“ஆமா இப்பெல்லாம் எல்லா இடத்துலயும் இந்தளவு செஞ்சாத்தான் மரியாதையா இருக்கு. வேதாக்கும் நாங்க எல்லாம் கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வைச்சுட்டோம். கல்யாண நேரத்துல கஷ்ட்டப்பட வேண்டாம் பாருங்க.” என்றார் சீதா
“அர்ஜுன் அமெரிக்காவுல இருந்து வரவும், நாங்க ஜோசியர் கிட்ட கேட்டோம். அவங்கதான் சொன்னாங்க, சீக்கிரம் கல்யாணத்துக்குப் பார்க்கச் சொல்லி. அதான் நாளை வீணாக்க வேண்டாமேன்னு என் பொண்ணும் இருந்தா, அவளையும் கூட்டிகிட்டே வந்தாச்சு. அவளும் பார்த்துட்டுப் போய்ட்டா அடுத்து ஜோசியரப் பார்த்து நாள் குறிக்க சரியாய் இருக்கும்.”
“அர்ஜுன் இன்னைக்கு முக்கியமான வேலைன்னு சொல்லிட்டான், இல்லைன்னா நேர்லயே வரச் சொல்லிருக்கலாம். அவன் போட்டோ கொண்டு வந்தோம். இந்தாங்க” என்று புகைப்படத்தை சீதாவிடம் கொடுத்தார். சீதா அதை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தார்.
சாகரியின் பேச்சுக்கள் எல்லாம் சமுதாயத்தில் தான் கண்ட பல மாமியார்களின் வண்ணங்களை அள்ளித் தெளிக்க, அம்மாடி நீங்க சாகரி இல்ல சரியான ‘சாகடி’ என மனதை நீண்ட நெடிய பெருமூச்சுடன் திடப்படுத்திக் கொண்டாள் வேதா.
மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பில் இவைதான் நிதர்சனம் என்று அறிந்த சீதாவும் வேணியும் தொடர்ந்து அவருடன் பேசியபடி இருந்தனர்.
ஸ்ரீனிவாசன் தன் மகளை அருணாச்சலத்திற்கு அறிமுகப்படுத்த அழைத்துச் செல்ல வர, அனைவரும் அறையைவிட்டு முன் கூடத்திற்கு வந்தனர். அறிமுகம் முடிய வேதாவும் வேணியும் அறைக்குத் திரும்பி இருந்தனர்.
அனைவரின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சியே, திருமணத்திற்கு சம்மதமா? என்ற கேள்வியை அர்த்தமற்றதாக ஆக்கியது. இரு குடும்பங்களும் தங்களின் திருமண வழக்கங்களையும் குடும்ப உறவுகள், இனிவரும் நிகழ்வுகள் பற்றியும் விவாதித்தனர்.
இடையில் அர்ஜுன் பற்றிய பேச்சுக்கள் வர அவனது அமெரிக்கா பயணத்தின் புகைப்படங்களை பெருமையுடன் அவன் குடும்பத்தினர் வேதாவின் பெற்றோருக்குக் காட்டி மகிழ்ந்தனர்.
வேதா மட்டும் அவனைக் காண முடியாத ஏக்கத்துடன், வெளியில் நடக்கும் இவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டு மனதினில் புதுப் புது படபடப்புகளும் தயக்கங்களும் தோன்ற அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, சோர்ந்த தோற்றத்தில் வந்து நின்றிருந்தான் ஜீவா.
கதவைத் திறந்த சீதா, ஜீவா உள்ளே வரவும் “இவன் எங்க பையன், ஜீவானந்த். ஜீவா அப்பா காலையில் வேதாவுக்கு ஒரு வரன் சொன்னாரே அர்ஜுன்னு அவங்க குடும்பம். பார்க்க வந்திருக்காங்கப்பா.” என்றார்.
ஜீவானந்த் என்ற பெயர் உச்சரிக்கப் பட்ட அந்த கணம் ஆனந்தி நிமிர்ந்து ஒருமுறை அவனைப் பார்த்தாள். கல்லூரியின் பெயர் இடப்பட்ட ஜெர்சி, வியர்வையில் குளித்துக் காய்ந்த முகம். ஆனாலும் வசீகர விழிகள் என தன் முன் நின்றவனைக் கண்டதும் சிறு வெட்கம்.
‘ஹ்ம்ம் நீங்களும் ஆனந்த் தானா? ஆனந்தமா இருக்கிறதே.‘ மனம் அவன் பெயரைச் சொல்லிப் பார்க்கச் சட்டென அதிர்ந்தாள். ‘இந்த தேவையில்லாத வேலை எல்லாம் நமக்கு எதற்கு. அம்மாவிற்குத் தெரிந்தால் என்ன ஆகும்? பார்க்கலாம், பார்க்க மட்டுமே செய்யலாம். அந்த ஆனந்தத்துடன் இந்த ஆனந்தை தள்ளி நிறுத்திவிட வேண்டும்‘ என்று உறுதி எடுத்துக் கொண்டாள் ஆனந்தி.
இந்த வண்ணங்கள் எல்லாம் அவர்களின் வாழ்க்கையை வசந்தமாக்கும் பக்கங்களும் அல்லவா?
ஆனந்தியின் எண்ணமெல்லாம் இதில் சுழல மற்ற அனைவரின் பார்வையும் அவன் மேல் பதிய சிறு புன்னகையுடன் ‘வாங்க‘ என்ற வரவேற்புடன்நின்றிருந்தான்.
அவனின் படிப்பு விளையாட்டில் அவனின் விருப்பம் பற்றிக் கேட்ட அருணாச்சலம் அவனுக்கும் அர்ஜுனின் புகைப்படத்தைக் காட்டினார். பார்த்ததும் ஜீவாவிற்கும் பிடித்துவிட மகிழ்ச்சியுடனே தனதறைக்குச் சென்றான்ஜீவா.
மீண்டும் இவர்களின் பேச்சுத் தொடங்கிசித்திரை கடைசியில் திருமணம்முதல் நாள் நிச்சயம் என்ற முடிவுடன் அர்ஜுன் குடும்பத்தினர் விடை பெற்றிருந்தனர்.
அவர்கள் சென்றதும் அறையிலிருந்து வெளியே வந்த வேதாவிற்கும் ஜீவாவிற்கும் ஸ்ரீனிவாசன் நடந்த பேச்சு வார்த்தைகளை எல்லாம் சொன்னார்.
“ம்மா நான் புடவையை மாத்தணும்.” என்று சொல்லி வேகமாக தனதறைக் கதவைக் கொக்கியிட்டுவிட்டு வந்து மெத்தையில் அமர்ந்தாள் வேதா. இது தான் அவள் மனம் படபடக்க, அவள் தேடிய அந்த நொடி, தனிமையில் சில நிமிடங்கள். கைபேசியை வேகமாகத் திறந்து முகநூலில் ஸ்ரீயின் நண்பர்கள் பட்டியலில் தேடினாள்.
இதோ இதோ கண்கள் அந்தப் பெயரை கண்டும் கொண்டன. “அர்ஜுன் அருணாச்சலம்” மனம் ஒரு முறை சொல்லிப் பார்க்க, அதன் சுவையில் இன்பம் ஊற்றெடுக்க உச்சரித்தாள், ராம நாமம்போல் மீண்டும் மீண்டும். இந்த நொடி இனிதாய்த் தொடங்கியது வேதாவின் அர்ஜுனன் நாமம். அவனின் பெயர் மெல்ல மெல்ல அவளின் உடல் முழுதும் பரவி உள்ளமெங்கும் நிறைந்தது. அர்ஜுன் இவளின் மனதுள் இவளுக்கு மட்டும் ‘அஜூவாக’ மாறிப்போனான்.
கைகள் தானாய் அவனின் பெயரைச் சொடுக்கி அவனின் முகநூல் கணக்கைத் திறக்கஐயோ பாவம். கடலும் வானும் இணையும் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறச் சட்டையும் நீலநிற ஜீன்சும் அணிந்து மகிழுந்தின் மேல் சாய்ந்து இரு கைகளையும் கட்டி ஒரு கால் சிறிது மடக்கி மறு காலை நீட்டிப் படுத்திருந்தான் அவன். அவளின் அஜூ. ஆனால் இந்தப் படம் அவனின் கழுத்து வரை மட்டுமே இருந்தது. சுயவிவரப் படமாய் அவனின் முகமில்லாப் புகைப்படம் மட்டுமே.
கண்களின் ஏமாற்றம் மனதையும் வாட்ட அட்டைப் படத்தைப் பார்வையிட்டாள். அதில் சிறு சிறு குவியலாய் வெவ்வேறு விதமான சர்க்கரைக் குவியல்கள். ‘என்ன விதமான புகைப்படங்கள் இவை?’ என எண்ணம் தோன்ற, மனம் ஏமாற்றத்தில் சுணங்கியது. வேறு படங்களைக் காணவும் அவளுக்கு அனுமதி இல்லை. நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியாம்.
அவசர அவசரமாக வந்தும் தான் எண்ணியது கிடைக்காத வருத்தம் மேலோங்கி நிற்கஅவனின் கணக்கைப் பார்த்திருந்தவளின் கண்களில் பட்டது, அவன் சில நிமிடங்களுக்கு முன்னேதான் தன் புகைப்படங்களை மாற்றினான் எனும் தகவல்.
மெல்ல யோசிக்க யோசிக்க வேதாவிற்கு விளங்கியது. தன் கண்கள் அவனைக் காணத்தான் தடை செய்திருக்கிறான் என்று. மென்னகை மீண்டது. ‘இன்னும் எத்தனை நிமிடம் என்னிடம் முகம் காட்டாமல் உன்னால் மறைந்திருக்க முடியும் அஜூ?’ என்றவளின் பார்வையில் இப்போது அவனின் அம்மா கொடுத்த புகைப்படம். வேகமாய் உறைக்குள் கை விட்டு எடுத்தவள் கண்டது சிரித்த முகமாய் இருந்த ஸ்ரீ விஜயாவின் புகைப்படத்தை. ஆக இந்த நாடகம் எல்லாமே இவன் திட்டங்கள் தான் போல. அஜ்ஜு … அஜ்ஜு என மனம் மயங்கித்தான் போனாள் அவனின் குறும்பில்.
வீட்டினர் எல்லாம் அவனைப் பார்த்திருக்க சீதா அந்தப் புகைப்படத்தைப் பற்றி மொத்தமாய் மறந்திருந்தார். வேதாவும் இனி இந்தப் புகைப்படம் தன் அலமாரியில் இருக்கட்டும் என அதை பத்திரமாய் வைத்துவிட்டாள்.
வேதா உடை மாற்றி வெளியே வர, வீட்டில் கல்யாணப் பேச்சைத் தொடங்கி இருந்தனர். அப்பாவும் அம்மாவும் மாற்றி மாற்றி தாத்தா மற்றும் பாட்டியிடம் விவரங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
ஜீவா அறையிலிருந்து வந்த தன் அக்காவைப் பார்த்தான். வெட்கம் வந்து முன் நிற்க அவள் பார்வையை வேறுபுறம் திருப்ப,
“ஐயோ, வேதா வெட்கமுன்னு சொல்லிடாத, நம்புகிற மாதிரி இல்ல.”
“டேய் போ டா”
“என்ன வேதா காலையில் நான்தான் யோசித்து சொல்லுவேன்னு சொன்ன, நான் காலேஜில் இருந்து வருகிறதுக்குள்ள கல்யாணம் பேசியே முடுச்சுட்டிங்க?”
வேதாவிற்கு அவளின் அஜு தொடங்கிய முகம் காட்டாத சின்னங்சிறு நாடகம் நினைவில் வர மலர்ந்த புன்னகையுடன் “எல்லாருக்கும் பிடிச்சுருக்கு தானே டா, அப்புறம் என்ன?” என்றாள்.
அத்துடன் விட்டுவிடுவானா ஜீவா “அம்மா நமக்காகத்தான் பாவம் வேதா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்றாம்மா. நீங்க இவங்களை வேண்டாம்னு சொல்லிடுங்க.நாம வேதாவுக்கு பிடித்த இடமா பார்க்கலாம்” என்று வம்பு வளர்த்தான்.
“அம்மா” என்று வேதா அதிர, “விடு டா ஜீவா அவ விருப்பம் அவ முகத்திலேயே தெரியுதே.” எனச் சமாதானம் செய்தார்.
இந்தக் கலகலப்புடன் வருங்கால மகிழ்ச்சியான தருணங்களின் நினைவுகளுடன் இந்த நாள் இனிமையாய் முடிந்தது வேதாவின் இல்லத்தில்.
இன்பம் என்றுமே இன்பமாய் இருப்பதில்லையே? இன்பமும் முடிவில் துன்பத்தைத் தரும். ஆம் கண்ணீருடன் மனமும் கசிய குற்றம் செய்தவளாய் அனைவரின் முன்னும் நின்றாள் அர்ஜுனின் வேதா. பிரிவின் துன்பமும் அவரவர் எண்ணங்களால் இன்பமாகலாம். ஆம், இன்பமே சுவாசமாய் வேதாவின் அர்ஜுன். இனி சந்திப்புகளும் சங்கடங்களும் அவை தரும் சந்தோஷங்களும் தொடரும்.
கண்ணன் வந்து நேரில் என்னைச்
சேரும் நாளில் என்னுயிரில் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ
இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும்
நான் தானா நல் முத்தே வா வா ஓஹோ ஓஹோ ஹோ
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும்
மாலை கனவுகள் தான் கை கூடாதோ
(திரைப்படம்: சிறைச்சாலை – பாடல்: மன்னன் கூரைச் சேலை)