பொட்டப் புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும் முட்டு சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும் படம் காட்டும் ஏமாத்தி கலங்காத ராசாத்தி ராசாத்தி
அசரீரியாய் ஒலித்த குரலில் அம்மாவும் மகனும் அதிர்ச்சியில் திரும்ப எப்போதும் போலவே இளநகை பூசிய முகத்துடன் அலட்டல் சிறிதும் இல்லாத பாவத்துடன் இவர்களுக்குப் பின்னே நின்றிருந்தாள் வேதா.
‘என்ன என்னவெல்லாம் கேட்டிருப்பாளோ? அம்மா வேற அவ மனச சங்கடப்படுத்தன்னு இன்னைக்கு நிறைய பேசிட்டாங்க. இனி எப்படி சமாளிக்கிறதோ?’ என்ற கவலை தந்த அதிர்ச்சியில் நின்றிருந்தான் அர்ஜுன்.
அதற்கு எதிரான மனோ பாவத்தில் இருந்தார் சாகரி. தன் மகனிடம் தான் தனியே பேசியதெல்லாம் இவள் எப்படிக் கேட்கலாம் என்ற கோவம் அவர் முகத்தில் தெரிந்தது.
அப்படி அவர் முகத்தில் தெரிந்த கோவம் அவர் பேச்சிலும் வெளிப்பட்டது. “இன்னைக்கும் நீ ஒட்டுக் கேட்கலைன்னு சொல்லப் போறியா வேதா? அர்ஜுன் இதெல்லாம் என்னப்பா பழக்கம் உன் பொண்டாட்டிக்கு? நீ கேட்க மாட்டியா?”
“அத்தை, கண்டிப்பா அன்னைக்கு சொன்ன அதே பதில் தான் இன்னைக்கும் சொல்லுவேன். நானா விரும்பி உங்களைத் தேடி வந்து நீங்க பேசினத கேட்கலை. எல்லாரும் வர்ற வழில வீட்டுக்குப் பொதுவான இடத்துல நீங்க பேசிட்டு இருக்கும் போது அது எப்படி அத்தை ரகசியமா இருக்கும்? இல்ல அது என் காதில விழுந்தா அது எப்படி ஒட்டுக் கேக்குறது ஆகும்?” கேட்டவள் குரலில் கோவமோ, நக்கலோ, இல்லை அதட்டலோ என உணர்வுகள் எதுவுமே இல்லை.
“நீ கீழ வந்த உடனே பேசி இருக்கலாம் தானே, எல்லாத்தையும் கேட்டுகிட்டு ஏன் நிக்கிற? அதென்ன என் பையன் உன் புருஷன்னு பேசுற? என் பையன்தான் முதல்ல, இப்ப அஞ்சு வருஷமாத்தான் அவன் உன் புருஷன். பெரியவங்களுக்கு மரியாதை குடுத்து பேசத் தெரியாதா உனக்கு?”
“நான் மரியாதையாத்தானே சொன்னேன் அத்தை. யோசிச்சுப் பாருங்க. நீங்க சொன்னது ஏதாவது நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கான்னு. உங்களுக்கே நீங்க எவ்வளவு அபத்தமா பேசுனீங்கன்னு புரியும்.”
“வேதா விடு டா. அம்மா ஏதோ ஒரு கோபத்துல சொல்லிருப்பாங்க. இந்தா டா பாட்டில்ல தண்ணி எடுத்துட்டேன் வா தூங்கப் போகலாம். இப்பவே ரொம்ப லேட்.” எங்கே தன் மனைவியும் அம்மாவும் பேசிப் பெரிதாக ஏதும் பிரச்சனை ஆகி விடுமோ என்ற அச்சம் அர்ஜுனை மேலும் அவர்கள் பேசிக் கொள்ளாமல் தடுக்கத் தூண்டியது.
“இருங்க ப்ளீஸ். நான் அத்தைகிட்ட பேசீட்டு வர்றேன். உங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குங்க.” சொன்ன வேதாவிற்குத் தெரியும் இனி அர்ஜுன் அவள் வரும் வரை தனியே செல்ல மாட்டான் என.
“குழந்தை பெத்துக்க முடியலைன்னா நாலு பேரு நாலு சொல்லத்தான் செய்வாங்க. கேட்டுக்கத்தானே வேணும். அதை விட்டுட்டு எதுத்துப் பேசுவியா நீ?” சாகரியின் சத்தம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
மகன் இருக்கும் தைரியம் வேறு. கண்டிப்பாக மகன் தன்னை மனைவிக்கு முன் விட்டுக் கொடுக்க மாட்டான் என்ற நம்பிக்கை தானாகவே அவரின் மனதில் தோன்ற எந்த உந்துதலும் இன்றியே பேச்சுவார்த்தை என்ற நிலையைக் கடந்து வாக்கு வாதம் செய்யும் குரலுக்கும் மனநிலைக்கும் மாறி இருந்தார்.
“யாரோ நாலு பேரு பேசினா கண்டிப்பா நான் கேட்டுக்கத்தான் வேணும் அத்தை. ஏன்னா அவங்க யாரோ நாலு பேரு. அதேபோல அவங்களுக்கு நான் பதிலும் சொல்லத் தேவையில்லை. ஆனா நீங்க யாரோ இல்லையே அத்தை. நீங்க தப்பா பேசினா இல்ல தப்பா புரிஞ்சுக்கிட்டா நான் கண்டிப்பா பதில் சொல்லணும். ஏன்னா நீங்களும் நானும் ஒரே குடும்பம்” இப்பொழுதும் அவள் குரலில் கோபம் துளியும் இல்லை. விளக்கம் சொல்லும் பாவனை மட்டுமே.
வேதா பேசி முடிக்க இவர்கள் அனைவரின் பேச்சு சத்தத்தில் அருணாச்சலம் எழுந்து வந்து விட்டார். மூவரின் முகம் பார்க்கவும், என்றோ அவர் எதிர் பார்த்த நாள் இன்று வந்து விட்டது புரிந்தது.
“என்ன ஆச்சு சாகரி, பசங்கள இன்னும் நீ தூங்க அனுப்பல? என்ன அர்ஜுன் அம்மா ஏன் சத்தம் போட்டுட்டு இருந்தா?”
“அவனை ஏன் கேட்கிறீங்க? அவன் இப்பவெல்லாம் அவன் பொண்டாட்டி பக்கம் மட்டுமே பேசுவான். புள்ளை இல்லைன்னு தானே இன்னைக்கு விஷேஷத்துல இவளை எந்த முறையும் செய்யவிடல இவங்க வீட்டுலன்னு நான் கேட்கக் கூடாதா? கேட்டா என்ன தப்பு.
அதுவும் நான் அர்ஜுன் கிட்ட பேசினா அதுக்கும் மரியாதை இல்லாம என்னை எதுத்துப் பேசுவாளா இவள்?
எல்லாரும் அளவுக்கு அதிகமா இடம் கொடுக்கவும் தான் எனக்கு இந்த வீட்டுல மரியாதையே இல்லாம இருக்கு.” பேசுவதெல்லாம் சரியா என யோசிக்கும் எண்ணம் கூட இல்லை. மடை திறந்த வெள்ளமென வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் கொட்டியிருந்தார் சாகரி.
“சாகரி, நீ ..” அருணாச்சலம் பேசத்தொடங்க, “மாமா நானே அத்தை கிட்ட பேசிக்கிறேன் மாமா. நாங்க மனசு விட்டு பேசிக்காதது கூட ஒரு காரணம். நான் பேசுறனே.” மருமகளின் கெஞ்சல் குரலுக்கு மாமனாரும் தலையசைக்க வேதா மேலும் பேசத் தொடங்கினாள்.
“சாரி மாமா. பேச வேண்டிய இந்த நேரத்திலயும் நான் பேசாம இருந்தா அதுவும் கூட தப்பு தான். நானே பேசிடுறேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாமா “
“என்ன? என்ன பேசப் போற நீ? ஒரு புள்ளய ஒழுங்கா பெத்துக்க முடியல? இங்க எனக்கு விளக்கம் சொல்ல வந்துட்ட?”
“கண்டிப்பா. என்னால பெத்துக்க முடியலங்குறது உண்மை தான் அத்தை. அதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்கு என்னால எதுவும் செய்ய முடியாதே.
வீட்டுல வேலை செய்யல, இல்ல நான் இந்த வீட்டுல ஒழுங்கா நடந்துக்கலன்னு எதுவும் குத்தம் சொன்னா, அது என்னுடைய தப்பு நானும் என்னை மாத்திக்குவேன். அதெல்லாம் என்னால முடியும்.
ஆனா நீங்க என் மேல சொல்லுற குத்தம், என்னாலயும் எதுவும் செய்ய முடியாதது. அதுவா நடக்குற வரை நம்ம காத்து இருக்கத்தான் வேணும்.
இல்லை கிடைக்கவே இல்லைன்னாலும் நம்ம மனச நம்ம தேத்திக்கத் தான் வேணும். அதைத் தவிர வேற வழி இல்லையே.” சொல்லும் போதே உடைந்த தன் குரலை சிறு கணைப்பில் சரி செய்தாள் வேதா.
இந்த நேரம் அவள் பேச வேண்டிய நேரம். நேரம் என்பதை விட அவசியம் என்பதே சரி. இனி இது போல் அவள் மனம் திறக்க வாய்ப்புகள் கிடைக்குமோ தெரியாது.
அவ்வாறான வாய்ப்புகள் ஒருவேளை கிடைத்தாலும் இன்றைக்கு இருப்பது போல் தெளிவான மனோநிலையோ அல்லது அமைதியான குடும்ப சூழலோ கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியே.
எனவே தான் நினைப்பவை அனைத்தையும் சொல்லிவிட நினைத்து சொல்லத் தொடங்கி இருந்தாள்.
“ஏன்? ஏன்? வேற வழி இல்லாமப் போகுது. பாக்குறியா? இப்ப நினைச்சாலும் என்னால என் மகனுக்கு வேற வழி அமைச்சுக் குடுக்க முடியும்.” ஆவேசமாகக் கூற அருணாச்சலத்திற்கு மட்டுமல்ல, அர்ஜூனுக்குமே கோபம் வரத் தொடங்கியது தன் அன்னையின் பேச்சில்.
“சாகரி. இதென்ன பேச்சு. அவ இந்த வீட்டுப் பொண்ணு. நம்ம தேடிப் போயி நம்ம பையனுக்காக கொண்டு வந்த மருமக. உனக்கு என்ன ஆச்சு? ஏன் நீ இப்படி எல்லாம் பேசுற? இன்னொரு முறை நீ இப்படி பேசுனா,.. வேண்டாம் பேசாம இரு. இதுக்கு மேல மறுபடி ஒரு முறை சொல்ல மாட்டேன்.”
“வேற என்ன செய்யச் சொல்லுறீங்க. நீங்களும் பார்த்தீங்க தானே. இவ தம்பி கல்யாணத்துல. கேட்காதவங்க பாக்கி இல்ல.
பாக்குறவங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே எனக்கு வாய் வலிச்சுப் போச்சு. என்னால இவளாட்டம் எல்லாத்துக்கும் சிரிச்சு கிட்டே பதில் சொல்லாம வர முடியாது.
நான் வேற என்ன செய்யட்டும். இவளைத்தானே கேட்க முடியும்.” கணவரிடமும் அடங்க மறுத்து பேசினார் சாகரி.
“நீங்க என் கிட்ட கேட்கலாம் அத்தை, ஆனா அதனால என்ன ஆகும்ன்னு யோசிச்சீங்களா? உங்க மேல எனக்கும், என்மேல உங்களுக்கும் வெறுப்பு தான் வளரும். இந்த வெறுப்பு என்னை விட உங்களை ரொம்பவே பாதிக்கும். இது தேவையா?
ஏன் அத்தை இவ்வளவு கோவமும் வெறுப்பும் என் மேல இருக்கே, நாளைக்கு எங்களுக்குக் குழந்தை பிறந்தா நீங்க பேசினதெல்லாம் உங்களுக்கு மறந்துடுமா? கண்டிப்பா நீங்க பேசினது எல்லாத்தையும் நான் மன்னிப்பேன். மனசுல வச்சுக்க மாட்டேன். ஆனா உங்களுக்கு உறுத்தலா இருக்காதா?
இது என் பேரன் இல்ல பேத்தின்னு சொல்லும் பொது, இப்ப நீங்க என்னைப் பார்த்துக் கேட்குற இந்தக் கேள்வி எல்லாம் உங்களுக்கு அப்போ ஞாபகத்துல வராதா?” வேதாவின் கேள்விகளெல்லாம் சாகரியை சாட்டை கொண்டு தாக்கியது.
“என்ன? என்ன பாதிக்கும்? மிரட்டுறியா என்னை? நீ என்னை வெறுத்தா எனக்கு என்ன? உனக்கு தான் நஷ்டம்.”
“உங்களை நான் ஏன் மிரட்டப் போறேன் அத்தை. ஆனா யோசிங்க. உங்களுக்கு இருக்க ஒரே ஒரு மருமகள் நான் மட்டும் தான். கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் இந்த வீட்டுக்கு இன்னொரு மருமக வர வாய்ப்பே இல்லை.
நீங்க இதையே தொடர்ந்து பேசி ஒரு வேலை நான் உங்களை வெறுத்துட்டா?
வயசான காலத்துல உங்களை எப்படியும் நாங்க தானே பார்க்கணும் அத்தை. அப்ப எனக்கு உங்களைப் பார்க்க பிடிக்காமப் போயிட்டா?
இப்பக் கூட தனிக்குடித்தனம் போகலாம்ன்னு முடிவெடுக்க எனக்கு ஒரு நிமிஷம் போதும்.
ஆனா உங்களுக்காகவும் மாமாவுக்காகவும் மட்டுமே நாங்க அந்த முடிவெடுக்கலை.
இல்லை நீங்க இப்படியே தொடர்ந்து பேசுவீங்கன்னா நாங்க தனியா போயிடறோம். ஆனா அப்புறம் எந்த காரணத்துக்காகவும் நாங்க இந்த வீட்டுக்கு திரும்ப வர மாட்டோம்.” வேதாவின் இந்த மிரட்டல் இல்லாத இந்த மிரட்டல் இம்மி அளவும் பிசகாமல் சாகரியின் மனதில் ஆழமாய் பதிந்து போனது.
ஆம் வேதா சொல்வதில் உள்ள ஒரு உண்மை சாகரியையும் சுடத்தான் செய்தது. மகள் இருந்தாலும் திருமணம் ஆகி கணவனுடன் இருக்கும் பொழுது, அவளுக்கும் அவள் குடும்ப உறவுகள் என இருக்க நீண்ட நாட்களுக்கு மகளுடன் இருப்பதென்பது நடக்கும் விஷயமல்ல.
மகன் மட்டுமே தன் பிற்காலத்தில் தன்னுடன் இருக்கக் கூடிய உறவு என்பது அவருக்கும் நினைவில் இருந்தது.
தான் குற்றம் சுமத்தியதற்காக ஒருவேளை தன்னை கவனிக்காமல் விட்டு விடுவாளோ, மெல்லிய பயம் எட்டிப் பார்க்கத் தொடங்கினாலும் முயன்று அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசத் தொடங்கினார்.