மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் உன்னாலே மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது
“அஜூ, எழுந்துக்கோங்க டைம் ஆகுது.” புன்னகை முகமாக எழுப்பினாள் வேதா.
“ஹ்ம்ம்” எழுந்ததுமே வழக்கம் போல அர்ஜுன் கைப்பேசியைத் தேட அவன் கண்ணில் முதலில் பட்டது ஜீவா அனுப்பி இருந்த குறுஞ்செய்திகள் தான்.
ஆனந்தி அவள் வீட்டில் தங்களின் காதல் விவகாரம் எல்லாம் சொல்லிவிட்டாள் என்றும் அடுத்து என்ன செய்யலாம் என்றும் கேட்டு அனுப்பி இருந்தான்.
‘வீட்டில் பேசிக்கொள்ளலாம் தைரியமாக இரு. அலுவலகம் வந்ததும் பேசுகிறேன். வீட்டிலிருந்து பேசுவது இயலாது’ என்று பதில் அனுப்பியவன் வேதாவிடம் சொல்வோமோ வேண்டாமா என யோசனையில் இருக்க, வேதாவே கேட்டுவிட்டாள்.
“அஜூ என்ன காலைலே ரொம்ப நேரமா யோசனையில் இருக்கீங்க?”
“இல்ல டா ஒன்னும் இல்ல. இன்னைக்கு ஆபீஸ் ஒர்க் பத்தி கொஞ்சம் யோசனை. வேற ஒன்னும் இல்ல.”
“ஓகே, நீங்க மெல்ல யோசிச்சு முடிச்சு கீழ வாங்க, நான் போறேன் டிபன் ரெடி பண்ண. அத்தை மட்டும் தனியா செய்வாங்க.” என்று சொல்லியபடி கீழே சென்றிருந்தாள்.
இது காலை நேர அவசரகதியில் வேதாவிடம் பேசும் விஷயமில்லை என்பதால் அர்ஜுனும் அதை இப்போதைக்கு ஒதுக்கி விட்டு தயாராகி அலுவலகம் சென்றிருந்தான்.
காலை உணவு வேலை முடிந்து அருணாச்சலம் அவரது அறையில் அன்றைய தினசரியுடன் சாய்விருக்கையில் அமர்ந்திருந்தார்.
வேதாவும் சாகரியும் மதிய உணவிற்கான வேலையில் இருந்தனர்.
காலை பத்து மணி போல சாரதா சாகரியின் வீட்டிற்கு வந்தார், ஜீவா ஆனந்தி பற்றிப் பேசுவதற்காக.
வேதாவும் வீட்டில் இருப்பாள் என்று தெரிந்து தான் வந்தார் சாரதா. ஆனால் வீட்டினுள் வரவும் அனைவரிடமும் பேசியவருக்கு எப்படி சாகரியிடம் தனியே பேச எனத் தயக்கமும் வந்தது.
பொதுவாகவே மதிய சமையலை முடித்துப் படிப்பதற்காகத் தனதறைக்கு வந்துவிடுவாள் வேதா. அன்றும் வேதா மேலறைக்கு செல்ல சாரதா மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.
“அக்கா ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட தனியா பேசத்தான் க்கா வந்தேன். அதான் வேதா இருக்கவும் என்னால பேச முடியல இவ்வளவு நேரம்.”
“ஏன் சாரதா அப்படி எதுவும் முக்கியம்ன்னா போன்ல பேசிருக்கலாமே?”
“இல்லக்கா நேருல வந்து பேசணும்ன்னுதான்.” மெல்லத் தயக்கமாகச் சுற்றிலும் பார்த்தார்.
“என்ன சாரதா, நம்ம வீட்டுல பேசவே இவ்வளவு யோசிக்கிற?”
“அதெல்லாம் இல்லக்கா. வீட்டுல நேத்து ராத்திரி கொஞ்சம் பிரச்சனை ஆயிருச்சுக்கா.”
“என்ன? என்ன நடந்துச்சு? இவரும் ஒன்னும் சொல்லலையே?”
சாரதா தொடங்கவுமே சாகரிக்கு ஏதோ காதல் விவகாரம் எனத் தோன்றத் தொடங்கியது.
“ஹ்ம்ம் சொல்லு சாரதா, என்ன சொன்னா ஆனந்தி?”
“ஹ்ம்ம் சொன்னாக்கா, என் தலைல கல்லைத் தூக்கிப் போடன்னே. ஜீவாவை காதல் பண்றேன்னு அவங்க அப்பாகிட்டயே நேர நின்னு சொல்லுறாக்கா.”
“யாரு ஜீவா? வேதா தம்பியா?” அவரால் நம்பவே முடியாத பாவம்.
“ஏன் சாரதா, அவனை எப்படி இவளுக்குத் தெரியுமா?”
“அக்கா, இவ காலேஜ்ல தான் படிச்சானாம். இப்ப ஏதோ நல்ல வேலைல இருக்கான் போல. கிரிக்கெட் வேற விளையாடுவானாம்.”
“ஹ்ம்ம், இருக்கட்டும். தம்பி என்ன சொன்னாரு?”
“அவரு என்னக்கா ஒன்னும் சொல்லல. அத்தான்கிட்ட பேசுவோம்ன்னு சொல்லிருக்காரு. அவருக்கு எல்லாம் புடிச்ச மாதிரி தான் இருக்கும் போல. எனக்குத் தான் க்கா மனசுக்கு கேக்கல.”
“ஏன்? நல்ல பையன் தானே? நீ என்ன யோசிக்கிற?”
“என்னக்கா நீங்களும் இப்படி பேசுறீங்க? அவளுக்கு பிடிச்சுருக்குன்னு நம்ம கல்யாணம் பண்ணி குடுக்க முடியுமா? நல்ல வசதியான இடமெல்லாம் வருதுக்கா. இன்னும் வயசிருக்கு. எதுக்கு அவசர படணும்? எனக்கு அதுவும் பொண்ணு எடுத்த இடத்துல பொண்ணு குடுக்க விருப்பமில்லை.”
“பொண்ணு எடுத்து பொண்ணு குடுக்குறது எப்பவும் சிரமம்தான் சாரதா. நம்ம பொண்ணுக்குத் தான் அது சிரமம்.”
“எனக்கு ஒரே யோசனையாவே இருக்கு. நீங்க சொல்லுங்க அக்கா என்ன செய்ய?”
“அதெல்லாம் நீ ஆனந்திகிட்ட பேசு. அவ சின்ன பொண்ணு. அவளுக்கு இப்பக் காதல் பெருசாத் தெரியும். அப்புறம் அவளும் இப்படி குழந்தை இல்லாம வந்து நின்னா நமக்கும் கஷ்டம்.”
“என்ன சொல்றிங்க அக்கா?”
அந்த நிமிடம் சாகரிக்குத் தோன்றியதெல்லாம் குழந்தை இல்லாமல் இருக்கும் வேதா மட்டுமே. வேதாவை அளவீடாகக் கொண்டே இந்தத் திருமணத்தை யோசிக்க, இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடில்லாமல் போனது. வேதாவின் மருத்துவப் பிரச்சனைகளைப் பற்றிய அடிப்படை புரிதல் என்பது கூட அங்கு கேள்விக் குறியானது.
சாகரியின் மனதில் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்த பெண்ணின் குறியீடு தாய்மையாக இருக்க, அவருக்கு வேதா குறையுடைய பெண்ணாக மட்டுமே தெரிந்தாள். அவளின் குழந்தை இல்லாத அந்தக் குறைபாடு மட்டுமே இந்தத் திருமணத்தை மறுக்க அவருக்குப் போதுமானதாக இருந்தது.
“ஆமா என்னத்த சொல்ல, எப்பக் கேட்டாலும் அவளுக்கு உடம்புல ஒன்னும் பிரச்சனை இல்லன்னு தான் சொல்லுறாங்க. ஆனா இன்னும் ஏன் குழந்தை இல்லைன்னு கேட்டா, எல்லாருக்கும் என் மேலதான் கோவம் வருது.
நீயே சொல்லு, இது நம்புற மாதிரி யா இருக்கு. என்னவோ நம்ம தான் அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு அர்ஜுனுக்குப் பொறுமையா ஒழுங்கா பொண்ணு தேடாம இவங்க கிட்ட ஏமாந்துட்டோம்ன்னு தோணுது.
ஏற்கனவே இறந்து போன அந்த குழந்தையும் வளர்ச்சியே இல்லாம தான் இறந்துச்சுன்னு அர்ஜுன் சொன்னான். உனக்குத் தான் தெரியுமே, வேதாவோட அத்தை மகளும் அப்படி வளர்ச்சி குறையோட ஒரு பிள்ளையை பெத்து வச்சுருக்கா.
இனி நம்ம பிள்ளையவும் அந்தக் குடும்பத்துல கல்யாணம் செஞ்சு குடுத்து, இப்படி எல்லாம் குறையோட பொறந்தா யாரு வச்சு பார்க்கிறது? பொண்ணுக்கு அம்மான்னு எல்லாம் உன் தலைல தான் விழும்.
எதுவா இருந்தாலும் யோசிச்சு செய். இதெல்லாம் நமக்குத் தேவை இல்ல. நம்ம பிள்ளைக்கு என்ன குறைச்சல்? கோடில சொத்தோட மாப்பிள்ளை வரும் போது தெரிஞ்சே, ஏன் இந்த வீட்டுக்குப் போய் சம்பந்தம் பண்ணனும்?”
மனதில் உள்ளதெல்லாம் அவர் சொல்லி முடிக்க மிஞ்சிய கோபத்துடன் அவர்களின் எதிரில் வந்து நின்றாள் வேதா.
சாரதா இங்கு வந்திருக்கும் போது தான் வெகு நேரமாக தன் அறையிலேயே இருப்பது சரியல்ல எனக் கீழே கூடத்துக்கு வர சாகரியின் கடைசி சில வாக்கியங்கள் எல்லாம் வேதாவின் காதில் தெளிவாக விழுந்தது.
“அத்தை நீங்க யாரோட கல்யாணம் பத்தி பேசுறீங்க? நாங்க என்ன ஏமாத்திட்டோம்? நடந்த எல்லாமே உங்களுக்கே நல்லாத் தெரியும்.
நாங்க இங்க உங்களுக்காகத் தான் திரும்பியே வந்தோம். வந்ததுக்கு அப்புறமும் உங்க கூட தான் நானும் டாக்ரரைப் பார்க்க வந்தேன். இதுல ஏமாத்த என்ன இருக்கு?”
இதுவரை பெரிதாக தன்னிடம் கேள்வி கேட்காத வேதா இன்று கேட்கவும் சாகரிக்கு கோபம் எல்லை மீறியது.
“ஏன் உனக்கு எதுவும் தெரியாது? உன் தம்பி ஆனந்தியை லவ் பண்றான்னு? புதுசா தெரியாத மாதிரியே கேட்குற?”
தன் தம்பி காதலிப்பதும், அதிலும் ஆனந்தியை விரும்புவது என எல்லாமே வேதாவுக்குக் கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும் அவளின் கோபமெல்லாம் அவள் விமர்சிக்கப்பட்டதில் இருந்தது.
“அத்தை எனக்கு இதெல்லாம் பத்தி எதுவும் தெரியாது. அப்படியே அவங்களுக்குள்ள விருப்பம் இருந்தாலும் அதில தப்பு இருக்க மாதிரி எனக்கு ஒன்னும் தோணல.
ஆனா இதுக்கும் என் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு குழந்தை இல்லன்னு சொன்னது கூட பரவா இல்ல, ஆனா உமாவோட குழந்தை எல்லாம் ஏன் பேசுறீங்க?”
வேதாவின் கோபமெல்லாம் பொங்கி வரத் தொடங்கியது.
“வேதா, அக்காவும் நானும் ஆனந்தி கல்யாணம் சம்பந்தமா பேசீட்டு இருக்கோம். நீ உன்னைப் பத்தி பேசினதை மட்டும் சொல்லாத.” என்றார் சாரதா.
“நீங்க அதை மட்டும் பேசினா நான் குறுக்க வந்திருக்க மாட்டேன் அத்தை. ஆனா என் தம்பி கல்யாணத்துக்கும் எனக்குக் குழந்தை இல்லாததுக்கும் என்ன சம்பந்தம்ன்னு பேசிக்கிட்டீங்க?” மனதில் கோபம் கொழுந்து விட்டெறிந்தாலும் அமைதியாகக் கேட்டாள் வேதா.
“அத்தை நான் ஒட்டுக் கேட்க நீங்க ரெண்டு பெரும் தனியா பேசீட்டு இருக்கலையே? நீங்க எல்லோரும் வர்ற ஹால்ல உட்கார்ந்து தானே பேசிக்கிட்டு இருக்கீங்க?
நான் கேட்டது நாங்க ஏமாத்திட்டோம்ன்னு சொன்னீங்களே அதைத் தான்?”
அப்போதே குரல் உடையத் தொடங்கியது வேதாவிற்கு. இவ்வளவு நாளும் சாகரி பேசுவார் என்றாலும் என்றும் இது போல நேரடியாக ஒரு நாளும் குறை சொல்லியதில்லை.
வேதாவால் இன்று அவர் பேசிக் கேட்டதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
“ஆமா கல்யாணம் பண்ணி வருஷம் நாலு ஆச்சு. இன்னும் பேரன் பேத்தி இல்லன்னா எங்களுக்கு நாலும் யோசிக்கத்தான் தோணும். நான் சொன்னதுல ஒன்னும் பொய் இல்லையே. உங்க வீட்டுல இருக்கதைத் தானே சொன்னேன்.”
அவரின் பேச்சு சத்தம் அதிகரிக்க அறையிலிருந்து வெளியில் வந்தார் அருணாச்சலம்.
“என்னம்மா சத்தம்? வேதா என்னாச்சு?”
“இன்னும் என்ன ஆகணும்? உங்க மருமக நாங்க பேசிகிட்டு இருந்தா சண்டைக்கு வர்றா?”
தான் பேசியவைகளை எல்லாம் சாகரி சொல்ல, அருணாச்சலத்திற்கும் அவர் பேசியவை அதிகப்படி என விளங்கியது.
“முதல்ல இதெல்லாம் என்ன பேச்சு சாகரி. ஏமாத்திட்டாங்கன்னு. அமைதியா இரு. இதுக்கு ஏன்மா நீ கவலை படற? நீ உள்ள போம்மா.” என்றார் ஆதரவாக.
“இல்லை மாமா. இவ்வளவு நாளும் அத்தை என்ன பேசினாலும் நானும் அமைதியா போயிடுவேன். ஆனா இன்னைக்கு அதிகம் பேசிட்டாங்க. அவங்க பொண்ணோட கல்யாணம். அது அவங்க இஷ்டம்.
ஆனா என் தம்பியைப் பத்தி பேசும் போது அவனை மட்டும் பேசணும். இதுல நான் எங்க இருந்து வந்தேன். இப்படி எல்லாம் யோசிச்சுகிட்டு இவங்க என் தம்பிக்கு ஆனந்தியைக் கல்யாணம் பண்ணி குடுக்க வேண்டாம் மாமா.
கண்டிப்பா எங்களுக்கும் இந்த சம்பந்தத்துல விருப்பம் இல்ல. நான் ஜீவா கிட்ட பேசுறேன் மாமா.”
“அமைதியா இரும்மா. இந்த பிரச்சனையில் நீ ஏன்மா வருத்தப் படற. இதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ விடுமா.”
“ஆமா அவ நம்மகிட்டே இப்படி பேசுறா. இந்த கல்யாணம் நடக்குமுன்னு நீங்க அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசுறீங்க?” மேலும் சத்தமாக சண்டையிடும் குரலில் பேசினார் சாகரி.
“சாகரி, இந்த பேச்சை இதோட விடுங்க. நீங்க யாரும் இந்த கல்யாணப் பேச்சு இனி பேசிக் கூடாது. சாரதா, நீ இதை இதோட விடு. இனி நான் பார்த்துக்கிறேன்.” அவரின் குரலில் இருந்த கண்டிப்பு பெண்களுக்கு இனி தாங்கள் மேலும் இது பற்றி பேச முடியாது என விளக்கியது.
அத்துடன் பேச்சுக்கள் முடிந்து மதிய உணவுக்குப் பிறகு தனதறைக்கு வந்தாலும் வேதாவின் மனதில் கோவமும் அழுகையும் சோகமும் சம அளவு போட்டியிட்டது.
அவளின் நிம்மதிக்காக இல்லாவிடினும் தம்பியை பற்றித் தெரிந்து கொள்ளத் தன் அம்மா வீடு செல்ல முடிவெடுத்தாள்.
அர்ஜுனுக்கு அழைத்தவள் இங்கு நடந்தவைகள் எதையும் சொல்லாமல், தான் அம்மா வீட்டுக்கு இன்றிரவுக்கு செல்வதாக மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டாள்.