ஈரைந்து மாதங்கள் கடந்து விட்டாலும் கண்ணீர் சிந்தும் கன்னங்களின் ஈரம் இன்னும் காய்ந்திருக்கவில்லை.
சாய்விருக்கையில் அமர்ந்து விழிகளில் நீர் வழிய கையில் ஏந்தி இருந்த அந்தக் கடிதம் அவளின் மனதை இன்னும் கலங்கடித்தது. அவளைப் போன்றே சிசுக்களை இழந்தவர்கள் கலந்து கொள்ளும் கூட்டுப் ப்ரார்த்தனைக்கான கடிதம் அது.
அந்தக் கடிதம் கண்டதும் அவள் என்ன முயன்றும் அவளின் நினைவுகள் சிசுவை இழந்து தவித்த அந்த நாட்களுக்கும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் மட்டுமே மீண்டும் மீண்டும் வேதாவிற்கு நினைவு வந்தது.
மரணிக்கும் போதும் மறக்க முடியாத வார்த்தைகள் எல்லாம் அவள் காதுகள் கேட்டிருக்க அர்ஜுன் மட்டுமே ஆறுதலாய் அவளருகில் எப்பொழுதும்.
அன்றைய நாட்களை நினைக்க அவள் நினைவில் முதலில் வந்தது அவளின் அப்பத்தாவின் கதறல்கள் தான்.
“என்ன பெத்த ஆத்தா, இந்த கெழவியெல்லாம் இன்னும் உசுரோட கெடக்கேன். இப்புடி புள்ளய தொலைச்சுட்டு வந்து ரெண்டு பேரும் அங்க ஒத்தையில நிக்கிறியலே ஆத்தா. என்னத்தா செய்யிற?”
“இட்லிக்கு மாவு அரைக்கிறேன் அப்பத்தா. நாளைக்கெல்லாம் வலி வந்துட்டா, இல்ல குழந்தை பிறந்தா என்னால எதுவும் செய்ய முடியாது. அப்புறம் அவங்க தனியா சமைக்கணுமே. அதான் மாவு ஆட்டி வைக்கிறேன்.”
“ஐயோ, ஊரு சனமெல்லாம் என் வீட்டுல வந்து கெடக்கு, நீ இப்புடி ஒத்தையில நாளைக்கி மாவு ஆட்டுறங்கிறியே. போன புள்ளய வயித்துல வச்சுக்கிட்டு இருக்காளே. அதுக்கு இன்னும் ஒரு வழி பண்ணலயா? ஆயிரம் வைத்தியம் இங்க இருக்கு, என் புள்ளைய அங்க தனியா இருக்கியலே.” என்றபடி அவர் சொல்லிய வார்த்தைகளெல்லாம் நினைவடுக்குகளை மோத அவற்றின் கணம் அவளின் மனதையும் கணமாக்கியது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பல முறை மன அழுத்தம் தீர்க்க மருத்துவ ஆலோசனைகளுக்கும் சென்று வந்திருந்தாள் வேதா.
இன்று அவர்கள் சொன்னதை போல மனதில் வந்த அப்பத்தாவின் கதறல் நினைவுகளை எல்லாம் வார்த்தைகளாகி தன் நாட்குறிப்பில் சேமிக்கத் தொடங்கினாள்.
அவள் தன் காதில் கேட்ட அப்பத்தாவின் அழுகையெல்லாம் தன் மனக் குமுறல்களாய் நாளேட்டில் குடிபெயர்க்க அர்ஜுன் வந்திருந்தான் அறைக்குள் அவளைத் தேடி.
“வேதா என்ன டா பண்ற? வெளில எல்லாம் இருட்டா இருக்கு. நீ இங்க வந்து உட்கார்ந்து என்ன எழுதுற?
“பெருசா ஒன்னும் இல்ல அஜூ, சும்மா டைரி எழுதினேன். வாங்க ஹாலுக்குப் போகலாம்.” முயன்று குரலை இயல்பாக்கிக் கொண்டாள்.
இருவரும் வந்து சாய்விருக்கையில் அமர்ந்தனர்.
“என்ன யோசனை என் சக்கரக் கட்டிக்கு. ஹ்ம்ம், ஊருக்கு ஏதும் பேசுனியா? முகமே நல்லா இல்லையேடா?”
“இப்பவெல்லாம் நீங்க இல்லாம நான் அத்தைக்குப் பேசுறதே இல்லையே. ஸ்ரீ என்னை இனி நீங்க ‘தனியா அம்மாக்கு கால் பண்ணாதிங்கண்ணு’ சொல்லிருக்கா அஜூ. எனக்கும் அது சரியான யோசனையா தோணுது. தேவையில்லாம நாங்களும் ஒருத்தர் மனச ஒருத்தர் காயம் பண்ணிக்க வேண்டாம் பாருங்க.”
“விடு டா அவங்க தான் எதோ புரியாம பேசிட்டாங்கன்னா நீயும் அதையே யோசிக்காத வேதா.”
“நான் அதெல்லாம் மறக்க நினைக்கிறேன். ஆனாலும் என்னால முடியல அஜூ. எதோ அந்த நேர வருத்தத்துல பேசினாங்கன்னு நினைச்சா இன்னமும் அதையே தானே பேசுறாங்க.”
“வேதா இங்க பாரு அவங்களுக்கு அவங்க அளவுக்குத் தான் யோசிக்கத் தெரியும். இதை எல்லாம் நீ பெருசு பண்ணினா அப்புறம் லைப் டைமுக்கும் அவங்க கூட உன்னால சந்தோஷமா இருக்க முடியாது.”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வேதாவிற்கு அன்று சாகரி பேசிய பேச்சுக்களெல்லாம் கடல் அலையாய் மனதில் முட்டி மோதியது.
‘என்ன செஞ்சா அர்ஜுன் சொல்லு. கீழ ஏதும் விழுந்துட்டாளா? இது மாதிரி நடக்க கூடாதுன்னு தான் ஊருக்கு வரச் சொன்னேன்.’
‘என்னவோ வெளிநாட்டுலயே பிள்ளையை பெத்துக்குவேன்னு அடம் பண்ணினா. இப்ப இப்படி பிள்ளையைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறிங்க. உண்மையை நீயும் சொல்ல மாட்டேங்குற.’
‘அன்னைக்கே கேட்டேன் பிள்ளை அசைவு தெரியுதான்னு. அதெல்லாம் இருபது வாரம் மேல கூட ஆகும்ன்னு சொன்னாங்க அத்தைன்னு என்னவோ இவளே டாக்டர் மாதிரி பேசினா.’ சாகரி இன்னும் என்ன என்ன பேசி இருப்பாரோ.
அர்ஜுன் அதற்குள் வேதாவும் அருகில் இருப்பதாய் சொல்லி இணைப்பைத் துண்டித்திருந்தான்.
இன்றும் அவரின் பேச்சுக்கள் அத்தனையும் நினைவில் வரக் கண்கள் மீண்டும் உடைப்பெடுக்கத் தொடங்கியது. அர்ஜுனுக்கு ஏனென்று சொல்லாமல் அவளின் கண்கள் கலங்க, அவனுக்குக் கோபம் வந்தாலும் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“என்னனு சொன்னா எனக்கும் தெரியும். இப்படி நீயே தனியா இருந்து அழுது என்ன ஆகப் போகுது வேதா. கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. இன்னும் நீ உன்னை சரி பண்ணிக்கலைன்னா நீ தானேம்மா முட்டாள்.” என்றவன் அவளுக்கான வரிகளை மீண்டும் உச்சரிக்கத் தொடங்கினான்.
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
இந்த வரிகள் இப்போதெல்லாம் மந்திரமாக அவள் ஒடிந்து போகும் நேரமெல்லாம் உச்சரிக்கிறான்.
அவள், அவன் வாழ்வின் ஆதாரமாக வந்தவள். அவளின் புன்னகை முகம் நித்தமும் கண்டு கண்விழிக்கும் பழக்கத்துக்கு அவன் பழகி இருந்தான். இப்போதெல்லாம் அவனின் சர்க்கரை கவலைகளால் கரைந்து போவதும் துக்கத்தில் துவண்டு சரிவதும் என அவர்களின் எதிர்காலமும் கடினப்பட்டுப் போவது அர்ஜூனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வேதாவின் மூச்சுக் காற்றாக உடனிருந்து அவளைத் தேற்றிக் கொண்டிருக்கிறான். அவளின் சிறு சுணக்கமும் அவன் தவிர்க்க நினைக்கிறான்.
“ஒண்ணுமில்லை அஜூ இன்னைக்கு ரோஸி’ஸ் கதீட்ரல்ல இருந்து லெட்டர் வந்தது. பார்த்ததும் கொஞ்சம் அப்செட். இப்ப நீங்க வரும் பொது தான் டைரி எழுதிட்டு வந்தேன். இப்ப கொஞ்சம் ஓகே தான். “
“போன முறையே இனி நமக்கு லெட்டர் அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னோமே. அப்புறமும் என் அனுப்பிருக்காங்க?”
“பரவாயில்ல விடுங்க அஜூ. பார்த்ததும் அப்செட் தான். ஆனா இப்ப கொஞ்சம் ஓகே.”
“ஹ்ம்ம்ம், சரி வா டின்னர் என்ன இன்னைக்கு?” மெல்ல மெல்ல வேதாவின் சிந்தனையை வேறு பக்கம் திருப்பி இருந்தான்.
அந்த வார விடுமுறை நாள். வழக்கம் போல வேதாவுடன் இணைந்து அம்மாவுக்கு அழைத்திருந்தான்.
“ஹலோ அம்மா எப்படிம்மா இருக்க? என்ன டீவி ஓடுதா? அப்பா இருக்காங்களா?”
“இருடா ரூமுக்கு வரேன் அப்பா தான் டீவி பார்க்குறாங்க.” என்றவர் தனது அறைக்கு வந்து பேச்சைத் தொடர்ந்தார்.
“எப்படிப்பா இருக்க? இன்னைக்கு லீவு தானே?”
“ஆமாம்மா, இன்னைக்கு சன் டே. லீவு தான். நீங்க என்ன வெளில கிளம்பியாச்சா?”
“இல்ல பா, சுந்தரம் பொண்ணு கல்யாணாம்ன்னு சொல்லி இருந்தேன். அங்க போயிட்டு இப்பத் தான் வந்தேன். ஹ்ம்ம் வெளிய நாலு இடத்துக்கு எல்லாம் போனா நிம்மதியா வரவா முடியது அர்ஜுனு.”
“எல்லாரும் உன்னை தான்டா கேக்குறாங்க. என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு. கேட்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல.” வழக்கமான புலம்பலைத் தொடங்கினார் சாகரி.
வேதா அருகில் அமர்ந்திருக்கவும் அவளைச் சங்கடமாக அவன் பார்க்க, அவள் கண்களின் அசைவில் அவனிடம் தனக்குச் சங்கடம் இல்லை எனச் சொல்ல அவளின் கையை தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டான்.
“அதுவும் இதுவும் ஒன்னா? மூணு வருசத்துக்கு மேல ஆகுது. இன்னும் இப்படி இருந்தா என்ன செய்யிறது?”
“அம்மா, இதே கேள்விய எப்பவும் யாரைப் பார்த்துட்டு வந்தாலும் கேட்கிறீங்க. அவளையும் சேர்த்து கஷ்டப் படுத்துறீங்க. விடுங்கம்மா நாங்க பார்த்துக்குறோம்.” அவன் குரலில் இருந்தது கோபமோ இல்லை அழுத்தமோ தெரிய வில்லை.
ஆனால் சாகரியை இன்னும் கொதித்தெழச் செய்ய இந்தக் குரலே போதுமானதாக இருந்தது.
“ஏன்டா, இன்னைக்கு கேக்குறாங்க ஆறு மாசம் வரைக்கும் பிள்ளைக்கு வளர்ச்சி இல்லைனு லண்டன்ல பார்க்காமலா விட்டாங்க? நம்பவே முடியலன்னு?”
“இன்னும் வேற என்னம்மா கேட்டாங்க உங்க கிட்ட. அதையும் சேர்த்து சொல்லுங்க.”
தங்களின் குடும்ப வாழ்க்கை பற்றிய மூன்றாம் மனிதர்களின் ஆராய்ச்சியும் அவர்கள் கேட்கும் சந்தேகங்களும் அர்ஜுனுக்கு கேட்டகவே உவப்பானதாக இல்லை.
அவனின் வெறுப்பும், பொது இடங்களில் காட்சிப் பொருளாகும் தங்களின் குடும்ப விவகாரங்களும் மேலும் கோபத்தை மட்டுமே கொடுக்க, சாகரி அடுத்தும் பேசி இருந்தார்.
“இப்பவும் இவ்வளவு நாள் ஆகுது. குறை ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லுறீங்க, இங்க வந்தாலும் நமக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போய் பார்க்கலாம். அதுவும் நீ கேட்க மாட்டேங்குற. இப்பல்லாம் நீ ரொம்ப மாறிட்ட அர்ஜுன்.”
அதற்குமேல் அவன் பொறுமை எல்லையைக் கடக்க இனி பேசினால் தேவை இல்லாத சங்கடங்கள் மட்டுமே மிஞ்சும் எனத் தோன்ற
“அம்மா வேதா கிட்ட பேசுங்க” என்று வேதாவிடம் கொடுத்து விட்டுச் சென்றிருந்தான்.
இரண்டொரு நிமிடங்கள் மட்டுமே வேதாவிடம் பேசிய சாகரி வழக்கமான கேள்விகளுடன் தன் உரையாடலை முடித்திருந்தார்.
பேசி முடித்த வேதா அர்ஜுனைத் தேட அவன் சமையல் அறையில் வேதனை முகமாக நின்றிருந்தான்.
“அஜூ, என்ன செய்யிறீங்க?”
“ஒன்னும் இல்லை வேதா. என்ன சொன்னாங்க அம்மா? நம்ம நிலைமை அவங்களுக்குப் புரியலையா வேதா?”
வேதா இதழ் நீண்ட மெல்லிய புன்னகையுடன் “இதே கேள்விதான் இப்பெல்லாம் எப்பவும் கேட்கிறாங்க, பேசுறாங்க.”
“எனக்கும் அது புரிய மாட்டேங்குது. குழந்தையைத் தாண்டி வேற பேசவும் கேட்கவும் எதுவுமே இல்லையா இந்த அம்மாவுக்கு.”
“விடுங்க அஜூ. என்னாலயும் இந்த அளவு பிரஷர் தாங்கவே முடியல.”
“நீ இதெல்லாம் கண்டுக்காத வேதா. என்னைக்கும் அம்மா பேசினா நீ அதை தப்பா நினைக்காத. ஒரு வேளை அவங்க ஆதங்கத்தை அவங்க நமக்கு காட்டுறாங்கன்னு நினைக்கிறேன். எனக்கும் கோவமா வருது. ஆனாலும் அவங்களுக்கு நம்மளால புரிய வைக்கிறது கஷ்டம். கொஞ்சம் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க வேதா.”
“அஜூ, எனக்கும் அவங்க மேல கோவம் இல்லை. ஆனா ஏதோ என் மேல தப்பு இருக்க மாதிரியே குத்தம் சொன்னா எனக்கும் கோவம் வருது அஜூ.”
“ஹையோ, விடு டா சர்க்கரை. நீ அம்மாவை எதுத்து எல்லாம் பேசாத. நான் பார்த்துக்கிறேன்.”
“நீங்களும் இதையே தான் பாப்பா போனதில் இருந்து சொல்றீங்க. ஆனா இப்பவெல்லாம் அத்தை பேசுறது கொஞ்சமும் சரி இல்லை. என் மேல தப்பு இருக்க மாதிரி மட்டுமே பேசினா, நானும் என்ன செய்வேன் அஜூ. நமக்கு நடந்ததுக்கும் நான் காரணம்ன்னு சொல்லுறாங்க.” என்ன முயன்றும் அவளின் குரல் உடைந்து கண்கள் கசியத் தொடங்கியது.
குழந்தை இறக்க அவளின் கவனக் குறைச்சல் தான் காரணம் என்றும், மீண்டும் கருத்தரிக்கவில்லை என்றும் இப்பொழுதெல்லாம் சாகரி பல நேரங்களில் மறைமுகமாகவும் சில நேரங்கள் நேரடியாகவும் வேதாவைக் குற்றம் சொல்லத் தொடங்கி இருந்தார்.
இந்த குத்தல் பேச்சுக்களும் வசவு மொழிகளும் வேதாவின் மனதை இன்னும் காயம் செய்து ரணமாக்கியது.
அவளின் மனதின் காயங்களெல்லாம் அவனின் மனதையும் வாட்ட அர்ஜுன் அவளை நெருங்கி கைகளை இறுகப் பற்றிக் கொண்டு தேற்றத் தொடங்கினான்.
“என் சக்கரைக்கட்டிய எனக்குத் தெரியாதா? இப்பவும் நான் அம்மா செய்யிறது சரின்னு சொல்லல. ஆனா குடும்பத்தில ஒருத்தவங்க தப்பு செஞ்சா கூட இருக்கவங்க அவங்க தப்ப எடுத்து சொல்லி சரி செய்யணுமே தவிர வெறுக்கக் கூடாது வேதா.”
“அப்ப இப்ப கொஞ்ச நேரம் முன்ன நீங்க ஏன் உங்க அம்மாவை சரி செய்யாம என்கிட்டே போன் குடுத்துட்டு போனீங்க? நீங்க சரி பண்ண வேண்டியது தானே?”
“வேதா, நானும் அப்பா கிட்டக் கூட சொல்லிப் பார்த்துட்டேன். அம்மா பேசுறது தப்புன்னு எனக்கும் தெரியும் வேதா.
ஆனா அவங்க என்னோட அம்மா. ஒரு அளவுக்கு மேல என்னாலையும் அவங்கள ஹர்ட் பண்ண முடியல டா.
“நீங்க என்னைப் பேச வேண்டாம்ன்னு சொல்லுறீங்க. நானும் அவங்க சொல்றத அமைதியா எடுத்துக்குறேன். ஆனா என்னை அறியாம கண்டிப்பா கூடிய சீக்கிரம் நான் ரியாக்ட் பண்ணிருவேன் அஜூ. அன்னைக்கு நீங்க என் மேல கோவப் படக் கூடாது. “
“கண்டிப்பா கோவப் பட மாட்டேன் வேதா. என் சக்கரை எப்பவும் தப்பு செய்ய மாட்டா.”
“ஓஹ், அப்படியா என்ன? ஆனா நேத்து நீங்க அப்படி சொல்லலையே? போதும் இந்த ப்ரொஜுக்ட் முடியவும் ஊருக்கு போயிடலாம்னு சொன்னப்ப என் முடிவு தப்புனு சொன்னிங்க?”
“நீ தப்பு செய்ய மாட்ட டா. ஆனா இப்பவும் ஊருக்குப் போகலாம்ங்குற உன் முடிவு தப்புன்னு தான் தோணுது டா.”
“இல்லை, நம்மல நேர்ல பார்த்தா அத்தைக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் தானே. அங்க அவங்க ஆசைப்படற மாதிரி ஹாஸ்பிடல்ல காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாமில்ல.”
“அதெல்லாம் சரி டா, ஆனா அப்பாகிட்டயும் இது பத்தி பேசி முடிவு பண்ணனும். நம்ம கமிட்மெண்ட்ஸ் எல்லாம் அங்க போனாலும் பார்க்க முடியனுமில்ல. இவ்வளவு நல்ல சம்பளமும் நல்ல வாய்ப்பும் எப்பவும் நமக்குக் கிடைக்காது வேதா.”
“இல்லை அஜூ நீங்க கொஞ்சம் நம்மையும் யோசிங்க. நம்ம தனியா இனி மேலும் கஷ்டப் படணுமான்னு. எனக்கும் தோணுது. அந்த ரெண்டுநாள் எத்தனை போன் கால். நம்மள சுத்தி எவ்வளவு கேள்வி. அதெல்லாம்,” அவள் தொடரும் முன் அர்ஜுன் பேசத் தொடங்கினான்.
“வேண்டாம் டா. குழந்தை இறந்ததும் அப்புறம் ரெண்டு நாள் கஷ்டப் பட்டு நீ அந்தக் குழந்தையை பெத்துக்கிட்ட. ஆனா நீ அவளோட முகம் பார்க்கல.
நான் பார்த்திருக்கேன் வேதா. நம்ம குழந்தையை. வேண்டாம் டா. நானும் அதைக் கடந்து தான் வந்தேன்.”
“ஹ்ம்ம், எனக்கும் புரியிது. ஆனா அத்தைக்கு கோவமே அங்க தான் ஆரம்பிச்சுது. குழந்தை இறந்த உடனே டி&சி பண்ணாம ரெண்டு நாள் கழிச்சு நார்மல் டெலிவரி பண்ணது தப்புனு கோவம்.”
“அதை இங்க உள்ள படிச்ச டாக்டர்ஸ் தானே செஞ்சாங்க? அதுக்காகவெல்லாம் ஊருக்குப் போகணுமா டா?”
“இல்லை நமக்கும் கொஞ்சம் இந்த வீட்டை விட்டுட்டு வேற இடம் மாறிப் போனா நல்லதுன்னு தோணுச்சு. ஏன் அஜூ இவ்வளவு கேட்குறீங்க? உங்களுக்கு ஊருக்குப் போக வேண்டாமா?”
“எனக்கும் வீடெல்லாம் மாற ஓகே. ஆனா நாடே மாத்தணுமே? யோசிச்சு முடிவு பண்ணலாம். நீ கடைசியா எங்க அம்மா ஆசைப்பட்டதைச் செய்ய சொல்லுற?”
“அத்தைக்கு அப்படியாவது நம்ம மேல இருக்க வருத்தம் போகட்டும் அஜூ.”
“ஹ்ம்ம், எல்லாரையும் யோசிக்கும் உன்னோட இந்த மனசு ரொம்ப அழகுடா.”
“அழகு என்னைக்கும் ஆபத்து அஜூ. எதுக்கும் அத்தைகிட்ட சொல்லி வச்சுடுங்க.” கிண்டலாக சொன்னாள் வேதா.
அந்தப் புன்னகையுடனான அவர்களின் நாட்கள் எல்லாம் அழகானவை.
இனிமையான பொழுதுகளும் கசப்பான அனுபவங்களும் சுமந்து தாயகம் திரும்பும் போது மலர்ப் பாதை விரித்துக் காத்திருக்குமா அவர்கள் வாழ்க்கை?
இல்லை அங்கே கால் வைக்கும் இடமெல்லாம் கடவுள் கண்ணி வெடிகள் வைத்திருப்பாரா?
காத்திருப்போம் நாமும்.
பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு உன்னால உலகம் அழகாச்சு