொல்லத் தானே வந்தேன்.’
‘என்கிட்டே எதுவும் சொல்லாம முடிவு எடுக்காதீங்கன்னு சொல்ல நினைச்சேன். அதைக் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம். நானும் கோபமாப் பேசி இருக்கக் கூடாது தானே.’
‘ஆனா எல்லாமே அவங்க இஷ்டமா? அப்படி இல்லையே, அவங்களும் நான் அவங்க கூடவே இருக்கணும்னு தானே இதெல்லாம் செஞ்சாங்க. அன்னைக்கு முதல் நாளே அதுனாலதான் என்னைவிட்டு விலகியும் போனாங்க. எந்த ஒன்னும் நாங்க ஒன்னாவே இருக்கத் தடையா இருக்கக் கூடாதுன்னு நினைச்சாங்க.’
‘ஹ்ம்ம், அவங்க கூடவே இருக்க எனக்கும் இஷ்டம்தானே. கொஞ்சமே கொஞ்சம் இனி நானும் பொறுமையா, சொல்லுறத அவங்களுக்குத் தெளிவா புரியிறது போலச் சொல்லிப் பழகணும்.’
அவள் எண்ணங்களில் அவள் கலந்திருக்க, கைப்பேசியில் மின்னல் வெளிச்சம். ஏதோ குறுந்செய்தி. அதைப் பார்க்க எண்ணமில்லை. ஆனால் கைகள் தானாய் அர்ஜுனின் பழைய செய்திகளை மீண்டும் மீண்டும் படிக்க, அன்று அவன் அனுப்பிய தேவாரப் பாடல் கண்களில் பட்டது.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
………. தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
பாடலைப் படித்து முடிக்க, இவ்வளவு நேரம் அடக்கி இருந்த கண்ணீர் அழுகையாய் வெடித்துச் சிதறியது.
முயன்று தன்னைக் கட்டுப் படுத்தியவள் ‘இனி அவங்க போகும் போது அழுகக் கூடாது. ச்ச’ என எண்ணியபடியே தன்னைச் சரி செய்து உடை மாற்றி வரக் குளியலறை புகுந்து கொண்டாள்.
அர்ஜுன் அறைக்கு வர, வேதா குளியலறையில் இருக்கும் சத்தம் கேட்டது. அவன் மனதிலும் பல குற்ற உணர்வுகள்.
அர்ஜுனின் மனதிலும் இதே போன்ற எண்ணங்கள் தான். இரவும் பகலும் அவளைப் போலவே தான் தவறிய இடங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.
‘ஏன்டா, அவகிட்ட ஒழுங்கா பேசியிருந்தா இப்ப இப்படி தனியாவா போயிருப்ப? சொதப்பீட்டு இனி என்ன பீலிங்ஸ் உனக்கெல்லாம்?’ அவன் மனமே அவனைத் திட்டியது.
‘அவசரப்பட்டு ஆபீஸ்ல எனக்கு மட்டும் வீசா ப்ரோஸஸ் பண்ணுங்கன்னு சொல்லாமல் இருந்திருக்கலாம்.’
‘அவளுக்கு ஸ்டடீஸ் கமிட்மெண்ட்ஸ் இருக்குன்னு சொல்லீட்டு இப்பப் போய் அவனுங்ககிட்ட எப்படி மறுபடி கேட்கிறது.’
‘ச்ச சொன்னது தான் சொன்னேன் வேற ஏதாவது ரீசன் சொல்லிருக்கலாம். இப்படி மாத்த முடியாத மாதிரியா சொல்லுவ. உனக்கு ஒழுங்கா ஒரு பொய் கூடச் சொல்லத் தெரியலை அர்ஜுன்.’
‘பிரகாஷ் அப்பவும் கேட்டான், குடும்பஸ்தன் அவன் கிட்டயாவது ஒரு ஐடியா இல்ல சஜஷன் கேட்டிருக்கணும். மொத்தமா சொதப்பீட்டேன்.’
‘இப்ப வீட்டிலும் அம்மா அப்பா திட்டுறாங்க. கல்யாணம் ஆன உடனே இப்படி விட்டுட்டுப் போறேன்னு. ‘
ஹ்ம்ம் சும்மாவா போறேன், நான் இன்னும் முரட்டு சிங்கிளாவே போறேன். ஆனா என் கவலை இங்க யாருக்குப் புரியும்.’
‘இன்னைக்கு நைட்டாவது அவகிட்ட ஒழுங்காப் பேசீடனும்.’ என எண்ணமிட்டவாறே மேல் மாடத்தில் அவளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.
“என்ன அஜூ இங்க நிக்கிறீங்க?” கேள்வியுடன் வெளியில் வந்தாள் வேதா.
“ஒண்ணுமில்ல டா சக்கரை. சும்மாதான் ஏதோ யோசனை. நீ வா”
“எல்லாம் எடுத்து வச்சாச்சா, எதுவும் மறந்திடலயே.”
“உன்னைத் தவிர வேற எதுவும் எடுத்துக்க மறக்கலை. மத்தது எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஐம் சாரி டா. உன்னை இங்க விட்டுவிட்டுப் போகவே கொஞ்சமும் விருப்பம் இல்ல.” கடகடவென மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி முடித்து விட்டான் அர்ஜுன்.
தன் மனதில் இருப்பதை அன்றே சொல்லி இருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்கலாம் என உணர்ந்ததால் மேலும் அவன் மனதில் தோன்றிய எண்ணங்களை அவளிடம் பேசத் தொடங்கினான்.
“இல்லடா என்னால உன் படிப்புக் கெட்டுடும்னு உன்கிட்ட நான் மறுபடி கேட்கல. நீ சொன்ன மாதிரி படிப்பெல்லாம் பாதியில விட்டுட்டா படிக்க முடியாதுதானே. இந்த டைம நீ நல்லா யுடிலைஸ் பண்ணிக்க. என்னால எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடுவேன். நீ அதுவரை ஒழுங்கா இருக்கணும்.”
“நீங்க ஏன் அஜூ சாரி எல்லாம் சொல்லறீங்க. என் மேலயும் தப்பு இருக்கு. நானும் உங்ககிட்ட ஒழுங்காப் பேசியிருக்கலாம்.”
“நீ மட்டும் இல்ல. நானும் தான்.” சொன்னவன் தன் எண்ணங்கள் மொத்தத்தையும் அவளிடம் கொட்ட, அவளும் கண்ணீரினூடே தன் பக்க நியாயங்களையும் தவறுகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“உனக்கு சர்ப்ரைஸ் பண்ணனனும்னு நினைச்சேன். இப்படி என்னோட சர்ப்ரைஸ் மொத்தமும் சேர்ந்து எனக்கே பேக் ஃபையர் பண்ணும்னு நினைக்கலை. நீ அழுகாதா டா சர்க்கரை.” அவளை அணைத்துத் தேற்ற முயன்றான்.
“சாரி அஜூ, என்னால நீ இல்லாம இருக்கக் கஷ்டமா இருக்கும். ஆனா இத நானும் உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும்.” என்றவளின் அழுகையில் அவனும் கலங்க,
“ஆரம்பத்திலே நான் தெளிவா இருந்திருந்தா இப்படி எல்லாம் நம்ம தனியா இருக்கும் சூழ்நிலையே வந்திருக்காது.”
அர்ஜுன் கண்களும் கலங்க இனி வெளியில் நிற்பது பலரின் கண்களுக்குப் படலாம் என எண்ணி இருவரும் அறைக்குள் வந்தனர்.
அறையின் உள்ளே வந்ததும் அவனைக் கட்டி அணைத்திருந்த வேதாவின் அழுகை இன்னும் அதிகரிக்க அர்ஜுனுக்கு அவளைத் தேற்றும் வழி தெரியவில்லை.
அவனது இறுகிய அணைப்பும் ஆறுதல்களும் அவளைச் சிறிதும் தேற்றவில்லை. அழுகை மட்டுமே அவளிடம். வாழக்கையைத் தவறவிட்ட உணர்வு இருவருக்கும்.
அழுகையின் சத்தம் இன்னும் இன்னும் அதிகரிக்க அவளைத் தேற்றும் வழி தெரியவில்லை. அவனின் எந்த ஆறுதல் மொழிகளும் அவளைச் சிறிதும் சென்று சேர்ந்திருக்கவில்லை.
முகம் சிவக்க அவனின் இறுகிய அணைப்பில் நின்றவளின் முகம் ஏந்தி கண்ணீர் பெருகும் கண்களுக்கு மெல்ல முத்தமிட்டான். முத்தமிட்ட இதழ்களுக்கு என்றுமே விலகும் வழி தெரிவதில்லை, அவைகளின் இணையைத் தழுவும் வரை. இணைந்த இதழ்களுக்குப் பிரியும் நிமிடங்களும் பிடிப்பதில்லை.
அழுகையின் சத்தம் மெல்லக் குறைய அங்கு அறை நிறைக்கும் ஆனந்த முத்தச் சத்தமும் வெட்கச் சிணுங்கல்களின் சத்தமும் மட்டுமே.
இருவரின் மனமும் தெளிந்திருக்க, இரண்டு மாதமாக அவர்கள் நடத்திய தன்னிலைப் போராட்டங்களும் அதன் பலனாய் வந்த பிரிவின் வலியும் இன்றுடன் முடிவடைய இன்பம் தரும் இனிய நிகழ்வின் தொடக்கம்.
அவன் சித்தம் மொத்தமும் அவள் மேல் பித்தம் கொள்ள, அவனின் சர்க்கரை அந்தி நேரச் செவ்வானமாய் முகமெங்கும் வெட்க நிறம் பூசி, அவனின் கைகளில் தவழ, அன்று தான் தவறவிட்ட மொத்த இன்பமும் இன்று தன் கைகளில் மீண்டும் கிடைக்க, இந்த கணமே அவளை ஆட்கொள்ளும் வேகம் அவனிடம்.
இனி நதிக்குக் கடலுடன் இணையத் தடை ஏது? அப்படி இருந்தாலும் மீண்டும் மீண்டும் தவறு செய்ய அவர்கள் ஒன்றும் முட்டாள்களும் இல்லை. தடை சொல்லிக் கொள்ளவும் இருவரிடமும் காரணங்களில்லை.
உள்ளத்தில் எழுந்த தடைகள் பல தகர்த்து மனம் முழுவதும் காதல் பொங்கக் காத்திருந்து இளமைக் கனவுகள் பல கை சேர்ந்த அந்த நிமிடம் அவர்கள் இல்லற வாழ்வின் இனிய தொடக்கம்.
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்படி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை