உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்கம் ஆகுமே
இன்று மிகவும் ஆனந்தமான நாள். ஆனந்த் ஆனந்தியின் வாழ்வில்.
இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் சீரும் சிறப்புமாக அதே போல் ஜீவாவின் விருப்பத்திற்காக எளிமையாகவும் நடந்தேறியது ஜீவா – ஆனந்தியின் திருமணம்.
ஜீவாவின் பெற்றோருக்கு அவனின் திருமணப் பதிவு பற்றித் தெரிந்தவுடன் பெரும் அதிர்ச்சி அவர்களிடத்தில். சீதா கேட்டதிலிருந்து கண்ணீரில் கரையத் தொடங்கி இருந்தார்.
ஜீவாவின் பேச்சும் செயலும், சாரதாவின் மனதை உடைத்தாலும், சதாசிவமும் ஆனந்தியின் அண்ணனின் ஆதரவும் பெரிதாக இருக்க முறையாகத் திருமணம் செய்ய அவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
அடுத்த சில மணி நேரத்தில் அருணாச்சலம் மற்றும் சதாசிவம் இருவரும் அர்ஜுன் மற்றும் கணேஷுடன் ஜீவாவின் வீட்டிற்கு நேரில் வந்து பேசினர்.
ஸ்ரீனிவாசனுக்குத் தகப்பனாக மகனின் செயல் சிறு மனவருத்தத்தைத் தந்தாலும் ஜீவா ஆனந்தியின் திருமணம் அடுத்து வந்த முகூர்த்த நாளிலேயே சிறப்பாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.
காதல் திருமணமாக இல்லாமல் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்வாக எளிமையாக சுற்றம் சூழ வந்து வாழ்த்த சிறப்பாக நடந்து முடிந்தது ஜீவானந்தி திருமணம்.
இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே, ஆனந்தி மருமகளாய் அவர்களின் இன்னோரு மகளாய் ஜீவாவின் வீட்டிற்குப் புறப்பட. கைகள் கோர்த்துக் கண்களில் கண்ணீர் மின்ன அவளின் அறையில் நின்றிருந்த அம்மாவையும் மகளையும் நோக்கி வந்தான் ஜீவா.
“கிளம்பலாம் ஆனந்தி.” என்றவன் சாரதாவின் முகம் பார்க்க ஏனோ அவனுக்கு சீதாவின் நினைவு வந்தது.
வேதாவின் திருமணம் முடிந்து அவள் கிளம்பிய அன்று அவன் அம்மா இருந்த அதே மனநிலை, அதே உணர்வுகள் தாங்கிய முகமாகத் தோன்றியது இன்றைய சாரதாவின் தோற்றமும் முகமும்.
“அத்தை, நீங்க வருத்தப்படற அளவுக்கு எங்க வாழ்க்கை கண்டிப்பா இருக்காதுன்னு நான் சொல்றத விட, அதை நீங்களே சீக்கிரம் புரிஞ்சுப்பீங்க.
நீங்க எங்க வாழ்க்கையை எங்களோட அன்புல, எங்களுக்குள்ள இருக்க அந்நியோன்னியத்துல பாருங்க அத்தை. வசதியிலயும் குழந்தை குட்டியிலும் பார்க்காதீங்க.
அதே போலக் குழந்தை மேல எல்லாருக்கும் ஒரு எதிர் பார்ப்பும் ஆசையும் இருக்கும். ஆனா சிலருக்கு அது நிராசையா போறது அவங்க தப்பில்லையே.
இன்னைக்கு நான் ஆரோக்கியமா இருந்தாலும் நாளைக்கே எனக்கு என்ன வேணா நடக்கலாம், “
“ஜீவா, இல்லங்க மாப்பிள்ளை அப்படி எல்லாம் சொல்லாதிங்க.” ஜீவாவின் சொல்லில் அவசரமாக இடை புகுந்தார் சாரதா.
“பதறாதீங்க அத்தை. உங்களுக்குப் புரியனும்ன்னு தான் சொன்னேன். எனக்கு உங்க பொண்ணு மேலதான் காதலே தவிர, எனக்குப் பிள்ளைங்க நாளைக்கு இவளால தான் பிறப்பாங்கன்னு யோசிச்சு நான் இவள காதலிக்கல.
அதே போலத் தான் உங்க பொண்ணும். என் வசதி வாய்ப்பைப் பார்க்கல. அவளை சந்தோஷமா பார்த்துக்கிற அளவு வருமானமும் வசதியும் என்கிட்டே நிச்சயம் இருக்கு.
இந்தக் கல்யாணம் உங்களைப் பலவாறா காயப் படுத்தினாலும் நீங்களே சந்தோஷப்படற மாதிரி நிச்சயம் எங்க வாழ்க்கை இருக்கும் .
கவலைப் படாதிங்கத்தை.” என்றவனின் பேச்சில் அன்றைக்குப் போலவே இன்றும் பேச்சற்று நின்றார் சாரதா.
“வா ஆனந்தி” என்றவன் அவளின் கை பற்றி அழைத்துச் செல்ல ஆனந்தியின் மனதில் ஆயிரம் மத்தாப்புக்கள்.
இனி அன்னை மட்டும் அல்ல வாழ்க்கையில் எங்கு இடர் வரினும் எதிர்த்து நிற்கும் தைரியத்தை அவனின் அந்த சிறு தீண்டல் தந்து விட்டது போல் ஒரு எண்ணம் ஆனந்திக்குள்.
‘கொண்டவன் துணை இருந்தா கூரை மேலேறி சண்டை போடலாம்ன்னு ஆனந்த் மாதிரி ஆளுங்களுக்காகத் தான் சொன்னாங்க போல’ என நினைத்தபடி கணவனின் இல்லம் நோக்கிய தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாள்.
ஜீவாவின் வீடு வந்ததும், நேரம் வழக்கமான சடங்குகளிலும், உறவினர்களின் அறிமுகப் பேச்சிலும் வேகமாகக் கரைந்தது.
இரவு உணவு நேரம் முடிய என்ன முயன்றும் மனதில் தோன்றும் படபடப்பையும் சிறு பயத்தையும் மறைக்க முடியாமல் கண்ணாடியாய் அவள் மனம் காட்டிக் கொடுக்கத் தொடங்கியது.
ஜீவாவின் அறைக்கு அழைத்துச் செல்ல வந்த வேதாவிற்கும் ஆனந்தியின் நிலை புரியத் தான் செய்தது.
இது திருமணமான பெண்களெல்லாம் கடந்து வரும் ஒரு நிலை தானே, அவளுக்கும் அதே மனநிலை அன்று இருந்தது தானே.
“ஆனந்தி, இதுல நீ பயப்பட எதுவும் இல்லை டா. ஜீவாவை உனக்கு நல்லாவேத் தெரியும் தானே? இனி சீக்கிரம் இந்த வீட்டுக்கும் பழகிக்கோ. உனக்கு என்ன சொல்லணும்ன்னாலும் எப்பவும் அண்ணி இருக்கேன், பேசு டா” என்று ஆறுதலாகவே சொல்லி அனுப்பினாள்.
முதல் முறையாக அவளின் மனம் கொண்டு மாங்கல்யம் தந்தவன் அறைக்குக் கையில் பாலுடன் நுழைந்தாள் ஆனந்தி.
“வா ஆனந்தி” உற்சாக வரவேற்பாக ஆவலுடன் காத்திருந்தான் காதல் கணவன்.
“ம்ம்ம்,” தயக்கமும் வெட்கமும் கலந்த குரல், கண் நோக்கி காதல் பேசியவனின் முகம் நோக்க தடுமாறும் முதல் தனிமையின் முத்தான நிமிடங்கள்.
“என்ன பாம்புக்குட்டி, நீ இவ்வளவு வெட்கப் பட்டா உன் ஆனந்தோட ஆனந்தம் என்ன ஆகுறது? இங்க பாரு என்னை.” பேசிக் கொண்டிருந்தவனின் தன் கைகளுக்குள் அவளை நிறுத்தி இருந்தான்.
கையில் பாலுடன் நின்றவள் நெளிய, அதையும் வாங்கி மேஜை மேல் வைத்து மெல்ல ஆனந்தியின் முகத்தை நிமிர்த்தக் காதலில் வென்ற கர்வம் பெண்ணவளின் வதனத்தில்.
கண்கள் நிலம் நோக்கி இருக்க, “ஆனந்தி என்னப் பாரேண்டி” கிசுகிசுப்பாய் காதோரம் ஜீவாவின் குரல்.
சிலிர்த்து சில்லிட்ட கைகளும் அவனைத் தழுவ நீர் ததும்பிய விழிகள் இரண்டும் தன்னவன் விழி நோக்க “தேங்க்ஸ் ஆனந்த்” அதரங்களின் அசைவில் மட்டுமே அவள் உதிர்த்த சொற்கள் திக்கித் தொக்கி நின்றன.
ஜீவாவின் விழிகளும் அந்த அதரங்களின் அசைவை நோக்க, அடுத்து வந்த நொடிகளில் அவை அவன் வசம்.
அடுத்தடுத்த நொடிகளெல்லாம் காற்றில் கரைய ஆனந்தமானவர்களோ அவர்களின் ஆனந்த நிலையில்.
மெல்ல மெல்ல நாயகன் அவளில் கரைய, நங்கை அவள் அவனின் மெய்யான மெய் தீண்டல்களில் உருகிய பொழுதில், அவளின் பாம்புக் குட்டிகளும் அவனை உரசி முகத்தோடு முத்தங்கள் தந்து உறவாடியது.
காதோர முத்தங்களெல்லாம் கழுத்திற்கு இடம் பெயர அவள் கூந்தலின் தீண்டல்களில் மெல்ல அவளை விட்டு விலகி நின்றான்.
“அடியே ஆனந்தி என்ன டி ஹேர் ஸ்டைல் இது? இந்த முடியெல்லாம் எனக்கு இப்படிக் கூசுது.” உருகிய நிமிடங்களில் உறைய முடியாத கோபம் அவன் குரலில்.
“அது, ஹ்ம்ம் தள்ளி நின்னு பார்க்க இந்த ஹேர் ஸ்டைல் நல்லா தான் இருந்துச்சு. ஆனா இப்படி கிட்ட நின்னு ஒட்டிகிட்டுப் பார்க்க நல்லாவே இல்ல. இனி இது எனக்கு வேணாம். சுத்தமா பிடிக்கல.”
அவனின் பேச்சில் ஆனந்தி சிணுங்கி சிரித்தபடி, “நான் வேணும்ன்னா முடிய ஸ்ட்ரைடென் பண்ணிடவா. இப்படி எல்லாம் உங்களைப் படுத்தாது. நீங்களும் பாதில … ” அதற்கு மேல் பேச அவளின் கூச்சம் விடவில்லை.
“அதெல்லாம் நீங்க ஒரு ஆணியும் பு… பண்ண வேண்டாம். என் கூட இங்க நம்ம ரூம்ல இருக்கும் பொது மட்டும் இறுக்கமா இந்த முடி எல்லாம் சேர்த்துப் பின்னி, கிளிப் போட்டு விட்டா போதும்.” என்று சொல்லியவனின் கைகள் மீண்டும் அந்த கருங்கூந்தல் காடுகளில் உலவ, கண்கள் இரண்டும் கலக்க இதழால் அவர்களின் காதல் கதை எழுதும் நேரம் அது.
ஜீவாவின் ஆனந்தத்தில் ஆனந்தியின் ஜீவன் நிறைய காதலாகி ஒருவரில் ஒருவர் கரைந்து கசிந்து உருகி கண்ணீர் பெருகி அவை கலந்து கணவன் மனைவியாய் அவர்களின் முதல் கூடல்.
அதற்குப் பிறகான ஒவ்வொரு நாளும் ஜீவா ஆனந்தியின் வாழ்வில் காதலும் ஆனந்தமும் மட்டுமே நிறைந்திருந்தது.
ஒரு வாரம் காற்றாய் கரைந்திருக்க இன்று தாலி பிரித்துக் கோர்க்கும் விழா முடிய இருவரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தேன்நிலவுக்காகப் பறந்திருந்தனர்.