வேகாத வெயிலில் வெந்து வாடிய முகத்துடன் வந்து சேர்ந்தாள் வேதா.
“வேதா நடந்தா வந்த? சொன்னது எதுவும் உனக்கு காதுல ஏறாது. ஆட்டோல வர்றதுக்கு என்ன உனக்கு?” அம்மா.
“அஞ்சு நிமிசத்துக்கு எல்லாம் எந்த ஆட்டோம்மா வரும். புதுசா சொல்றீங்க. செம வெயில் ம்மா. குடிக்க எதாவது குடுங்கம்மா. “
“ஹ்ம்ம் அதுவும் சரிதான். இரு தர்றேன். ஆனா நீ காலேஜ்ல இருந்தே ஆட்டோ பிடிச்சுருக்கலாமல்ல?”
“வந்துட்டேன் மா விடுங்க.”
“என்ன டி கைல பை? பூவா?”
“அது… அது வர்ற வழில வித்தாங்கம்மா வாங்கினேன்.” தயக்கத்துடன் வந்தன வார்த்தைகள்.
“பூ வாங்குனேன்னு சொல்ல என்னத்துக்கு இந்தத் தயக்கம். அதைக் கொண்டா என் கிட்ட, கொஞ்ச நேரம் பிரிட்ஜ்ல வைக்கிறேன். இந்தா இந்த எலுமிச்சை சாறைக் குடி. வெயிலுக்கு நல்லா இருக்கும்.” மீண்டும் அடுப்படியில் நுழைந்திருந்தார் சீதா.
முகம் கழுவி மெல்லிய பருத்தி ஆடைக்கு மாறி அம்மாவிடம் வந்த வேதா மெல்ல ஆரம்பித்தாள். “ம்மா ஐப்ரோஸ் எல்லாம் பண்ணனும் மா. சாந்தி அக்காகிட்ட கேக்கறீங்களா வரட்டுமான்னு.”
“நீ வர்றேன்னு சொன்னதுமே கேட்டு வச்சுட்டேன்டா. அவளும் இன்னைக்கு மதியம் சும்மா தான் இருக்கேன் வரச்சொல்லுங்கன்னு சொன்னா. போய்ட்டு வா.” மகளின் முகத்தில் தெரியும் தயக்கங்களும் கல்யாணக் கனவுகளும் அன்னையாய் சீதாவையும் மகிழ்வுறச் செய்தது.
“ஹ்ம்ம் அப்ப எல்லாம் தயாராத்தான் இருக்கீங்க போல. எனக்கு மட்டும் தான் கடைசி நேரத்து அழைப்பாம்மா?” இன்னும் எந்த விவரமும் தனக்கு சொல்லப் படாத நிலையில், கேட்கவும் யோசனையாய்க் கேட்டாள் வேதா.
“ஏன் டி சொல்ல மாட்ட, நானே அவங்க சொன்னதுலயிருந்து நிக்க நேரமில்லாம வேலை பார்க்கிறேன். உனக்கு கிண்டலா? இன்னும் உங்க அப்பாவை வேற காணோம்.”
அம்மாவின் பதிலில் அவளின் யோசனைகள் பின் செல்ல “ஏன்மா எல்லாத்தையும் இழுத்து போட்டுக்குறீங்க, சுத்தமா இருக்க வீட்டை மறுபடியும் இன்னைக்குத் துடைக்கணுமா? உடம்புக்கு முடியலைன்னா யாரும்மா பார்ப்பா? இருங்க நான் வந்து செய்றேன். ஹ்ம்ம், இன்னும் இங்க என்னமோ சமையல் வேற ஆகுது போல? பஜ்ஜி சொஜ்ஜியாம்மா?” கிண்டலாகக் கேட்டாள் வேதா.
“நீ இதெல்லாம் ஒன்னும் செய்ய வேண்டா வேதா, வடை மட்டும் தான் வீட்டுல செய்யறேன். மத்ததெல்லாம் அப்பா வரும் பொது வாங்கிட்டு வந்துருவாங்க. இன்னைக்கு ஒருநாள்தானே நானே பண்றேன். நீ முதல்ல கிளம்பு, சாந்தி வீட்டுக்கு.”
“சரிம்மா பார்த்து செய்ங்க. அவங்க எப்ப வருவாங்க?” மீண்டும் கொக்கியிட்டாள் வேதா.
“அவங்க வர அஞ்சு மணி ஆகும். நம்ம எல்லாம் ரெடி பண்ணிட்டா ஓகே தான்.” அவளின் கேள்வியின் உள்ளர்த்தம் சீதாவுக்குக் கொஞ்சமும் விளங்கவில்லை.
“ஹ்ம்ம்” ஏதோ கேட்கத் தோன்றும் முகத்துடன் யோசனையாகவே நின்றவள், அம்மாவிடம் இனிபேசிப் பயனில்லை என ஒரு பெரு மூச்சுடன் கிளம்பியிருந்தாள்.
சென்ற வேகத்தில் முகஒப்பனைகள் முடிய நான்கு மணிக்கு வேதா வீடு வர, அப்பாவும் வந்திருந்தார்.
“ப்பா, என்னப்பா பண்றீங்க?”
“எனக்கு என்னம்மா,எல்லாம் என் வீட்டம்மாக்குத்தான் உதவி செய்யிறேன். பேங்க் மேனேஜர் எல்லாம் வீட்டுக்கு வெளியேதான். இங்க வந்தா சீதாம்மாவுக்கு எடுபுடி தான்.”
“ரெண்டு பெரும் வெட்டிக் கதை பேசாம, வேலையப் பாருங்க.”
“ஆனாலும் நீங்க பாவம் ப்பா.”
“அதெல்லாம் இல்லடா, பசங்க வளந்துட்டீங்க. உனக்கும் கல்யாணப் பேச்சு வந்தாச்சு. இனி நான்தானே உங்கம்மாக்கு உதவி பண்ணனும்.”
“என்னப்பா, கல்யாணம்னு முடிவே பண்ணிட்டிங்களா ப்பா? என்கிட்ட எதுவும் சொல்லல?”
“அம்மா உனக்கு எதுவும் சொல்லலையா வேதா? சீதா என்ன பண்ற நீ?”
“எங்கங்க பேச நேரம், நானும் எதுவும் சொல்லல. அவளையும் வந்ததும் சாந்தி வீட்டுக்கு அனுப்பியாச்சு. ”
“அம்மா விடுங்கம்மா.இல்லப்பா, ஏதோ எல்லாமே வேகமா நடக்கிற மாதிரி இருக்கு இன்னைக்கு அதான்”
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. இங்க வா வந்து உட்காரு டா” அருகில் அமர்த்தி பேசத் தொடங்கினார் ஸ்ரீனிவாசன்.
“மாப்பிள்ளை வீடு வேணி சொன்ன ஆளுங்கதான். அவங்க வீட்டுக்குப் பழக்கமானவங்க போல, மாப்பிள்ளை கம்ப்யூட்டர் இஞ்சினீயராம். இங்க சென்னைலேயே வேலை பார்க்கிறார். இப்பத்தான் அமெரிக்கா போய்ட்டு வந்து ஒரு மாசம் ஆகுதாம். அப்பா பில்டர் போல, சொந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சுயிருக்காங்க.
ஊருலேயும்அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்னதும் ரொம்ப சந்தோசமாப் பேசினாங்க. நல்ல விஷயமெல்லாம் நேரம் காலம் வந்தால் இப்படித்தான் கூடி வரும்ன்னு உங்க அப்பத்தாவுக்கு ஒரே சந்தோசம். அவங்க எல்லாம் இல்லாம சொந்தம்னு யாருக்கும் சொல்லாம அவங்களை வரச் சொல்ல யோசனைதான்.
ஹ்ம்ம்,வரட்டும் மீதி விஷயமெல்லாம் இன்னைக்கு நேர்ல பேசினால் தெரியும்.அவங்க பொண்ணும் உன்னைப் பார்க்கணும்ன்னு நினைக்கிறதுனால அவசரமா வர்றாங்க போல.” சொல்லி முடித்து, வேதாவின் முகத்தைப் பார்த்தார். ஆனால் அதில் அவர் எதிர் பார்த்த எந்த பதிலும் இருக்கவில்லை.
“சரிப்பா நான் போய் ரெடியாகிறேன்.” தனதறைக்குச் சென்றவள் உடையைத் தேர்வு செய்யத் தொடங்கினாள்.
புதிதாக வாங்கிய மாம்பழ நிறக் காஞ்சிப்பட்டு சிவப்பு வண்ணக் கரையுடன் வேதாவின் கண்களில் பட்டு சிந்தையைக் கவர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் சேலை மாற்றி கூந்தலை அழகாய்ப் பின்னலிட்டு, கண்களுக்கு மையிட்டு அழகான ஒப்பனையுடன் அறையை விட்டு வெளியில் வந்தாள் அழகு நங்கை.
சீதா மகளின் சௌந்தர்யத்தில் கண்கள் மயங்க நின்றிருந்தார். “அழகு டி நீ இந்தப் புடவையில். இரு பூ கொண்டு வர்றேன்.”
“அம்மா ஜீவா எப்ப வருவான்?” பூ வைத்துக் கொண்டே வினவினாள்.
“அவனுக்கு போன் பண்ணா சிக்னல் இல்லைன்னு வருது டி. பஸ்ல இருக்கான் போல. வரட்டும். அவனுக்கும் இவங்க வர்றது இன்னும் தெரியாது. சரி நீ உள்ள போய் இரு வேதா, அவங்க வர்ற நேரம் ஆச்சு”
“ஹ்ம்ம் சரிம்மா” உள்ளே அவள் சென்ற சில நிமிடங்களில் வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர்.
“வாங்க வாங்க வணக்கம் உட்காருங்க”
“உள்ள வாங்கம்மா, வாம்மா பாப்பா வாடா. வாங்க வேணியக்கா”
அம்மாவும் அப்பாவும் வரவேற்கும் குரல் கேட்டது.
“வணக்கம் நான் அருணாச்சலம், இவ சாகரி என் மனைவி. இவ என் பொண்ணு, ஸ்ரீ விஜயா. இது என் தம்பி பொண்ணு ஆனந்தி.”
“வணக்கம்ங்க,பொண்ணு பார்க்க வரும் போது வேணியும் சேர்த்து நாலு பேரா வந்ததுன்னு இவளையும் அழைச்சுக்கிட்டு வந்தோம். எனக்கு இதெல்லாம் எப்பவும் சரியாய் இருக்கணும்”, நான் மாப்பிள்ளைக்கு அம்மா என்ற அடை மொழியுடன் வந்தது சாகரியின் குரல். அவரது கண்கள் இப்பொழுது வீட்டை ஆராயத் தொடங்கியது.
இவ்வாறு சம்பிரதாயப் பேச்சுக்களுடன் தொடங்கியது வேதா அர்ஜுன் திருமணப் பேச்சு வார்த்தைகள்.
“வேணி எங்களப் பத்தி ஏற்கனவே சொல்லி இருப்பாங்க, இருந்தாலும் நாங்க நேர்ல வந்து பேசினா இன்னும் தெளிவாப் பேசிக்கலாம் பாருங்க. அர்ஜுன் தான் எங்க பெரிய பையன்.” என்று ஆரம்பித்த அருணாச்சலம் அவர்களின் குடும்பப் பின்னணியைப் பற்றி பேசத் தொடங்கினார்.
இடையே வேணி, சீதாவிடம் “வேதா எங்க சீதா? ரூம்ல தனியாவா இருக்கா? நான் போய் கொஞ்ச நேரம் அவ கூட இருக்கேன். நீ இவங்கள எல்லாம் கவனி” என்று சொல்லி வேதாவின் அறைக்குச் செல்ல ஸ்ரீயும் ஆனந்தியும் ‘நாங்களும் வருவோம்’ என்று வேணியுடன் வேதாவைக் காணச் சென்றனர்.
“ஹாய் அண்ணி,நா ஸ்ரீ விஜயா அர்ஜுன் தங்கை. இவ ஆனந்தி எங்க சித்தப்பா பொண்ணு” அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஸ்ரீ. அவளின் அண்ணி என்ற அழைப்பில், வேதாவின் இருதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. பின் மெல்லச் சுதாரித்தவளாய் அவர்கள் அமர இருக்கைகள் எடுக்க, அவர்கள் மறுத்து மெத்தையில் இவளுடனே அமர்ந்தனர்.
சிறிய அறிமுகத்திற்குப் பிறகு ஆனந்தியை நோக்கி “பிளஸ் டூக்கு அடுத்து என்ன படிக்கப் போற?” என்றாள் வேதா.
ஆனந்தி “அதுதான் எல்லாருக்கும் இருக்கே ஒரே ஒரு படிப்பு இன்ஜினியரிங். நானும் அதைத்தான் படிக்கணும்.ஆனா இவங்க மாதிரி கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆகாம வேற தான் எடுக்கணும் அண்ணி.” என்றாள்.
“ஹ்ம்ம் இருக்கேன், ஆனா இன்ஸ்டாலதான் நான் அதிகம் ஆக்ட்டிவ்வா இருப்பேன்.”
“ஓ உங்க ஐடி சொல்லுங்க” என்று கேட்டுச் சமூக வலைத் தளங்களில் தங்களின் நட்பை உறுதிப்படுத்திக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் இருவரின் முகங்களும் இருவேறு மனநிலையைப் பிரதிபலித்தது.
‘வீட்டுக்கு போனதும் அர்ஜுன் கிட்ட இத சொல்லித்தான் வெறுப்பேத்தணும். நேத்து ஒரு தரம் இவங்க போட்டோவைப் பார்க்கக் கேட்டதற்கு, எத்தனை தரம் என்னை அண்ணானு கூப்பிடச் சொன்னான். இன்னைக்கு மாட்டினான்.‘ என்று ஸ்ரீ யோசிக்க, வேதாவின் எண்ணமெல்லாம் வேறாய் இருந்தது.
‘ஹையோ, இவங்க இனி இதெல்லாம் அவங்க அண்ணனுக்குக் காட்டுவாங்களோ? நம்மளும் அப்ப அவங்களைத் தேடிப் பார்க்கணும்‘ இப்படி எண்ணம் தோன்ற அவளின் முகம் செம்மை சூழத் தொடங்கியது. கனவுகள் கண்களில் மின்ன அமர்ந்திருந்தாள்.
“அண்ணன் பேஸ் புக்ல அப்டேட்ஸ் நிறைய போடுவான். காட்டவா?”
அவள் பதில் சொல்லும் முன்னே கதவு திறந்து உள்ளே வந்த சீதா அனைவருக்கும் குளம்பியும் சிற்றுண்டியும் தந்தார். மீண்டும் கதவு திறக்கும் ஒலி. கனவுகள் களைய நிமிர்ந்து பார்த்த நொடி, மெத்தையில் இருந்து எழுந்து நின்றிருந்தாள் வேதா. சாகரி உள்ளே வந்து கொண்டிருந்தார். “வாங்க” என சொல்லிய வேகத்தில் ஒற்றை மர இருக்கையை அவருக்கு நகர்த்திக் கொடுத்தாள்.
கழுத்தில் இருந்த இரண்டு விரலகலச் சங்கிலிகளும் மிடுக்காய் அவர் நடந்து வந்த தோரணையும், நான் உனக்கு மாமியார் எனச் சொல்லாமல் சொல்லியதோ?
“உக்காரு உக்காரு. ஏன் நிக்கிற? ஸ்ரீ என்ன சொன்னா என்னைப் பத்தி?” இருக்கையில் அமர்ந்தபடி கேள்விக் கணைகளைத் தொடுத்தார் சாகரி.
‘உங்களைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது, உங்க பையனைப் பற்றித்தான் பேசினோம். இதை சொன்னால் இவங்க நம்மை என்ன நினைப்பாங்க‘ என்று எண்ணம் ஓட, வாய் வேறு பதில் சொல்லத் தொடங்கியது. “சும்மா தான், பேசிகிட்டு இருந்தோம்”
“என்ன படிச்சிருக்க வேதா”.
“எம்.பில் மாத்ஸ்”
“ஏன் இன்ஜினியரிங் உனக்கு பிடிக்காதா? எங்க பசங்க ரெண்டும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தான் படிப்பேன்னு படிச்சாங்க” சாகரி.
“இல்ல அவ மாத்ஸ் விருப்பப்பட்டு தான் படிச்சா” காப்பாற்றி விட்டார் அம்மா.
“ஹ்ம்ம். பொண்ணுங்களுக்கு எல்லாப் படிப்பும் ஒன்னு தான். கல்யாணம் பண்ணி காலாகாலத்துல குழந்தைகளைப் பெத்து அவங்க குடும்பத்தைப் பார்த்துக்கிட்டா போதும் எனக்கு. இதைத்தான் நான் என் பொண்ணுக்கும் சொல்வேன்.
என் பையன் அர்ஜுனுக்கு நாங்க பெருசாப் பொறுப்பு எதுவும் வைக்கல. எங்க பொண்ண நாங்களே ஐம்பது சவரன் நகை, கிலோக் கணக்குல வெள்ளின்னு சீர்செய்து நல்லா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். இனி அவன் குடும்பத்தத்தை அவன் பார்த்துக்க வேண்டியதுதான்.” என்று தங்களின் பெருமையைச் சொன்னார் சாகரி.
சாகரி பேசியதின் உள்நோக்கமும் அவரின் எதிர் பார்ப்பும் சீதாவுக்குப் புரியத் தொடங்கியது.