மகளின் காதல் விவகாரம் தந்த கோவம் சாரதாவை மேலும் மூர்க்கம் கொள்ளச் செய்திருந்தது. எப்படியும் தன் மகளின் திருமணம் தன் எண்ணம்போல மட்டுமே செய்ய வேண்டும் எனத் தீர்க்கமான முடிவிலிருத்தவரை யாராலும் தடை செய்ய முடியவில்லை.
தினம் தினம் அவரின் பேச்சுக்கள் எல்லாம் எல்லையைத் தாண்ட அவரின் பிடிவாதமும் ஆனந்தியை அதிகமாகக் காயப் படுத்தியது.
கணவனும் மகனும் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஜீவாவின் பெற்றோருக்கு விருப்பம் எனத் தெரிந்தும் அவரின் முடிவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை.
அதன் விளைவு கணேஷ் யோசனைப்படி ஜீவா மற்றும் ஆனந்தி இருவரின் திருமணத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர்.
அண்ணனின் ஆதரவால் அவர்கள் திருமணத்தைப் பதிவு செய்ய எந்தத் தடையும் இருக்கவில்லை.
பெற்றோர்கள் யாரும் உடன் இல்லாமல் திருமணம் செய்ய இருவருக்குமே விருப்பம் இல்லாததால் பதிவு மட்டுமே செய்திருந்தனர். அதற்கான விளக்கமும் ஜீவா கணேஷிடம் சொல்லி இருந்தான்.
“இப்படி ரெஜிஸ்டர் பண்ணுனதே எங்க அம்மா அப்பாவை ரொம்பக் காயப் படுத்தும். ஆனா என்னால ஆனந்தி இனி கஷ்டப்படறதை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. அதுவும் நீங்களே இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம்.
அதுக்காகத்தான் நீங்க சொல்லுறதுக்கு ஒத்துக்கிட்டேன் அத்தான். மத்தபடி கல்யாணம் முறையா வீட்டுல நல்ல நாள் எல்லாம் பார்த்து செஞ்சு வைக்கட்டும். அது வரைக்கும் நாங்க வெயிட் பண்ணுறோம்.
இப்ப ஆனந்தியைக் கோவிலுக்கு அழைச்சுட்டு போயிட்டு நானே வீட்டுக்கு வந்து அத்தை கிட்ட பேசுறேன் அத்தான்” என்று சொல்லி முடித்திருந்தான்.
அதனால் கணேஷ் வழக்கமான அலுவலக நேரத்திற்கு முன்பே வீடு வந்திருந்தான்.
மாலை கணேஷ் சீக்கிரமே வீடு வந்திருக்க இருவருக்கும் குளம்பி தயாரித்து எடுத்து வந்தார் சாரதா. இருவரும் கூடத்தில் அமர்ந்து இருந்தனர்.
கதவைத் தட்டும் ஒலியில் சாரதா எழுந்து வந்து திறக்க அங்கே ஆனந்தி ஜீவாவுடன் நின்றிருந்தாள். இருவரையும் ஒன்றாகக் கண்டதும் சாரதாவின் கோபம் எல்லை கடந்திருந்தது.
“ஆனந்தி என்னதிது? எவ்வளவு திமிரு இருந்தா நம்ம வீட்டு வாசலுக்கே இவன் கூட ஜோடியா வந்து நிற்ப?” கோபத்தின் உச்சத்தில் அவர் சத்தமாகக் கத்த, ஆனந்தி பயத்தால் சிறிது நடுங்கத் தொடங்கினாலும் ஜீவாவின் முகத்தில் இனி என்னிடம் பேசிப் பார் என்ற திடமான முக பாவம் மட்டுமே.
“அத்தை இப்படி வாசல்ல நின்னு கத்துனிங்கன்னா உங்க அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்க எல்லாம் வந்து வேடிக்கை பார்க்கப் போறாங்க. கொஞ்சம் அமைதியா சத்தம் கம்மியா பேசுங்க.” நக்கலாகப் பேசியவன் பார்வை எல்லாம் வாசலில் வந்து நின்ற கணேஷ் மீது தான்.
அம்மாவின் சத்தம் ஓங்கி ஒலிக்க கணேஷ் வெளியே வந்தவன், எதிர்பார்த்த நிகழ்வுதான் என்ற போதும் அனைவரின் பார்வைக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டி “அம்மா உள்ள வாங்க, நீங்களும் உள்ள வந்து பேசுங்க. இப்படி வாசல்ல நின்னு சண்டை போடாதீங்க.” எனச் சொல்லியபடியே அம்மா ஆனந்தி ஜீவா என அனைவரையும் உள்ளே அழைத்து வந்திருந்தான்.
“கணேஷ் இப்ப எதுக்குடா இந்தப் பையனை உள்ள வரச் சொன்ன. நீ உள்ள போ ஆனந்தி. இனி இப்படி வீட்டுக்கு வந்தீங்கன்னா நல்லா இல்ல சொல்லீட்டேன். “
“அத்தை, கொஞ்சம் அமைதியா இருங்க பேசலாம். உங்ககிட்ட பேசலாம்ன்னு தான் வந்தேன்.”
“எனக்கு உன்கிட்ட பேச எதுவும் இல்ல. நீ வெளீல போ முதல்ல. ஏய், என்ன டி என்கிட்டே பொய் சொல்லிட்டு வெளீல போய் இவன்கூட ஊர சுத்தீட்டு வர்றியா? உனக்கெல்லாம் எவ்வளவு தைரியம் இருந்தா நான் அவ்வளவு சொல்லியும் இன்னும் இவன் கூட ஊர சுத்தீட்டு வந்து நிப்ப.” பேசிய வேகத்தில் ஆனந்தியின் கன்னத்தில் சட்டென அறைந்திருந்தார்.
அவர் அறைந்த நிமிடம் “அம்மா”, “அத்தை” என்ற சத்தம் மட்டுமே கூடத்தை நிறைத்திருந்தது.
அவரின் இந்த வேகம் அங்கிருந்த யாரும் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. அவர் அறைந்த வேகத்தில் ஆனந்தியை ஜீவா தன் அருகே இழுத்திருந்தான்.
“அத்தை, முதல்ல இப்படி அடிக்கிறத நிறுத்துங்க. சும்மா எப்பப் பார்த்தாலும் என்ன கை நீட்டுறீங்க? டொமஸ்டிக் வைலென்ஸ்ன்னு உங்க மேல கேஸ் போடவா?”
“டேய், கேஸ் போடுவியா? என் பொண்ணை நான் அடிக்க நீ என் மேல கேஸ் போடுவியா? அவளை நான் என்ன வேணாலும் செய்வேன் நீங்க யாரு அதைக் கேட்க. டேய் கணேஷ் இவனை முதல்ல கிளம்பச் சொல்லு. உங்க அப்பாவுக்கு கால் பண்ணி வர சொல்லு. இவன் இங்க வந்து பிரச்சனை பண்றான்னு சொல்லு.” சாரதா பேசப் பேச ஜீவாவிற்கு கோபம் என்றாலும் அவரின் பதட்டமும், மரியாதை கொடுப்பதும் பின் இல்லாமல் பேசுவதும் என அவர் தன் நிலையில் இல்லை எனப் புரிந்தது.
“அம்மா, அவரு முதல்ல எதுக்கு வந்திருக்காருன்னு கேளுங்க. அப்புறம் நம்ம பேசலாம்.” பேச்செல்லாம் அன்னையிடம் இருந்தாலும் அவன் பார்வையில் இருந்த அழுத்தம் ஜீவாவிற்கும் புரிந்தது.
“அதெல்லாம் ஒன்னும் கேட்க வேண்டாம். இவங்ககிட்ட நமக்குப் பேச எதுவும் இல்ல. முதல்ல கிளம்பச் சொல்லு. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லியாச்சு. அவ்வளவு தான். இனி இதைப் பத்திப் பேச எதுவும் இல்ல.”
“அம்மா, ப்ளீஸ் ” என ஆனந்தி எதோ பேச வரும் முன்னே ஜீவா அவளைத் தடுத்து நிறுத்தினான்.
“ஆனந்தி நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. நான் பேசிக்கிறேன் அத்தை கிட்ட. அத்தை இந்த கல்யாணம் ஏன் உங்களுக்குப் பிடிக்கலை. ஏதாவது ஒரு உண்மையான காரணம் சொல்லுங்க?” வரவழைக்கப் பட்ட பொறுமையுடன் சாரதாவிடம் பேசத் தொடங்கினான்.
“நீங்க இங்க தகராறு பண்ணணும்ன்னே வந்திருக்கீங்க போல. சரி நல்லாக் கேட்டுக்குங்க. நான் என் பொண்ணுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை உங்களைவிட வசதியில அதிகம். உங்களைவிட வருமானமும் அதிகம்.
எல்லாத்தையும் விடக் குழந்தை பிறக்குமா பிறக்காதா? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை ஆரோக்கியமா இருக்குமான்னு எல்லாம் எனக்கு எந்தச் சந்தேகமும் பயமும் இல்ல.
இந்த விளக்கம் போதுமா? முதல்ல கிளம்புங்க இங்கேயிருந்து. ஆனந்தி உள்ள போ முதல்ல.” சாரதா வேகமாக எல்லாம் சொல்லி முடித்திருந்தார்.
“ஹ்ம்ம் அப்ப உங்களுக்கு இதெல்லாம் தான் என்னை மாப்பிள்ளையா ஏத்துக்காததுக்குக் காரணம். அப்ப இந்தக் காரணத்தை எல்லாம் நான் சரி பண்ணிட்டா உங்களுக்கு இந்தக் கல்யாணத்துக்கு ஓகே தானே.” மனதில் தீட்சணயத்துடன் ஜீவா கேட்ட கேள்வியின் ஆழம் தெரியாமலேயே சாரதா அவனுக்குத் தேவையான பதிலைச் சொல்லி இருந்தார்.
“ஆமா. இதெல்லாம் நீங்க சரி பண்ணிட்டா எனக்கு வேற எந்தக் காரணமும் இல்லை உங்களை மாப்பிள்ளையா ஏத்துக்காம இருக்க. முடிஞ்சா இதை நீங்க சரி பண்ணிட்டு சொல்லுங்க. நானே முன்னாடி நின்னு உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்.” நக்கலான குரலில் பேசினார் சாரதா. அவரின் பதிலில் ஜீவாவின் முகத்திலும் அதே நக்கலும் குறும்பும் மின்னியதென்றால் கணேஷின் பார்வையோ அவன் மேல் மெச்சுதலாக விழுந்தது.
“ஆனாலும் அத்தை என்னை மாப்பிள்ளையா ஏத்துக்கிறேன்னு நினைக்கவுமே நீங்க எவ்வளவு மரியாதையாப் பேசுனீங்க தெரியுமா? இவ்வளவு நேரமும் இந்த மரியாதை நொண்டி அடிச்ச மாதிரி இல்லாம, இப்ப முழு வாக்கியமும் நீங்க மரியாதையாப் பேசும் போது சும்மா புல்லரிக்கிது.”
“இந்த மாதிரி தேவை இல்லாம நீங்க இங்க நின்னு பேச அவசியமில்லை. முதல்ல கிளம்புங்கன்னு சொன்னேன்.”
“இருங்கத்தை. என்னை விரட்டி விட்றதுலே இருக்காம. நான் என்ன சொல்ல வந்தேன்னு உங்களுக்குத் தெரிய வேண்டாமா?
நீங்க பார்த்த மாப்பிளையை விட நான் வசதி குறைவு தான். ஆனா எனக்கு அவரை விட வயசும் குறைவு தான். அவரு என் வயசுல என்ன சம்பளம் வாங்கினாரோ கண்டிப்பா அதுக்கு கம்மியா நான் வாங்க மாட்டேன்.
இன்னும் சில வருஷத்துல கிரிக்கெட்லயும் ஒரு அளவுக்குப் பேர் சொல்லுற மாதிரி வந்திடுவேன். அப்புறம் என் வசதியும் வருமானமும் நீங்க சொல்லுறத விட நிச்சயம் அதிகமா மாறும்.
இதெல்லாமே போதும் நீங்க பார்த்த மாப்பிள்ளையை விட நான் ஒன்னும் குறைச்சல் இல்லைன்னு உங்களுக்கே புரியும்.” ஜீவாவின் குரலில் இருந்த உறுதி சாரதாவின் பேச்சை நிறுத்தியதுடன் சில நொடி யோசிக்கவும் வைத்தது.
“நீங்க என்ன சொன்னாலும் என் மனசு கேட்காது. குழந்தை இல்லாம உங்கக்கா பட்ற கஷ்டத்தை என் மகளும் படணுமா?”
“ஹ்ம்ம் இப்ப தான் நீங்க சரியான கேள்விக்கே வந்துருக்கீங்க. உங்களுடைய அந்தக் கவலையவும் நான் சரி பண்றேன்.” என்றவன் அவன் பையிலிருந்து ஒரு அரக்கு வண்ணக் காகித உரையை எடுத்து சாரதாவிடம் நீட்டினான்.
“இந்தாங்க அத்தை. இது என்னோட மெடிக்கல் ரிப்போர்ட். நான் ஆரோக்கியமா இருக்கேன்னு அதுவே சொல்லும்.
ஆனா பாருங்க இதெல்லாம் உங்க பயத்தைப் போக்காது அத்தை. அதனால நான் என்ன முடிவு பண்ணீருக்கேன்னா முதல்ல நாங்க ஒரு குழந்தையைப் பெத்துக்குறோம்.
அதுக்கப்புறம் உங்க பயம் தானே தெளிஞ்சுடும். அப்புறம் மெதுவா நீங்க எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க. நான் அது வரைக்கும் நிச்சயம் காத்திருக்கேன்.”
“ச்சீ, என்ன பேசுற நீ?” என்று அடுத்து சாரதா பேச வருவதற்குள், “நான் ஆனந்தியை என்னோட ஒய்ஃபா இன்னைக்கு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். அதனால நீங்க இதைத் தப்பா நினைக்கத் தேவை இல்லை.”
“அதே போல கண்டிப்பா என் அக்கா பட்ற கஷ்டத்தை நானோ என் குடும்பமோ ஆனந்திக்குக் குடுக்க மாட்டோம்.
திரும்பவும் சொல்லறேன், நானும் ஆனந்தியும் முதல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெத்து உங்களுக்கு கொடுத்துடுறோம். அதுக்கப்புறம் சந்தோஷமா நீங்களே எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.”
“ஜீவா ” சாரதா கோபத்துடன் பேசத் தொடங்கு முன் மீண்டும் ஜீவாவே பேசத் தொடங்கினான்.
“தப்பா யோசிக்காதிங்க. உரிமை இல்லாம எதுவும் செய்யக் கூடாதுன்னு மட்டும் தான் ரெஜிஸ்டர் பண்ணினேன். நல்லா கேட்டுக்குங்க ரெஜிஸ்டர் மட்டும் தான் பண்ணினேன்.
ஆனா கல்யாணம் தாலி இதெல்லாம் இனிமே உங்க ஆசிர்வாதத்தோட எங்க குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா நீங்க செஞ்சு வச்சா போதும். அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்.
ஒரு நல்லா நாளா நீங்களே யோசிச்சு சொல்லுங்க அத்தை. நான் இங்கேயே வந்து தங்கிக்கிறேன். ஏன்னா நானும் ஆனந்தியும் தனியா தங்கினா நல்லா இருக்காது பாருங்க.
நானும் இங்கயே வந்துட்டா இதை யாரும் தப்பா சொல்ல முடியாது. யோசிச்சு ஒரு நல்லா நாள் பார்த்து சொல்லுங்க.”
அவன் பேசி முடித்தும் சாரதா எந்த பதிலும் சொல்லவில்லை. அதிர்ச்சியும் கோவமும் அவரின் பேச்சை சற்றே தடை செய்திருந்தது.
“எல்லாம் பண்ணிட்டு வந்து தான் இவ்வளவும் பேசுனியா?” இதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. மனதில் வலி. பெண்ணின் செயலால் வந்த வலி அவரைப் பேச விடாமல் மௌனியாகச் செய்தது.
“என்ன அத்தை அமைதியாயிட்டீங்க. யோசிச்சு சொல்லுங்க நான் எப்ப இங்க வரணும்ன்னு. மறுபடி மாப்பிள்ளை பார்க்கிறேன், ஆனந்தி மனசை மாத்துறேன்னு யோசிக்காம நல்ல முடிவா எடுத்துட்டு சொல்லுங்க.
நான் கிளம்புறேன். போயிட்டு வர்றேன் சின்னத்தான். வரேன் ஆனந்தி . நீ எதுக்கும் கவலைப் படாத. நீ வருத்தப்படற மாதிரி இனி இங்க எதுவும் நடக்காது. யாரும் நடந்துக்க மாட்டாங்க.” என்று சொன்ன ஜீவாவின் உறுதி சாரதாவைத் தீயாய் சுட்டது.
மகளின் திருமணத்திற்கான தனது திட்டங்களும் விருப்பங்களும் வீண் எனத் தெரிந்தும், மனம் அடங்க மறுத்தும் ஜீவாவின் ஆளுமையும் அவனது திடமான பேச்சும் ஏதோ ஒரு விதத்தில் அவரை அமைதிப் படுத்தியது.
“ரெடியா இரு ஆனந்தி. அத்தை நாள் பார்த்து சொன்னதும் நான் உன் வீட்டுக்கு கிளம்பி வந்திடுவேன்.” ஆனந்தியின் முகம் பார்த்து கண் சிமிட்டிக் கூறியவன் உடனே கிளம்பியும் இருந்தான்.
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது உள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானே கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே