நான்காம் வருடப் படிப்பும் முடியும் நேரம், ஜீவாவிற்கு வேலை கிடைத்து விட நாட்கள் பல கழித்து அவளை அலைபேசியில் அழைத்தான். ஆனால் அவன் மகிழ்ச்சியெல்லாம் அவளின் ஊடல் காணும் வரையில் தான்.
காதல் கொண்டு ஜீவாவிடம் சம்மதம் சொல்லிய நாளிலிருந்து அவன் சொன்னது போலவே இன்று வரை நடந்துகொண்டிருக்கிறாள் ஆனந்தி.
இருவருக்கும் தேவை இல்லாத சந்திப்புகள் இல்லை. மணிக்கணக்கான அலைபேசி அழைப்புகள் இல்லை. மனதில் உள்ள அன்பும் காதலும் கை சேரும் காலத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உறுமீன் வரும் வரை வாடி இருக்கும் கொக்கின் தவம் போலத்தான்.
வேலை கிடைத்த சந்தோஷத்தை எல்லாம் ‘பிரிந்து செல்லப் போகிறான்’ என்னும் ஒற்றைக் கயிற்றில் கட்டி பட்டமாய் பறக்க விட்டுக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
அவளின் சிறு பிள்ளைக் கோபம் கண்டு ஜீவா ஆனந்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“என்னடி புரிஞ்சுக்காமப் பேசுற? உனக்காக நாலு வருஷத்துல முடிக்கிற டிகிரியை ஆறு வருஷமா படிக்க முடியும்.”
“நீங்க சொன்னதைத் தானே இந்த ரெண்டு வர்ஷமாக் கேட்கிறேன். இதுமட்டும் நான் சொல்றதக் கேளுங்க. நீங்க இங்கயே கிடைச்ச ஜாப் ஜாயின் பண்ணுங்களேன். ஏன் பெங்களூரு ஜாபுக்குத்தான் போகணும்னு அடம் பண்றீங்க? அதென்ன அந்தக் கம்பெனி அவ்ளோ ஸ்பெஷல் உங்களுக்கு?”
“ஆனந்தி ப்ளீஸ் புரிஞ்சுக்க. இந்த கம்பெனியிலெல்லாம் பிளேஸ் ஆயிட்டா நம்ம லைப் செட்டில் ஆன மாதிரி.”
“புரியுது. ஆனா அங்க போனா என்னைப் பார்க்க எப்ப வருவீங்க?”
“நீ கேட்கிறது எனக்கும் புரியுது. ஆனா பாரு சென்னைல இருந்தே என்னால உன்னைப் பார்க்க வர முடியல. ஆறு வாரம் ஆகப் போகுது உன்னைப் பார்த்து.”
“சென்னைக்கே ஆறு வாரம்ன்னா, அப்போ நீ பெங்களூரு போயிட்டா? என்னைப் பார்க்க வரவே மாட்ட.”
“உனக்கு நான் எப்படி டி சொல்ல, ட்ரைனிங் பீரியட் ஆறு மாசம் தான். அப்புறம் நான் எப்படியும் இங்கேயே ப்ளேஸ்மென்ட் கேட்டு வந்திடுவேன்.”
“எல்லாம் ஒரு பிளான் தான் ஆனந்தி. அங்க சிக்ஸ் மந்த் ட்ரைனிங். அதுக்குள்ளே இங்க எப்படியும் ஸ்டேட் டீமுக்கு செலக்ட் ஆகிடுவேன். சோ ஸ்டேட் பிளேயர்ன்னு எனக்கு இங்கதான் ப்ளஸ்ட்மென்ட் இருக்கும்.”
“கண்டிப்பா அப்படி நடக்குமில்ல?”
“கண்டிப்பா நடக்கணும். லாஸ்ட் டோர்னமெண்ட் நல்லா பண்ணினேன். அடுத்ததும் நல்லாப் பண்ணிட்டா போதும்.”
“அதெல்லாம் நல்லா விளையாடுவீங்க. டோன்ட் ஒர்ரி.”
“இப்பக் கோவம் போயிடுச்சா? படுத்துற டி.”
“இன்னும் போகல, நிஜமாவே நம்ம லவ் தான் பண்றோமா? எங்க குரூப்ல இருக்க அனிதா எல்லாம் எப்படி இருக்கா தெரியுமா?” ஏக்கம் நிறைந்த அவளின் குரல் அவனையும் தொட்டது. காதலில் ஏக்கமும் ஒரு அங்கம் தானே?
“எப்படி இருக்கா?”
“நல்லா கேட்டு காதில வாங்கிக்குங்க. அவங்க ரெண்டு பேரும் டெய்லி பேசிக்கிறாங்க. வீக்லி மீட் பண்ணுறாங்க. மீட் பண்ணும் போதெல்லாம் நிறைய கிப்ட்ஸ் ஷேர் பண்ணிக்குவாங்க. அப்பறம்,.. ம்ம்.. ச்ச… அதெல்லாம் நிறைய இருக்கு.”
“ஹ்ம்ம் அப்ப உனக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்கு?”
“ஆமா, உங்களுக்கு இப்பத்தான் இதெல்லாம் கேட்கவே நேரம் இருக்கு. அதுவும் இன்னைக்கு ஜாப் கிடைச்ச சந்தோஷத்துல இவ்வளவு நேரம் பேசுறீங்க.” இன்னும் இன்னும் அவளின் குறைகளைக் கொட்டத் தொடங்கினாள்.
“ஆனந்தி நல்லா கேட்டுக்கோ, டெய்லி பேச அவங்கள மாதிரி நம்ம வெட்டியா இல்ல. இப்பலாம் எனக்கு நிறைய நேரம் ப்ராக்டிஸ் இருக்கு. சில சமயம் வீட்டுக்குப் போகவே ரொம்ப லேட்டாயிடும். அதுக்கு அப்புறம் பேசினாலும் நிஜமா ரெண்டு நிமிஷத்துல தூங்கிடுவேனா இருக்கும். காலையிலும் கிரௌண்ட்ல தான் இருக்கேன்.
இதுக்கு இடைல என் ப்ராஜெக்ட் ஒர்க் போகுது. இனி வேலை பத்தி கவலை இல்ல. இவ்வளவு நாளும் அதுக்கும் சேர்த்துப் படிக்க வேண்டியது இருந்தது. இதுல நான் எங்க வந்து உன்னைப் பார்க்க? உனக்கே புரியிது தானே?
அப்புறம் கிப்ட்ஸ்க்கு உனக்கு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நான் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் போது கண்டிப்பா உனக்கு நிறைய கிப்ட் வாங்கித் தறேன். நீயும் கண்டிப்பா வாங்கித் தரணும். உன்னோட சம்பாத்தியத்துல.
விளக்கம் போதுமா பாம்புக்குட்டி?”
“எப்படியும் என்னை பதில் பேச முடியாமப் பண்ணிடுங்க.” அழுத்துக் கொண்டாலும் அவளுக்கும் எங்கோ கொஞ்சம் அவனின் மனம் புரியத்தான் செய்கிறது.
“அதெல்லாம் சரி அப்பறமும் என்னவோ சொல்ல வந்த, அதெல்லாம் ஒன்னும் சொல்லல? வேற என்னவெல்லாமோ நிறைய இருக்குன்னு சொன்னியே?” ஆசையில் உள்ளிருக்கும் காதல் நாயகன் கேள்வி கேட்கத் தொடங்கினான்.
“ஹ்ம்ம் ஏன் அத மட்டும் நான் கேட்டவுடனே குடுக்கப் போறீங்களாக்கும்? போங்க, ஆனந்த். போய் தூங்குங்க. நாளைக்கு ப்ராக்டிஸ் போகணுமில்ல.” சலிப்பு மட்டுமே ஆனந்தியின் குரலில்.
ஆனாலும் இன்று ஜீவாவிற்கு அவளைப் பார்க்கப் பாவாமாகிப் போனது. தங்களின் வயதும் சூழ்நிலையும் காதலுக்கு ஏற்றதாக இருந்தாலும் எதிர்கால வாழ்க்கைக்காக சில கட்டுப்பாடுகளைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர்.
அரிதாய் அவள் சொல்லும் அவளின் ஆசைகள் எல்லாம் நிராசையாய் போக இன்று அவளின் காதலன், அவளின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பின்னரே கைப்பேசியை அணைத்திருந்தான்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. நாளை அர்ஜுன் வேதாவின் இரண்டாம் ஆண்டு திருமண நாள். ஆனால் வேதாவின் மனதிலும் முகத்திலும் சிறிதும் மகிழ்ச்சி இல்லை.
அர்ஜுன் வேறு இன்று முழுவதும் வேலை அதிகம் என்பதால் அவளை அன்று முழுவதும் தொடர்பு கொள்ள வேண்டாம் எனக் கூறி இருந்தான்.
அது அவளுக்கு மேலும் எரிச்சலைத் தர இன்று அவளைப் பார்க்க வந்த அவளின் குடும்பத்தாரிடமும் பெரிதாய் பேசிக் கொள்ளவில்லை.
அவள் தானும் கலங்கி குடும்பத்தையும் கலக்கிக் கொண்டிருந்தாள்.
ஏனோ கோபம், யார் மேலோ, எதனாலோ பகுத்தறிய முடியாக் கோபம். ஆனால் அதைப் போக்கும் வடிகால் எதுவும் தெரிய வில்லை. உள்ளுக்குள் அணையா நெருப்பாய் கனலும் கோபம்.
இது பிரிவின் வலி, தன் தன்மை மாறி கோபமாய் உருக்கொண்டிருந்தது. கணவனுடன் இருந்த மூன்று மாதங்களையும் எண்ணி ஏக்கம் கொண்டு தவித்துக் கரைந்து உருகப் பெரிதாகக் காதல் களவாடிய பொழுதுகளோ கட்டி அணைத்துக் கசிந்துருகிய நினைவுகளோ இல்லை அவளிடம்.
நாளை விடியல் என்ற ஒன்று ஏன் வருகிறது என அவளின் மனம் கோடி முறை கூக்குரலிட்டு விட்டது. ஆனால் விடியலைத் தடுக்க வழி எது?
ஆண்டு முழுவதும் வரும் பண்டிகையோ பிறந்தநாள் விழாக்களோ தராத இந்த நெருக்கடியைத் திருமண நாள் பரிசாக அவள் மனம் அவளுக்குத் தந்து கொண்டிருந்தது.
தவிப்புகளைத் தடுக்க தனிமையை நாடி இரவு முன்னதாகவே மேல் மாடத்திற்கு வந்துவிட்டாள். இன்றும் நிலவின் ஒளி, என்றோ அவன் சொல்லிய காதல் மொழிகளை இவளின் அனுமதியின்றி மனதினில் மறு ஒளிபரப்பு செய்யத் தொடங்கியது.
கண்களை மூடி நிற்க, மீண்டும் அதே நினைவு, அவன் தந்த அந்த முதல் முத்தம். அவள் இதழ்களில் இன்னும் அவன் விட்டுச் சென்ற ஈரத்தின் மிச்சம். கோபம் மாறி அழுகை வரத் தொடங்கியது. கண்கள் கசிய மேல் மாடமும் வெறுத்து மீண்டும் உள்ளே வந்தாள்.
ஏதேதோ நினைவுகள் பின்னர் இரவு எப்போதோ உறங்கி இருந்தாள்.
நள்ளிரவு அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம். கண்களைத் திறக்க முடியாத அளவு இமைகள் பாரமாகி இருக்க, கூர்ந்து கேட்க நினைக்கிறாள்.
தெளிவாகக் கேட்கிறது , யாரோ கதவைத் தட்டும் சத்தம்.
மெல்ல எழுந்து கதவைத் திறக்க, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவள் எதிரில் வந்து நின்றிருந்தான் வேதாவின் அர்ஜுன்.
கண்கள் அவனைக் கண்டது முதல் கண்ணீரை உதிர்க்க அசைவற்று நின்றிருந்தாள்.
“ஹாப்பி அன்னிவெர்சரி மை டியர் லவ்” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தவன் வேதாவைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
அவனின் இந்த இறுகிய அணைப்புக்கும் அவளிடம் எந்தச் சலனமும் இல்லை. கண்ணீர் சிந்தும் கண்களும் விசும்பலும் மட்டுமே. வாய் திறக்க மறந்திருந்தாள் போலும்.
அவள் நின்றிருந்த தோற்றமே அவனின் மனத்தைத் தைக்க மெல்லப் பேசத் தொடங்கினான்.
“வேதா, பேசுடா. உனக்காக மட்டும் தான் நான் இன்னைக்கு வந்தேன். தூக்கம் கூட இல்லை. ப்ளீஸ் பேசு அழாத”
“உன்னை இன்னைக்கு எப்படியும் கண்டிப்பாப் பார்க்கணும்ன்னு மட்டும் தான் உன்னோட ‘சர்ப்ரைஸ் பண்ணாத’ங்குற மூணாவது கண்டிஷன நான் ஒத்துக்கலை”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா. நேர வந்து அம்மா அப்பாவைப் பார்த்திட்டு தான் மேல வர்றேன். இனி தூங்கி எழுந்து கீழ போனாப் போதும். தூங்கலாம் வா மணி ரெண்டு ஆகப் போகுது.”
இனி ஒரு பிரிவு தங்களுக்குள் வேண்டாம் என எண்ணியவள் அவனை இனி என்றும் விட்டு விட மாட்டேன் என்பது போல் இறுகி அணைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கினாள்.
இனி இவர்கள் வாழ்வில் பிரிவு என்பது நிச்சயம் இல்லை. ஆனால் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை ஏது?
எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்
எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன் உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்