வாழ்க்கைப் பயணத்தில் தன்னுடன் இணையப் போகும் இணையுடனான முதல் தனிமை. முதல் சந்திப்பு. இருவருக்குமான பிரத்தியேக நிமிடங்கள். அந்த நிமிடம் மௌனத்தின் ஆட்சி தொடர, கண்கள் மட்டுமே பேசிக் கொண்டனவோ?
அவளின் இந்தப் பார்வையிலிருந்த தன் மீதான விருப்பம் நிச்சயம் படித்து விட்டான். இனி அவள் தனக்கானவள் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்த சிறு பயமும் விலகிப் போனது. இந்தத் தனிமையின் சிறு சிறு தவிப்புகளும், முதன்முறை என்ற படபடப்புகள் மட்டுமே அவனிடம்.
இப்பொழுது வேதாவின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைப் படிக்க முயன்று கொண்டிருந்தான் அர்ஜுன். பெண்ணின் மனமோ, இந்த சந்திப்பின் கணத்தைத் தாளாமல் உலகில் உள்ள உணர்வுகள் எல்லாம் ஒன்றாய் சங்கமிக்க அர்ஜுன் முகம் பார்த்தபடி அவன் என்ன சொல்வான் எனக் கேட்கத் தயாராய் நின்றிருந்தாள்.
“போகலாம் வேதா, ஏறு” மௌனத்தைக் களைத்தான் அர்ஜுன்.
ஆனால் வேதாவின் தயக்கம் அவள் முகத்தில் தெரிய, “என்ன வேதா, கெட் இன். போகலாம். இங்கேயே இப்படியே நின்று என்ன பேச? நீ வீட்டுக்குப் போக வேண்டாமா?”
“இல்லை போகணும். ஆனால் உங்க கூட, நீங்க ஏன் வீட்டுக்கெல்லாம் சொல்லாமல் வந்தீங்க?” ஏதோ சொல்ல முயன்றாள்.
“நான் என்ன ஸ்கூல் டைம்ல கிளாஸ் கட் பண்ணிட்டு ஊரை சுத்துறேனா? இருபத்தொன்பது வயசில் அதுவும் அம்மா அப்பா பார்த்த பெண்ணைப் பார்த்துப் பேசவும் அவங்க கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா? என்ன சொல்ற வேதா?” கோபமா இல்லை சாதாரண பாவமா? புரியவில்லை. ஆனால் நிச்சயம் அழுத்தமான வார்த்தைகள்தான்.
“அச்சோ நான் அப்படி சொல்லலை.” தயக்கம் இருந்தாலும் கொஞ்சம் தெளிந்த மனநிலை.
“வா போகலாம்.”
ஒரு வழியாக மகிழுந்தில் தங்களின் பயணத்தைத் தொடங்கினர். மீண்டும் மௌனம் தொடர, அதைக் களைத்தாள் வேதா.
“கொஞ்சம் இந்த காலேஜ் டிராபிக் தாண்டிட்டா டென்ஷன் இல்லாமல் பேசலாம். இல்லன்னா கவனம் சிதறுதே. உனக்கு பாட்டு போடவா?” என்ற படி பாடலை ஒலிக்க விட்டான்.
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனிச்உ சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனித் தூவும் நிலவே நில்
“இவ்வளவு பழைய பாட்டும் கேட்பீங்களா?”
“கொஞ்சம் கேட்பேன். பழைய பாட்டும் இருக்கும், ஏன் உனக்கு பிடிக்கலைன்னா வேற மாற்றவா?” அவளிடம் கேட்டாலும் மனதில் ‘இப்பொழுதெல்லாம் சர்க்கரை வரும் பாட்டுகள் மட்டுமே கேட்கிறேன்’ என சொல்லிக் கொண்டான்.
“இல்லையில்லை, வீட்டில் எனக்கும் கேட்டுப் பழக்கம்.”
“ஹ்ம்ம், வேதவாக்கு ஓகேவா? “
“எது பாட்டா? இல்லை இந்த சீட்டா?”
“ஹா ஹா ஹா கண்டிப்பா உனக்கு வசதியா இல்லைன்னா பாட்டையும் மாத்திடுவேன், சீட்டையும் மாத்திடுவேன். ஆனால் டிரைவரை மாற்ற முடியாது.”
“ஏன் எனக்குப் பிடிக்கலைன்னா ட்ரைவரையும் மாற்றலாமே?” சிரித்தபடி கேட்டாள் வேதா. ஆனால் மாற்றும் எண்ணமில்லை எனத் தெளிவாகப் புரிந்தது அவனுக்கும்.
“பிடிக்காமல் போகாதென்று ஒரு நம்பிக்கை. மனசில் ஒரு தைரியம்ன்னு கூடச் சொல்லலாம். அதனால் தானே இப்படி” என இருவரையும் சுட்டிக் காட்டினான்.
“கண்டிப்பா தைரியம் தான். இல்லைன்னா எனக்கு உங்க போட்டோ கூட காட்டாமல் இருந்திருப்பீங்களா?” தயக்கம் எல்லாம் தகர்ந்து பேச்சானது சரளமாக வரத்தொடங்கியது.
“எனக்கும் ஆச்சர்யம் தான். பிளான் சொதப்பாமல் இருக்குன்னு. உங்க வீட்டில் போட்டோ கேட்கலையா?”
“அவங்க எல்லாருக்கும் நேத்து உங்க அப்பா போட்டோ காட்டிட்டாங்க. நான் மட்டும்தான் பார்க்கலை” ஏமாற்றம் அவளின் குரலில். “ஆனால் ஏன் நீங்க எனக்கு மட்டும் போட்டோ காட்டலை. உங்க எப்.பிலையும் முகத்தை மறைச்சிட்டிங்க” குறை பட்டுக் கொண்டாள்.
“அதற்காகத்தான் இன்றைக்கு வேதாவைப் பார்க்க ஓடி வந்துட்டேன். இனி கண்டிப்பா மறைக்கக் கூடாதுன்னு.” என்றபடி மகிழுந்தைச் சாலையின் ஓரம் நிறுத்தி இருந்தான்.
“சரி சொல்லுங்க, ஏன் நேத்து அப்படி செஞ்சீங்க. காலையிலே அப்பத்தாவுக்கு போட்டோ அனுப்புன்னு அம்மா சொன்னாங்க. நான் சரியென்று சொல்லிவிட்டு அனுப்பாமல் வந்துவிட்டேன். ஈவினிங் வந்து அம்மாகிட்ட பேசலாம்னு இருந்தேன். ” அவனைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமெல்லாம் இல்லை என்றாலும், அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
“வேதா என்ன முதல் முதல்ல பார்க்கும் போது என்ன நினைக்கிறான்னு எனக்கு அவள் முகத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கணும். அது எல்லாரும் இருக்கும் போதும் பார்க்க முடியாது. நீ என்ன ஏற்கனவே போட்டோல பார்த்துட்டுப் பார்த்தாலும் அந்த உணர்வுகள் சரியாய் தெரியாது.
எனக்கு, எனக்கே எனக்கான உன்னுடைய உணர்வுகளை நான் நேரில் பார்க்கணும். உன்னுடைய முகத்தில் வந்து போகிற உணர்வுகளைப் படிக்கணும். அதில் இருக்கும் வெட்கத்தைப் பார்க்கணும். இப்படி நிறைய பார்க்கணும்ன்னு ஒரு ஆசை. கொஞ்சம் பேராசைன்னு வச்சுக்கோயேன். அதற்காக மட்டும் தான் இந்த விளையாட்டு.
நீ என்ன பார்த்தப்போ உனக்கு விருப்பமில்லாமல் இருக்குன்னு தெரிந்திருந்தால் கண்டிப்பா இந்த ப்ரபோசல் கேன்சல் பண்ணிருப்பேன். ஆனால் இனி அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நம்புறேன். நான் பார்க்க ஆசைப்பட்டதையும் பார்த்துட்டேன். வேதமும் எனக்கு விளங்கத் தொடங்கியாச்சு. அதனால் இனி நீ பார்க்கவும் தடை இல்லை. முகம் தெரிகிற மாதிரி போட்டோ வச்சாச்சு. ” நீளமாகப் பேசி முடித்தான் அர்ஜுன்.
விழி அகலாமல் வேதா அவனையே பார்த்திருந்தாள். என்ன சொல்கிறான் இவன், ஒருவேளை எனக்குப் பிடிக்காமல் போயிருந்தால்? என்ன செய்திருப்பான். அவன் சொன்னது எல்லாம் என்ன மாதிரியான உணர்வுகள் என அறிய முயன்றாள். முயற்சி மட்டுமே. நிச்சயம் கண்டறிய முடியவில்லை.
காதலின் உணர்வுகள் சொல்ல ஆயிரம் ஆயிரம் கவிகள் உண்டு. ஆனால் இவன் அல்லது இவள் தான் உன் துணை என்று பெற்றவர்கள் காட்டும் போது அதை ஏற்கும் உணர்வுகள், மிகவும் நுட்பமானவை. புரிந்துகொள்ள நுணுக்கமானவை.
அத்தகைய திருமண ஏற்பாடுகளில் ஆண் பெண் இருவருக்கும் மனம் ஒத்து காதலின் உணர்வுகள் பூப்பது என்பது நிச்சயம் கடவுளின் அதிசயங்களில் ஒன்றா அல்லது தமிழனின் வாழ்வியலில் வழி வழியாய் வரும் சிறப்பா என்பது விடை தெரியா வினோதம் தான்.
ஒருவரைக் கண்டு பழகி அவரைத் தெரிந்து அறிந்து வரும் காதலுக்கு மத்தியில் இவ்வகைக் காதலின் சுவை என்றும் குறைந்ததில்லை.
அந்தத் தேன் சுவையை இன்று வேதாவிற்கும் காட்டிவிட்டான் அவளின் அஜூ.
“என்ன யோசிக்கிற வேதா? இன்னும் என் மேலே கோவமா? இல்லை வேற ஏதும் கேட்கணுமா?” கேள்வியாய் இருந்த வேதாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டான் அர்ஜுன்.
“இல்லை சும்மா யோசிச்சேன்” புன்னகை மீண்டிருந்தது அவளின் முகத்தில். அவளின் அந்தப் புன்னகை அவனையும் தொட்டது. தொட்ட அந்தப் புன்னகை அவன் இதழ்களிலும் ஒட்டிக் கொண்டது.
“உன்னைப் பற்றி அம்மா முதலில் என்கிட்ட சொன்னதே உனக்குச் சிரித்த முகம்ன்னு தான். அந்த எப்பவும் சிரிக்கிற சர்க்கரை முகம் எனக்குப் பார்த்தும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.”
“ஓ, அதுக்குத் தானா அந்த சர்க்கரைப் படம் வச்சுருந்தீங்க?” சின்னச் சிரிப்பு சத்தத்துடன் கேட்டாள்.
“ஹ்ம்ம் அந்த சர்க்கரை மாதிரி இந்த சக்கரையும் தினம் தினம் வாழ்க்கையிலிருந்தாலும் அழுத்துப் போகாதுன்னு தோணுச்சு. அதனால் வைச்சேன்.” என்று கண்கள் பார்த்துப் பேசியவன், மேலும் தொடர்ந்தான். “இன்னமும் இருக்கு ஆனால் அதை நீ ஞாபகமா கல்யாணம் ஆனதும் கேள். அப்பக் கண்டிப்பா சொல்கிறேன்.”
“இப்போதே என்னால் சொல்ல முடியும். ஆனால் நமக்குள்ள இப்ப இருக்கும் இந்த வேகம் என் சக்கரைக்கட்டி வேதாவுக்குச் சரி வராது.” நிச்சயம் அவளைக் கரைக்கும் குரல் இது. ஆம் கரைந்து தான் போனாள். இரண்டு நாட்களில் இப்படி எல்லாமும் மாறுமா? மனம் தாங்கும் அளவையும் விட இந்த அதிக மகிழ்ச்சி என் வாழ்வில் என்றும் நிலைக்குமா? எண்ணத்தின் ஏதோ ஒரு மூலையில் தீப்பொறியாய் சிறு சந்தேகம். ஆனால் அந்தச் சூழ்நிலை அதைப் பெரிதாய் யோசிக்க விடவில்லை. தன்னவனின் மீதான மயக்கம் மட்டுமே.
“ஏதோ வில்லங்கமா இருக்கும் போல?” வெட்கம் வார்த்தைகளைத் தடை செய்யப் பார்த்தும் தெரிந்துகொள்ளும் ஆவல் பெண்ணிடம்.
“கண்டிப்பா, இனி இப்பக் கேட்காதே.” முகம் சிவக்க வந்தன அவன் வார்த்தைகள்.
அந்த வெட்கச் சிவப்பை அவள் கன்னங்களும் பூசிக் கொள்ளப் “போகலாமா? லேட்டானா அம்மா தேடுவாங்க” என்று கேட்டாள்.
“நம்பர் மட்டுமேன்னா கேட்கலாம். ஆனால் எனக்கு என் சக்கரையோட போட்டோவும் வேணுமே”
“எனக்கு மட்டும் போட்டோ காட்டலை தானே, உங்களுக்குக் கண்டிப்பா தர மாட்டேன். அதான் உங்க அம்மா காட்டினாங்கள்ல அது போதும்.” சூடாகிப் போனாள் வேதா.
“தப்புக்குத் தண்டனை அவசியம் தான். நானே என்னோட போட்டோ கொண்டுவந்துட்டேன். இந்தா பத்திரமா உள்ள வச்சிக்கோ. இதைப் போட்டோ எடுத்து இனி எல்லோருக்கும் அனுப்புடா.” உள்ளிருந்து எடுத்து ஒரு சிறிய உறையை நீட்டினான். இருவரின் எண்களும் பரிமாறப்பட மகிழுந்து வேதாவின் இல்லம் நோக்கி விரைந்தது.
வீட்டு வாசலில் வந்து நின்றதும் இருவருக்குள்ளும் மீண்டும் மௌனம். ஏதோ காலம் காலமாக உடனிருந்த உறவைத் தனியே விட்டுச் செல்லும் உணர்வு. விழிகள் மொழி பேசும் தருணம். (போதும்டா உங்க காதல் தொல்லை, படிக்கிறவங்க பாவம்)
மகிழுந்தின் சத்தத்தில் அறையிலிருந்து வெளியில் வந்த சீதாவின் கண்களில் பட்டது, வேதாவை இறக்கி விட்டுச் சென்ற வாகனமும் உள்ளே வந்து கொண்டிருந்த வேதாவும் மட்டுமே.
“வேதா காரிலா வந்த? ஏன் என்ன ஆச்சு?” அம்மாவின் குரலில் சிறு பதற்றம்.
“ஒன்றும் இல்லம்மா, அது அவங்க, அவங்க அர்ஜுன் இன்றைக்கு காலேஜ் வந்தாங்கம்மா. பார்க்க. அவங்க தான் வீட்டில் விட்டுவிட்டு போறாங்க.” வெட்கமும் மகிழ்ச்சியுமாய் அவளின் மனம் போலக் குதூகலமாய் வந்தது வார்த்தைகள்.
“இல்லம்மா அவங்க வரவும் அப்படியே” வார்த்தைகள் வர மறுத்தன. மனதிலிருந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நொடியில் கரைந்து கண்கள் கண்ணீர் சிந்தத் தயாராகின.
“உனக்கு என்ன இன்னும் சின்னப் பொண்ணுன்னு நினைப்பா வேதா, அவங்க வீட்டில் நீங்க இப்படி தனியா வந்தீங்கன்னு தெரிந்தால் என்ன நினைப்பாங்க உன்னைப்பற்றி?”
பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை வஞ்சியிடம். அமைதியாய் நின்றிருந்தாள்.
“அம்மா சொல்றப்ப வலிக்கும். ஆனால் இதையே மத்தவங்க சொன்னால் காலத்துக்கும் வடுவாய் போகும். ஒரு வார்த்தை என்னிடம் போன் செய்து கேட்டிருக்கலாம்?”
ஆம் செய்திருக்கலாம். ஆனால் எண்ணம் முழுவதும் அவன் இருக்க மற்றவை எதுவும் அவளின் நினைவில் இல்லையே. தன் தவறு உணர்நது கண்ணீர் வழிய நின்றவளைப் பார்க்க சீதாவிற்கும் கவலையாய்ப் போனது.
“அழாத வேதா. இனி இதெல்லாம் நீ கவனமா இருக்கணும். நம்மை மத்தவங்க குறை சொல்லும்படி இருக்கக் கூடாது டா.”
அம்மாவின் சொல்லில் அவர்களின் கருத்து விளங்க மேலும் சில கண்ணீர்த் துளிகள் கன்னம் நனைத்தது. தவறிய சிறு பிள்ளையாய் அன்னையின் முன் நின்றிருந்தாள்.
திருமணம் என்று பேசி முடித்த பிறகும் இத்தகைய கட்டுப்பாடுகள் இயல்பு என்று அவளுக்குப் புரிந்தது. இதற்கிடையில் அர்ஜுனுக்கு அழைத்துப் பேசும் எண்ணமெல்லாம் அவளின் நினைவடுக்குகளிலிருந்து மறைந்தே போனது. இத்தனை உணர்வுகளும் அலைமோத அன்றைய இரவு அவளுக்குத் தூங்கா இரவாகிப் போனது.
வேதாவை வீட்டில் விட்டு விட்டு, அவனின் எண்ணமெல்லாம் அவளுடன் செல்ல இந்த சில நாள் பிரிவு ஏதோ தன் வாழ்வே போனதைப் போல் ஒரு பாவத்துடன் வீட்டிற்கு வந்தான். எந்த நொடியும் அவளின் அழைப்பு வரலாம் என கைப்பேசியுடனேயே சுற்றியவன் காத்திருந்தபடியே அவளின் இன்ப நினைவுகளுடன் கண்ணயர்ந்தான்.
என்னடி பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஒய்யாரி
உன் இரு கண் விழி பொல்லாது உள்ளது எப்பவும் சொல்லாது
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை
என்னை சொக்கும்படி ஏன் மா வைக்கிற
(திரைப்படம்: பிதாமகன் – பாடல்: இளங்காது வீசுதே
திரைப்படம்: கலங்கரை விளக்கம் – பாடல்: பொன்னெழில் பூத்தது