நிகழ் காலமும் எதிா் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
அமைதியான அந்த நிலவின் ஒளியில் மேல் மாடத்தில் நின்றிருந்தாள் வேதா. மனம் அமைதியாக இருந்தாலும் ஏதோ ஒரு சுணக்கம் அவளுள்ளே.
இந்தியாவிற்குத் திரும்பி வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. வீட்டினரின் கவலை என்பதைத் தாண்டி மாமியாரின் அறிவுறுத்தல் காரணமாகவே ஊர் திரும்பி இருந்தனர்.
மீண்டும் பணிக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தை ஒதுக்கி இந்த நாட்களைத் தான் விட்டுச் சென்ற படிப்பைத் தொடர பயன்படுத்திக் கொண்டாள்.
ஏகாந்தம் சூழ்ந்த அந்த இரவில் அன்று அவளின் மனமும் சலனமின்றி இருக்க அவளின் பின்னால் கேட்கும் சந்தடியில் மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
“சக்கரை என்ன டா தனியா நின்னு யோசனை? ஒரு வாரமா நம்மளை பார்க்கலையே, தேடுவாளேன்னு நான் ஓடி வந்தா, நீ இங்க வந்து நிக்கிற?”
“சும்மா இங்க நின்னுட்டு, நிலவ பார்த்திட்டு இருந்தேன். நீங்க மாமாகிட்ட பேசி முடிச்சு வர்றதுக்கு இன்னும் லேட் ஆகும்ன்னு நினைச்சேன்.”
“ஹ்ம்ம், இல்ல டா. அப்பா கன்ஸ்ட்ரக்ஷன் அக்கௌன்ட்ஸ் கொஞ்சம் சரி பார்த்துக் குடுத்தேன். சரி நீ சொல்லு, என்ன யோசனை உனக்கு?”
“ஒன்னும் இல்ல அஜூ. ரம்யா அக்காவைப் பார்த்தேன் வீக் எண்டு. அடுத்த மாசம் வளைகாப்புக்குக் கண்டிப்பா வரணும்ன்னு சொன்னாங்க. அதான் இப்ப யோசனை வந்தது.” சொல்ல வந்ததைச் செய்தியாய் சொன்னாலும் அவள் குரலின் சோகம் அவனுக்கும் புரிந்தது.
“வேதா, தூக்கம் வருதாடா? இல்ல கொஞ்ச நேரம் பேசலாமா?”
“தூக்கமெல்லாம் ஒன்னும் இல்ல அஜூ. வாங்க ஊஞ்சலுக்குப் போகலாம்.”
ஊஞ்சலில் அமர்ந்தவள் அர்ஜுன் தோள் சாய்ந்து அவன் கை விரல்களுடன் தன் விரல்களையும் இணைத்துக் கோர்த்துக் கொண்டாள்.
அர்ஜுன் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன் மெல்ல தன் மனதில் இருக்கும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.
“சக்கரை, இப்பவெல்லாம் என்னடா அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போறேன்னு என்னை விட்டுட்டுப் போற? அதுவும் இந்த தடவை ஒருவாரம் அங்கேயே இருந்தாச்சு.”
“அப்படி எல்லாம் இல்ல அஜூ. வழக்கம் போல பீரியட்ஸ் டைம்ல அம்மா மருந்து குடுத்தாங்க. அதோட அப்படியே ரம்யா அக்காவ பார்க்கணும்ன்னு இருந்துட்டேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாத மாதிரியே கேக்குறீங்க.”
“இல்ல வேதா. இதெல்லாம் தெரிஞ்சதுனால தான் கேட்கிறேன். அதே மருந்தை இங்கயே இருந்து குடிக்க வேண்டியது தானே. ஏன் அத்தையை கஷ்டப் படுத்தனும்?”
“அதெல்லாம் அம்மாக்கு ஒரு கஷ்டமும் இல்ல. அப்பத்தா கண்டிப்பா இந்த தில் ஸீட்ஸ்(சதகுப்பை) அப்புறம் களோஞ்சி சீட்ஸ்(கருஞ்சீரகம்) ரெண்டும் குடிக்க சொன்னாங்கள்ல. அப்பறம் அதெல்லாம் செய்யாட்டி திட்டுவாங்க.”
“நான் ஒன்னு கேட்டா கண்டிப்பா பதில் சொல்லுவியா வேதா?”
“இதென்ன அஜூ, தெரிஞ்சா கண்டிப்பா சொல்லப் போறேன். ஏன் எனக்குப் பதில் தெரியாத மாதிரி கேள்வி எதுவும் இருக்கா என்ன?”
“உனக்கு பதில் தெரியும் வேதா. ஆனா சொல்லுவியான்னு தான் தெரியல எனக்கு.”
“ரொம்ப யோசிக்காம கேளுங்க அஜூ.”
“வேதா நமக்குக் குழந்தை இல்லன்னு நீ இன்னமும் உன்னையவே கஷ்டப் படுத்திக்கிறியா?”
அவளின் முகம் அதிர்வைக் காட்டிய போதும், அவன் விரல்கள் அவள் விரல்களின் இறுக்கத்தை உணர்ந்த போதும் அவள் இதழ்கள் மட்டும் பதிலுரைக்க மறுத்தன. அமைதியே அவளின் பதிலானது.
“வேதா நீ என்ன நினைக்கிறன்னு கொஞ்சமாவது என்கிட்டே ஷேர் பண்ணிக்க டா. நீயும் அம்மாவும் கேட்டதுக்காகத் தான் மறுபடி இங்கயே வந்தாச்சு. ஆனா இந்த ஆறு மாசத்துல நீ வேதா தானான்னு எனக்கே சில சமயம் சந்தேகம் வருது. என்ன விட்டு ரொம்ப விலகிப் போற. நீ என்ன நினைக்கிறன்னும் எனக்குத் தெரியல. பதில் பேசு வேதா.” ஆற்றாமையுடனான அவனது கேள்விகள் அவளின் மௌனம் கலைக்க வைத்தது.
“எனக்கு தானே வந்ததான்னு தெரியல அஜூ. ஆனா மத்தவங்களோட கேள்வியும் பார்வையும் அப்படி ஒரு எண்ணத்தை வர வச்சுருச்சு.”
“மத்தவங்க கேள்விக்கு எல்லாம் நீ பதில் சொல்லனுமா வேதா?”
“மத்தவங்களுக்கு சொல்லலைன்னாலும் நம்ம வீட்டுல அத்தைக்கு சொல்லணுமே அஜூ. ப்ளீஸ் இதை நீங்க தப்பா புரிஞ்சுக்கக் கூடாது. மாமியார் மருமகள் உறவு இப்படித்தான்.”
“எங்களுக்குள்ள சண்டை சச்சரவு அப்படி எல்லாம் இல்ல. எங்க அம்மாக்கு இருக்க அதே ஆதங்கமும் ஆசையும் தான் அவங்களுக்கும் இருக்கு. ஆனா அதை வெளிப்படுத்துற முறையில அத்தை ஏனோ அவங்கள அறியாம என்னையும் சேர்த்துக் காயப் படுத்துறீங்க அஜூ.”
“அதுக்கெல்லாம் நான் அம்மாகிட்ட பேசி ரியாக்ட் பண்ணாம உன்னை விட்டுக் கொடுத்துட்டேன்னு நினைக்கிறியா வேதா?”
“கண்டிப்பா இல்லை அஜூ. உங்களையும் சேர்த்து கஷ்டப் படுத்த வேண்டாம்ன்னு தான் நான் அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்.”
“பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியிறது என்ன பழக்கம் சக்கர?”
“அப்போ என்ன செய்யச் சொல்லுறீங்க அவங்க கூட என்னை சண்டை போட சொல்லுறீங்களா? இல்ல அவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டுப் பேசாம போக சொல்லுறீங்களா?
என்னால இது ரெண்டுமே முடியாது அஜூ. அதை விட முக்கியம் குழந்தை இல்லாதது ஒரு பிரச்சனையே இல்லை. அது ஒரு குறைபாடுன்னு வேணும்ன்னா சொல்லலாம். அதுவும் கூட இதுக்கு என்னால செய்ய முடியிற தீர்வுன்னு ஒன்னு இருக்கான்னு எனக்குத் தெரியல?
இப்ப நீங்களே சொல்லுங்க? ‘இந்த மாசமும் தலைக்கு ஊத்தியாச்சான்னு?’ என்னைப் பார்த்து கேட்கும் போது நான் என்ன செய்யணும்ன்னு நீங்க எதிர் பார்க்குறீங்க?”
“அதுக்காக நீ என்னை விட்டுட்டு போயிடுவியா வேதா? என்னை யோசிக்க மாட்டியா? உங்கம்மா வீட்டுல போய் எனக்கென்ன வந்ததுன்னு உட்காந்துக்கிட்ட?”
அவள் எவ்வளவு விளக்கங்கள் சொன்னாலும் அவன் ஆதங்கமெல்லாம் அவள் தன்னை விட்டு அவளின் அம்மா வீட்டிற்குப் பிரிந்து சென்றதிலேயே இருந்தது. ஆனால் ஏனோ அவனின் அந்த ஆதங்கம் அவளுக்குப் புரியவே இல்லை.
“எனக்கும் உங்கள புரியுது அஜூ. அதே நேரம் வீட்டுக்குள்ள பிரச்சனையை வளர விடவும் எனக்கு மனசு இல்ல. இதுக்கு நம்மளால செய்ய முடிஞ்ச தீர்வு இருந்தா நானும் செஞ்சிருப்பேன். அது முடியலைங்கும் போது தேவை இல்லாத கஷ்டத்தைத் தவிர்க்கப் பார்க்கிறேன் அஜூ. யோசிச்சா உங்களுக்கும் புரியும்.”
“எனக்கும் நீ சொல்ல வர்றது புரியுது வேதா. ஆனா உனக்கு நான் சொல்றது புரியுதான்னு எனக்குத் தெரியல. சரி, நீ சொல்லறபடியே வீட்டுக்குள்ள சண்டை இல்லாம இருக்க நீ இப்படியே எவ்வளவு நாளைக்கு உங்க அம்மா வீட்டுல போயி ஒளிஞ்சுக்கப் போற?
ஒருவேளை நமக்குக் குழந்தை இல்லாமலே இருந்துட்டா, சொல்லு வேதா. அப்படி ஒரு நிலைமை வந்தா என்ன செய்யப் போற? என்ன முழுசா விட்டுட்டுப் போயிடுவியா?”
“எனக்குத் தெரியல. என்ன செய்யணும்ன்னு எனக்கும் தெரியல. ‘என்ன பிரச்சனை உனக்கு? இந்த டாக்டர போயி பாரு, இது செய்யுங்க, இந்த கோவிலுக்குப் போங்க’ இப்படி எல்லாரும் ஏதேதோ சொல்லிகிட்டே இருக்குறது கூட எனக்கு இன்னும் பிரஷர் பண்ணுது. இந்த மாதிரி எல்லாம் இல்லாமா கொஞ்ச நாளைக்கு அமைதியா இருக்கனும்ன்னு கூட தோணுது.”
“வேதா ஒன்னு நீ நல்லா புரிஞ்சுக்கணும், குழந்தை பெத்துக்குறது இயற்கை சமநிலைக்காக மனிதனும் அவனோட அடுத்த ஜெனெரேஷனை உருவாக்கிறது. அவ்வளவுதான்.
குழந்தைகளைப் பெத்துக்குறது மட்டும் கல்யாணமான பொண்ணோட குவாலிஃபிகேஷன் இல்ல. அப்படி பேசினா அது என்னோட அம்மாவா இருந்தாலும் பதில் சொல்லு வேதா.
நான் உன்கிட்ட அம்மா பேசுறத கேட்டு ஹர்ட் ஆகாதன்னு சொன்னா நீ என்னை இங்க விட்டு ஓடிப் போயிட்ட. கொஞ்சமாச்சும் உனக்கு என் பீலிங்ஸ் புரியுதா?” அலுத்துக் கொண்டான் அர்ஜுன்.
“ஏன் புரியாம, எனக்கு நல்லா புரியுது. அதுவும் இப்படி முழுங்குற மாதிரி பார்த்தா நான் கண்ணு மூடி இருந்தாக் கூட எனக்கு உங்க பார்வையையும் அதுக்கான அர்த்தமும் புரியும் அஜூ.” புன்னகையுடன் சொன்னாள் வேதா.
“சோ?”
“சோ, இனி இந்த மொட்டை மாடி நமக்கு ஆபத்து. வாங்க உள்ள போகலாம்.”
“ஆனாலும் நீ என் சக்கரக் கட்டி டி.” கொஞ்சலுடன் அவளை அழைத்துச் சென்றவன், அந்த ஏகாந்த இரவில் தனது ஆலிங்கனத்தைத் தொடங்கி இருந்தான் அர்ஜுன்.