“இன்னைக்கு என்ன சமையல் வேதா? செஞ்சாச்சா? இனிமேதான் செய்யணுமா?” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தான்.
“மஷ்ரூம் கிரேவி செஞ்சு வச்சுட்டேன், இனி சப்பாத்தி மட்டும் செய்தாப் போதும். பசிக்கிதா அஜு? சப்பாத்தி செய்ய ஆரம்பிக்கலாமா?” கேட்டுக் கொண்டே அவளும் அவன் பின்னே வந்தாள்.
இங்கு வந்ததிலிருந்து இரவு உணவில் அவனது உதவி (அப்படித்தான் அர்ஜுன் சொல்லிக் கொண்டான்.) அவளுக்கு நிச்சயம் இருக்கும்.
“இன்னைக்கு நான் தேய்க்கவா? நீ அடுப்புல போட்டு எடுக்குறியா வேதா?”
“வேண்டாம் அஜூ, நீங்க செய்தா வட்டமா சப்பாத்தி வராது. அப்புறம் போன தடவை மாதிரி பேசிப் பேசியே அந்த மொக்க சப்பாத்தி எல்லாம் எனக்கு சாப்பிடக் குடுப்பீங்க.”
“என்னடா சக்கரை இப்படி சொல்ற, அது உனக்காக நான் செஞ்ச லவ் சப்பாத்தி மா.”
“ஒன்னும் வேண்டாம். உங்க உலக மேப் சப்பாத்தி. நீங்க வழக்கம் போல கரண்டியை மட்டும் பிடிங்க.”
பேசிய படியே அவள் சப்பாத்தியைத் தேய்க்க ஒவ்வொரு முறை அதை எடுக்க வரும் போதும் அவனின் செல்லத் தீண்டல்களிலும் கைகளின் அத்துமீறல்களிலும் கடுப்பானவள்,
“கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம். பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்” என்று பாடியவன் “அப்படித்தான் பண்ணுவேன் சக்கரக் கட்டி” என்று சொல்லியபடி பின்னாலிருந்து அணைத்திருந்தான்.
மெல்ல அவனிலிருந்து தன்னை விடுவித்தவள், “இப்படியே என்னை சீண்டிகிட்டே இருந்திங்க நல்லெண்ணெய் தேச்சு மடிக்கிறதுக்கு பதில் உங்க சப்பாத்தில மட்டும் வேப்பெண்ணெய் வச்சு தேச்சுருவேன். பார்த்துக்குங்க.” சிரிப்பை அடக்கிய படியே சொன்னாள்.
“இதெல்லாம் நம்ம தனியா இருக்கும் போது தான் பண்ணலாம் டா. சென்னைல இருக்கும் போது இதெல்லாம் பண்ண முடியுமா?”
“ஆனா எனக்கு அப்படித் தோணல அஜு. அங்க உங்க கண்ணு எப்பவும் என்னையே சுத்தும். எப்படா மாடிக்குப் போவோம்னு இருப்போம். இங்க வந்ததுக்கு அப்புறம் அந்தத் தேடல், கண்ணால பேசிக்கிற அந்த நிமிஷம் இதெல்லாம் மிஸ்ஸிங் அஜூ.”
“வீட்டை மிஸ் பண்றியா வேதா? முதல் முதல்ல வீட்டை விட்டுத் தனியா வந்து இருக்கிறது கஷ்டமா இருக்கா என் சக்கரைக்கு?”
“உங்க கூட இருக்கும் போது ஒன்னும் தோணல. ஆனா நீங்க ஆபீஸ் போனதுக்கு அப்புறம் தனியா இருக்கும் போது நிறையத் தோணுது. அதுவும் வீட்டுக்குப் பேசும் போது இன்னுமே ரொம்பக் கஷ்டமா இருக்கு.”
“ரொம்பக் கஷ்டமா இருந்தா தனியா இருக்கன்னு தோணுதுன்னா, வேலைக்குப் போறதுன்னா போயேன் வேதா. முழு நேரம் தேடாத. வாரத்துக்கு இருபது மணி நேரம்ன்னு பார்ட் டைம்ல தேடு.”
நினைத்தேன் என்று சொல்லும் போது அவளுக்கு வேறு ஒரு விஷயமும் நினைவுக்கு வர, எப்படி மறந்தோம் என்று எண்ணத் தொடங்கினாள். மனதில் கணக்கிட்டுப் பார்க்க முப்பத்தி ஏழு நாட்களைக் கடந்திருந்தது.
எண்ணங்கள் அதன் போக்கில் செல்ல, சட்டென ஒரு பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது.
“என்ன வேதா திடீர்ன்னு அமைதி ஆயிட்ட? சப்பாத்தி திரட்டினது பொதும்ன்னு சொன்னேன். உனக்கு எதுவும் கேட்கலையா?”
“இல்லங்க, ஏதோ யோசனை. ஹ்ம்ம் வாங்க சாப்பிடப் போகலாம்.”
உண்டு முடித்து உறங்க வந்தவளுக்கு அன்றைய இரவு முழுவதும் ஏனோ அதே சிந்தனை. அர்ஜுனிடம் பகிர்ந்து கொள்ளவும் தோணவில்லை. ஒருவேளை தான் தாய் ஆகும் தருணம் இது தானோ என எண்ணங்கள் வரத் தொடங்கியது. ஆனால் உடலளவில் எந்த மாற்றங்களும் உணரப் படாதது அவளுக்கு மேலும் சந்தேகத்தையே தர எதுவும் தெரியாமல் அர்ஜுனிடம் பகிர்ந்து அவனையும் குழப்பும் எண்ணம் இல்லாமலே போனது.
நாளை அவன் வேலைக்குச் சென்றவுடன் முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் உறங்க முற்பட்டாள். அவளின் குழப்பங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அவளின் தூக்கத்தை அன்று பலியிட்டவள் விடியலில் வேகமாக எழுந்து தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
அர்ஜுன் எழுந்து வர அவனுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து அவனை அலுவலகத்திற்கு அனுப்பினாள்.
வேலைகள் எல்லாம் முடிய தானும் உடை மாற்றி மருந்தகம் நோக்கிப் புறப்பட்டாள்.
செல்லும் வழியெல்லாம் அவளுக்குச் சிந்தனைகளே. ஒருவேளை ஆம் என்றால் தான் என்ன செய்ய வேண்டும். தனியாக சமாளிக்க முடியுமா? என்று தோன்றினாலும் இன்னொரு மனம் இல்லை ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் என்ன செய்வது என்று எண்ணியது.
இல்லை என்றால் ஏமாற்றமில்லை தான். ஆனாலும் மனம் பதிலுக்குத் தவித்தது..
சிந்தனை எல்லாம் குழப்பமான எண்ணங்கள் சூழ மருந்தகம் வந்தவளுக்கு அங்கு இருக்கும் விதவிதமான சோதனைக் கருவிகளில் தான் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் வந்தது.
அங்கு இருப்பவர்களின் உதவியுடன் சரியானதைத் தேர்வு செய்து வாங்கி வந்தாள்.
வீட்டுக்கு வந்தவளுக்கு இதயம் எகிறி வெளியே குதித்து விடும் அளவுக்குப் படபடப்பு.
கண்களை மூடி சில நிமிடங்கள் இருக்கையில் அமர்ந்தாள். ஏனோ மனம் சமநிலைப் பட வேண்டி இருந்தது.
நீண்ட சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து சென்று சோதனை செய்ய, அது ஒற்றைக் கோட்டுடன் சோக முகமான ஸ்மைலியுடன் நின்றிருந்தது.
அதைப் பார்த்ததும் எங்கிருந்து வந்ததோ அழுகை, கண்ணீர் நிற்காமல் சத்தமில்லாமல் ஒரு அழுகை.
எவ்வளவு நேரம் கண்ணீருடன் கழிவறையிலேயே நின்றிருந்தாலோ அவளுக்கே தெரியாது.
மெல்லத் தெளிந்து முகம் கழுவி வர மனமும் சற்று தெளிந்திருந்தது.
தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்தவள் மருத்துவரைச் சந்திக்க முடிவெடுத்தாள்.
மருத்துவமனைக்கு அழைக்க, அவளுக்கு தொலைபேசி கலந்துரையாடலுக்கு மட்டுமே அனுமதி கிடைக்க, பதிவு செய்து விட்டுக் காத்திருந்தாள்.
சிறிது நேரத்திலேயே மருத்துவர் அழைத்திருந்தார். ஆரம்ப கட்ட தயக்கத்துக்குப் பிறகு தன் நிலையைச் சொல்லியிருந்தாள்.
“மிஸஸ். அர்ஜுன் , வெறும் முப்பத்தி ஏழு நாட்கள்ங்குறது ரொம்ப அதிகம் இல்ல. இன்னும் சில வாரங்கள் காத்திருங்கள். பிறகும் மாதவிலக்கு வரலைன்னா மீண்டும் எங்களை வந்து பாருங்கள்.”
“இல்லை எனக்கு இதுபோல எல்லாம் இருந்ததில்லை. ஏன் இப்ப இப்படி?”
“உங்க உடம்பு திடீர்னு ஒரு சூழ்நிலை மாற்றத்திற்கு வந்திருக்கு. முப்பது டிகிரிக்குப் பழக்கப் பட்ட நீங்க குளிர் நாட்டுக்கு வரும் போது உடல்ல வர்ற மாற்றமா இருக்கலாம். இல்லை கருவுற முயற்சிக்கும் போது உடலில் ஏற்படும் தடுமாற்றமாகவும் இருக்கலாம். இன்னும் ஒரு ஆறுலிருந்து எட்டு வாரம் போலக் காத்திருங்கள்.”
“இன்னும் ஆறு வாரமா டாக்டர்?”
“ஆமம்மா, குழந்தைக்குத் தொடர்ந்து முயற்சி செய்ங்க. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பழகிக்குங்க. சத்தான நல்ல உணவு உடற்பயிற்சி இதெல்லாம் அவசியம். வேறு என்ன மருத்துவ உதவின்னாலும் எங்கள வந்து பாருங்க.” என்று பேசி முடித்தார்.
நன்றி சொல்லி கைப்பேசியை அணைத்தவள் இனி தான் இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என முடிவெடுத்தாள்.
இரவு உறங்க வரும் நேரம் அர்ஜுனிடம் மட்டும் மேலோட்டமாகப் பகிர்ந்து கொண்டாள்.
“சக்கரை, டாக்டர் சொன்னது தான். இதைப் பத்தி நீ ரொம்ப யோசிக்காத டா. நம்ம இந்த மூணு மாசமா தான் சேர்ந்தே இருக்கோம். அதுனால நீ இதைப் பத்தி இவ்வளவு யோசிக்கத் தேவை இல்ல.”
“நானும் அப்படித் தான் யோசிச்சேன் அஜூ, ஆனா என்னவோ கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.”
“என்னது என் சக்கரைகட்டிக்குக் கவலையா? கூடாதே”, என்றவனின் முழு ஆளுகையில் அவளின் கவலைகள் எல்லாம் மெழுகாய் உருகி அவனின் அன்பிலும் காதலிலும் கரைந்து சந்தோசம் மட்டுமே ஒளிவிடத் தொடங்கியது.
அதன் பிறகான நாட்களெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் பொன்னான நாட்கள் தான். மற்ற எண்ணங்களை முயன்று தவிர்த்திருந்தாள்.
வேதா வேலை தேடத் தொடங்கிய ஓரிரு வாரத்திலேயே வேலையும் கிடைத்தது. போட்டிஷம் மேநிலைப் பள்ளியில் துணை ஆசிரியையாக மூன்று நாட்களுக்கு மட்டும் பணிக்கு செல்லத் தொடங்கினாள்.
சில நேரம் அவளின் சிந்தனை உடல் நிலை குறித்து சென்றாலும், அர்ஜுன் முழுமையாக அவளின் எண்ணங்களைக் கண்டு குழப்பங்களைக் களையத் தொடங்கினான்.
வேதாவின் முகத்தில் சிந்தனை ரேகைகளைக் காணும் போதெல்லாம் அவளை அவனுள் புதைத்து சித்தம் இழக்கச் செய்தான். காதலால் கலந்து காமத்தில் இணைந்து களவியில் முடியும் ஆரம்ப கால இல்லறத்தின் இனிய நாட்கள் அவை.
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
ஊடலும் கூடலும் உள்ளம் பொங்கும் உவகையும் என நாட்கள் தெளிந்த நீரோடையாய் மாறியது.
ஆனால் என்றும் நாட்கள் அதன் போக்கில் ஒன்று போல் இருப்பதில்லையே. வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு வண்ணத்தில் இருப்பது இயற்கை தானே. அது போன்றதொரு புதிய நாள் புத்தம் புது வண்ணம் பூசிய அந்த நாள் அவர்களின் வாழ்விலும் வசந்தமாய் வந்தது.