“ஹ்ம்ம், கல்யாணம் குடும்பமென்று வந்தால் எல்லாமும் நம்ம பொறுப்புக்கு வந்துவிடும். நம்மால் முடிந்த அளவு எல்லாம் செய்தும் குறை சொல்லும் போது மனசு சில சமயம் நிறைய வலிக்கும். நம்ம வீட்டில் அப்படி இல்லை என்றாலும், பல பெண்கள் வாழ்க்கை இப்படித்தான். நீ எங்கேயும் சமாளிச்சுக்குவடா. ஆனால் அம்மாவுக்கு எப்பவும் ஒரு சின்ன பயம் அவ்வளவு தான்.” மனதில் உள்ளதை மறைக்காமல் மகளிடம் பகிர்ந்தாள் சீதா.
“காபி கொடுக்க வரும் போது நான்தான் பார்த்தேனே. உனக்கு மாப்பிள்ளை போட்டோ எல்லாம் காட்டினாளே. உன்கூட தனியாப் பேசணும்ன்னு தான் உள்ளே வந்தாள் போல.”
‘என்னது மாப்பிள்ளை போட்டோ காட்டுனாங்களா? ஓ! அம்மா நேத்து நான் போட்டோ பார்த்துட்டேன்னு நினைச்சுட்டாங்க போல.’ வேதா தன் எண்ணங்களில் சுழல,
“என்ன மா அமைதியாயிட்ட. மாப்பிள்ளையைப் பிடுச்சுருக்குதானே?” சந்தேகமாய்க் கேட்ட சீதா மேலும், “நேற்று பார்க்க வந்தவங்க பிடிச்சுருக்குன்னு பேசவும் எங்களுக்கும் மறுக்க முடியலை. அப்பாக்கும் எனக்கும் வேண்டாமென்று சொல்லவும் தோணலை. அப்பாவுக்கு பையனோட அப்பாவை ரொம்பப் பிடுச்சுப் போச்சு டா.
நீயும் அவங்க கிட்ட எல்லாம் சந்தோஷமாய் பேசவும் எல்லாம் நல்லபடியா பேசி முடிச்சாச்சு. ஆனால் உன்கிட்ட தனியா ஒரு வார்த்தையும் கேட்கலைன்னு உங்க அப்பாவுக்குக் கொஞ்சம் வருத்தம். நைட்டும் பெருசா ஒன்றும் பேசலை யாரும். ஆனாலும் உன்கிட்ட கேட்காமல் இருக்கக் கூடாதில்ல. உனக்கு இஷ்டமில்லாதது எதுவும் நாங்க செய்ய மாட்டோம் வேதா. பிடிக்கலைன்னாலும் கண்டிப்பா சொல்லிவிடு. யோசிக்காத.” என்று மகளின் பதிலுக்காக காத்திருந்தார் சீதா.
‘நீங்க குறுக்க வந்து, நான் பார்க்க வேண்டியதையும் கெடுத்துட்டிங்கன்னு இனி எப்படிச் சொல்ல. அஜுவும் என்னவோ செய்யிறாங்க. சரி சமாளிப்போம்.’ மனதில் சொல்லியபடி “ம்மா சும்மா சும்மா ஏம்மா இதையே கேக்குறீங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. போதுமா.” வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் வந்தது மகளின் பதில்.
“சந்தோஷமா இருக்கு வேதா. இனி அடுத்தடுத்து நிறைய வேலை இருக்கு. நீ அவங்க கொடுத்த மாப்பிள்ளை போட்டோவை மறக்காமல் ஐயா அப்பத்தாவுக்கு அனுப்பிவிடு.”
“சரிங்கம்மா” எனச் சரியில்லாத குரலில் சொன்னாள். இவற்றை எப்படிச் சமாளிக்க என எண்ணமிட்ட மனதில் அவளின் மன்னவன் நினைவு. உதடுகள் நீண்டு விரிய, இளங்காற்று இன்னும் இனிமையாய் இதயத்தினுள்ளே.
“அவங்க அம்மாதான் கொஞ்சம் படபடன்னு பேசுறாங்க. மத்தவங்க எல்லாம் அமைதிதான் போல. எல்லாம் நல்லபடியா இருந்தால் நல்லது.” என்ற சீதாவுடன் பேசியபடி காலை வேலையை முடித்து கல்லூரிக்கு வந்தாள் வேதா.
கல்லூரியிலும் ரம்யாவின் கிண்டல்களும் கேலிகளும் வேதாவை விட்டு வைக்க வில்லை.
“என்ன ரிக் எனக்கு எல்லாம் எப்பக் காட்டுவ உங்க ஆள?”
“நான் பார்க்கும் போது உங்களுக்கும் கண்டிப்பா காட்டுவேன் க்கா.” உண்மையைச் சொன்னாலும் யாருக்கும் புரியப் போவதில்லை எனவே மனதில் தோன்றியதை மறைக்காமல் சொன்னால் வேதா.
“ஹ்ம்ம் தேதி எல்லாம் எப்ப முடிவு பண்ணுவாங்க. இப்பவே டிபார்ட்மெண்ட்ல சொல்லி வச்சுடு ரிக். இல்லைன்னா லீவு கிடைக்கக் கஷ்டமாப் போயிடும்.”
“காலையில் மேம் பார்த்துட்டு பேசிட்டுத்தான் வந்தேன். பிரச்சனை எதுவும் இருக்காதென்று நினைக்கிறன். பார்க்கலாம்.”
“சரி சரி அதெல்லாம் விடு, நீ சொல்லு. மாமியார் நாத்தனார் எல்லாம் ஓகேவா?” என்றால் ரம்யா.
“நாத்தனார் ஓகே தான். மாமியார் மட்டும் மாமியார் ரகம் தான். கொஞ்சம் பயமாவே இருக்குக்கா”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல வேதா, சிலர் பார்க்க அப்படி இருப்பாங்க. ஆனால் பழகியதும் ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க. நீ அங்க போனதுக்கு அப்புறம் பார். உனக்கே பிடித்துப் போயிடும். அவங்க மேலேயும் உனக்கு அன்பு வரும். ஒருத்தவங்க கூட இருக்கும் போது மட்டும்தான் அதெல்லாம் புரியும். சின்னப் பிள்ளை மாதிரி இதென்ன பயம்ன்னு சொல்லுற” அக்காவாய் அறிவுரை சொன்னாள் ரம்யா.
“சரிக்கா.” என்ற வேதா வகுப்பு எடுக்கச் சென்றாள்.
அன்றைய நாள் அழகாய் கரைய, கல்லூரி முடியும் முன் வேதாவிற்கு அழைப்பு வந்தது. பார்க்க ஒருவர் வந்திருப்பதாக. யார் என்று அந்தப் பெயரைக் கேட்ட நிமிடம் உடலில் இன்ப அதிர்வுகள். மெல்லிய நடுக்கம். மின்சார மோதல்கள். இன்னும் பெயர் சொல்லத் தெரியாத பல உணர்வுகள். வேதா சிலையாய் நின்று விட “மேம் அவங்க பேர் அர்ஜுன் அருணாச்சலம்னு சொன்னாங்க. கொரிடோர்ல காத்திருக்காங்க.” என மீண்டும் ஒரு முறை சொல்ல, ” இதோ பார்க்கிறேன்” எனத் தன்னை ஒரு முறை சரி செய்து கொண்டு நடக்கத் தொடங்கினாள். கால்கள் பின்ன மனம் நிற்காமல் ஓட என உடலும் மனமும் இருவேறு திசையில் பயணம் செய்தது.
கண்கள் இரண்டும் அவனைத் தேட, இதோ அவள் பார்வை அவன் மேல் நிலைத்தது. கண்டு விட்டாள் நேற்றெல்லாம் கண்ணாமூச்சி ஆடியவனை. மனம் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டது. ‘அஜூ’. கால்கள் தன்னால் நின்றுவிட, அவனை மீண்டும் தலை முதல் அடி வரை முழுவதுமாகப் பார்த்தாள்.
இம்முறை பொறுமையாக, மனதில் பதியவைக்க, கண்களுக்குக் காட்டித்தர. அர்ஜுன் கண்கள் கைப்பேசியில் நிலைத்திருக்க, அதில் ஏதோ செய்து கொண்டிருந்தான். வெளிர் நீல நிற ஜீன்ஸ் அடர் நீலத்தில் பிராண்டட் போலோ ஷர்ட், ஆறடியைத் தொட்டிருப்பானோ எனும் அளவு நீண்ட உயரம், புது நிறம், அடர்ந்த கேசம், மீசை தாடி இல்லா வழுவழு முகம், மென்பொருள் பொறியாளன் என அடையாளம் காட்டும் உடல் மொழி. மொத்தத்தில் அழகன் என மனம் கொஞ்சிக் கொண்டது.
சிறு அசைவோ இல்லை ஒலியோ சட்டென நிமிர்ந்தான் அர்ஜுன். இள மஞ்சள் நிறப் புடவையில் நாள் முழுவதும் வேலை செய்து ஓய்ந்த தோற்றத்தில் அவன் முன் வந்து நின்றாள் வேதா.
கண்டதும் கண்கள் இரண்டும் உறவாடத் தொடங்கியது. வேதாவின் இதயம் எகிறிக் குதிக்கும் அளவு மகிழ்ச்சியில் திளைக்க, மூச்சுக்கள் ஸ்வரம் தப்ப, புன்னகை விரிய, வெட்கம் போட்டியிட்டு பார்வையைத் தாழ்த்தச் சொல்ல, அவனைக் காணும் ஆவல் பொங்க மெல்ல நடந்து வந்தாள்.
“ஹாய் வேதா” என்றான். “ஹாய்” பேசினாளா இல்லை காற்று மட்டும் தான் வந்ததோ அவளுக்கே சந்தேகம் தான்.
“என்ன ஆச்சு, நீ இவ்வளவு மெல்லப் பேசினால் பசங்க எப்படிப் படிப்பாங்க?” ஏதோ பல வருடப் பழக்கம் போல் சரளமாய்ப் பேசியவனைப் பார்க்க இன்னும் இன்னும் வார்த்தைகள் தடுமாறின.
“இல்லை எப்பவும் இப்படி இல்லை. நீங்க? இங்க? உங்க வீட்டில் என்ன சொல்லீட்டு வந்தீங்க?” ஒரு வழியாக பேசத் தொடங்கினாள்.
“வீட்டிலேயா? நான்தான் ஆபீஸ்ல இருக்கேனே வேதா. வீட்ல என்ன சொல்லணும்.” மெல்லிய நகைப்பொலியுடன் சொன்னான் அர்ஜுன்.
அவன் பேசியது புரியவே சில நொடி ஆனது. வீட்டிற்கு தெரியாமல் வந்தானா? பயம் கண்களில் தெரிய, அவசரமாய் “சொல்லுங்க, எனக்கு காலேஜ் இன்னும் முடியலை. இங்க நின்று பேசினால் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் பார்ப்பாங்க.”
“நான் உன்னைப் பார்த்து பேசலாம்ன்னு வந்தேன். கீழே கார் பர்க்கிங்ல இருப்பேன். இன்னும் பத்து நிமிஷம் தானே. ஒரு பிரச்சனையும் இல்லை. நான் வெயிட் பண்றேன். நீ முடிச்சுட்டு வா. பேசலாம்.” என்றான் அர்ஜுன்.
“ஓகே, இதோ கொஞ்ச நேரம் வந்திடுவேன்.” என்று சொல்லித் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
என்ன சொல்வது செய்வது என்று எதுவும் தெரியாத புரியாத நிலை. பூமி தலைகீழாய் சுற்றும் உணர்வு. எல்லாம் மறந்து அர்ஜுன் மட்டுமே அவளின் நினைவில். ‘இப்போது ஏன் வந்தான், என்னால் ஒழுங்காகப் பேசக்கூட முடியாது. பஸ் பிடிக்கணும்.’ செல்லக் கோபம் வந்தது.
அவள் எண்ணங்களில் சுழல நேரமும் கரைந்தது.
“என்ன ரிக் இன்னும் ரெடி ஆகலையா? பஸ் மிஸ் ஆயிடும் வா போகலாம்” ரம்யாவின் குரலில் நிமிர்ந்தாள் வேதா.
“இல்லக்கா, கீழே அர்ஜுன் வெயிட் பன்றாங்க.”
“ரிக் நிஜமாவா சொல்ற, பார்த்தியா நீ?”
“பேசீட்டுதான் வந்தேன் க்கா”
“சரி சரி வா போகலாம்”
இருவரும் பேசியபடி வர மகிழுந்தில் சாய்ந்து நின்று இருவரையும் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.
“ஹாய் அர்ஜுன் எப்படி இருக்கீங்க, உங்களை எதிர்பார்க்கல?”
“நான் வேதாவைப் பார்க்க வந்தேன். அதனால் நானும் உங்களை எதிர்பார்க்கல.”
“உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ரம்யாக்கா?”
“ஆமா ரிக், என் ஹஸ்பண்ட் கூட வேலை செய்றாங்க. முன்னமே சில முறை பார்த்திருக்கிறேன். தெரியும்” அறிமுகம் தேவையில்லை எனச் சொன்னாள் ரம்யா.
“ஓ, எனக்கு மட்டும்தான் தெரியாது போல” வாய்க்குள் முணுமுணுத்தாள் வேதா.
“என்ன சொல்ற?” காதில் விழாததால் மீண்டும் கேட்டாள் ரம்யா.
“இல்லக்கா ஒண்ணுமில்ல”
ஆனால் அர்ஜுன் கேட்டுவிட்டான் என்று அவன் சிரமப்பட்டு அடக்கிய புன்னகையே சொல்லியது. அவள் மேல் பதிந்த அவன் கண்கள் நோடிப் பொழுதும் அகலவில்லை. அந்தக் கண்களின் தாக்கம் அவளை நெளியத்தான் செய்தது.
“சரி பார்க்கலாம் அர்ஜுன், எங்களுக்கு பஸ்சுக்கு டைம் ஆச்சு.” என்றாள் ரம்யா.
“நீங்க கிளம்புங்க ரம்யா. வேதாவை நான் ட்ரோப் பண்ணிடுறேன்” வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டான். ஆனால் பெண்கள் இருவருக்கும் அதிர்ந்த பார்வை மட்டுமே. இது சரியா என ஒரு பட்டிமன்றமே வேதாவின் மனதில். ஆனால் மறுக்க மனம் இல்லையா? இல்லை அவனுடன் பேசத் துடிக்கும் ஆசையா? எதோ ஒன்று அவளும் அதற்குச் சம்மதிக்கும் உடல் மொழியுடன் ரம்யாவைப் பார்த்தாள்.
“சரி பார்த்துப் போய்விட்டு வா. வீட்டுக்குப் போனதும் எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போடு ரிக், நாளைக்குப் பார்க்கலாம். ஓகே, இனி அடிக்கடி மீட் பண்ணலாம் அர்ஜுன்.”
“அடிக்கடியான்னு தெரியாது, பட் பார்க்கலாம். கண்டிப்பா உங்க ப்ரெண்ட பத்திரமா அவங்க வீட்டில் ட்ரோப் பண்ணிடுவேன். டோன்ட் ஒர்ரி. வேணும்ன்னா நானும் பிரகாஷுக்கு டெக்ஸ்ட் பண்ணவா?” கேள்வி சரியாக இருந்தாலும் நக்கல் செய்யும் குரலில் கேட்டான்.
“அதெல்லாம் வேண்டாம். நான் கிளம்புறேன்” அவனின் கேள்வியில் அவர்கள் இருந்த இடத்தை விட்டு ஓடி இருந்தாள் ரம்யா.