நேற்றைய இரவின் எதிர் பாராத இன்ப அதிர்வில் உறங்கிய வேதாவின் உறக்கம் வெகு சீக்கிரம் களைய அவள் இடையை அழுத்தும் அவன் கையின் சுகம், மேலும் அவள் மனதில் ஒரு மந்த மாருதமாய் வீசியது.
மெல்ல அவன் கையை விலக்க, “ம்ம்ஹ்ம், இனி என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. பேசாமத் தூங்கு வேதா. இன்னும் விடியலை. நம்ம தூங்க வந்து ரெண்டு மணி நேரம் கூட ஆகல டா.” இன்னும் அவளை நெருங்கியவன் குரல் காதின் ஓரம் முணுமுணுப்பாய் ஒலித்தது.
“தூக்கம் வரலையா?” சொன்னவன் கைகள் அவளை இன்னும் இறுக்க, அவள் அவன் புறமே திரும்பிச் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.
சிறிது நேர உறக்கமே என்றாலும் அவனைத் திடீரெனக் கண்ட அதிர்ச்சி நீங்கி மனம் மகிழ்ந்து தெளிந்திருந்தது.
“ஏன் அஜூ, இந்த முறையும் நீங்க எனக்குச் சொல்லவே இல்ல. திடீர்ன்னு வந்து நிற்கிறீங்க?”
“இல்லடா சர்க்கரை, இந்த வாய்ப்பும் விட்டுட்டா இனி இது போல நமக்குக் கிடைக்காது. எனக்கு எப்படியும் இன்னைக்கு உன்னைப் பார்த்தே ஆகணும். அதுதான் யாருக்கும் சொல்லாமல் ஓடி வந்துட்டேன்.” சொன்னவன் இதழ்கள் அவளுக்குச் சிறு சிறு முத்தப் பரிசுகளைத் தரத் தொடங்கின.
“இதெல்லாம் இருக்கட்டும் முதல்ல சொல்லுங்க, அடுத்து என்ன செய்யப் போறீங்க? திரும்ப எப்பப் போகணும்?” தன்னை மறுபடி பிரிந்து சென்று விடுவானோ என்ற பதற்றம் அவளுக்கு.
“ரெண்டு பெரும் சேர்ந்து தான் போகணும். நீயும் என் கூட வரணும் வேதா. ஆனா இந்த தடவை லாஸ் ஏஞ்செல்ஸ் இல்ல கேம்பிரிட்ஜ்.” சென்ற முறை செய்த தவறுகளை இனி செய்யக் கூடாது என்ற எண்ணமே அவனை மேலும் பேசத் தூண்டியது.
“ஒருவேளை உன்னால இப்ப வரமுடியாதுன்னா நானும் வேற ப்ராஜெக்ட்க்கு மாறிப்பேன் வேதா, இங்கயே சென்னைக்கு. நீ சொல்லு என்ன செய்யலாம்?”
“இல்ல இல்ல போகலாம். அஜூ எங்க கூட்டிட்டுப் போனாலும் ஓகே தான். எனக்கு ஜாப் ரிசைன் பண்ண நாலு வாரம் ஆகும். நீங்க எவ்வளவு நாள், இல்ல வருஷம் அங்கன்னு சொல்லலையே?”
அவன் கைகளும் பேச்சும் கணவனாய் அவளைக் கரையச் செய்ய, கண்மூடி அவனுள் கலந்து அழகாய் களைந்து அதனால் களைத்து, என இருவருக்கும் தித்திக்கும் தீஞ்சுவையாய் அந்தத் திருமண நாளின் தொடக்கம்.
மீண்டும் உறக்கம் களைந்து தன்னை சுத்தம் செய்து கொண்டு அர்ஜுன் கீழே வந்தான். சந்தோஷ மாற்றங்கள் அவர்களின் மனங்களில் மட்டுமல்லாமல், மொத்த வீடுமே மாறி திருவிழாக் கோலம் கொண்டிருந்தது அவர்களின் குட்டி தேவதை யாழினியின் செய்கைகளால்.
“மார்னிங் அர்ஜுன். ஹேப்பி அனிவெர்சரி ப்பா.” சொன்னவர் குரலிலும் உற்சாகம் தான்.
“தேங்க் யூ ப்பா.”
“ஏன் அர்ஜுன், என்ன இது இப்படி எதுவும் யாருக்கும் சொல்லாம வந்து நிக்கிற? நேத்து நடு ராத்திரில கதவைத் தட்டவும் அந்த நேரம் என்ன கேட்கண்ணு விட்டுட்டேன்?” மகன்களைப் பெற்ற பல அப்பாக்கள் கேட்கும் கேள்வியை இன்று அருணாச்சலமும் கேட்டார்.
“நான் யாருக்கும் இன்போர்ம் பண்ண முடியலப்பா. திடீர்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன்.”
“இனி லீவு எவ்வளவு நாள்? எப்ப திரும்பப் போகணும்.”
“அஞ்சு வாரம் இருப்பேன் ப்பா. இனி என்னோட புது ப்ராஜெக்ட் UK-ல தான். திரும்பப் போகும் போது அங்க தான் போகணும் ப்பா.”
“அர்ஜுன், இந்த தடவை வேதாவைக் கூட்டிகிட்டு போ. இப்படி தனித்தனியா இருக்கிறது நல்லா இல்லப்பா. உனக்கே இதெல்லாம் புரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.”
“கண்டிப்பா ப்பா. அம்மா எங்கப்பா? நான் இன்னும் யாழியைப் பார்க்கவே இல்லப்பா. நேத்தும் தூங்கும் போது எட்டிப் பார்த்தது தான்.”
“முன்னாடி வாசல்ல உங்க அம்மாவோட இருக்கா. கார், வண்டி இல்லாட்டி காக்கா குருவி ஏதாவது பார்ப்பா.” என்றதும் அவர்களைப் பார்க்க வெளியில் வந்தான் அர்ஜுன்.
முன் வாசலில் நின்றிருந்த இருவரும் இவனைத் திரும்பிப் பார்த்தனர். குழந்தை தன் பாட்டி கையைப் பிடித்துக் கொண்டாலும் முகத்தில் ஒரு சினேக பாவம்.
“அம்மா, இவளுக்கு என்னைத் தெரியிதும்மா.” ஆர்ப்பரிக்கும் குரல், அர்ஜுனின் மனம் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டது.
உடன் பிறந்தவர்களின் குழந்தைகள் என்பது என்றுமே சிறப்புதான்.
“உன்னை வீடியோல எல்லாம் பார்த்திருக்கால்லடா, அதான் தெரியுது.”
“கல்யாண நாள் வாழ்த்துக்கள் அர்ஜுன், இதுக்காகத் தான் நேத்து அவசரமா யாருக்கும் சொல்லாம கிளம்பி வந்தியாடா?”
“அப்படி எல்லாம் இல்லம்மா. லீவு கிடைக்கவும் வந்துட்டேன்.” அம்மாவின் சூட்சமம் மகனுக்கும் சிறிது விளங்கியது.
“ஏன் அர்ஜுன் வேதாவுக்கு நீ வர்றன்னு தெரியுமா? அவளும் ஒன்னும் சொல்லல.” சந்தேகம் அவரின் மனதில்.
மகனுக்கு யார் முக்கியம் தானா? மருமகளா? பல மாமியார்களுக்கு வரும் சந்தேகம் அன்று சாகரிக்கும் வந்தது. இந்தக் கேள்வியில் பல இடங்களில் மாட்டிக் கொள்வது பாவம் அப்பாவி மகன்களே.
அர்ஜுன் அந்த வகையில் அப்பாவி மகனும் அல்ல. மனையாளை சமாளிக்கத் தெரியாத அம்மாஞ்சியும் இல்லை.
“அவளுக்கும் தெரியாதும்மா. நான் சொல்லல. எனக்கு லீவு இருந்தது. கிளம்பி வந்துட்டேன்.” தாயிடமும் தன் நிலைப்பாட்டைச் சொன்னவன்
“எங்கம்மா வேதாவும் ஸ்ரீயும்? கிச்சன்லயா?”
“ஆமாடா ரெண்டு பெரும் மதியத்துக்கு ஏதோ ஸ்பெசலா செய்யிறாங்களாம். நீ எதுவும் சாப்பிடலையே? உனக்குக் காபி தரவா? இல்ல டிபன் தரவா?”
“காபியே தாங்கம்மா.” என்றவன் மருமகளைத் தூக்கிக் கொண்டு தானும் வீட்டுக்குள்ளே வந்தான்.
“மாமா சொல்லுடா, மாமா மாமா” தன் தங்கை மகளுடன் கழிக்கும் இந்த நேரம் அவனுக்கு உள்ளமெல்லாம் ஒரு பூரிப்பைத் தந்தது.
பிள்ளையை இறக்கி விட்டவன், கையிலிருந்த குளம்பியை மேஜை மேல் வைத்து விட்டு தொலைக்காட்சியை இயக்குவதற்குச் சென்றான்.
மெல்ல நடந்து வந்த யாழினி குளம்பியைத் தொட வர அருணாச்சலம் விரைந்து வந்து குழந்தையைத் தூக்கி இருந்தார். ஆனாலும் குளம்பிக் கோப்பை கணீர் என்ற ஒலியுடன் மொத்தமும் கீழே கொட்டி இருந்தது.
குழந்தையின் பயந்த அழுகுரலிலும் குளம்பி கொட்டிச் சிதறிய சத்தத்திலும் அனைவரும் ஓடி வர, அர்ஜுன் முகத்தில் பயத்திற்கான ரேகைகள் சூழ ஆரம்பித்தன.
ஸ்ரீ வேகமாக வந்தவள் யாழினியைத் தூக்கி சமாதானம் செய்யத் தொடங்கினாள்.
“என்ன டா அர்ஜுன் இது? சொல்லிட்டுத் தானே போனேன்? கவனமா இருக்கிறதில்ல?”
“இல்லம்மா நான் டேபிளில் வைச்சிட்டு டிவி போடத்தான் போனேன். அதுக்குள்ள வந்து தட்டி விட்டுடாம்மா.”
“பிள்ளை இருக்கிற வீட்டுல நம்ம தான் பொறுப்பா இருக்கணும். ஏதாவது ஆனதுக்கு அப்புறம் புலம்பி பயன் இல்லை.” சாகரி சொல்லிக் கொண்டே போக அர்ஜுன் முகம் மேலும் இருண்டது.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அர்ஜுன், அவளே கொஞ்சம் குறும்புதான். நீ இனி கவனமா இரு. இதெல்லாம் ஒண்ணுமில்லை.” என்று அவனின் பதட்டம் குறைத்தார் அருணாச்சலம்.
ஆனாலும் அர்ஜுன் முகம் தெளிந்திருக்க வில்லை. குழந்தையின் மேல் சூடான குளம்பி சிந்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற எண்ணம் மட்டுமே அவனை அச்சுறுத்தியது.
அதற்குள் ஸ்ரீ தன் மகளைச் சரி செய்து அழைத்து வந்திருக்கக் குழந்தை முந்தைய விஷயங்கள் எல்லாம் மறந்து மீண்டும் தன் புன்னகையால் வீட்டை நிறைக்கத் துவங்கினாள்.
அதன் பிறகு அன்று முழுவதும் அர்ஜுன் மழலையின் சிறு நடையையும் தேன் மொழியையும் குறும்பையும் ரசித்தான். ஆனாலும் அவளை மீண்டும் அள்ளித் தூக்கிக் கொண்டாடி விளையாட சிறு தயக்கம் வந்து விட்டது.
அவனின் தயக்கம் மற்றவர்கள் கண்ணிலிருந்து தப்பினாலும் வேதா நிச்சயம் அதைக் கண்டு கொண்டாள்.
தான் கண்டதை இரவு மேல் மாடத்தில் தனிமையில் நின்றிருக்க அவனிடம் கேட்கவும் செய்தாள்.
“ஹையோ, எனக்கு காலைல நான் அவளை அப்படிப் பார்த்ததே இன்னமும் பல நாள் ஆகும் என் பயம் போக. இனி அவ ஊருக்குப் போகும் வரை பத்திரமா இருக்க வேண்டாமா?”
“இதென்ன பேச்சு. அம்மா கை பிடிச்சு நடக்குற குழந்தை கூட கீழ விழத்தான் செய்யும். அதுக்காக அம்மா பிடிக்க மாட்டேன்னு சொல்லுறதா?”
“எனக்கு அந்த தைரியம் இல்ல, என்ன செய்ய?”
“அப்ப நீங்க நம்ம குழந்தையை எப்படி பார்த்துப்பிங்க?” தாமதமின்றி வந்தது அடுத்த கேள்வி.
“அது … ம்ம்ம், ஒரு வேலை முதல் நாளிலிருந்து தூக்கினா பயம் போயிடும்.”
“பிறந்த குழந்தை தான் தூக்கக் கஷ்டம். யாழினி வளர்ந்த குழந்தை. அவளை பார்த்துக்கிறது சுலபம்.” என்றவள் மேலும்
“நாளைக்கு அம்மா வீட்டுக்கு மதியம் விருந்துக்குப் போகும் போது நீங்கதான் அவளைப் பார்த்துக்கணும். சரியா அஜூ?”
“ஹ்ம்ம், இப்பவே எனக்கு ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ற. சரி சரி பழகிக்கிறேன்.”
அன்றைய இரவுக்குப் பிறகான நாட்கள் எல்லாமே அவர்களுக்கு மின்னல் வேகம் தான்.
இருவரும் வேலைக்குச் சென்று வந்தாலும், இங்கிலாந்து செல்வதற்கான ஏற்பாடுகள், எடுத்துச் செல்ல வேண்டியவை, பயணத்திற்கு வாங்க வேண்டியவை என அவர்களின் நேரம் கரைந்து காணாமல் போனது.
கடைசியில் பயணப் படும் நாள் வர வேதாவின் மனநிலை என்ன என்பது அவளுக்கே விளங்காத ஒன்றாகிப் போனது.
குடும்பத்தை இங்கு விட்டுச் செல்லும் பிரிவுத் துயரமா? இல்லை இரண்டாண்டு பிரிவுக்குப் பிறகு இனி கணவனுடனான வாழ்விற்கான மகிழ்ச்சியா? எது பெரியது? இதில் எதற்கு அவள் மனமும் முகமும் பாவனை செய்ய வேண்டும்?
எல்லாம் கேள்விகள் தான். ஆனால் மனமும் முகமும் எந்த பாவனையும் செய்யாமல் நிர்மலமாய் இருக்க கைகள் கணவனை இறுகப் பற்றிக்கொள்ள அவர்களின் பயணம் தொடங்கியது.
ஆகாயத்தில் முதல் பயணம், அற்புதமாய் மேகங்களும் அவஸ்தையாய் நீண்ட நேர பயணமும் என வேதாவின் உணர்வுகளில் மீண்டும் அலைக்கழிப்பு.
லண்டன் வந்து இறங்கி அங்கிருந்து மகிழுந்தில் கேம்பிரிஜ் நோக்கி இரண்டு மணிநேரப் பயணம்.
விமான நிலையம் தாண்டியதிலிருந்து இங்கிலாந்தின் இயற்கையில் வேதாவின் மனம் ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய். வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்?’ என பாடிக் கொள்ள, அர்ஜுனின் கைகளைப் பற்றிக் கொண்டு தோளில் சாய்ந்து கண்கள் விரிய கட்சிகளைக் கண்டு கொண்டிருந்தாள்.
“என்ன வேதா, ஒரே ரசனை? எப்படி இருக்கு ஊரு? பிடிச்சிருக்கா என் சக்கரைகட்டிக்கு?”
“வாவ் ரொம்ப அழகா இருக்கு அஜூ, ஆனா இப்ப ராத்திரி எட்டு மணின்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க, என்ன இப்படி வெயில் அடிக்கிது.”
“இங்கெல்லாம் இப்படித்தான். அதுவும் இது ஜூலை மாசம். இங்க இப்பத்தான் சம்மர். நிறைய பூக்களோட ஊரு மொத்தமும் ரொம்ப அழகா இருக்கும்.”
“என்னை இறக்கி விட்டா இந்த பூவெல்லாம் பார்த்துகிட்டே மெல்ல நடந்து வருவேன். ஆனா இன்னைக்கு செம டையர்ட்.”
“ஹா ஹா வேதா வேதா, நாளைக்கு நம்ம ஊர சுத்தி நடக்கலாம். இப்ப நீ இப்படியே உட்கார்ந்துவெளில வேடிக்கை பார்ப்பியாம். நா சத்தம் இல்லாம உன்னை வேடிக்கை பார்ப்பேனாம்.” என்று புருவம் உயர்த்தி அவளின் நெற்றி முட்டிக் கேட்டான்.
கண்களால் ஓட்டுநர் இருக்கையை அவள் காட்ட, தோள்களைக் குலுக்கிக் கொண்டவன் அவளை மீண்டும் சீண்ட, இருவரும் சிரிக்க என ரசனையாய் புன்னகைப் பூக்களுடன் அவர்களின் புது இல்லம் நோக்கிய பயணம்.
காலங்கள் மாற காலநிலைகளும் மாறும். இன்று புன்னகைப் பூக்கும் மலர்கள் எல்லாம் கால மாற்றத்தில் நாளை பூமியைத் தழுவும். இது காலத்தின் சுழற்சி. இந்த சுழற்சி பூக்களுக்கு மட்டுமா? இல்லை மனிதர்களின் புன்னகைப் பூக்களுக்குமா?