பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா உன்னால் இங்கு வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் அஹிம்சை முறையில் நீ கொல்லாதே
மாதங்கள் பல கடக்க, மாற்றங்களைப் பழகி இருந்தனர் அர்ஜுனும் வேதாவும். நீளமான இந்த இருபத்தியொரு மாதங்களில், மருமகளாய் தன்னை அழகாய் அர்ஜுனின் வீட்டில் பொருத்தி இருந்தாள் வேதா.
இரவின் தனிமையில் அறைக்குள் நுழைந்ததும் அனிச்சை செயலாய் அர்ஜுனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
“குட் மார்னிங் அஜூ” இன்னமும் அவள் குரல் தான் காலையில் முதலில் கேட்கிறான்.
“குட் மார்னிங் டா சக்கரக்கட்டி, என்ன இன்னைக்குச் சீக்கிரமே கால் பண்ணியாச்சு? பாப்பா அதுக்குள்ள தூங்கிட்டாளா?”
“ஸ்ரீக்கு தானே அவங்க ஃபிரெண்ட். அண்ணா ஏன் வரப் போறாங்க? அவங்க வரல அஜூ. ஃப்ரைடே நைட் கிளம்பி வருவாங்க. சோ சண்டே ரிட்டர்ன் ரெண்டு பேரும் சேர்ந்து போவாங்க.”
“ஓகே, ஓகே. அம்மா என்ன சொன்னாங்க?”
“வழக்கமா வெளிய போயிட்டு வந்தா வருகிற புலம்பலும் திட்டும் தான். என்ன எப்பவும் போகுற அளவு நீளம் இன்னைக்குப் போகல. அதுக்குள்ளே யாழி பாப்பு அவங்கள தொந்தரவு பண்ணிட்டா.”
“என்னவாம் இந்த அம்மாவுக்கு, இப்பல்லாம் ஒரே புலம்பல்.”
“என்ன அஜூ தெரியாத மாதிரியே புதுசாக் கேட்கிறீங்க? எல்லாம் உங்களால தான். அத்தை இப்ப என்னைக் கேள்வி கேக்குறாங்க. ‘கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியுதா?
இப்படி தனித் தனியா இருந்தா எப்ப குழந்தை குடும்பம்ன்னு ஆகுறது? வயசு என்ன கம்மியாவா ஆகுது? ரெண்டு பேரும் என்ன நெனைக்கிறிங்க? அவனுக்கும் புத்தியே இல்..” கடைசி வாக்கியம் முடிக்கும் முன்னே நிறுத்தி இருந்தான்.
“ஏய், இந்த புத்தியில்லன்னு சொன்னது உன் சொந்த வசனம் தானே? அம்மா எப்பவும் அப்படிச் சொல்ல மாட்டாங்க”
“இல்ல இல்ல இந்த அர்த்தத்துல இன்னும் பல புலம்பல்கள்.” சிரித்துச் சமாளித்தாள் வேதா.
“நீ வர்ற வரை, கல்யாணம் பண்ணிக்கலன்னு புலம்பல். இப்பக் குழந்தை இல்லைன்னு புலம்பல். இந்த உலகத்துல ஒருத்தனுக்கு வயசு என்னவா இருந்தாலும் அவனுக்காக இந்த சமுதாயம் எப்பவும் ஒரு கேள்வியோடயே சுத்துதுப்பா.”
“அப்புறம் வேற என்ன பண்ணுவாங்களாம்? ரெண்டாவது வருஷம் கல்யாண நாளே வரப் போகுது, இன்னும் இப்படி உங்க சக்கரக்கட்டிய விட்டுட்டுத் தனியா இருந்தாக் கேள்வி கேட்கத் தான் செய்வாங்க.”
“ஓ, அப்ப கேள்வி எங்க அம்மா மட்டும் கேட்கல. என் சக்கரையும் சேர்ந்து தான் கேட்கிறா போல?”
“நானும் நீங்க போன நாள்ல இருந்து கேட்கிறேன். எப்ப வருவீங்கன்னு. இந்தா அந்தான்னு இவ்வளவு நாள் ஆகிடுச்சு.”
“நானும் உன்ன ரொம்பவே மிஸ் பண்றேன் வேதா. ” அதன் பிறகு வந்த சத்தங்களைக் கேட்டது காதுகளாக இருந்தாலும் உணர்ந்தது என்னவோ கன்னங்கள் தான்.
“இந்த முத்தமெல்லாம் எனக்கு வேண்டாம் அஜூ. எனக்கு நீங்க தான் வேணும்.”
அவள் பின் சொன்ன வாக்கியத்தை ஒதுக்கி, “அப்ப உனக்கு எந்த முத்தம் வேணும்?”
“கேட்டாலும் கிடைக்காதுன்னு தெரிந்தா அதைக் கேட்காத வேதான்னு நானே எனக்குச் சொல்லிச் சொல்லி இப்பப் பழகிடுச்சு அஜூ.” சட்டெனக் குரலில் சுணக்கம். அவளின் உள்ள நிலைமை அவனுக்கும் விளங்கத்தானே செய்தது.
ஆனால் அதற்கான விளக்கம் சொல்லத் தொடங்கினால், அது அவர்களை அவர்களே கீறிக் கொள்வதாகும். எனவே வழக்கம் போல அவளின் பேச்சை மாற்றத் தொடங்கினான்.
“சரி சரி நேத்து அத்தை ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாங்களே என்ன ஆச்சு?”
“எப்பவும் போல நார்மல் செக் அப் தான் அஜூ. பெருசா ஒன்னும் இல்ல. ஆனா நேத்து அம்மாவும் ரொம்பப் பேசீட்டாங்க.” சொன்னவளின் குரலில் கவலை மண்டிக் கிடந்தது.
“என்ன ஆச்சு வேதா? ஏன் டா கவலைப் படற? என்னன்னாலும் நான் பார்த்துகிறேன்னு சொல்லி இருக்கேன்ல்ல. அப்புறம் ஏன் உனக்குக் கவலை?”
“உங்களுக்குப் புரியாது அஜூ. அம்மாக்கு எங்க அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பெரிய கவலை. பொண்ணு தனியா இருக்கா அது ரெண்டாவது கவலை. இதை எல்லாம் விட நமக்குக் குழந்தை இல்லைன்னு ஒரு கவலை.”
“இதென்ன வேதா. நம்ம நிலைமை புரியாதா அவங்களுக்கு? நம்ம என்ன வேணும்னா செய்யிறோம்? அதுவும் ஏன் எல்லாரும் குழந்தை குழந்தைன்னு அதே சொல்றாங்க.”
“அது தானே லைப் சைக்கிள் அஜூ. கல்யாணம் பண்ணினா அடுத்த ஸ்டேஜ் லைப்ல அதுதானே, என்ன நீங்க பார்க்கிற அந்த சொசைட்டில குழந்தை பிறப்ப அந்த கப்பிள்ஸ் மட்டுமே முடிவு பண்றாங்க. அது அவங்க தனிப்பட்ட முடிவா இருக்கு. இங்க நம்ம ஊருல நம்மள சுத்தி இருக்கவங்களும் கேட்கிறாங்க, பேசுறாங்க. ஒருவிதத்தில் அது ஒரு அழுத்தமா இருந்தாலும் அதை அவங்க நம்ம மேல வச்சிருக்கிற அக்கறையாவும் சொல்லலாம் தானே?”
இன்று இந்தக் கேள்வியை அக்கறையாய் எண்ணிக் கொண்டவள் இதே அர்ஜுனிடம் அதைத் தன் மேல் விழும் அழுத்தமாய் சொல்லும் காலமும் வரும். காலமும் வாழ்வும் எப்பொழுதும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒரு சுழற்சி உண்டு அவைகளுக்கு.
“இது என்ன உளறல் வேதா? நமக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துல நான் இங்க வந்துட்டேன். அப்புறமும் குழந்தை, குழந்தைன்னா?”
“இப்ப நீங்க தான் உளறுறீங்க அஜூ.” அவளின் வெட்கச் சிரிப்பொலி அவனுக்கு எதையோ விளக்க,
“அடியே, நமக்கு எங்கடி மத்தத யோசிக்க நேரம் இருந்தது. நம்ம குழப்பமே நமக்குப் பெருசா இருந்தது.”
“ஹ்ம்ம், சரி விடுங்க அஜூ. எப்ப வருவீங்க?”
“அது சர்ப்ரைஸ். உனக்குச் சொல்ல மாட்டேன் டா.”
“உங்களுக்கு நான் என்ன சொல்லி அனுப்பினேன். மறுபடியும் சர்ப்ரைஸ்ன்னு சொல்றீங்க?”
“சொல்லு என்ன சொல்லி அனுப்பின நீ?” சிரிப்புடன் கேட்டான் அர்ஜுன்.
அவன் நினைவுகளெல்லாம் அவள் சொல்லிய அந்த நிமிடங்களைத்தான் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.
“ஹ்ம்ம், நம்பர் ஒன்: வேதா கிட்ட கலந்து பேசாம லைப்ல எந்தப் பெரிய முடிவும் எடுக்க மாட்டேன். நம்பர் டூ: இனி இப்படி எங்கயும் உன்னைத் தனியா விட்டுட்டுப் போக மாட்டேன்.“
அவள் அன்றைய நாளின் கூடலின் இன்பத்தில் பிரிவின் வேதனையும் கலந்து சொல்லி இருந்தாலும் அவன் மீண்டும் அவைகளை அவளுக்காகச் சொல்லும் பொது அந்த நாளின் தித்திப்பு இன்னும் அவளால் உணர முடிகிறது.
“நம்பர் த்ரீ: இது எனக்குப் பிடிக்காது சோ இந்த கண்டிஷன் எனக்கு வேணாம். ஆனா வர வர நீ எனக்கும் டீச்சர் மாதிரி மாறிட்ட”
“ஹ்ம்ம், நீ சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு. போதுமா? சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும். நீ டென்ஷன் ஆகாம இரு.”
சீக்கிரம் சரி ஆகிடும்ன்னா, ஊருக்கு வர போறீங்களா?” பிரிவின் ஏக்கம் நிச்சயம் அவள் குரலில் தெரிந்தது.
இது போன்ற தவிர்க்க முடியாத பிரிவுகளும் ஏக்கங்களும் கணவன் மனைவியின் அன்பை அதிகரித்தாலும், அனுபவிப்பவர்களுக்கு நிச்சயம் அது கொடுமையே. கணவனின் ஆளுமையையும் மனைவியின் அனுசரிப்புகளையும் அனுதினம் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதன் சுகமும் சுவையும் விளங்கும். அந்த உணர்வுகளை உணரும் முன்னே இங்கு வேதாவும் அர்ஜுனும் தனிமையைத் தத்தெடுத்துக் கொண்டனர்.
“இன்னும் கொஞ்ச நாள் வேதா. ப்ராஜெக்ட் அல்மோஸ்ட் கம்ப்ளீட் பண்ணியாச்சு. கண்டிப்பா சீக்கிரம் வந்திடுவேன்.” சொல்லிய குரலில் இருந்த அவனின் கள்ளத்தனமும் அவன் சொல்ல மறுத்த மூன்றாவது நிபந்தனையும் என எதுவும் அவளுக்குக் கருத்தில் பதியவில்லை.