வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே
எங்கும் வண்ணப் பூக்களும், இலையில்லாப் பூக்கள் அடர்ந்த மரமும், இரவிலும் தெரியும் சூரியனும் என இறைவனின் அழகிய ஓவியமாய் தெரிந்த இந்தப் புது உலகை வேதா பார்வையிட்டுக் கொண்டும் அதைப் பற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டும் வந்தாள்.
அர்ஜுனிடம் பேசிப் பேசிக் களைத்து வீடு வரும் முன்னே உறங்கி இருந்தாள். வீட்டை நெருங்கவும் அர்ஜுன் தட்டி எழுப்ப மெல்ல எழுந்தவள் முதலில் கேட்டது “இது என்ன இடம்?” என்பது தான்.
“போட்டிஷம், கேம்பிரிட்ஜ் ஒட்டி இருக்கிற ஒரு அழகான கிராமம். இங்க தான் நம்ம இனி தங்கப் போறோம் .”
“கிராமமா? என்ன அஜூ சொல்றீங்க?”
“ஹ்ம்ம், வா உனக்குக் கண்டிப்பாப் பிடிக்கும்.”
மீண்டும் அவள் வேடிக்கையைத் தொடங்க, அந்த அழகான வளைவுக்குள் மகிழுந்து நுழைந்திருந்தது.
வரிசையாய் குடியிருப்பு வீடுகள் நடுவில் வட்ட வடிவிலான புல் தரை. அதன் நடுவில் ஒரு வானளவு உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகு.
அர்ஜுன் ஒரு வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினான். பின் அவளையும் இறங்கச் சொல்ல, அவள் கண்டது இளஞ்சிவப்பு நிற மலர்கள் மட்டுமே நிறைந்து இருக்கும் மரத்தைத் தான்.
“இதென்ன சிவப்புக் கம்பள வரவேற்பு மாதிரி பிங்க் கம்பள வரவேற்பா?”
“இங்க குல்மோகர் மரம் இல்லையே, செர்ரி பிளாஸம்ஸ் தான் இருக்கு. அதனால் பிங்க் வரவேற்பு தான். இறங்கி வாடா” என அவளைக் கை பிடித்து இறக்கிவிட்டான்.
கொண்டு வந்த பொருட்களை எல்லாம் இறக்கி வைத்துக் காத்திருக்க அர்ஜுனின் நண்பன் வந்து வீட்டுச் சாவியும் இரவு உணவும் கொடுத்துச் சென்றிருந்தான்.
“அஜூ தூக்கம் சொக்குது. நம்ம ஊருல இப்ப நடு ராத்திரில்ல?”
“ஆமாடா, வா வந்து சாப்பிட்டு தூங்கலாம். நல்லவேளை பிரேம் வீட்டிலிருந்து சாப்பாடும் கொண்டு வந்து தந்துட்டாங்க. “
இருவரும் உண்டு உறங்க அதன் பின் வந்த நாட்களெல்லாம் புயலின் வேகம் தான். தங்களைப் புது இடத்தில் பொருத்திக் கொள்வதற்கான வேலைகள் அதிகம் இருந்தன. வந்து ஒரு மாதம் கடந்திருக்க அர்ஜுன் பணிக்குச் சென்று வரத் தொடங்கினான்.
அன்று அவன் திரும்பி வரும் நேரம் வேதா வாசலில் நின்று பூக்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன வேதா இன்னைக்கும் போட்டோ ஷூட்டா? இன்னைக்கு என்ன சாயந்திரத்துல எடுக்கிற?”
“அஜூ சாயங்காலம் இந்த சூரிய வெளிச்சத்துல இந்த மஞ்சள் லில்லி பூவோட ஷெட் இன்னும் அழகா இருக்கு. சும்மா தங்கம் மாதிரி ஜொலிக்குது.”
“ஹ்ம்ம், சரி சரி. இன்னைக்கு என்ன இடம் கண்டு பிடுச்சு இருக்க? வாக்கிங் போக?” பேசிய படியே இருவரும் உள்ளே வர, வேதா அவனுக்கு மசாலா தேநீர் தயாரிக்கத் தொடங்கினாள்.
“இன்னைக்கு என் கண்டுபிடிப்பு இல்ல, கடைசி வீட்டுல இருக்காங்கல்ல பாட்டி, அவங்க பேரு ஜேனட். அவங்க சொன்னாங்க நம்ம தெரு தாண்டி இருக்க எல்ம் வாக் பக்கத்தில இருக்க நடை பாதையில் போனா பெரிய ரேப் ஸீட் பார்ம் இருக்காம். அந்த பக்கம் போயிட்டு வர சொன்னாங்க. கொஞ்சம் லேட்டாப் போனா மான் முயல் எல்லாம் பார்க்கலாமாம்.”
“சரி வா போகலாம்.” எனத் தேநீர் அருந்திவிட்டு இருவரும் கிளம்பிச் சென்றனர்.
“அஜூ இன்னைக்கு நான் அவங்க கிட்டப் பேசும் போது எனக்கு நிறைய விஷயம் தோணிச்சு. இந்த மக்கள்கிட்ட நம்ம கத்துக்க வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருக்குன்னு. “
“அப்படி உனக்குத் தோணுற அளவுக்கு என்ன சொன்னாங்க ஜேனட்?”
“அவங்க என் கிட்ட ‘இந்தியாவுல நிறைய டீனேஜ் பசங்களுக்குச் சமைக்கத் தெரியாதா’மேன்னு கேட்டாங்க. நானும் பெருமையா ‘எங்களுக்கு எங்க அம்மா சமைச்சுத் தருவாங்க’ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க, ‘அப்ப நீங்க வீட்டை விட்டு வேலைக்கு இல்ல கல்யாணம் பண்ணி அம்மா அப்பாவை விட்டுத் தனியா இருக்க சூழ்நிலை வந்தா என்ன செய்வீங்க’ன்னு கேட்டாங்க அஜூ.”
“அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமெண்ட். செம கேள்வி. இப்பல்லாம் கடுகு உளுந்து கூட எனக்குத் தெரியாதுன்னு சொல்லுறது நம்ம ஊருல பேஷன் ஆயிடுச்சு. வேற என்னத்த சொல்ல. நல்ல வேலை நீ அப்படி வளரல. நானும் ஒரு அளவு பேசிக்ஸ் அம்மா கிட்ட கத்துக்கிட்டேன். இல்லைன்னா நம்ம நிலைமை? இப்படி வெளிநாட்டுக்கு வந்து இந்தியன் சாப்பாடு கிடைக்காத இடத்தில் யூ டூபில் பார்த்து நம்ம எப்ப கத்து, எப்ப சமைச்சு, எப்ப சாப்பிடறது?”
“ஹ்ம்ம், அதைத்தான் அவங்களும் சொன்னாங்க. இன்னமும் நிறைய கேட்டாங்க” என்றவள் மேலும் பேசத் தொடங்கினாள்.
“பதினெட்டு வயசுல ஒரு பையன் அவன் செலவை அவன் தான் பார்க்கணும்ன்னு சொன்னாங்க. நான் படிக்கும் போது வேலைக்குப் போனதில்லன்னு சொன்னதுக்கு, உன் செலவுக்கு உன்னைப் பெத்தவங்ககிட்ட காசு வாங்குறது தப்பில்லையான்னு கேட்டாங்க?”
“ஹ்ம்ம், நம்ம ஊருல எப்பவுமே அம்மா அப்பா குழந்தைங்களுக்கு செஞ்சு பழகிட்டோம் டா. அதை நம்ம கடமையா நினைக்கிறோம். அது எப்படித் தப்பு ஆகும்?”
“தப்பு தானே அஜூ? நடக்க தெரிஞ்ச குழந்தையைத் தூக்கிட்டு போகிற மாதிரித் தானே இதுவும்? அவனுக்குப் படிப்புக்குச் செலவு செய்யலாம். ஆனா படம் பார்க்க, பிரண்ட்ஸ் கூட அவுட்டிங் போகன்னு அவங்க செலவுக்கு அவங்க வேலைக்குப் போனா நல்லது தானே.
டீனேஜ்ல பெத்தவங்க மேல வர்ற வெறுப்பு கொஞ்சம் குறைஞ்சு அவங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்க ஒரு வாய்ப்புக்குக் கிடைக்குமே?”
“நீ சொல்றது கரெக்ட் தான் சக்கரை. இங்க டாக்ட்டருக்குப் படிக்கிற பொண்ணு ஒரு சூப்பர் மார்க்கெட்ல பார்ட் டைம் வேலைக்குப் போனா யாரும் பெருசா நினைக்க மாட்டாங்க. ஆனா நம்ம ஊருல அப்படி இல்லையே. படிப்பு கேட்டுப் போயிடும்ன்னு பெத்தவங்க யோசிப்பாங்கல்ல?”
“அஜூ அப்ப இங்க இருக்கவங்க எல்லாம் படிக்கலையா? ஆனா நீங்க சொல்லுறதுல ஒன்னு கரெக்ட். இங்க வேலை இடத்துல இருக்க ஃப்ளேக்சிபிலிட்டி நம்ம ஊருல இல்லைதானே. இங்க அவங்களுக்கு எவ்வளவு நேரம், எந்த நேரம், எந்த நாள் வேலை செய்யலாம்னு அவங்களே முடிவு செஞ்சு வேலை செய்ய முடியுது. நமக்கு அப்படி வாய்ப்பெல்லாம் இருக்கான்னு எனக்குத் தெரியல. “
“இதைவிட முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்ட. இங்க ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கணும்னு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பணத்தை நிர்ணயம் பண்ணி வச்சிருக்காங்க. அதனால பகுதி நேரமா வாரத்துக்கு இருபது மணி நேரம் வேலை செஞ்சா ஸ்டுடென்ட்ஸ்க்கு அவன் செலவு செய்யத் தேவையான பணம் கிடைக்குது. ஸ்டுடென்ட்ஸ் அந்த அளவு நேரம் தான் வேலை செய்யணும்னு அரசாங்கம் அதுக்கும் ஒரு அளவு வச்சு இருக்கு. ஆனா இதெல்லாம் எதுவும் இல்லாம நம்ம ஊருல படிக்கிற பசங்க வேலைக்குப் போனா கஷ்டப் பட மாட்டாங்களா?”
“ஆமா அஜூ நீங்க சொல்றதும் சரிதான். வெளி நாட்டுல இருந்து எத்தனையோ விஷயங்கள் நம்ம கத்துக்குறோம். நம்ம நாட்டுலயும் செயல் படுத்துறோம். ஆனா இந்த மாதிரி நல்ல விஷயமெல்லாம் கத்துக்க மாட்டேங்குறோம்.”
“அதுவும் சரிதான், வேதா. ஆனா பார்த்தியா பேசிக்கிட்டே நம்ம எப்பவும் வர்ற குதிரைப் பண்ணைக்கே இன்னைக்கும் வந்துட்டோம். பாரு உன் சண்டி ராணி இன்னைக்கு அமைதியா சாந்த ஸ்வரூபியா நிக்கிறா.” என்று அவள் விரும்பிப் பார்க்கும் அந்த பழுப்பு வண்ணக் குதிரையைக் காட்ட அது அமைதியாக நின்றிருந்தது.
“ஆமா, இன்னைக்கு இப்படி நிக்கிது, நாளைக்கு எப்படியோ? நமக்கும் வழக்கமா இங்கயே வந்து பழகிடுச்சு. அங்க நாளைக்குப் போகலாம்.”