சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வேதா மனதின் ரணங்களை எல்லாம் இன்றுவரை தன் தாயிடம் கூட பெரும்பாலும் பகிர்வதில்லை. தேவை இல்லாத சங்கடம் தாய்க்குத் தேவை இல்லை என்பதை விடக் கணவனுடனான தனது உறவு என்றும் சிறப்பாக இருக்க மற்ற குறைகளை வேதா என்றும் குறைகளாகக் கண்டதில்லை.
ஆனால் இன்று தன் மன வேதனை மட்டுமில்லாது குடும்பத்தைப் பற்றியும் பேச மாமியாரின் மீதான மதிப்புக்கள் எல்லாம் மனதில் மறைந்து அழிந்து போகும் நிலையை எட்டியது.
இதற்கு மேலும் தன் மனம் இதே கொதிநிலையில் இருப்பது தனக்கும் தன் குடும்பத்திற்கும் நல்லதில்லை என்பதற்காகவே தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.
தாய் அறியா சூல் எது? வேதாவின் வாடிய முகமே அவளின் உள்ளப் போராட்டங்களை எடுத்துச் சொல்ல சீதா மகளிடம் அனைத்தையும் கேட்டறிந்தார்.
சாகரி தாங்கள் ‘ஏமாற்றியதாக’ சொல்லிய சொற்கள் மட்டும் ஏனோ வேதாவால் தன் தாயிடம் கூட பகிர முடியவில்லை.
மற்றபடி அதன் சாராம்சங்களைச் சொல்லி இருந்தாள்.
அனைத்தையும் மகள் சொல்லிக் கேட்டாலும் இன்னும் சீதாவிற்கு தன் மகன் காதலிக்கிறான் என்பதே நம்பும்படி இல்லை.
“ஏன் வேதா நிஜமாவே நம்ம ஜீவா லவ் பன்றானா டி? அவனுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்கு? என்னால இன்னும் நம்பவே முடியல. காலைலே பேச வந்தான். அப்புறம் முக்கியமான விஷயம் பேசணும்மா. சாயந்தரம் பேசலாம்னு சொல்லீட்டு போனான். நான் வழக்கம் போல கிரிக்கெட்க்கு எங்கோ போகப் போறான்னு நினச்சேன் வேதா. இப்படி யோசிக்கவே இல்லை இவனைப் பத்தி.”
“அம்மா இதுல பொய் சொல்ல என்ன இருக்கும்மா? அதான் இன்னைக்கு சொன்னாங்களே நல்லா விளக்கமா.”
“ஆனா உன் மாமியார் இந்த அளவுக்குப் பேசுவாங்கன்னு எனக்குத் தெரியல வேதா. என்கிட்டயும் இப்பவெல்லாம் கொஞ்சம் குத்தலா பேசுவாங்க. ஆனா இவனால இப்படி குடும்பத்துல சண்டை வர்ற அளவு பேசுவாங்கன்னு நினைக்கல.”
“விடுங்கம்மா. உங்க மாப்பிள்ளையும் சில சமயம் கோவப் படுவாங்க அவங்க மேல. ஆனா நானும் அத்தை பாவம் ஏதோ கவலைல அப்படி பேசுறாங்கன்னு பொருத்துக்குவேன். ஆனா இன்னைக்கு, ” சொல்லும் போதே கண்ணீர் பெருகி அழுகையாக மாறியது.
சிறு கேவலில் தொடங்கி தன் அன்னையின் இறுகிய அணைப்பில் மனதின் பாரமெல்லாம் இறங்கும் அளவு வெடித்துச் சிதறி அழுது கரைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மீட்டிருந்தாள்.
“வேதா, வேற எதுவும் ரொம்ப பிரச்சனையாடா? அம்மா, அப்பா வந்து பேசட்டுமா? மாப்பிள்ளை என்னடா சொன்னாங்க?”
ஒரு அம்மாவாக சீதாவிற்கு மகளின் அழுகை கவலையையும் ஒரு பதட்டத்தையும் கொடுக்க வேதாவிடமே புலம்பத் தொடங்கினார்.
அவரின் மனநிலையைக் கண்டவுடன் வேதாவிற்கு தான் அவர் முன் உடைந்து அழுத்திருக்கக் கூடாதோ எனத் தோன்ற இப்பொழுது அவளே அவரைத் தேற்றத் தொடங்கினாள்.
“அம்மா, அதெல்லாம் ஒன்னும் நீங்க நினைக்கிற அளவு பெரிய பிரச்சனை எல்லாம் இல்லம்மா. பேசிக்கலாம் விடுங்க. நீங்க இதையே யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதிங்கம்மா.”
“பிரச்சனை பெருசோ சின்னமோ ஆனா கல்யாணம் ஆனா பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு வந்து அழுகும் போது அதை சாதாரணமா எந்த வீட்லயும் எடுத்துக்க முடியாது வேதா. அது எல்லா அம்மா அப்பாவுக்கும் கவலையத்தான் கொடுக்கும். நீ இதை சமாளிச்சிருவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனாலும் பொண்ணுக்கு அம்மாவா எனக்கு ஒரு பயம். அவ்வளவு தான்.”
“ஹ்ம்ம் இன்றைக்குச் சீக்கிரம் வந்துருவேன்னு சொல்லீட்டுத் தான் போனான். பேசுவோம்.” என்று பேசியபடி இருவரும் ஜீவாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர்.
அர்ஜுனுக்கு வேதா வீட்டின் பிரச்சனை எதுவும் சொல்லாமல் தன் அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாலும் அவனுக்கு அவன் தந்தை வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தார். அவனுக்கும் அவன் அம்மாவின் பேச்சும் அவர் நடந்து கொண்ட விதமும் கோபத்தைக் கொடுக்க தந்தையுடன் பேசி சில முடிவுகளை எடுத்துக் கொண்டான்.
மறக்காமல் ஜீவாவிற்கும் அழைத்துப் பேசியவன் தன் வீட்டில் நடந்தவற்றை அவனுக்குத் தெரிவித்தான். மேலும் வேதா அவர்கள் வீட்டில் இருப்பதால் தானும் இரவு அங்கு வருவதாக ஜீவாவிடம் கூறினான்.
ஜீவா நடந்த அனைத்தையும் கேட்டதும், தங்களின் காதல் கல்யாணம் எல்லாம் எவ்வளவு எளிது என்று இது நாள் வரை அவன் எண்ணி இருக்க எங்கிருந்தோ பிரச்சனைகள் வருவது மட்டுமில்லாமல் அதில் தன் அக்காவிற்கும் சங்கடங்கள் வரக் கொஞ்சம் துவண்டு போனான்.
ஆனாலும் அவனுள் இருக்கும் வீரனுக்கான பிடிவாதம் தலை தூக்க இந்தப் பிரச்சனைகளைக் கடக்கத் தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டில் அவனது அப்பாவும் வந்திருக்க உடை மாற்றி கூடத்திற்கு வர அவன் காதல் விவகாரம் மெல்ல விவாதத்திற்கு வந்தது.
“அப்பா எனக்கு ஆனந்தியை பிடிச்சிருக்கு. ஆனா அதை எதுக்காக அவங்க வேதா லைப் கூட சேர்த்துப் பேசுறாங்க. என் மேல குறை சொன்ன பரவா இல்ல. அதென்ன தேவை இல்லாத பேச்சு.”
“நீ தேவை இல்லாத வேலை பார்க்கவும் தான் இப்ப அவங்க எல்லாம் இப்படிப் பேசுறாங்க. இதெல்லாம் அவசியமா ஜீவா? இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையைப் பாரு.
அம்மா அப்பாவுக்குத் தெரியும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க. உன்னால இன்னைக்கு அவளும் அழுதுகிட்டு வந்து நிக்கிறா. ” அம்மாவாக மகனின் காதலை விட மகளின் திருமண வாழ்க்கையில் நிம்மதி அவசியம் என எண்ணிப் பேசினார் சீதா.
“சீதா, மூணு பெரும் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இந்த கல்யாணப் பேச்சை விடுங்க. ஆளாளுக்கு மனசுல ஒரு கோவமும் வேகமும் இருக்கும் போது பேசினா நம்ம வீட்டிலும் பிரச்சனை தான் வரும். முடிவு வராது. ரெண்டு நாள் அமைதியா விடுங்க. பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணலாம்.
முதல்ல ராத்திரிக்கு மாப்பிள்ளையும் வரேன்னு எனக்கு போன்ல சொல்லிருக்காரு. அவருக்கு சாப்பாடு என்னனு பாருங்க. இதெல்லாம் பேசிப் பேசி நீயும் உன் உடம்பக் கெடுத்துக்காம இரு.” அனைவரும் தன் உணர்வுகளின் உச்சத்தில் இருக்க இன்று இதைப் பற்றிப் பேசுவது பிள்ளைகள் இருவருக்கும் நல்லதில்லை என் உணர்ந்து ஸ்ரீநிவாசன் இந்தப் பேச்சை இன்று நிறுத்தி இருந்தார்.
ஸ்ரீநிவாசன் சுமுகமாக இந்தத் திருமணப் பேச்சை நடத்த எண்ணினாலும் ஆனந்தியின் வருகையால் அவர்கள் அனைவரின் மனநிலையும் ஆட்டம் கண்டது.
பெண்கள் இரவு உணவுக்கான வேளையில் இருக்க அர்ஜுன் வந்ததவன் ஜீவா மற்றும் மாமனாருடன் பொதுவான பேச்சுவார்த்தைகளோடு கூடத்தில் அமர்ந்திருந்தான்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க ஜீவா எழுந்து செல்ல அங்கு வெளியே தயக்கத்துடன் ஆனந்தி நின்றிருந்தாள்.
“ஆனந்தி” அவளைக் கண்ட அதிர்ச்சியில் ஜீவா ஒரு நொடி உறைந்தாலும் அவளை உள்ளே அழைத்து வந்திருந்தான்.
“அண்ணா, “அர்ஜுனைக் கண்டதும் ஆனந்தி முதலில் தயங்கினாலும் அவனும் இருக்க இன்னும் தைரியம் வர மனதில் இருப்பதை எல்லாம் அனைவருக்கும் சொல்லத் தொடங்கினாள்.
“அம்மா முடியவே முடியாதுன்னு சொல்லீட்டாங்க. அப்பா ஒத்துக்கிட்டாலும் நான் ஒதுக்க மாட்டேன். என்னை மீறி இந்தக் கல்யாணம் எப்படி நடக்கும்ன்னு கேக்குறாங்க அண்ணா.” அழுகையும் கண்ணீருமாக அண்ணனிடம் சொல்லத் தொடங்கினாள்.
“சித்திக்கு என்னவாம் கோவம் ஜீவா மேல? அதுவும் அப்பா பேசினதுக்கு அப்புறமும்?”
“அண்ணா அவங்க பார்த்த மாப்பிள்ளை பெரிய பணக்காரப் பையனாம். அது மட்டும் இல்லாம உங்களையும் அண்ணியையும் வச்சுப் பேசுறாங்கண்ணா. குழந்தை .. குழந்தை ..” என ஏதோ சொல்லத் தயங்கி வேதாவைப் பார்க்க அவளோ “என்னைப் பத்தி தானே, சும்மா சொல்லுடா என்ன சொன்னாங்கன்னு. எனக்கும் தெரிஞ்சது தான். அம்மா அப்பாவுக்கும் தெரியும். நீ சொல்ல நினைக்கிறத சொல்லு ஆனந்தி.” என்று சொல்லத் தூண்டினாள்.
“குழந்தை ஊனமா தான் பிறக்கும். அதையும் அப்புறம் நீ தான் பார்க்கணும். உன்னைப் பெத்ததுக்கு நானும் சேர்ந்து கஷ்டப் படணும்ன்னு ஏதேதோ பேசுறாங்கண்ணி. எனக்கு என்ன செய்யணும்ன்னு தெரியல. அதான் இன்னைக்கு என் ஃப்ரெண்ட் பிறந்த நாளுக்குப் போவேன்னு முன்னாடியே சொல்லி இருந்தேன். ஆனா இந்த நிலமைல என்னால அங்க போக முடியல. ஆனந்த்கு கால் பண்ணினேன் அவங்களும் எடுக்கல. அதான் நேர இங்கயே வந்துட்டேன்.” ஒரு வழியாக மனதில் இருப்பதெல்லாம் அனைவரிடமும் சொல்லி முடித்தாள்.
அவள் சொல்லச் சொல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. அதிகம் உடைந்து போனது வேதா தான். இந்த சிறு பெண்ணிடம் என்ன சொல்வது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
மாமியாரிடம் இந்த கல்யாணம் நடக்காது, நான் சொன்னால் என் தம்பி மீற மாட்டான் என்றெல்லாம் பேசி வந்திருந்தாள்.
ஆனால் ஆனந்தியையும் அவளின் மனநிலையும் பார்த்த பின்பு இவளின் முடிவு சரியா எனவும் யோசிக்கத் தொடங்கினாள். அனைத்திற்கும் மேலாக தன் மாமியார் மற்றும் சின்ன மாமியாரின் பேச்சும் நஞ்சாய் நீங்காத கசப்பாய் மனதை நிறைத்தது.
அனைவரும் அவரவர் எண்ணங்களில் இருக்க ஸ்ரீவாசன் பேசத் தொடங்கினார்.
“ஆனந்தி நான் சொல்றதக் கேளும்மா. உங்க கல்யாண விஷயம் நாங்க பெரியவங்க பேசி முடிவு செய்யிறோம். அதுவரை நீ கொஞ்சம் அமைதியா இரும்மா.
இப்படி உங்க அம்மாவுக்குத் தெரியுமா இங்க வந்தன்னு தெரிஞ்சா அவங்களுக்கு இன்னும் எங்க மேல எல்லாம் வெறுப்பு தான் வளரும்.
இப்ப நீ வீட்டுக்கு கிளம்பு. இன்னும் ஒரு பத்து நாள் போகட்டும். பேசலாம்.” என்று சொல்லி சீதாவின் முகம் பார்க்க, அங்கு சீதாவுக்கும் ஆனந்தியின் வருகையால் முடிவெடுப்பதில் குழப்பம் தான் தோன்றியது.
“ஆனந்தி கவனமா வீட்டுக்கு கிளம்பும்மா. மிச்சமெல்லாம் நாங்க பார்த்துகிறோம்.” என்று பேச்சை முடித்து ஆனந்தியைக் கிளப்ப அர்ஜுனும் உடன் சென்றான்.
அவர்கள் வெளியில் செல்வதைப் பார்த்த ஜீவா விரைந்து சென்று அர்ஜுனிடம், “அத்தான் ஒரு பைவ் மினிட்ஸ் தனியா பேசிக்கவா?” வாசலில் நின்றவர்களிடம் கேட்க “ஹ்ம்ம், தோட்டத்துல நின்னு பேசு ஜீவா.” அவனிடம் சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.
ஜீவா ஆனந்தியிடம் “அடியே, உனக்கு இவ்வளவு தைரியமா டி. வீட்டுக்கே வந்துட்ட. ஆனா இனி இப்படி எல்லாம் ஒப்பாரி வைக்காத யார் முன்னாடியும். அப்பா சொன்னது போல இன்னும் பத்து நாள் பொறுத்துக்க. கண்டிப்பா பேசி சரி பண்ணலாம் உங்க அம்மாவை. அத்தை ரெண்டு பேரும் ஆனா அதிகம் பேசிட்டாங்க.”
“பேசினதுக்கேவா? எனக்கு ரெண்டு அரை வேற விட்டாங்க மதியம்.” சொல்லும் போதே மீண்டும் கண்கள் கலங்க, கண்களைத் துடைத்துக் கொண்டே, “வேதா அண்ணியும் கோவத்துல இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு வந்திருக்காங்க ஆனந்த். எனக்கு அது தான் ரொம்ப பயமா இருக்கு. உங்க அக்காவுக்காக நீங்க என்னை விட்டிட மாட்டிங்க தானே?”
“அடிக்க வேற செஞ்சாங்களா? ஹ்ம்ம் நான் பேசிக்கிறேன். வேதா அப்படி எல்லாம் நமக்கு செய்ய மாட்டா. அப்படியே அவ சொன்னாலும் என்னால இந்த பாம்புக்குட்டி அழகியைத் தவிர யாரையும் நினைக்கக் கூட முடியாது. என் மேல நம்பிக்கை இருக்குல்ல. அப்ப மத்தவங்க பேசுறதெல்லாம் காதுல வாங்காத. எல்லாம் சரி பண்ணலாம்.” நம்பிக்கையாகப் பேசி அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
ஒருவழியாக அனைவரும் ஜீவாவின் விஷயத்தை தற்போதைக்கு ஒதுக்கி உண்டு உறங்க வந்தனர்.