லோட் ஆற்றின்(கேம் நதியிலிருந்து மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கிளை ஆறு) கரையில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு என இன்னும் பல வண்ணங்கள் கொண்ட இலைகள் நிறைந்த மரங்கள் எல்லாம் பார்ப்பவரின் கண்களை நிறைத்தன. இலையுதிர் காலம் கூட இவ்வளவு அழகா? என மனதை மயக்கும் அந்த மாலைக் காட்சிகளை ரசித்தபடி ஆங்கில்சே அபேயில் (மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி) அர்ஜுனும் வேதாவும் நடந்து கொண்டிருந்தனர்.
“அஜூ இப்பவே இப்படிக் குளுருதே, டிசம்பர் ஜனவரில குளிர் இன்னும் இன்னும் அதிகமா இருக்குமே? நான் எப்படி சமாளிப்பேன்?”
“அதெல்லாம் பழகிக்கலாம். இப்பவே உன்னோட பாதி வெய்ட் நான் தானே தூக்குறேன். டிசம்பர்ல உன்னை முழுசா வேணும்ன்னா தூக்கிக்கிறேன்”
“என்ன சொல்றீங்க? எனக்கு புரியல?” குழப்பமாகக் கேட்டாள் வேதா.
“குளிருக்குக் கூட இருக்கவங்க கையை பிடிச்சுட்டு நடப்பாங்க, ஓகே. ஆனா நீ என் கையைப் பிடிச்சுத் தொங்கிட்டுல்ல நடந்து வர்ற.” நக்கலாக பதில் சொன்னான் அர்ஜுன்.
“போங்க இனி நான் உங்க கையை பிடிச்சுக்கல”, பொய் கோபத்துடன் அவனை விட்டு விலகி நடந்தாள்.
“ஹே, சும்மா தான் சொன்னேன். நீ வாடா, சக்கர.”
“ஒன்னும் வேண்டாம். நான் இப்படியே நடக்கிறேன்.” என்றபடி தனியே நடக்க மீண்டும் தானே சென்று அவளது கையுடன் தன் கையை இணைத்துக் கொண்டான்.
“வர வர சக்கரக் கட்டிக்கு என் மேல கோபம் எல்லாம் வருது. இதெல்லாம் சரி இல்ல.”
“ஆமா சரியே இல்ல, இனி கோபமே வர வேண்டாம். அந்தக் கோபத்தை எல்லாம் நீங்க கணக்குப் பண்ணி வச்சு என் கிட்ட இருந்து வாங்குற சும்மாவும் வேண்டாம்.” சிணுங்கிச் சிரித்தாள் மங்கை.
“நான் எப்ப அப்படிச் சொன்னேன். சும்மா கிடைக்கிற சும்மாவ நான் ஏன் வேஸ்ட் பண்ணனும். நீ அடிக்கடி கோபப் படுடா.” மேலும் வம்பு பேசிய படியே வீடு வந்து சேர்ந்தனர்.
இரவு உணவு முடித்துத் தூங்க வரும் முன்பே, வேதாவின் முகம் தீவிரமான சிந்தனை ரேகைகளைக் காட்டத் தொடங்கியது.
“வேதா என்ன ரொம்ப நேரமா யோசனை?” அவனுக்குத் தெரிந்திருந்தும் மீண்டும் கேட்டான்.
“இல்ல அஜூ டாக்டர் சொன்ன படி இப்பவே ஆறு வாரத்துக்கு மேல முடிஞ்சு போச்சு. இன்னும் ஒரு மாற்றமும் இல்ல. அதான் ஞாபகம் வந்தது. வேற ஒன்னும் இல்ல.”
“நீ இவ்வளவு யோசிக்கிறதுக்கு பேசாம இன்னும் ஒரு தடவை டாக்டர போய் பார்த்துட்டு வந்துடேன்.”
“ஹ்ம்ம். நீ ஒரு தரம் டாக்டர் பார்த்துட்டா உனக்கும் இந்த யோசனை எல்லாம் கொஞ்சம் குறையும். “
“ஆமா அஜூ. ஞாபகம் வரும் போதெல்லாம் இதுவே ரொம்ப டென்ஷன் ஆகுது.”
“சரி சரி. வா தூங்கலாம். நாளைக்குக் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும் நான். சரியா ஒன்பது மணிக்கு மீட்டிங் இருக்கு. அதனால கொஞ்சம் முன்னாடியே போனாதான் சரியா இருக்கும்.”
மறுநாள் காலையிலேயே அர்ஜுன் அலுவலகம் சென்றிருக்க வேதா நினைத்தபடி பெண் மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்திருந்தாள்.
பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு சரியாக அங்கு சென்று காத்திருந்தாள் வேதா. அவளது முறை வரவும் மருத்துவர் அழைக்க அவரது அறைக்குச் சென்றாள்.
“குட் மார்னிங் மிஸஸ். அர்ஜுன் சொல்லுங்க. எப்படி இருக்கீங்க.”
“குட் மார்னிங் டாக்டர். நான் நல்லா இருக்கேன். நான் போன முறை உங்ககிட்ட போன்ல பேசினேன். எனக்கு இன்னும் பீரியட்ஸ் வரலன்னு சொல்லி இருந்தேன். ப்ரெக்னன்சி டெஸ்ட் ரிசல்ட்டும் நெகடிவ் தான். நீங்க இன்னும் ஆறு வாரம் வெய்ட் பண்ண சொன்னீங்க. அதான்.”
“ஹ்ம்ம், கடைசியா நம்ம பேசி இப்ப ஆறு வாரம் மேல ஆச்சில்லையா, உங்களுக்கு எதுவும் உடல் அளவுல எந்த தொந்தரவும் இல்லை இல்லையா?”
“அதெல்லாம் எதுவும் இல்ல டாக்டர். நான் நல்லா தான் இருக்கேன்.”
“கடைசியா எப்ப ப்ரெக்னன்சி டெஸ்ட் செஞ்சு பார்த்தீங்க?”
“உங்களுக்குப் பேசின அன்னைக்குத் தான் பண்ணினேன். அதுக்கு அப்புறம் நான் செஞ்சு பார்க்கல.”
“ஓகே, சில சமயம் சிலருக்கு ஏழு எட்டு வாரம் போன பிறகு தான் டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ்வா வரும். நம்ம இன்னைக்கு மறுபடி ஒரு தடவை செக் பண்ணிக்கலாம். அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம்.”
“சரி டாக்டர்.” என்ற போதும் அவளுக்குச் சோதனை முடிவு பற்றிய எந்த எண்ணமும் இருக்க வில்லை. அவளைப் பொறுத்தவரை சோதனையின் முடிவு அவள் முன்னமே அறிந்தது. மருத்துவர் தனது கடமைக்காக மீண்டும் ஒருமுறை சோதனை செய்கிறார் என்ற எண்ணம் மட்டுமே.
மறுபடி ஒருமுறை மருத்துவர் சிறுநீர் பரிசோதனை செய்து விட்டு, மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தார்.
“இன்ட்ரெஸ்டிங் வேதா. ரிசல்ட் பாசிட்டிவ்னு காட்டுது. வாழ்த்துக்கள்.” புன்னகையுடன் வாழ்த்துத் தெரிவித்தார்.
வேதாவிற்கு விளங்கியும் விளங்காத நிலை. அவளின் எண்ணமெல்லாம் இனி மருத்துவர்கள் மாதவிலக்கு வருவதற்கு மருத்துவம் செய்வார்கள் என்பது மட்டுமே. கிஞ்சித்தும் தான் தாயாகப் போகும் எண்ணம் எல்லாம் அவளுக்கு வரவில்லை.
முதல் முறை சோதனையில் இல்லை என்று வரவும் அவள் தாய்மை பற்றிய எண்ணங்களை மறந்திருந்தாள்.
இப்படியான எண்ணப் போக்கில் இருந்தவளுக்கு, தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல ஒரு கணம் பூமியோடு சேர்ந்து தானும் சுழலும் நிலை.
அவளின் பார்வையின் அர்த்தம் மருத்துவருக்கும் விளங்க அவரே மீண்டும் விளக்கத் தொடங்கினார்.
“வேதா, எல்லோருக்கும் கர்ப்பகால அறிகுறிகள் ஒன்னு போல இருப்பதில்லை. அதற்காகத் தான் இந்த ஆறு வார கால அவகாசம் எடுத்துக்கிறது. வாந்தி மயக்கம் வாசனை பிடிக்காமப் போறது இதெல்லாம் எல்லோருக்கும் இருக்கணும்ன்னு அவசியம் இல்ல. சில அதிஷ்ட்டகாரங்க இது போல எந்த அவஸ்தையும் இல்லாம கர்ப்பகாலத்தைக் கடந்து போயிடுவாங்க. யு ஆர் ஒன் ஒப் தி லக்கியஸ்ட் பீப்புள்.”
இன்னும் வேதா தெளிந்திருக்க வில்லை. அவள் முகத்தில் பல கேள்விகள், பல உணர்வுகள். மருத்துவருக்கும் அவளின் நிலை புரிந்தது. அதனால் அவரே அடுத்து செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கத் தொடங்கினார்.
“வேதா உங்களுக்கு கரு உருவாகி எத்தனை வாரம் ஆகுதுன்னு இன்னும் எதுவும் நமக்குத் தெரியாது. மேலும் எக்டோபிக் ப்ரேகினென்சி (கருப்பை குழாயில் வளரும் கரு) இல்லைன்னும் நம்ம டெஸ்ட் செய்யணும்.
மிட்வைப்க்கு ரெஜிஸ்டர் செய்ய பார்ம் ரிசப்சன்ல தருவாங்க. அவங்களுக்கு கால் பண்ணி ரெகுலர் செக்கப்புக்கு பதிவு செஞ்சுக்குங்க.”
இப்பொழுதும் வேதாவிற்கு நடப்பவை எதுவும் புரிய வில்லை என்றாலும், ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சிறு மரக் கிளையாய் நடக்கும் நிகழ்வுகளில் மெல்ல தன்னை இணைத்துக் கொள்ளத் தொடங்கினாள்.
ஆனால் அவளின் கைகள் மட்டும் இன்னும் தன் ஆலிலை வயிற்றைத் தொட்டுத் தடவிக் கொண்டே இருந்தது. நிஜம் மெல்ல மனதில் பதியத் தொடங்கியது.
மருத்துவமனையில் எல்லாம் கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தும் தான் கேட்டது எல்லாம் கனவாகவே தோன்றியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய உலகம் மாறிவிட்டது போல ஒரு மாயத் தோற்றம். தாய்மையின் உவகையை உணரும் பொழுது வரும் உணர்வுகளின் சங்கமம்.
மகிழ்ச்சி என்னும் உணர்வுகள் தாண்டிய அமைதி நிலை. இது அதீத மகிழ்வு தரும் மோன நிலை. தன்னிலை கடந்து வரும் மௌனம்.
சில மணி நேரங்கள் கடந்த பிறகு மட்டுமே நிஜம் அவளுக்கு விளங்கத் தொடங்க அடுத்து செய்ய வேண்டியவை எல்லாம் நினைவுக்கு வந்தது.
அர்ஜுனுக்கு இன்னும் சொல்லாதது அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. கைபேசியில் அழைக்கலாமா எனத் தோன்ற, அதை கையில் எடுத்தவளுக்கு, இல்லை இது பணி நேரம் என்பதால் பேச முடியால் போகலாம். செய்தி மட்டும் இப்பொழுது அனுப்பலாம் என எண்ணினாள்.
குறுஞ்செய்தி அனுப்ப முடிவு செய்தவளுக்கு என்ன எழுத எப்படிச் சொல்ல என ஒரு வெட்கம், தயக்கம் எல்லாம் வந்து சேர்ந்தது.
இன்னும் சில கணம் யோசித்தவளுக்கு சட்டெனச் சிந்தனையில் அவன் விரும்பும் தமிழ் இலக்கிய பாடல் ஒன்று நினைவுக்கு வர அதையே அனுப்பி இருந்தாள்.
அர்ஜுன் பணியிலிருக்க அருகிலிருந்த கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான சிறு வெளிச்சம். கண்ணில் பட்டாலும் பணி அதிகமிருக்க எடுத்துப் பார்க்கவும் எண்ணம் வரவில்லை.
இருந்தும் வேதா மருத்துவமனைக்குச் சென்றது நினைவு வர கைப்பேசியில் வந்த தகவலைத் திறந்தான்.
அவள் அனுப்பி இருந்த வரிகளை வாசிக்க வாசிக்க அவனின் கைகளில் சிறு நடுக்கம். கைப்பேசி தவற மீண்டும் எடுத்து மறுபடி ஒருமுறை வாசித்தான்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
அவள் அனுப்பிய செய்தி இன்ப ஊற்றாய் அவனுக்குள்ளும் இறங்கியது.