அன்று வேதாவின் வருத்தமும் ‘வழக்கம் போல நீங்க எதுவும் கேட்கப் போறதில்லை’ என்று மனம் உடைய அவள் சொல்லிய சொல்லும் அர்ஜுன் தன்னையே ஒரு சுய அலசலில் ஈடுபடுத்திக் கொள்ள வைத்தது.
அதன் பயன் அன்று அவன் தன் அப்பாவைப் பார்க்க நேராக அவர் அலுவலகம் வந்திருந்தான்.
அருணாச்சலத்திற்கு முதலில் அவன் அவரிடம் பேச வந்திருப்பது ஆச்சரியமே. ஆனால் அவருமே அர்ஜுனிடம் சில குடும்ப விஷயங்கள் பேச எண்ணி இருந்தார்.
எனவே அர்ஜுன் வரவும் அவரே தங்களின் விவகாரங்களைப் பேசத் தொடங்கி இருந்தார்.
“சொல்லுப்பா, என்னவோ பேச வந்திருக்க. ஆனா பேசாம இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? விஷயம் என்னன்னு சொல்லு அர்ஜுன். என்னால முடிஞ்ச உதவி நானும் பண்றேன்.” எனக் கேட்டவரின் மனம் முழுவதும் மகனைப் பற்றிய சஞ்சலங்கள் மட்டுமே.
“இல்லப்பா அன்னைக்கு அம்மா, ” சிறு இடைவெளி விட்டவன் “இல்ல அம்மா அன்னைக்குப் பண்ணினது ரொம்ப தப்புப்பா.” அம்மாவைப் பற்றிக் குறை சொல்கிறோமே என்ற எண்ணமே அவனின் பேச்சைத் தடை செய்யப் போதுமானதாக இருந்தது.
“இதை என்கிட்ட சொல்லவே ஏன் அர்ஜுன் இவ்வளவு தயங்குற. அதுதானே நிஜம். அன்னைக்கும் நான் உன்கிட்ட அதை சொல்லத்தான் செஞ்சேன். இப்ப நீ என்ன சொல்லணும்ன்னு நினைக்கிறியோ அதை சொல்லு டா.”
“ஹ்ம்ம், ஆனா நா அன்னைக்கு உங்க கிட்ட பேசின மாதிரி நாங்க மட்டும் தனியாப் போக வேதா ஒத்துக்க மாட்டேங்குறா. அம்மா மேல கோவம்ன்னா நீங்களும் ஏன் கஷ்டப்படணும்ன்னு கேட்கிறா ப்பா?” அவனது தயக்கமும் குழப்பமும் இன்னும் பெரிதாகத் தெளிந்திருக்கவில்லை என்பது அவன் குரலிலேயே அவருக்கு விளங்கியது.
“சரியான கேள்வி தானே அர்ஜுன். நீயா யோசிக்கலைன்னாலும் வேதாவுக்காவது இது தோணுதே. அது வரைக்கும் நல்லது.”
“அப்பா அப்ப நாங்க நம்ம வீட்லயே இருந்தா மறுபடியும் அம்மா இதே மாதிரி பேசத்தானே செய்வாங்க?”
“கண்டிப்பா பேசுவா. ஆனா அர்ஜுன் உனக்கு இன்னும் உன் தப்பு புரியல. உங்க அம்மா தொடர்ந்து வேதாவைக் குத்தம் சொல்றது பெரிய தப்பு. அதே போல நீயும் நம்ம கண்ணுக்கு எதிற எதுவும் நடக்கலைன்னு கண்டுக்காம இருக்கக் கூடாது தானே?”
“இல்லப்பா நானும் அம்மாகிட்ட நிறைய முறை சொல்லி பார்த்துட்டேன். ஆனா அம்மா கேட்கவே இல்லையே ப்பா.”
“சில விஷயம் நமக்கு இப்பப் பெருசா தெரியாது அர்ஜுன். நம்மல பாதிக்கலன்னு கண்டுக்காம இருக்கிறது கூட பெரிய தப்பு தான் அர்ஜுன். அந்தப் பொண்ணு உன்னை நம்பி நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. அப்ப நீ தானே அவளுக்கு எந்த கஷ்டம்ன்னாலும் பார்த்துக்கணும்.”
“அப்ப நான் அம்மா கூட சண்டை போடணும்ன்னு சொல்றீங்களா?”
“ஏன்டா, இதுக்கு சண்டை தான் போடணுமா? உன்னோட எண்ணத்தை உங்க அம்மாவுக்குத் தெளிவா புரிய வைக்கலாம் தானே? அது முடியலைன்னாலும் அட்லீஸ்ட் அதுக்கு முயற்சியாவது செய். “
“அப்பா எனக்கு இந்த விஷயத்துல எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்னு தெரியாமத்தான் நானே உங்ககிட்ட பேச வந்தேன். நீங்க என்னை இன்னும் குழப்புறீங்க. நான் என்ன செய்யணும்ன்னு தெளிவா சொல்லுங்க.”
“அர்ஜுன் நீ மட்டும் இல்ல நம்ம ஊருல பல பேருக்கு வீட்டுல அம்மாவையும் மனைவியையும் ஒரே மாதிரி பாலன்ஸ் பண்ண முடியாம ரொம்பவே சிரமப் படுறாங்க. ஒரு மகனா, புருஷனா நீ உன் உறவுக்கான கடமைய சரியா செஞ்சாலே, மாமியார் மருமகளுக்குப் பிடிக்கலைன்னாலும் வீடு அமைதியா இருக்கும்.
ஏன்னா இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் நீ தான் முக்கியம். நீ தான் எல்லாமும்ன்னு நினைக்கிறவங்க. அந்த நினைப்பிலயே எப்பவும் இருக்கவங்க. அதுவும் நீ எங்களுக்கு ஒரே பையன் அதிலயும் முக்கியமா முதல் பையன். உன் பேச்சுக்கு உன் அம்மா கிட்ட எப்பவும் மரியாதை இருக்கும்.
அதனால உனக்கு அம்மா பேசுறது பிடிக்கலைன்னு அவங்களுக்கு அழுத்தமா சொல்லு. ஆனா அதுவும் வேதாவுக்கு நெருக்கடியைக் குடுக்க வாய்ப்பு அதிகம். அவ மேல இன்னும் கூட உங்கம்மாவுக்கு கோவம் வரலாம். ஆனா அப்படி வந்தா நான் தனியா போயிடுவேன்னு கண்டிப்பா சொல்லி வை. அவ பேச்சு உன்னையும் கவலைப் படுத்தும்ன்னு எடுத்துச் சொல்லு.
நீ அவளை விட்டுட்டு போய்டுவங்குற பயத்துலயாவது உங்கம்மா அமைதியா இருக்காலான்னு பார்க்கலாம்.”
“கிட்டத் தட்ட அம்மாவை மிரட்ட சொல்றீங்க? அப்பா ஆனாலும் அம்மா பாவம்ப்பா.” இன்னும் அவனால் அவன் அம்மா மீதான அன்பில் அவரைக் குறை சொல்ல மனம் தடுக்கிறது.
“அப்ப உனக்காக உன்னை நம்பி வந்த பொண்ணு? வேதா பாவம் இல்லையா? அதே இடத்துல உங்க அம்மாவை யோசிச்சு பாரு அர்ஜுன்.
உங்க பாட்டிக்கு உங்க அம்மாவைப் பிடிக்கலைன்னு பேசும் போது நானும் உன் அம்மாவுக்காக ஆதரவா நிக்காம இருந்தா நீ எப்படி என்னைப் பத்தி யோசிப்ப?
நல்ல புருஷன்னா அன்பா இருக்குறது மட்டும் இல்லப்பா. அவங்களுக்கு ஒரு நல்ல வாழுற சூழ்நிலையும் ஏற்படுத்திக் கொடுக்குறது தான்.”
“நான் அம்மா கிட்ட பேசறேன் ப்பா. ஹ்ம்ம்.” ஒரு பெருமூச்சுடன் யோசிக்கத் தொடங்கினான்.
“அர்ஜுன், இது உங்க அம்மாவுக்கு மட்டும் இல்ல. உன் பொண்டாட்டி இது போல ஏதாவது தப்பு செய்தாலும் அதை உன்னால சமாளிக்க முடியனும். அதுக்கு நீ கத்துக்கணும்.”
“புரியுது ப்பா. ஆனா அம்மா, ” எதோ சொல்ல வருவதற்குள் அருணாச்சலம் தானே பேசத் தொடங்கி இருந்தார்.
“உன் அம்மா ரொம்ப நல்லவ தான் ப்பா. எனக்கும் தெரியும். உண்மைய சொல்லணும்ன்னா அவ ஒரு நல்ல அம்மா நல்ல மனைவி. அதில உனக்கு என்னைக்கும் சந்தேகம் தேவை இல்லை.
நீயும் உன் தங்கச்சியும் வளர்ந்திருக்கதிலே அது உனக்கும் தெரியும்.
இந்த குழந்தைங்கிற ஒரு விஷயம் வர்ற வரைக்கும் சாகரி நல்ல மாமியாராவும் இருந்திருக்கா. அதுவும் உனக்கே தெரியும்.
ஆனா உங்களுக்கு, உங்களுக்காக ஒரு குழந்தை வேணும்ன்னு யோசிக்காம, அதை பெருமைக்கு சொல்லிக்கிற ஒரு விஷயமா நினைக்க ஆரம்பிச்ச இடத்துல தான் சாகரி கொஞ்சம் தடுமாறீட்டா.
எனக்கு தெரிய நீ பேசினீன்னா அதுவே உங்க அம்மாவுக்கு கொஞ்சம் புரியும். அதுக்கு மேலயும் வீட்டுல இதே மாதிரி இருந்தா அப்புறம் நம்ம என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம்.”
“சரிப்பா. நானே அம்மாகிட்ட ஒரு நாள் இதைப் பத்தி பேசுறேன் ப்பா. இப்ப நம்ம ஜீவா கல்யாணத்த பத்தி இன்னும் யோசிக்கவே இல்லையேப்பா. சித்தப்பா எதுவும் சொன்னாங்களா அப்பா?”
“ஹ்ம்ம் சதா சொன்னான் ப்பா. அவனுக்கு இந்தக் கல்யாணத்துல பெருசா குறைன்னு ஒன்னும் இல்ல. சந்தோசம் தான். ஆனால் உங்க சித்தி பிடிவாதமா இருக்கான்னு சொன்னான்.
சாரதா பிடிவாதம் பண்ணப் பண்ண ஆனந்திக்கும் அதே பிடிவாதம் வரும் தானே? பார்க்கலாம் ப்பா. இன்னும் நானும் சம்பந்தி வீட்டுல இது சம்மந்தமா பேசல.
அவங்க கிட்டயும் பேசி முடிவு பண்ணனும். சதாவும் நானுமா சேர்ந்து கூட போயி முடிஞ்சா சம்பந்தியைப் பார்த்துட்டு வரணும்.
அவங்களுக்கு இதுல விருப்பமிருக்கான்னு இன்னும் தெரியல.”
“அவங்களுக்கு எல்லாம் இதுல பெருசா எதிர்ப்புன்னு இல்லப்பா. ஆனா அம்மாவும் சித்தியும் பேசினது தான் அவங்களுக்கும் வருத்தம்.
நீங்க மாமாவைப் போய் பார்த்துட்டு வாங்கப்பா. அப்புறம் யோசிக்கலாம்.”
“சரி அர்ஜுன். இது எல்லாம் போட்டு நீ குழப்பிக்காத. இதை எல்லாம் கடந்து போகப் பழகிக்க. வேலைல மட்டும் ஜெயிக்கிறது பெருசு இல்ல. வாழ்க்கையையும் அமைதியா சந்தோஷமா வச்சுக்க கத்துக்க அர்ஜுன்.”
“ஹ்ம்ம் சரிப்பா. உங்க கிட்ட பேசினதுமே எனக்கும் கொஞ்சம் புரியுது ப்பா. நான் பார்த்துக்கிறேன். நீங்களும் முடிஞ்சா அம்மாவுக்குப் பேசுங்கப்பா.” என்று பேசி முடித்து அங்கிருந்து கிளம்பி இருந்தான் அர்ஜுன்.
அன்றும் அர்ஜுன் எண்ணமும் செயலும் வேதாவிலே இருக்க ஜீவாவையும் ஆனந்தியையும் சற்று மறந்தே இருந்தான்.
ஆனால் அவன் சிந்தனையைக் கலைக்கவென ஜீவாவும் கணேஷும் கைப்பேசியில் அழைத்துப் பேசிய விஷயங்கள் எல்லாம் உவப்பானதாக இல்லை என்றாலும் அர்ஜுன் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது.
அடுத்தடுத்த வந்த நாட்களில் அவர்கள் விவாதித்தவைகள் எல்லாம் நடந்தேற அர்ஜுன் முழுக்கவனமும் அவனின் குடும்பத்தின் மேல் மட்டுமே.