“அப்ப நீ என்ன சொல்ல வர்ற வேதா? மாமியார் நாலு வார்த்தை கூடப் பேசினா நீ அவங்களை பார்த்துக்க மாட்ட? அப்படித்தானே?”
ஆண்கள் இருவருக்கும் இவர்கள் பேசிக் கொள்வது எந்த நேரத்தில் எந்த திசைக்குத் திரும்பும் எனத் தெரியாமலிருக்க சாய்விருக்கையில் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
“நான் அப்படி சொல்ல வரல அத்தை. நீங்க இன்னமும் என்னை புரிஞ்சுக்கலைன்னா இனி இது தான் நடக்கும்ன்னு சொன்னேன்.
எனக்குக் குறை இருக்குன்னு தெரியப் போகத்தான் உங்களுக்கு என் மேல இவ்வளவு கோவம் வருது.
ஒருவேளை குறை உங்க பையனுக்கு இருந்திருந்தா? அப்பவும் இதே தான் பேசி இருப்பிங்களா?” வேதாவின் இந்தக் கேள்வியில் சாகரி சில நொடிகள் தடுமாற, கணவனிடம் இருந்து வந்த கேள்வியில் இன்னும் ஆடிப் போனார்.
“ஏன் சாகரி, வேதாவை இத்தனை கேள்வி கேட்குறியே, ரெண்டு வருஷம் உன் பையன் அமெரிக்காக்கு அவளை விட்டுட்டுப் போனானே அப்பவும் நீ ஊருக்கெல்லாம் பதில் சொல்லத்தானே செஞ்ச?
இல்ல வேதாவுக்கு நடந்த மாதிரி ஒருவேளை நம்ம ஸ்ரீக்கு நடந்திருந்தா? அப்பவும் இப்படித்தான் பேசி இருப்பியா? கேக்றவங்களுக்கு பதில் சொல்ல மாட்ட?
இன்னைக்குப் பேசுனதோட இதை முடிங்க. இனி இந்த மாதிரி பேச்சோ இல்ல வாக்கு வாதமோ நம்ம வீட்டுக்கு வரக் கூடாது. புரியுதா?” அதற்கு மேல் இவர்களின் பேச்சை வளர்க்க அருணாச்சலம் விரும்பவில்லை.
“மொத்தத்துல நான் இனி பேசிக் கூடாது அவ்வளவு தானே. இனி வாயே தொறக்கல. போதுமாடி யெம்மா. உன்னால என் புருஷனும் என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டாச்சு. இனி நான் எதுவும் பேசலங்க. நீங்க போங்க. நானும் இதோ வர்றேன்.” என்றவாறு கணவனை அறைக்கு அனுப்பி தானும் எழுந்து கொண்டார்.
“அத்தை உங்கள ஹர்ட் பண்ணனும்ன்னு நான் இதெல்லாம் சொல்லல. நீங்க புரிஞ்சுக்குங்க ப்ளீஸ். நீங்க என்னோட அம்மா தம்பின்னு எல்லாரையும் பேசீட்டிங்க. இன்னும் இன்னும் பிரச்சனையை வளத்தா நல்லதில்லன்னு தான் நான் இன்னைக்குப் பேசினேன். மத்தபடி நான் எதுவும் மனசுல வச்சுக்கல அத்தை.”
“அதான் நீ சொன்னதெல்லாம் கேட்டு உங்க மாமா கூட ஒன்னும் சொல்லலையே அப்புறம் என்னம்மா. நீ சந்தோஷமா போய் தூங்கு.” என்றபடி தனதறைக்குச் சென்ற சாகரியின் மனதிலும் குரலிலும் இருந்தது என்ன என இருவருக்குமே தெரிந்திருக்க வில்லை.
“வேதா போதும் இனி இந்தப் பேச்சு. வா தூங்கப் போகலாம். இப்பவே ரொம்ப லேட்.”
“ஹ்ம்ம் போகலாம் அஜூ.” என்று சொன்னாலும் இன்று ஏனோ தூக்கம் வரும் என்ற எண்ணமே இல்லை வேதாவிற்கு. ஆனாலும் அர்ஜூனுடன் தனதறைக்கு சென்றாள்.
தூங்க வந்த சாகரிக்கும் மனமெல்லாம் இன்றைய பேச்சுக்கள் தான் நினைவில். மகனும் மருமகளும் பேசியதோடு கணவரும் இப்படிப் பேசுவார் என்ற எண்ணம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை.
இவர்கள் பேசியதெல்லாம் கேட்டிருந்தாலும் சாகரியின் மனம் ஏனோ அவர்கள் கருத்தை இன்னமும் முழுவதுமாக ஏற்க மறுத்தது.
‘நான் என்ன தப்பா பேசிட்டேன்னு எல்லாரும் என்னத் தப்புன்னு சொல்லுறாங்க. ஊருல உலகத்துல நடக்குற மாதிரி கொடுமையா படுத்தினேன். நாலு வார்த்தை கூடப் பேசினத்துக்கே எனக்கு இத்தனை கேள்வி.
எல்லாம் இந்தக் காலத்துல நம்ம தான் அடங்கிப் போகணும் போல. ஒருவேளை அவ சொன்ன மாதிரி நாளைக்கு தனியாப் போறேன்னு கிளம்பிட்டா அதுக்கும் கேக்குறவங்களுக்கு நான் தான் பதில் சொல்லணும்.
ஹ்ம்ம், பாக்கலாம் நாம் இதைப் பத்தி பேசாம இருந்தா என்ன தான் நடக்குதுன்னு. என்னை சத்தம் போட்டுட்டு அப்பாவும் பையனும் நல்லா தூங்குறாங்க. நமக்கு மட்டும் தூக்கம் தொலைஞ்சு போச்சு.’ என்று மனதில் எண்ணியபடி புரண்டு புரண்டு படுத்தவர் விடியலில் எப்போதோ தூங்கி இருந்தார்.
அறையில் வேதா தூக்கம் இன்றி தவிக்க, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளை ஏறிட்டான் அர்ஜுன்.
“இல்ல அஜூ என்னவோ ஒரு மாதிரி, தப்பு பண்ணின பீல். இன்னைக்கு அத்தைய ரொம்பப் பேசிட்டேனில்ல. அது ஒரு மாதிரி பட படன்னு டென்ஷன். சொல்லத் தெரியல விடுங்க. ஆனா தூக்கம் மட்டும் கண்டிப்பா வரலை.”
“கொஞ்ச நேரம் வெளில வேணும்ன்னா பால்கனிக்கு போகலாமா? உனக்கும் அங்க கொஞ்ச நேரம் ஊஞ்சல்ல இருந்தா ரிலாக்ஸ்டா இருக்கும்.” என்றவன் அவளை கையோடு மேல் மாடத்திற்கு அழைத்துச் சென்றான்.
ஊஞ்சலில் அவன் அருகில் அமர்ந்தவள் கை அவன் கைக்குள் தஞ்சம் புக, அவனின் மார்பில் முகம் சாய்த்துக் கொண்டாள்.
அர்ஜுன் மற்றொரு கை கொண்டு அவளை அணைக்க, அவனின் அந்த அரணுக்குள் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அங்கு மௌனம் மட்டுமே சூழ்ந்திருக்க, பிறை நிலவின் சிறு ஒளிக் கற்றை வெளிச்சம் அவர்கள் மேனி தீண்ட அவளின் பிரியமான ராதா கிருஷ்ணனை விழி அகலாது பார்த்திருந்தாள்.
சிறிது நேரம் அதையே பார்த்திருந்தவள், “ஏன் அஜூ, நான் இந்த கிருஷ்ணனோட ராதாவாவே இருந்தா என்ன? ஏன் எல்லாரும் யசோதாவாக ஆசைப்படணும். யசோதாவை விட ராதா தானே நிறைய புண்ணியம் பண்ணிருக்கணும். அவன் கூடவே எப்பவும் இருக்காளே?”
அவள் கேள்வியின் சாராம்சம் சட்டென அர்ஜுனுக்கு விளங்க வில்லை. அவன் புரிந்து கொண்டதிலிருந்து பதில் சொன்னான்.
“இல்ல டா சக்கரை, ராதாவோட லவ் சேரல தானே. அவ கடைசி வரை கிருஷ்ணனை நினைச்சு பைத்தியமா இருந்து செத்துப் போனாளாம். ஆனா யசோதா அப்படி இல்லையே. அந்த ப்ருந்தாவனத்தையே தன்னோட அன்பால கட்டிப் போட்ட கிருஷ்ணனையே உரல்ல கட்டி வச்ச அம்மாவாச்சே அவங்க.”
“நான் அத சொல்லல அஜூ, நான் என் உங்க மனைவியா மட்டுமே இருந்து உங்களைக் காதலிச்சு சந்தோஷமா வாழ்ந்து ஒரு நாள் செத்துப் போகக் கூடாதா?
அந்த யசோதா மாதிரி ஒரு கிருஷ்ணனைப் பெத்து வளர்த்தா தான் எனக்கு மதிப்பா?
இதெல்லாம் யோசிக்க யோசிக்க எனக்கு பைத்தியமே பிடிக்குது அஜூ. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்காட்டி அவங்க வாழ்க்கை முழுமையானதா இருக்காதா?
ஏன் நம்ம நாளைக்கே ஒரு குழந்தையை தத்தெடுத்துகிட்டா அப்பவும் அந்தக் குழந்தைக்கு நான் அம்மா தானே? அந்தக் குழந்தை என்னை அம்மான்னு தானே நினைக்கும்.
நானே பெத்துக்கிட்டாதான் அம்மா ஆகணுமா?” இன்னும் ஏதோ பேசும் முன்னே குரலும் கண்களும் உடைய அர்ஜுன் அவன் மார்பின் ஓரம் உணர்ந்த விழி நீரின் வெம்மை அவன் இதயத்தையும் சுட்டது.
“ஏன் டா சக்கரை என்னென்னமோ பேசுற? அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ அம்மாகிட்ட பேசின மாதிரி தைரியமா மட்டும் தான் இருக்கணும். என்ன நடந்தாலும் உன் அஜூ உன் கூடவே இருப்பான் தானே . அப்புறமென்ன?
ஹ்ம்ம், இப்படி எல்லாம் கண்ணக் கசக்கக் கூடாது. சரியா?” அவளின் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் தன் இதழ்களால் அவளின் கண்ணீருக்கு விடை கொடுத்து அவளின் இதழ்களில் தன் இதழ்களைப் பொருத்தி ஆறுதல் தரத் தொடங்கினான்.
இதழ்களின் இன்பம் தொடரும் முன் வேதா மேலும் அவளின் மனதில் உள்ளதை பேசத் தொடங்கினாள்.
“ஹ்ம்ம், இப்பவெல்லாம் நீங்க இப்படி கிட்ட வந்தாக் கூட மனசு தானாவே நாளை கணக்கு பண்ணுது அஜூ. பதினாலு நாள் ஆச்சு மிட் சைக்கிள், ஓவலேஷன் டே அப்படி இப்படின்னு.
அன்பா நம்ம சேர்ந்து இருக்கதுக்கும் இப்படி குழந்தை குழந்தைன்னு கடமை மாதிரி, அது ஏதோ ஒரு ஃபோர்முலால கணக்குப் போட்டு ரிசல்ட் எடுக்க ட்ரை பண்ணுற மாதிரி ஏதேதோ தோணுது அஜூ.
இதெல்லாம் இப்ப கொஞ்ச நாளா என் மனசுல எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கு அஜூ.
ஆசையா சந்தோஷமா குடுக்குற ஒரு முத்தம் கூட ஏதோ எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதுற பீல் தான் எனக்கு வருது அஜூ.
அதெல்லாம் விட சில நேரம் நீங்க என் பக்கத்துல வரும் போது குழந்தைக்காகத்தான் வர்றீங்கன்னு தோணும். எனக்குப் பிடிக்கல இல்ல என்னால முடியலன்னாக் கூட உங்க கிட்ட வேணாம்ன்னு சொல்லத் தோணல. இதெல்லாம் எவ்வளவு கொடுமையா கஷ்ட்டமா இருக்கு தெரியுமா அஜூ?”
“வேதா ப்ளீஸ் போதும். இதுக்கு மேல நீ எனக்கு எதுவும் சொல்லாத டா. நானும் உன்னக் கஷ்டப் படுத்தின பீல் வருது.
இனி இதெல்லாம் எதுவும் வேண்டாம் விடுடா. நம்ம லைப் நம்ம லீட் பண்றோம். நமக்கு எப்ப குழந்தை பிறக்குமோ பிறக்கட்டும். இனி கண்டிப்பா நாளைக் கணக்குப் பண்ணி, குழந்தைக்காகன்னு நமக்குள்ள எதுவும் வேண்டாம்.
அப்படி கடமைக்கு எதுவும் செய்யாம அன்பாலே ஆசையா சேர்ந்து நமக்குன்னு ஒரு குழந்தை எப்ப வருதோ அப்ப வரட்டும்.
நம்ம என்ன மனநிலைல இருக்கோமோ அது தான் நம்ம குழந்தை உருவாகிற மனநிலைன்னு நீ தானே சொன்ன. அப்ப உன் அஜுக்கு உன்னோட அன்பு மொத்தமும் சேர்த்துக் கொடுக்குற குழந்தை வந்தாப் போதும்.
இன்னைக்கு ரொம்ப அதிகம் பேசிட்டோம் . மணி இப்பவே ரெண்டுக்கு மேல இருக்கும். வாடா தூங்கலாம்.” என்றவன் எழுந்து அறைக்குச் செல்லத் தயாரானான்.
“தூக்கம் வரல அஜூ.”, சிறு பிள்ளையாய் அவள் சினுங்க அவளைக் கைகளில் ஏந்தியவன் பூங்குவியலாய் அறைக்குள் சென்று மெத்தையில் கிடத்தினான்.
அவன் இதழ்கள் முணுமுணுத்த தாலாட்டில் அவளின் கவலைகள் மறந்து வேதாவிற்குத் தூக்கம் தழுவியது.
பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே