இரவின் தனிமைக்காகத் தவிப்புடன் காத்திருந்தாள் ஆனந்தி. இன்றைய நாளின் முன்னிரவு நேரத்தின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஜீவாவிடம் சொல்லி அவனின் ஆறுதல் பெறாமல், அல்லது அவனின் தன்னம்பிக்கை தரும் சொற்கள் கேட்காமல் அவளால் நிச்சயம் தூங்க முடியாது.
என்னவெல்லாம் பேசி விட்டாள், எப்படி தன்னால் அவ்வாறெல்லாம் பேச முடிந்ததென்று அவளுக்கே தன்னை குறித்து ஆச்சரியம்.
அனைவரும் உறங்கி விட்டார்களா என மீண்டும் ஒருமுறை அவள் அறையிலிருந்து வெளியில் சென்று எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.
கதவைத் தாளிட்டு வந்தவள் கைப்பேசியை எடுத்து ஜீவாவிற்கு ‘கால் மீ’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டுக் காத்திருந்தாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் பதில் வந்தது. ‘டையர்ட். பிஸி டே டுடே. கால் யு டுமாரோ நைட்.’ என்ற செய்தியைப் படித்தவள் மேலும் கோபம் வந்தவளாக அடுத்த செய்தியை அனுப்பி இருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போல உடனே அவளின் கைப்பேசித் திரை அவனது பெயரைத் தாங்கிய படி ஒளிரத் தொடங்கியது.
அவளின் துயரமெல்லாம் மறந்து இதழ் நீண்ட புன்னகையுடன் அவனது அழைப்பை ஏற்றிருந்தாள்.
“ஆனந்த், சாரி தூங்கும் போது தொந்தரவு செஞ்சுட்டேனா? “
“இல்ல ஆனந்தி சொல்லு என்ன பிரச்சனை? வீட்ல எல்லாம் சொல்லிட்டேன்னு மெசேஜ் அனுப்பி இருக்க?” குரலில் தூக்கம் கலையாமல் இருந்தாலும் அவனின் படபடப்பு தெரிந்தது.
“அதெல்லாம் சரி பண்ணிக்கலாம். நீ என்ன நடந்ததுன்னு சொல்லு ஆனந்தி”
“ம்ம் சொல்லுறேன் என்றவள் இன்றைய நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்கினாள்.
மாலை நேரம் அம்மா யாருடனோ திருமணம் ஜாதகம் எனப் பேசிக் கொண்டிருப்பது ஆனந்தியின் காதுகளில் விழுந்தாலும் தன் அண்ணனின் திருமண விஷயமாகத்தான் இருக்கும் என எண்ணி பேச்சைக் கவனிக்காமல் விட்டிருந்தாள்.
ஆனால் அவள் கேட்டது அவள் திருமணம் சம்பந்தமான பேச்சுக்கள் தான் எனக் கூடிய விரைவிலேயே அவளுக்கும் புரிந்து போயிற்று.
இரவு உணவு உண்டு முடித்து அம்மா அப்பா அண்ணன் என அனைவரும் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க சாரதா பேச்சைத் தொடங்கினார்.
“அம்மா என்னம்மா, அண்ணனுக்கு தானே பொண்ணு பார்த்தோம். இப்ப எனக்குன்னு சொல்லுறீங்க. நான் இப்ப தானே படிச்சே முடிச்சுருக்கேன். இன்னும் ரிசல்ட் கூட வரல.”
“இல்ல ஆனந்தி இது நம்ம தேடிப் போகல. உங்க பெரியம்மா கிட்ட பொண்ணு கேட்டு மாப்பிளை வீடே நம்மைத் தேடி வர்றாங்க. நீயும் படிச்சு முடிச்சுட்ட. பார்க்கிறதுக்கு என்ன? அமைதியா இரு நீ.” என்றார் அவளின் அப்பா சதாசிவம்.
“இல்லப்பா, நான் இன்னும் ஒரு மாசத்துல ரிசல்ட் வரவும் வேலைக்கு ஜாயின் பண்ணனும்.”
“மாப்பிள்ளையும் இங்க சென்னைல தான் வேலை செய்யிறாங்கலாம். அதெல்லாம் கேட்காம நாங்க எதுவும் பண்ண மாட்டோம். அப்படியே வெளியூர் மாப்பிள்ளைன்னாலும் நீ அங்க போயி வேலை தேடிக்கலாம்.” சமாதானம் சொன்ன சாரதா மேலும் தொடர்ந்தார்.
“இவனுக்கு ஒரு வருஷமாப் பார்க்குறோம் ஒன்னும் அமையல. உனக்கு அவங்களா தேடி வரும் போது பார்குறதுல என்ன தப்பு. நாளைக்கு முதல்ல இவ ஜாதகத்தை பார்க்கணும். கல்யாண யோகம் இப்ப இருக்கான்னு கேட்டுகிட்டு அப்புறம் பொருத்தமும் பார்க்கலாம்.” மேலும் மேலும் திட்டமிடத் தொடங்கினார் சாரதா.
“முதல்ல அவங்க ஜாதகமும் போட்டோவும் கொடுக்கட்டும் சாரதா. நமக்கு அவசரமில்லை. அதுக்குள்ளே ஆனந்தி ஜாதகத்தையும் நம்ம ஒரு தரம் அண்ணி பார்க்கிற ஜோசியர் கிட்டயே பார்த்துட்டு வந்துடுவோம். ஒருவேளை இப்ப கல்யாண யோகமில்லைன்னா அவங்க கிட்ட சொல்லிடலாம். மாப்பிள்ளை ஜாதகம் கூட வாங்கத் தேவை இல்ல.”
“அது என்னங்க எடுக்கும் போதே இப்படி சொல்லுறீங்க. அதெல்லாம் நல்லா அமையும். இல்லைன்னா இப்படித் தானா தேடி வருவாங்களா?.”
“ம்மா என்னம்மா நீங்க அண்ணனுக்கு பாருங்கம்மா முதல்ல. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். நான் வேலைக்குக் கொஞ்ச நாள் போயிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன். ” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாய்விருக்கையில் அவள் அருகில் வந்து அமர்ந்தான் அவள் அண்ணன் கணேஷ்.
வந்தவன் அவள் கைகளை பற்றி மெல்லிய குரலில் ‘அமைதியா இரு’ என்று சொல்ல, வழக்கம் போல அண்ணன் தன்னை வம்பு செய்கிறான் என எண்ணிக் கொண்டவள்,
“அதெல்லாம் என் விஷயம் நான் பேசிப்பேன், நீ ஒன்னும் சொல்லத் தேவை இல்ல.” அவளின் கோவத்தை அவன் மேல் காட்டினாள்.
“ஆனந்தி இப்ப என்ன உனக்கு. அண்ணன்கூட எதுக்கு சண்டை போடுற? கல்யாணமெல்லாம் அப்படிதான் சிலருக்கு திடீருன்னு முடிவாகும். அதெல்லாம் நம்ம கையில இல்ல.
இன்னும் ஜாதகம் பார்க்கணும் மாப்பிள்ளையை நேர்ல பார்க்கணும். அவங்க குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிக்கணும். இன்னும் எவ்வளவோ இருக்கு. இதெல்லாம் முடிந்தாலும் உனக்கு கல்யாணம் வைக்க இன்னும் நமக்கு ஆறு மாசம் ஆகும். நீ இப்பவே வேண்டாமுன்னு சொல்லாத.”
சாரதா என்னதான் திருமணத்திற்கு தங்களுக்கு அவசரமில்லை என்று சொன்னாலும் காதல் கொண்ட மனது தன்னைப் போல பயம் கொள்ளத் தொடங்கியது.
இன்றுவரை ஜீவா மட்டுமே அவளின் வழிகாட்டி. காதல் மலர்ந்த நாட்கள் முதல் அவன் சொல்லித் தந்தவை தான் அவளின் வேதம்.
அவன் சொல்லில் நடைமுறையில் சில முறை கோவம் கொண்டாலும் அவன் மேல் கொண்ட காதலால், நம்பிக்கையால் அப்படியே அவன் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை ஆகிப் போனாள் அவள்.
அப்படி இருக்க எந்த முன் யோசனையும் திருமணத்திற்கு என அவர்கள் பேசிக் கொண்டதில்லை. இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் பயம் பீடிக்க, இந்தப் பேச்சை நிறுத்துவது மட்டுமே முக்கியம் என எண்ணி ஆனந்தி பேசத் தொடங்கினாள்.
“அதுக்கில்லம்மா, எனக்கு இப்ப இந்த கல்யாணம் வேண்டாம். எனக்குப் பிடிக்கல.” என்றாள் பிடிவாதமாக.
“ஆனந்தி, ” என சாரதா ஏதோ பேசத் தொடங்க சதாசிவம் அவரைக் கை நீட்டித் தடுத்திருந்தார்.
“ஆனந்தி என்ன சொல்ல நினைக்கிறியோ தைரியமா சொல்லு டா. ஏன் உனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்?” மகளின் தடுமாற்றம் அறிந்து கேட்டார் சதாசிவம்.
ஆனந்திக்கு அவளின் தந்தையின் சொற்கள் ஊக்கம் கொடுக்க மனத்தில் இருப்பதைச் சொல்லத் தொடங்கினாள்.
“அப்பா, நான் ஆனந்தை லவ் பண்றேன்ப்பா” வேகமாக ஒப்பித்து விட்ட ஆசுவாசம் அவளிடம்.
ஆனால் பெற்றவர்களுக்கோ பேரதிர்ச்சி. ஒரு நாளும் தங்கள் மகள் காதல் என்று வந்து நிற்பாள் என எண்ணியதில்லை. அவளின் நடவடிக்கைகளும் என்றும் தவறுதலாகத் தோன்றியதில்லை. வீட்டில் அவள் இன்னும் குழந்தை தான்.
“யாரும்மா ஆனந்த்? என்ன பன்றாரு?”அப்பா அமைதியாகக் கேட்க, சாராதாவோ அதற்குள் எழுந்து வந்தவர் அவளின் கைகளைப் பற்றி எழுப்பியபடி, “ஏய் என்ன டி சொல்லுற. படிக்கப் போனா படிப்பைப் பார்க்கமா இந்த வயசுலயே என்ன காதல் உனக்கு? உங்க அண்ணனைப் பார்த்தியா? இன்னும் நாங்க பொண்ணு பார்க்கட்டும்ன்னு இருக்கான். உனக்கு என்ன திமிரு?”
“ம்மா, அவங்க வேதா அண்ணி தம்பி ஜீவானந்த். அவங்கள லவ் பண்றேன். அவங்களும் என்னை லவ் பண்றங்கப்பா.” அம்மாவில் தொடங்கி அப்பாவில் முடிக்கக் கண்கள் கலங்கி கன்னம் நனைக்கத் தொடங்கியது. பயம் வேறு உடல் மெல்ல நடுக்க அம்மாவின் அருகில் நின்றிருந்தாள்.
“ஹ்ம்ம், அது வரைக்கும் நம்ம ஆளுங்க தான். தெரிஞ்ச குடும்பம். சரி, அண்ணன் கிட்ட பேசுவோம்.”
“உங்க பொண்ணு காதல்ன்னு வந்து நிக்கிறா, என்னன்னு கேட்காம நீங்களும் சரின்கிற மாதிரி பேசுறீங்க. அதெல்லாம் விசாரிக்கணும். தெரிஞ்ச குடும்பம்ன்னாலும் நம்ம கேட்டுத்தான் செய்ய முடியும். உனக்கென்னடி காதல். படிக்கப் போனா அந்த வேலையைப் பார்க்காம கண்டவன் பின்னாடியும் சுத்திக்கிட்டு இருந்தியா?”
“அம்மா, நாங்க வெளில எல்லாம் போனதில்லம்மா. அவங்க எங்க காலேஜ்லதான் படிச்சாங்க. இப்பவும் எங்க கிரிக்கெட் டீம் கோச் அவங்கதான். கிரிக்கெட்ல ஸ்டேட் பிளேயர்.” தன்னைத் தெற்றிக் கொண்டு ஜீவாவைப் பற்றி பெருமையாகச் சொன்னாள் ஆனந்தி.
எப்படி இருந்தும் சாரதாவுக்கு இந்த காதல் விவகாரமெல்லாம் கேட்கக் கேட்க ஆற்றாமையாக வந்தது.
பெண்ணை இன்னும் வசதியான இடத்தில் கல்யாணத்துக்குக் கேட்டிருக்க ஏனோ வேதாவின் குடும்பம் போன்று நடுத்தர குடும்பத்தில் பெண்ணைத் திருமணம் செய்ய அவருக்கு மனம் சிறிதும் ஒப்பவில்லை.
ஆனால் கணவரின் பேச்சு ஒருவேளை சம்மதித்து விடுவாரோ எனத் தோன்ற, “நீங்க உங்க அண்ணன்கிட்ட பேசுங்க, நான் முதல்ல நாளைக்கு காலைல சாகரி அக்காவைப் பார்த்து பேசிட்டு வர்றேன்.”
மொத்தத்தில் ஆனந்திக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கிய உணர்வு மட்டுமே தோன்றியது. இனி எது நடந்தாலும் ஜீவா பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் சாரதாவின் திட்டுக்கள் எல்லாம் மங்கள இசையாக அவளின் காதுகளில் ஒலிக்க அமைதியாக நின்று கொண்டாள்.
அம்மாவும் அப்பாவும் ஏதேதோ பேச அவை எதுவும் இவளின் செவியில் சென்று சேரவில்லை. நினைவெல்லாம் ஜீவா மட்டுமே. ஓரிருமுறை கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு தூங்க வந்துவிட்டாள்.
நடந்தவை அனைத்தையும் சொல்ல ஜீவா அங்கே பெருமூச்சுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
“மொத்தத்துல அவங்களுக்கு உன் மேல எந்த சந்தேகமும் இல்ல. நீயாவே உளறீட்ட. அப்படித்தானே?” மெல்ல சிரிப்புடன் கேட்டான்.
“ஹ்ம்ம், அப்புறம் இன்னொரு விஷயம் ஆனந்த். அண்ணா இப்ப மெசேஜ் பண்ணிருக்கான். ‘ஒன்னும் பயப்படாத. பேசிக்கலாம் அர்ஜுன் கிட்ட நாளைக்கு நான் பேசுறேன்னு.’ அப்படீன்னா கணேஷுக்கு ஏற்கனவே நம்ம விஷயம் தெரியும் போல.”
“ஹ்ம்ம், அத்தான் சொல்லி இருப்பாங்க. இதுல நீ இனி யோசிக்க எதுவும் இல்ல. பயப்படாத. எப்படியும் ஒரு நாள் எல்லோருக்கும் தெரியப் போற விஷயம் தான். ஆனா இவ்வளவு சீக்கிரம் நானும் எதிர் பார்க்கல. பார்க்கலாம் உங்க வீட்ல அடுத்து என்ன செய்யிறாங்கன்னு.” என்று அவளிடம் தைரியமாகப் பேசினாலும் ஏதோ ஒரு சிறு புள்ளியாய் அவனுக்கும் பயம் இருக்கத்தான் செய்தது.
ஆனந்திக்கு சில பல விளக்கங்களும் ஆறுதல்களும் சொல்லி, எது நடந்தாலும் தான் பார்த்துக் கொள்வதாகப் பலமுறை உறுதி கூறிய பின்னே கைப்பேசியை அணைத்திருந்தான்.
மறுநாள் தானும் வீட்டில் அம்மா அப்பாவிடம் பேசவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். இனி விரைவில் ஆனந்தி தன் வாழ்வில் தன்னுடன் தன் குடும்பத்திற்கு வந்துவிடுவாள் என்ற கனவுடன் ஜீவாவும் உறங்கிப் போனான்.
நாளை விடியல் என்பது நமது வாழ்வில் என்ன கொண்டு வரும் என்பது எப்பொழுதுமே யாரின் கற்பனைக்கும் எட்டாத ஒன்று தான். இன்றைய கனவுகளெல்லாம் நாளைக்கு கண்ணீருடன் வீடு வரும் தன் அக்காவுக்கும் அதே நிலையில் தன் முன் வந்து நிற்கும் ஆனந்திக்கும் இடையில் ஊசலாடும் என்று அறியாத ஜீவாவின் மனம் நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்து போனது.
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்