உண்டு முடித்து தனதறைக்கு வந்த வேதாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. இன்றைய நாள் போல் தான் அதிகமாகக் காயப் படும் நாட்கள் வரும் என என்றும் அவள் நினைத்தது கூட இல்லை.
அவளின் மனம் அறிந்து அர்ஜுன் அவளிடம் பேசத் தொடங்கினான்.
“சக்கரக் கட்டிக்கு என்ன டா யோசனை. இன்னுமா இன்னைக்கு நடந்ததெல்லாம் யோசிக்கிற?”
“உங்களுக்குத் தெரியுமா எல்லாம்? அத்தை சொன்னாங்களா? அஜூ இன்னைக்கு என்கிட்டே கொஞ்சம் அதிகம் பேசிட்டாங்கன்னு தான் நான் இங்க கிளம்பி வந்துட்டேன். அங்க இருந்தா இன்னும் என்னை மீறி நானும் அதிகமா எதுவும் பேசிடுவோம்ன்னு தோணிருச்சு அஜூ. சாரி.”
“சாரி எல்லாம் எதுக்கு? நான் அம்மா கிட்ட இன்னும் பேசல வேதா. ஆனா நீ வீட்டுல இருந்தது கிளம்பினதுக்கு அப்புறம் அப்பா தான் எனக்கு எல்லா விவரமும் சொன்னாங்க. அம்மா பேசினது எதுவும் சரி இல்லைன்னு எனக்கும் தெரியுது வேதா.
அவங்க உன் மேல உள்ள கோவத்துல ஜீவா கல்யாணத்தத் தடுக்கிறது எந்த விதத்திலும் ஞாயம் இல்ல.
ஆனா இதெல்லாம் அவங்க கிட்ட பேசினோம்ன்னா இன்னும் சண்டை தான் பெருசாகும்.”
“அப்போ அத்தை பேசினதெல்லாம் தெரிஞ்சும் வழக்கம் போல நீங்க எதுவும் கேட்கப் போறதில்லை அப்படித்தானே? என்னை தான் சமாதானப் படுத்தப் போறீங்க?” ஏனோ அவளின் கோவமெல்லாம் இப்போது அர்ஜுன் மேல் மாறியது.
தன் அம்மாவின் தவறு தெரிந்தும், என்றும் தன்னை மட்டுமே அர்ஜுன் சமாதானம் செய்வது அவளின் மனவேதனையை இன்னும் அதிகரிக்க, எதுவும் பேசாமல் கட்டிலில் படுத்து விட்டாள்.
அர்ஜூனுக்கும் அவனது தவறு கொஞ்சம் பிடிபடத்தான் செய்தது. வேதாவிடம் இது பற்றி மனம் விட்டுப் பேசியவன், ஒரு நாளும் தன் அன்னையிடம் தன் கோவத்தைக் வெளிக் காட்டியது இல்லை. அவரின் அதிகப் படியான பேச்சுக்களைத் தவிர்க்க முயன்றதும் இல்லை.
அவன் இருக்கும் நேரம் வரும் விவாதங்களில் தன் அதிருப்தியைக் காட்டியதோடு சரி. ஆனால் சாகரி இந்த அளவிற்கு வேதாவின் மனத்தைக் காயப் படுத்தக் கூடும் என அர்ஜுன் என்றும் எதிர்பார்த்திருக்க வில்லை.
இன்று நடந்தவற்றில் இருந்து இனி வேதாவை சமாதானப் படுத்த எண்ணித் தானே மீண்டும் பேசத் தொடங்கினான்.
கட்டிலில் அவளருகில் சென்று தானும் படுத்தவன் மெல்ல அவளை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டே “சக்கரை என்னைப் பாரேன். நான் உன்கிட்ட பேசணும் டா. உன் கோவமெல்லாம் என்னைக்கும் தப்பில்ல. நான் கொஞ்சம் பேசுறேன். கோவப்படாம கேளேன். ப்ளீஸ் என் தங்கமில்ல?”
“நான் தங்கமுமில்ல, தகரமுமில்ல. அஜூ முதல்ல தள்ளிப் போங்க. கழுத்தக் கிட்ட வந்து பேசுறீங்க. கூசுது. என்ன பேசணுமோ அதை அங்கிருந்தே பேசுங்க. எனக்குக் காது நல்லாக் கேட்கும்.” அவளின் குரலே அவள் கோவத்தின் அளவைக் காட்ட, எப்படி அவள் கோபம் குறைக்க என்று யோசனையிலேயே அர்ஜுன் தொடர்ந்து பேசத் தொடங்கினான்.
“வேதா நான் அப்பா கிட்ட சொல்லிட்டேன். அம்மா இப்படிப் பேசியது இனியும் என்னால பொறுத்துக்க முடியாதுன்னு. நம்ம கேம்பிரிட்ஜ் விட்டு வந்ததே நமக்கு இங்க நம்ம வீட்டில எல்லாரோடவும் சேர்ந்து இருக்க ஒரு சந்தோஷமான சூழ்நிலைக்காகத்தான்.
டாக்டர்ஸ் எல்லாம் சொன்ன மாதிரி குழந்தை உண்டாக நல்ல ஆரோக்கியமான உடம்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நல்ல ஆரோக்கியமான மனசும் முக்கியம்.
அங்க தனியா இருக்கும் பொது நம்மால பழைய விஷயங்களை மறந்து அதிலிருந்து வெளில வர முடியாமத் தான் இங்க நம்ம வீட்ல நம்ம குடும்பத்தோட இருக்கலாம்னு முடிவு பண்ணினோம். நானும் நீ சொன்னதுக்கு ஒத்துக்கிட்டு இங்க வந்தோம்.” அர்ஜுன் தொடர்ந்து பேசினாலும் வேதா பதில் ஏதும் சொல்லாமல் வெறுமனே எழுந்து அமர்ந்தவள் அவன் முகம் பார்த்து அவன் பேச்சை கவனிக்கலானாள்.
அர்ஜுனும் அவளுடன் எழுந்து அமர்ந்தவன் அவளின் கையைத் தன் கையுடன் கோர்த்தபடி தன் பேச்சைத் தொடர்ந்தான்.
“ஆனா அம்மா இப்படி உன்னைப் பேசிப் பேசியே இன்னும் இன்னும் உன்னைக் கவலைப் பட வைக்கிறது இனி என்னால பொறுத்துக்க முடியாது வேதா.
அதனால … ” பேச்சை நிறுத்தி அவளின் முகம் பார்த்தவன் “அதனால நம்ம தனியா வீடு பார்த்துக்கிறோம்ன்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன் டா.” என்று பேச்சை முடித்தான்.
“அஜூ, என்ன பண்ணி வச்சிருக்கீங்க. மாமா என்ன சொன்னாங்க? அத்தை மேல உள்ள கோவத்துக்கு ஏன் அஜூ மாமாவைக் கஷ்டப் படுத்தனும். ஹையோ உங்களோட. அத்தை கிட்ட உங்களால பேச முடியாதுன்னா அமைதியா இருங்க. ஆமா, அதுக்குத்தான் இன்னைக்கு இங்க வந்தீங்களா?”
“இல்லைல்ல, அது ஜீவாகிட்ட அவனுக்கு தேவைப் படும் போது சப்போர்ட் பன்றேன்னு சொல்லியிருந்தேனில்ல, அதுக்காகவும் தான் வந்தேன்.”
வேதாவின் அதிர்ந்த கேள்வியில் அர்ஜுன் ஜீவா காதலைப் பற்றியும் உளறி இருந்தான்.
அவனின் பதிலில் நிமிர்ந்து அமர்ந்தவள் “அஜூ அப்ப ஜீவா லவ் பண்ணுறது உங்களுக்கு முன்னாடியே தெரியும் இல்லையா? என்கிட்டக் கூட சொல்லக் கூடாத அளவுக்கு என் மேல உங்களுக்கெல்லாம் நம்பிக்கை .
ப்ளீஸ் இதுக்கு மேல இது எந்த விஷயமும் நம்ம இன்னைக்குப் பேச வேண்டாம் அஜூ. ப்ளீஸ் தூங்குங்க. கண்டிப்பா நம்ம தனியாப் போக நான் ஒத்துக்க மாட்டேன். உங்க அம்மா தப்புப் பண்ணினா நான் மாமாவையும் ஸ்ரீயையும் சேர்த்து தண்டிக்க முடியாது.
அதே போல இந்தக் கல்யாணம் நீங்க அம்மா அப்பா முடிவு பண்ணிக்குங்க. நான் இனித் தலையிட மாட்டேன்.”
கணவனின் மேல் நேரடியாக எந்தத் தவறுகளும் இல்லாத போதும் அவளின் உணர்வுகளை அவனிடத்தில் கொட்டி விட்டு வேதா உறங்கத் தொடங்கினாள்.
அர்ஜுனுக்கு உறக்கம் மறந்து இருக்க, வழக்கம் போல தமிழின் இனிமையில் வள்ளுவரின் வரிகளே நினைவுக்கு வர அந்தக் குறளைத் தேடி மீண்டும் வாசித்துப் பார்த்தான்.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து.
(ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.)
மனைவி அருகிலிருந்தும் அவனால் தீண்டக் கூட முடியாமல் அவள் விலகி இருக்க, தன்னையே நொந்தபடி அடுத்துத் தான் செய்ய வேண்டியவற்றை யோசிக்கத் தொடங்கினான்.
தன் மேலிருக்கும் தவறுகள் எல்லாம் வேதாவின் பேச்சால் ஓரளவு விளங்க இனி தன் தாயிடம் தான் பேச வேண்டிய அவசியம் அவனுக்கு விளங்கியது.
வேதா சொன்னது போலத் தவறுகளெல்லாம் தன் தாய் மேல் இருக்கத் தந்தையும், என்றோ சில நாட்கள் மட்டுமே தங்களின் வீடு வரும் தங்கையும் ஏன் தன்னைப் பிரிந்து இருக்க வேண்டும் என்றும் யோசனை செய்தான்.
அவனின் எண்ணங்கள் எங்கு சென்றாலும், வேதாவின் மீதான அன்பு என்றும் போல இன்றும் அவன் உள்ளம் நிறைக்க இனி அவளை எந்த விதத்திலும் மனம் வருந்த விடக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டான்.
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும் உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும் அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீ இல்லாம நான் இல்லடி