நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் நகர, அர்ஜுன் வேதா இருவரின் நாட்களும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்தது.
இன்னும் அம்மா சொல்லும் மாதக் கணக்கு ஏனோ வேதாவிற்கு விளங்கவே இல்லை. இங்கு சொல்லித்தந்த வாரக் கணக்கு மட்டுமே அவளுக்குத் தெரிந்திருந்தது.
ஆறாவது மாதம் தொடங்கி விட்டதென அம்மா சொல்லியதையே சாகரிக்கும் சொல்லி இருந்தாள் வேதா.
ஒன்பதாவது மாதம் சாகரி வருவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யத் தொடங்கி இருந்தான் அர்ஜுன்.
இங்கிலாந்தின் உச்சக் கட்ட குளிரின் உறைநிலையிலும் துள்ளல் இசை போல மனம் துள்ளக் கர்ப்ப காலத்தின் இருபத்து மூன்றாவது வாரத்தை நெருங்கி இருந்தாள் வேதா.
இன்று இருபது வாரங்கள் கடந்து செய்யும் குழந்தையின் வளர்ச்சி அறியும் மீயொலி நோட்டப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருவரும் காத்திருந்தனர்.
“அஜூ இது எல்லாமே உங்களால, இதுக்குத் தான் நான் அன்னைக்கே சொன்னேன். இந்த தடவை ஸ்கேன் வெள்ளிக் கிழமை வருது கொஞ்சம் சீக்கிரம் மதியம் போலவே அப்பாய்ண்ட்மென்ட் புக் பண்ணலாம்ன்னு.”
“இப்படி ஆகும்னு எனக்குத் தெரியல. அரை நாள் லீவு எடுக்காம ஒருமணி நேரம் பர்மிஷன் போட்டாப் போதும்ன்னு நாலறைக்கு புக் பண்ணினேன்.”
“இப்ப அஞ்சு மணி ஆகப் போகுது. இன்னும் நம்மள கூப்பிடல. இனி ஸ்கேன் முடிச்சு வீட்டுக்கு இந்த ட்ராபிக்கில நின்னு நின்னு போக ராத்திரி ஆகும்.”
“சரி சரி இன்னைக்கு டின்னெர் நானே செய்யிறேன். ஓகேவா?”
“அதெல்லாம் செஞ்சுட்டேன். “, வேதா சொல்லும் போதே கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தாள்.
“ஸ்ரீ தான் கால் பண்ணுறா. ஒரு நிமிஷம்.” என்று சொல்லியபடி கைப்பேசியை இயக்க “சொல்லு ஸ்ரீ இன்னுமா தூங்கலை நீ? மணி பத்துக்கு மேல ஆகுது.” என்றாள்.
“இல்லண்ணி, உங்க ஸ்கேன் என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு தூங்காலம்னு. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.”
“ஹ்ம்ம், இன்னும் வெய்ட்டிங்க்ல தான் இருக்கோம். நீ ரொம்ப ஆர்வமா இருக்கதைப் பார்த்தா பேசாம கேட்காம விட்டிடலாம்னு தோணுது. “
“அண்ணி, ஒழுங்கா முடிச்ச உடனே எனக்கு பர்ஸ்ட் கால் பண்ணனும், அம்மா அத்தைன்னு எல்லாம் கதை சொல்லக் கூடாது. எனக்கு தெரிஞ்சுக்காம தூக்கமே வராது.”
“சரி சரி முடிச்சுட்டு கூப்பிடுறேன்.” பேசி முடித்து கைப்பேசியை அணைத்திருந்தாள்.
“என்னவாம் வேதா அவளுக்கு? இந்த நேரத்துல கால் பண்ணுறா?”
“எல்லாம் ஒரு ஆர்வம் தான். இன்னைக்கு ஸ்கேன்ல பேபி ஜெண்டர் சொல்லுவாங்கல்ல. அதை அவளுக்கு முதல்ல சொல்லணும்ன்னு மேடம் ஆர்டர்.”
“இதெல்லாம் ஒரு விஷயமா, என்ன குழந்தையா இருந்தா என்ன?”
“அப்படி இல்ல அஜூ, இதுவே நம்ம இந்தியால இருந்தா என்ன ஜெண்டர்ன்னு சொல்ல மாட்டாங்க. இங்க நம்ம கேட்டா சொல்லுவாங்க. அதுக்குத் தான் கொஞ்சம் ஆர்வமா இருக்கோம்.”
“ஹ்ம்ம், சக்கரைக்கும் இந்த எதிர் பார்ப்பு அதிகமா இருக்கு போல.”
“எனக்குத் தான் ஜெண்டர் என்னன்னு தெரியுமே. அப்புறம் என்ன?”
“தெரியுமா? எப்படி?” ஆச்சரியமாக அவளிடம் கேட்டான்.
“சொன்னா சிரிக்கக் கூடாது. நான் காலேஜில் படிக்கும் போது பிரண்ட்ஸ் சொன்னாங்க நம்ம அம்மாக்கு நம்ம முதல் குழந்தையா இருந்தா நமக்கும் பொண்ணு தான் பொறக்கும்ன்னு. அப்படிப் பார்த்தா எனக்கும் பொண்ணு தானே பிறக்கும்.” அவள் சொல்லும் போதே சிரித்திருந்தான் அர்ஜுன்.
“இதுக்கு எதுக்கு நம்ம ஸ்கேன் பண்ணணும், வா வேதா பேசாம வீட்டுக்குப் போகலாம். உனக்கே தான் எல்லாம் தெரியுதே.” மேலும் சிரிப்பை அடக்கியபடி சொல்ல கண்களில் கோபக் கனலைத் தெறிக்க விட்டாள் வேதா.
இன்னும் சில நிமிடங்கள் இப்படியே அவர்களின் அரட்டையில் கரைய வேதாவின் முறை வர இருவரும் மீயொலி நோட்ட அறைக்கு உள்ளே சென்றிருந்தனர்.
ஆய்வாளர் அவளைத் தயார் செய்து ஆய்வைத் தொடங்க இருவரும் ஆர்வமாய் திரையைப் பார்க்கத் தொடங்கினர்.
அவர் வேதாவின் வயிற்றில் மின்னோட்டக் கருவியை மீண்டும் மீண்டும் நகர்த்துவதும் திரையைப் பார்ப்பதுமாக இருக்க, திரையில் அவர்கள் சென்ற முறை கண்டது போல மழலையின் நிழல் உரு தெளிவாகத் தெரியவில்லை. கை கால்கள் அசைய தங்களின் சிறு செல்வத்தைக் காண வந்த இருவரும் மாறி மாறி பார்வையைப் பரிமாறிக் கொள்ள ஆய்வாளரிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை. நொடிகளெல்லாம் யுகங்களாகக் காத்திருக்க இருவரின் காதுகளிலம் காய்ச்சிய ஈயமாய் இறங்கியது ஆய்வாளரின் வார்த்தைகள்.
“மன்னிக்கனும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் அர்ஜுன். ஸ்கேன்ல பேபி அளவு சரியாத் தெரியல. குழந்தையோட வளர்ச்சி கொஞ்சம் குறைவா இருக்கு. இருபத்தி இரண்டு வாரத்துக்கான பேபி வெய்ட் இல்ல.
கொஞ்சம் வெளில காத்திருங்க. உங்களுக்கு நேரடியா மருத்துவர் பரிசோதிக்க அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணிட்டு நானே உங்க கிட்ட வந்து பேசுறேன்.” என்று சொல்லிய படி இருவரையும் தனி அறையில் காத்திருக்கச் செய்தார்.
இருவருக்கும் அவர் சொன்ன வார்த்தைகள் எதுவுமே விளங்க வில்லை. அறையின் உள்ளே நுழையும் போது இருந்த தங்களின் துள்ளல் மனநிலைக்கு முற்றிலும் மாறான ஒரு மனநிலையில் இருவரும் அறையிலிருந்து வெளியேறி மீண்டும் காத்திருக்கத் தொடங்கினர்.
கலங்கிய கண்களுடன் தைரியமாக நின்றிருந்தாலும் அர்ஜுன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாலும் வேதா சற்று உள்ளுக்குள் உடைவது தெரிய “வேதா, எதுவும் யோசிக்காத. அவங்க வந்து நமக்கு விளக்கம் சொல்லுவாங்க.” என்று ஆறுதல் சொன்னான்.
ஆறுதல் வார்த்தைகள் எல்லாம் அவளுக்குச் சொன்னாலும் அவனுக்கும் உள்ளுக்குள் பயம் வரத் தொடங்கியது. ஆனால் அவனின் சிறு பயம் கூட அவளை வெகுவாக பாதிக்கும் என அறிந்து தன்னை நிலை படுத்திக் கொண்டான் அர்ஜுன்.
தனி அறையில் இருவரும் நிமிடங்களைத் தொலைக்க வேதாவின் மாற்றங்களும் அவள் அழுகையை வெகுவாக கட்டுப் படுத்த முயல்வதும் அர்ஜுனுக்கு தெளிவாகத் தெரிந்தது.
“வேதா அத்தைக்குக் கால் பண்ணி பேசேன். உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்.” என்று சொல்லி சீதாவிற்கு அழைத்திருந்தான் அர்ஜுன்.
வேதா தன் அம்மாவிடம் பேசி முடிக்க அவளின் முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது.
“அஜூ அம்மா சொன்னாங்க நான் கூட பொறக்கும் போது ரெண்டு கிலோ தான் இருந்தேனாம். அதுனால பயப்பட வேண்டாம்னு சொன்னாங்க. ஒன்னும் இருக்காது தானே அஜூ. இன்னும் ஏன் தான் நம்மல வெயிட் பண்ண சொல்லுறாங்க.”
“பொறுமையா இருடா சர்க்கரை. வருவாங்க.”
இருவரும் அமர்ந்து பேசியபடி இருக்க, ஆய்வாளர் வந்து மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரமும் மேலும் அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கான விளக்கங்கள் அடங்கிய குறிப்பேடுகளும் கொடுத்தார்.
மருத்துவரைத் திங்கட் கிழமைதான் சந்திக்க முடியும் எனச் சொல்ல வேதா அவரிடம் தன் அதிருப்தியை வார்த்தைகளில் காட்டத் தொடங்கினாள். அர்ஜுன் அவளை சமாளித்து வீட்டிற்கு அழைத்து வர வரும் வழியிலேயே தங்கைக்கும் அழைத்துப் பேசி இருந்தான். பிரச்சனைகளைப் பெரிதாகச் சொல்லாமல், மேலோட்டமாக சொல்லி வைத்திருந்தான்.
வீடு வந்து சேர நேரம் இரவு ஏழு மணியைத் தாண்டி இருந்தது.
மருத்துவமனை விட்டுக் கிளம்பிய நேரத்திலிருந்து வேதாவின் பேச்சு வெகுவாக குறைந்திருந்தது.
அர்ஜுன் இரவு உண்டு உறங்கினாலும், வேதாவிற்கு அன்று அறவே உறக்கமற்றுப் போனது.
நினைவுகளெல்லாம் அவளின் முகமறியா அந்த சின்னஞ்சிறு குழந்தையைச் சுற்ற செய்யவதறியாது இருந்தாள்.
மறுநாள் முழுவதும் அவளின் நிலை மோசமாக இருக்கப் புலம்பல்களும் பிதற்றல்களும் அர்ஜுனையும் வெகுவாக அசைத்தது.
“அஜூ என்னை உடனே கூட்டிவிட்டுப் போனா என்ன? அஜூ ஹாஸ்ப்பிட்டலுக்கு போகலாம் ப்ளீஸ் எனக்குப் பயமா இருக்கு. என்னவோ செய்யிது அஜூ. உங்களுக்கெல்லாம் ஏன் புரிய மாட்டேங்குது. ” அந்த ஒரு நிமிடம் அழுகையுடன் கெஞ்சலாய்.
மறுநிமிடமே கோபமும் அங்காரமுமாக “ஏன் நான் சொன்னாக் கேட்க மாட்டியா அஜூ. திங்கட்கிழமை வரைக்கும் நான் ஏன் காத்திருக்கணும்? இந்த ஊருல வேற டாக்டர் யாருமே இல்லையா?”
“சக்கரைக்கட்டிக்கு என்னடா கோவம் இப்ப. அவங்கதான் தெளிவா சொன்னாங்களே. பயப்பட ஒன்னும் இல்ல. நீங்க திங்கட்கிழம வந்தால் போதும்ன்னு. அப்புறம் என்ன டா. நீ கண்டதும் யோசிக்காத.
உனக்கு உடம்புக்கு ஒன்னுமில்ல. நாளைக்கு சண்டே. நம்ம பிரேம் வீட்டுக்குப் போயிட்டு வரலாம்.” என சமாதானப் படுத்த முயன்றான்.
ஞாயிறு முழுவதும் அவளின் கை அவள் வயிற்றிலிருந்து பிரிந்த நொடிகளின் எண்ணிக்கை மிகக் குறைவே.
தன்னைச் சுற்றி எது நடந்தாலும் அறியும் மன நிலை அவளிடம் இல்லை. ஓய்வின்றிப் பேசும் அவளின் அதரங்கள் பேச மறந்திருந்தது. மௌனம் மட்டுமே அவளின் மொழியானதொரு நிலை. யாருக்கும் தனது உள்ளுணர்வு விளங்காது போக அமைதியும் மௌனமுமே அவளின் அன்றைய மொழி.
இரு வீட்டிலுருந்தும் அழைப்புகள் வர வேதா யாருடனும் பேச விரும்ப வில்லை. அவர்களும் அவளின் நிலை உணர்ந்து அர்ஜுனிடம் பேசி முடித்திருந்தனர்.
அன்றைய வேதாவின் நிலை புத்தனின் தவத்திற்குக் குறையாத தவ நிலை. அவளின் உலகில் அவளும் அவளின் கருவில் மலர்ந்த அவளின் அன்புச் செல்வமும் மட்டுமே.
யார் பேசினாலும் என்ன பேசினாலும் அவளின் மனமும் எண்ணங்களும் அவளின் சிசுவுடன் தான்.
வேறு எதுவும் சிந்தனையில் இல்லை. அர்ஜுனும் ஒரு அளவுக்கு மேல் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வருவது இயலாது எனத் தெரிய அவளின் போக்கிலேயே விட்டு விட்டான்.
அவனுக்குள்ளும் பயமும் யோசனைகளும் இருந்த போதிலும் தாய்மையின் உணர்வுகள் என்பது ஆண்களின் கற்பனைக்கும் எட்டாத ஒன்று.
ஆண்களின் பார்வை என்பது சூழ்நிலை சார்ந்தது. ஆனால் பெண்களின் பார்வை என்றுமே உணர்வுகள் சார்ந்தது.
வேதா தன் உணர்வுகளில் சிக்கி இருக்க அஜூனின் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது.
பிரேம் மனைவியிடமாவது சற்று ஆறுதல் பெறுவாள், அவர்களின் குழந்தையைக் கண்டால் சற்று மனம் அமைதிப்படும் என அவன் அழைத்துச் செல்ல அங்கும் ஏதும் மாறவில்லை.
“என்னவோ ஆகுது அக்கா. அவங்க யாருக்கும் நான் சொல்லுறது புரியல. நீங்க எல்லாம் அவங்க சொன்ன அப்பாயிண்ட்மெண்ட் பத்தி தான் பேசுறீங்க. எனக்கு உங்க யாருக்கும் விளக்கம் சொல்லத் தெரியல. என்னமோ நடக்குது என் பாப்பாக்கு. அஜூவுக்கு எல்லா நேரமும் ஒரே மாதிரி தான். ஆனா உங்களுக்கு நான் சொல்லுறது புரியும் தானே.” கெஞ்சலாக அவள் கேட்க சக்திக்கும் உருகித்தான் போனது அவளின் நிலை.
“வேதா, எனக்கு புரியிது டா. ஆனா இப்ப போனாலும் உன்னால கன்சல்டன்ட் பார்க்க முடியாது தானே. அதான் அர்ஜுன் சொன்னாங்களே, உனக்கு ஃபெடல் மெடிசின் சீஃப் டாக்டர் ஸ்மித் கிட்டயே அப்பொய்ண்ட்மெண்ட் கிடைச்சு இருக்குன்னு. கொஞ்சம் பொறுமையா இருடா. நம்ம பதட்டப் பட்டா உன்னோட பீல் பாப்பாக்கும் புரியும். பாப்பாவும் பயந்துடுவா. நீ அமைதியா இருந்தா அவளும் சமத்தா இருப்பா.”
எப்படியோ சத்தியின் வார்த்தைகள் கொஞ்சம் வேதாவைச் சமன் செய்தது.
‘ஆமாம், என் எண்ணங்களும் உணர்வுகளும் என் குழந்தையும் உணரும்’ என்ற எண்ணம் தோன்ற அந்த இரவு தன்னை கொஞ்சமேனும் சமநிலை செய்து கொண்டாள்.
மறுநாள் மருத்துவரைச் சென்று சந்திக்கும் நிமிடம் வரையான நேரமெல்லாம் வாழ் நாளில் மீண்டுமொரு முறை அவள் எண்ணிப் பார்க்க விரும்பாத நிமிடங்கள்.
டாக்டர் ஸ்மித் தாய் சேய் நல மருத்துவத்தில் மிகப் பெரிய வல்லுநர். அவரின் முன் இருவரும் அமர்ந்திருக்க அவர் மீண்டுமொரு முறை இருவருக்குமான சில மருத்துவ அறிவுரைகளை வழங்கி விட்டு பரிசோதனையைத் தொடங்கினர்.
மீண்டும் அவளின் வயிற்றில் சோதனைக் கருவி இயங்க அர்ஜுனின் கைகள் வேதாவை இறுகப் பற்றிக் கொண்டது.
அதே மங்கலான நிழலுருவம் இன்றும். வேதாவின் இதயத் துடிப்பு அங்கிருந்த கடிகாரத்தின் ஒலிக்கும் மேலாக ஒலிப்பது போன்றதொரு பிரேமை அவளுள்.
சோதனைக் கருவியை மெதுவாக அவளிடமிருந்து பிரித்தவர் அவர்களை நோக்கி “சாரி, தி பேபி அல்ரெடி பாஸ்ட் அவெ இன் தி ஊம்ப்” (குழந்தை முன்னமே கருவிலேயே இறந்து விட்டது) என்றிருந்தார்.
தாய்மையின் உணர்வுகள் என்றுமே பொய்ப்பதில்லை. ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் தாய்மை அறியும் சிசுவின் நிலை நம் மனித மூளைக்கு என்றும் எட்டாத இயற்கையின் சூட்சுமம். வேதா நேற்று உணர்ந்து கொண்டது இன்று மருத்துவரின் வார்ததைகளின் வழி இடியென அவர்களைத் தாக்கியது.
அவர் சொற்களைக் கேட்ட மறு நொடி வேதாவின் இடக் கையைப் பற்றியிருந்த அர்ஜுனின் வலக்கரத்தின் அழுத்தம் அவளின் எலும்புகள் நொறுங்க வலித்தது. ஆனால் அதை எல்லாம் மீறிய வலி இருவரின் இதயத்தையும் தாக்கியது.
மருத்துவரின் வார்த்தைகள் மனம் உணர்ந்த நொடி வேதாவின் கண்கள் கண்டது கண்ணீர் வழிய தன்னருகே சட்டென எழுந்து நின்றிருந்த அர்ஜுனைத்தான்.
உள்ளங்கையில் ஏந்திக் கொண்டு தாங்க உறவுகள் கோடி இருந்தும், கட்டி அணைத்துக் கவலை நீக்கி கைகள் கோர்க்க யாருமற்று நின்ற அவர்களின் அவலம், அந்த நிலையைக் கடந்தவர்கள் மட்டுமே உணர முடிந்தது.
மரிக்கும் பூக்களெல்லாம் மண்ணுக்கு உரமாக மீண்டும் நாளை புத்தம் புதிய பூக்கள் மலரும் என்னும் நம்பிக்கை மட்டுமே மனித வாழ்வின் ஆதார சக்தி.
மறையும் சூரியன் மரிக்கும் என்றால் மனிதனுக்கு வாழ்வு ஏது?
நாளைய விடியல் நலம் தரும் என்னும் நம்பிக்கை மட்டுமே நம்மை வாழ வைக்கும் வழிமுறை.
அந்த நம்பிக்கை அர்ஜுன் வேதா வாழ்விலும் ஒளியேற்றுமா?