இந்த பூவைக்கு பூ வைத்து சூடிடும் மாமனுக்கு நல்ல தோகையின் தோகையில் சொக்கிடும் மாமனுக்கு அன்புக்கும் பங்கிற்கு ஆள் வரப் போகுது அம்மா என் அப்பா என்றாட்டிடப் போகுது
இரவின் நிசப்தத்தில் மெல்லிய ஒளி கிரகணங்கள் அவளின் பொன்முகம் காட்ட அவன் கைகளில் தலை சாய்த்துச் சயனித்திருந்தால் அவனின் சர்க்கரை.
இரண்டு ஆண்டுகள் அவளை விட்டு எப்படித் தள்ளி இருந்தோம் என்ற எண்ணமே இந்த நொடி அவன் மனதில். பிரிந்து இருந்ததில் வந்த புரிதல் தான் இன்றைய மகிழ்வின் மூலக் காரணி என அவன் மனம் சொல்லிச் சொல்லி குத்தாட்டம் போட்டாலும் முகம் என்னவோ அமைதியாக ஆனந்தமாக இருந்தது.
எத்தனை இன்பமான நாள் இன்று. எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தொடங்கிய நாள் இவ்வளவு மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக மாற முடியுமா? அர்ஜுனைக் கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்வான்.
இதற்கு மேல் அவனால் உறங்க முடியவில்லை. உறக்கம் வரவில்லை. அவன் உணர்வுகள் எல்லாம் விழித்திருக்க அவனுக்கு உறங்கும் எண்ணம் இல்லாமல் போனது. தன் மகிழ்ச்சியைக் கட்டி அணைத்து முத்தமிட்டுச் சொல்ல அவனுடைய அம்மா அப்பா அவன் அருகில் இல்லை. ஆசையாய் பாசமாய் கேலி கிண்டலுடன் பகிர்ந்து கொள்ளத் தங்கையும் தன் அருகில் இல்லை.
‘மச்சி எனக்கு ட்ரீட் எப்படா?’ எனக் கேட்க நண்பர்கள் பலர் இங்கு இல்லை.
அவனின் மொத்த ஆனந்தத்தையும் அவன் சர்கரையிடம் மட்டுமே காட்ட அவனின் ஆனந்தக் கூத்தில் அவள் களைத்துக் கண்மூடி நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.
மெல்ல மெல்ல அவளை அவனிலிருந்து விளக்கிவிட்டு அறையிலிருந்து வெளிக் கூடத்திற்கு வந்தான். ஜன்னலோர சாய்விருக்கையில் அமர நிலவு அவனைப் புன்னகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
இன்றைய நாளை மீண்டும் தன்னுள் ஓட்டிப் பார்த்தான்.
காலையில் வேதாவின் குறுந்தகவலைப் படித்ததும் அடுத்த நொடி அவளுக்கு அழைப்பு விடுக்க அந்த அழைப்பு எடுக்கப் படவில்லை. மீண்டும் அழைப்பு விடுத்தான். இந்த முறை அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏன் என்று அவன் யோசிக்கும் முன்னே அவன் கைப்பேசியில் அவளின் அடுத்த குறுஞ்செய்திக்கான மின்னல் வெட்டியது.
“ப்ளீஸ் கால் பண்ணாதீங்க. வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்.” என்ற அவளின் செய்தியில் அவளின் மனம் அவனுக்கும் புரிந்தது.
அதற்கு மேல் அலுவலகத்தில் வேலையில் அமர்ந்து இருப்பானா என்ன? அவன் சர்க்கரையின் முகம் பார்த்து மீண்டும் மீண்டும் அகம் படிக்க ஆசை கொண்டான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுவாசலில் மகிழுந்தை நிறுத்த, ஜன்னல் வழி விழி திறந்து அவன் தேவதை இவன் வருகைக்காகக் காத்திருந்தது.
இருவரிடமும் பார்வை மட்டுமே. மகிழுந்தை நிறுத்திவிட்டு அவன் வீட்டினுள் நுழைய அங்கே இருவரிடமும் பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே. தமிழும் தலைவியின் இதழ் விரியக் காத்திருந்தது.
காலணியைக் கழட்டிவிட்டு, கொண்டு வந்த மடிக்கணினிப் பையையும் சாய்விருக்கையில் வைத்துவிட்டு அவள் அருகினில் வந்தான்.
அதுவரையும் கூட அவளிடம் பேச்சுக்களற்ற மௌனமும் அவனைச் சுற்றும் கண் பார்வையும் மட்டுமே. அருகில் நெருங்கி வர வர இருவருக்குள்ளும் எரிமலை ஊற்றாய் எண்ணற்ற உணர்வுகள் பொங்கிக் கொண்டிருந்தன.
அவளின் கைகளை மெல்லப் பற்ற “அஜூ, ” என்று அவள் பேசத் தொடங்கும் முன் “நீயும் எதுவும் பேசாதடா, டூ மினிட்ஸ்” என்றவன் அவளை இறுக அணைத்திருந்தான். அவனின் அந்த இறுகிய அணைப்பு வேண்டி மட்டுமே அவள் இதனை நேரம் ஜன்னலின் அருகே மரமாய் தவம் செய்து நின்றிருந்தாள்.
அவனின் அணைப்பில், வயிற்றில் பதிந்து ஊர்ந்த அவன் கையின் வெப்பத்தில் என அவளின் இன்பமெல்லாம் கண்கள் வழி கண்ணீராய் கசிய இதழ் கொண்டு கண்ணீர் துடைத்தவன் அவள் இதழ்களையும் தன் இதழ் கொண்டு அணைத்திருந்தான்.
தன்னிலை மறந்து இருவரும் நின்ற நிலையில் நின்றிருக்க, முதலில் சுயம் நினைவுக்கு வர அர்ஜுன் அவளிலிருந்து விலகி ஆவலுடன் சாய்விருக்கையில் அமர்ந்து அவளையும் தன்னருகே இருத்திக் கொண்டான். அவள் மருத்துவரைச் சந்தித்ததை பற்றி எல்லாம் கேட்டறிந்தான்.
மெல்ல மெல்ல உணர்வுகள் கடந்து நடைமுறைக்குத் திரும்பியவர்கள் தங்களின் வீடுகளுக்கு இன்னும் சொல்லவில்லை என நினைவு வர தங்களின் குடும்பங்களுக்கும் குழந்தை வரப் போகும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
வேதா வீட்டிற்கு பேசிய நேரத்தில் அர்ஜுனும் நாளை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி விடுப்பு எடுத்துக் கொண்டான்.
வெட்கமும் மகிழ்ச்சியும் சரிவிகிதம் கலந்து வீட்டிற்குப் பேச அங்கு அனைவரும் அவர்களைக் கொண்டாடித் தீர்த்தனர். அர்ஜுனும் வேதாவும் எங்கோ தனியே வெளிநாட்டில் இருக்க அம்மாக்கள் இருவரும் தங்களின் அறிவுரைகளைத் தொடங்கிவிட்டனர்.
அனைவருக்கும் அழைத்துப் பேசிப் பேசியே இன்றைய நாள் மொத்தமும் கரைந்திருக்க அர்ஜுனுக்கு இரவு உறக்கமும் வர மறுத்தது.
தான் இனி தந்தை எனும் நினைவு அவனுக்குள் ஏதோ மாற்றம் செய்தது. இத்தனை நாள் தான் மகன், அண்ணன், கணவன் எனப் பல முகங்களில் இருந்த போதும் தெரியாத உணர்வுகள் எல்லாம் தான் தந்தை ஆகப் போகும் நொடியில் வந்து ஒட்டிக் கொண்டது.
மனம் தன்னைப் போல எதிர் காலத்தைத் திட்டமிடத் தொடங்கியது. பின் எத்தனை நேரம் சென்று உறங்கினானோ, காலையில் வேதாவின் குரலில் தான் உறக்கம் களைந்தான்.
இருவரும் எழுந்து தயாராகி அடென்ப்ரூக்ஸ் மருத்துவமனை வந்தனர். பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வரும் இங்கிலாந்தின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. பல சிறப்பு மருத்துவப் பிரிவுகள் உள்ள மருத்துவமனை. அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மருத்துவத்திற்குப் பெயர் பெற்ற இடம்.
மகிழுந்தை நிறுத்தத்தில் நிறுத்தி மகப்பேறு மருத்துவமனை வந்து சேர்ந்தனர். அந்தக் கட்டிடத்தின் பெயரைப் பார்த்ததுமே வேதாவின் மகிழ்ச்சி இன்னும் இன்னும் பல நூறு மடங்கு பொங்கிப் பெருகியது.
“அஜூ, இந்தக் கட்டிடத்தோட பேரு பார்த்திங்களா? ரோஸி’ஸ் ஹாஸ்பிடல்னு இருக்கு. எனக்கு ரோஸி கூடவே இருக்க பீல் வருது.”
“என் சக்கரக் கட்டிக்கு என் கைய பிடிச்சு தொங்கீட்டு வரும் போதும் இந்தியாவுல இருக்க ஃப்ரண்ட் கூட இருக்க பீல் வருதாம். ஹ்ம்ம்ம் எல்லாம் என் நேரம்.”
“உங்களுக்குப் பொறாமை. உங்களுக்குத் தெரியும் தானே நாங்க மூணு பெரும் எவ்வளவு கிளோஸ்ன்னு. இப்ப தூரமா இருக்கத்துக்காக பீல் மாறுமா என்ன?” சொல்லும் போதே அவள் உணர்ச்சி வசப்படுவது அவனுக்கும் புரிந்தது.
“கண்டிப்பா இல்லடா, எவ்வளவு தூரம் தள்ளிப் போனாலும் தொடர்பே இல்லாம போனாலும் நட்பு மார்றதில்ல தான். எனக்கு என்னவோ நீ இன்னைக்கு ரொம்ப எமோஷனலா இருக்கன்னு தோணுது. வேற ஒண்ணுமில்ல.”
“நிஜமாவே அப்படித்தான் இருக்கு. நேத்தே அத்தை தனியா இருக்கன்னு சொன்னப்போ வந்த பீல் இந்த இடத்துக்கு வந்ததும் கொஞ்சமா குறைஞ்ச மாதிரி இருக்கு.”
“காரணம் என்னவா இருந்தா என்ன, எனக்கு வேதா சந்தோசமா இருந்தாப் போதும்.” பேசிய படி உள்ளே வந்து மருத்துவருக்காக காத்திருக்கத் தொடங்கினர்.
காத்திருந்த சிறிது நேரத்திலேயே மருத்துவர் அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.
அறைக்குள்ளிருந்த மருத்துவ சாதனங்களும் ஒளித்திரைகளும் ஏதோ ஒரு புது உலகமாகத் தோன்றியது வேதாவிற்கு.
மருத்துவர் தான் செய்யவிருக்கும் மீயொலி நோட்டப் பரிசோதனையை விளக்கி வேதாவைச் சோதிக்கத் தொடங்கினார்.
ஒளித்திரையில் இருவரும் நோக்க அவர்களின் சிறு மழலையின் பிம்பம் கருப்பு வெள்ளை நிழற் படமாகத் திரையில் தோன்றியது.
அர்ஜுன் கைகள் தன்னைப்போல் தன் இணையின் கைகளைப் பற்றி இருக்க வேதாவின் கண்களில் நீர் கசிய அவளின் உள்ளிருக்கும் சின்னஞ்சிறு மழலையின் அசைவை மனதால் படமெடுத்துக் கொண்டனர்.
மருத்துவப் பரிசோதனைகள் முடித்து வெளியில் வந்ததிலிருந்து அர்ஜுனுக்கு ஆயிரம் சந்தேகங்கள்.
“ஏன் வேதா, நிஜமாவே ஒன்பது வாரம் அஞ்சு நாள் தான் ஆகுதா? இதெல்லாம் கூட கண்டுபிடிச்சு சொல்லுவாங்களா?”
“அஜூ, எனக்கு மட்டும் என்ன தெரியும்? நானும் உங்கள மாதிரி தானே? முதல் தரம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்த்தேன்.”
“உனக்கு அவங்க காட்டினதுல பாப்பாவோட கை கால் எல்லாம் பார்த்த உடனே புரிஞ்சுடுச்சு. எனக்கு இன்னும் அந்த ஹார்ட் பீட் மட்டும் தான் நல்லா தெரிஞ்சுது.”
“அஜூ அதான் சொன்னாங்களே பன்னிரெண்டாவது வாரம் ஸ்கேன் பண்ணும் பொது இன்னும் தெளிவா பார்க்கலாம்னு.”
“அம்மா என்னவோ நேத்து அவ்வளவு சொன்னாங்க, ஆனா டாக்டர் என்னடான்னா திராட்சை அளவு, மூணு கிராம் அளவுன்னு என்னென்னவோ சொல்லுறாங்க. “
“அத்தை அனுபவத்துல சொல்லுறாங்க, டாக்டர் அறிவியலா சொல்லுறாங்க. நீங்க இதெல்லாம் போட்டு குழப்பிக்காம அவங்க சொன்ன மாதிரி என்னை ஒழுங்கா பார்த்துக்குங்க.”
“ஆனாலும் ஊருல இருந்திருந்தா இதெல்லாம் நான் பார்த்திருப்பேனா தெரியல. ஆனா இங்க இதெல்லாம் பார்க்கும் போது என்னவோ அதோட பீல் வேற மாதிரி இருக்கு.”
“நம்ம ஊருல இதெல்லாம் இப்பதான் ஆண்களும் தெரிஞ்சுக்குறாங்க. இல்லைன்னா ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முன்னாடி குழந்தை பெத்துக்குறது வளக்குறது எல்லாம் பொண்ணுங்க உலகத்துக்கு மட்டுமே சொந்தமானதா இருந்துச்சு.”
“ஹ்ம்ம், கொஞ்சம் பயமா இருந்தாலும் நானும் கத்துக்குறேன் விடு.”
“நீங்க இப்படி பயம்ன்னு உலறப் போகத்தான் அத்தை நேத்தே சொன்னாங்க அஞ்சு மாசம் முடிய இந்தியாக்கு கிளம்பி வந்துடுன்னு. நான் அவங்ககிட்ட எதுவும் சொல்லல.”
“ஆமாடா சக்கரை, நீ ஊருக்குப் போனா அம்மா இருப்பாங்க உனக்கும் நல்லது தானே.”
“அஜூ, இப்ப தானே சொன்னீங்க, நான் கூட இருக்கேன், எல்லாமும் நான் கத்துக்குறேன்னு. இப்ப இப்படி சொல்லுறீங்க.”
“எல்லாரும் இருப்பாங்க அஜூ. ஆனா நீங்க? எல்லா நாளும் என் கூட நீங்க இருப்பிங்களா? சொல்லுங்க? இப்ப ஸ்கேன் பண்ணும் போது என் கையை பிடிச்சுக்கிட்டிங்களே அப்படி ஒவ்வொரு முறையும் என் கூடவே வந்து என்னைப் பிடிச்சுப்பீங்களா? சொல்லுங்க”
மெல்ல மெல்ல இருவரும் அவரவர் நிலையில் இருந்து மட்டுமே யோசிக்க பல மாதங்களுக்குப் பிறகான நீண்ட விவாதமும் மனக் கசப்பும் வீடு வந்து சேரும் முன்னே வந்திருந்தது.
“வேதா வீட்டுக்கெல்லாம் பேசணும். எதிர் பார்த்துட்டு இருப்பாங்க. பேசு.”
“இதோ பேசுறேங்க, சாதம் மட்டும் அடுப்புல வச்சுட்டுப் பேசுறேன்.”
“அப்படியே அம்மா கேட்டா நான் இந்தியாக்கு வரலன்னு சொல்லிடு.”
அவன் அவ்வாறு சொல்ல வேதாவின் கோபம் எல்லை கடந்திருந்தது.
“அர்ஜுன் உங்க பிரச்சனை என்ன இப்ப? நான் இந்தியா போகாதா? இல்ல உங்க அம்மா கூப்பிட்டும் போகாததா? ஒழுங்கா சொல்லுங்க.”
“இதென்ன புதுசா அர்ஜுன்னு கூப்பிட்ற? பிடிவாதம் பண்ற. சும்மா கடுப்பேத்தாத என்னை. காலைல எவ்வளவு ஹாப்பியா இருந்தது. இப்பப் பாரு உன்னால.” உன்னால் எல்லாம் செய்ய முடியுமா என அவன் அம்மா விதைத்த சந்தேக விதை அவனுள் வளரத் தொடங்கி இருந்தது.
அவனின் ‘பிடிவாதம்’ என்ற சொல்லில் சற்று தன்னிலை அடைந்தாலும் அவளின் உள் மாற்றங்களும் அவனை விட்டுச் செல்லப் பிடிக்காததும் அவளைச் சமநிலை அடைய விடவில்லை.
“அஜூ ப்ளீஸ். எனக்கு எங்கன்னாலும் உங்க கூட இருக்கணும். நீங்களும் எனக்கு அப்படித்தானே சொன்னீங்க இனி உன்னை விட்டுட்டு இருக்கவே மாட்டேன்னு.. இப்ப அத்தை சொன்னாங்கன்னு என்னைப் போகச் சொன்னா நான் எப்படி போவேன். எனக்கு நீங்க வேணும் அஜு.” என்று சொல்லி அவனைக் கட்டி அணைத்திருந்தாள்.
அந்த அணைப்பின் இறுக்கத்தில், அவனுள் முளைத்த சந்தேகம் அகன்று, அவளின் சொல்லாத வார்த்தைகளின் அர்த்தம் எல்லாம் அர்ஜுனுக்கும் விளக்கியது. அவளின் அவனுக்கான தேடல் அவனுக்கும் புரியத் தொடங்கியது.
“வேதா என்னைப் பாருடா. எனக்கும் நீ சொல்லறது புரியிது. தனியா இருக்கோமேன்னு மட்டும் தான் நான் யோசிச்சேன். உன்னை யோசிக்கல. சாரி டா. அம்மா சொன்னாங்கன்னு இல்ல. ஆனா அவங்க சொல்றதும் சரிதானே. ரெண்டு பேருக்கும் அனுபவம் இல்லாம என்ன செய்ய? எப்படி சமாளிக்க?” என்று கேட்டான்.
“அப்பா, ஒருவழியா உங்க மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு. ஏன் அஜூ என்னை ஊருக்கு போ போன்னு சொல்லுறதுக்கு பதில் ஊருல இருக்கவங்கள இங்க வா வான்னு கூப்பிடலாம் தானே. அவங்களுக்கும் பயமில்லாம இருக்கும். நமக்கும் கூட ஆள் இருக்காங்கன்னு தைரியமா இருக்கும். “
“ஹ்ம்ம், இது நல்ல யோசனையா தான் இருக்கு. பேசுவோம். நீ அத்தை மாமாவைக் கேளு. எப்ப வர்றாங்கன்னு. அத்தை வந்தா உனக்கும் ஈஸியா இருக்கும்.”
“அஜூ அப்படி எல்லாம் அம்மாவைக் கேட்க முடியாது. முதல்ல அத்தை கிட்ட கேளுங்க நீங்க. அவங்க வரலன்னு சொன்னா அம்மாவைக் கேட்கலாம்.”
“ஏன் வேதா உனக்கு உங்க அம்மான்னா இன்னும் நல்லா இருக்குமே.”
“அத்தையும் நல்லா தான் பார்த்துப்பாங்க அஜூ, அவங்கள கேட்காம அம்மாவைக் கூப்பிடறோம்ன்னு சொன்னா அது அவங்களுக்கு மரியாதையா இருக்காது.”
“ஓஹ், இது தான் மாமியாரை வால் பிடிக்கிறதா. அதுக்குத் தான் எங்கம்மா எப்பவும் உனக்கே ஜால்ரா தட்டுறாங்க.”
“அஜூ கிண்டல் பண்ணாதீங்க. இது ஒரு விஷயம்னு தேவை இல்லம்மா என்னையும் கோவம் ஆக்கிட்டீங்க.”
“சக்கரக் கட்டிக்குக் கோபம் வந்தா சும்மா இருக்கக் கூடாதே. சும்மாவோடதானே இருக்கணும். ” என்றவன் சும்மா இருப்பானா இனி?
“வம்பு பண்ணாம இருங்க அஜூ. அத்தைக்கு பேசுங்க.” ஒருவாறு அவனுக்கு சொல்லி அவனைக் கெஞ்சிக் கூத்தாடி மாமியாரை இங்கு வர அழைத்திருந்தாள்.
வேதாவுக்கு நாட்கள் எல்லாம் வேகமாக ஓடுவது போல் தோன்றியது. எங்கும் அன்பும் கவனிப்பும் என அவளைத் திக்கு முக்காடச் செய்தனர்.
பன்னிரண்டு வாரங்கள் கடந்திருக்க அன்று மருத்துவமனையில் தந்த மீயொலி நோட்டத்தின் போது பெற்ற புகைப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன வேதா, ஸ்ரீக்கு போட்டோ அனுப்பிட்டியா?”
“அதெல்லாம் எல்லோருக்கும் நாலு போட்டோவும் அனுப்பிட்டேன். இப்ப தான் ஜீவா போன் செஞ்சு கேட்டான், இந்த போட்டோவை எப்படி வச்சு எந்தப் பக்கமா பார்க்கணும்ன்னு” புன்னகைத்துக் கொண்டே கூறியவள் நொடி நேரமும் கண் எடுக்கவில்லை புகைப் படத்திலிருந்து.
தாய்மை பெண்ணின் முழுப் பரிமாணம். அவளை அவளுக்கே உணர்த்தும் ஒரு அற்புத உணர்வு.
கண்கள் இரண்டும் அந்தப் புகைப் படத்தைப் பார்த்தபடி மற்ற கையால் தன் மழலையைக் கொஞ்சியபடி இருந்த தன் சர்க்கரையைப் புகைப்படமாய், காணொளியாய் தன் கைப்பேசியில் சேமித்தான் வேதாவின் அர்ஜுன்.
உன்னை பார்த்தால் போதும் எந்தன் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் எந்தன் அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது அதை போல சுகம் இங்கு ஏது உனக்காக பூ பூக்கும் பூமி உனை தீண்ட மழையாகும் மேகம்