பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன் திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
தினம் ஒரு கனவு; திருமண நாளுக்கான காத்திருப்பு; கற்பனையில் மட்டுமே இதுவரை கேட்ட காதல் மொழிகள் நிஜத்திலும்; நண்பர்களின் கலாட்டாக்கள் என தித்திக்கும் நினைவுகளுடன் அந்த இரவு வேளையில் இருவரும் இணைந்திருந்தனர்.
“சக்கர ஒரே ஒரு போட்டோ கொடுடா, முதல் முதல்ல உன்னைப் பார்த்த போட்டோ எனக்கு ஸ்பெஷல். அதை யூஸ் பண்ண வேண்டாம்ன்னு வேற கேட்கிறேன். வேற அனுப்பு டா. ப்ளீஸ் இவ்வளவு கெஞ்சுறேன்ல்ல”
“முடியாது. ஆமா உங்க லீவு என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே.”
“டேய் சக்கரக்கட்டி நான் என்ன கேக்கிறேன், நீ என்ன பேசுற டி. டாபிக் மாத்தாத”
“எனக்கு இன்னைக்குத்தான் கன்போர்ம் பண்ணினாங்க, நான் கல்யாண வாரம் செவ்வாய்க் கிழமை வரை ஒர்க் பண்ணுவேன். வெள்ளிக்கிழமை கல்யாணம். அப்புறம் மூனு வாரம் லீவு.”
“எனக்கும் கிட்டத்தட்ட அதே தான், கண்டிப்பா நாளைக்கு கன்போர்ம் ஆயிடும். சரி நீ போட்டோவுக்கு வா, மத்தது எல்லாம் பேசாத.”
“என்ன சொல்லணும் அஜூ. முடியாதுன்னு சொல்லிடேன்ல்ல. இன்னும் என்ன உங்களுக்கு.” சிரிப்பை அடக்க வெகுவாக சிரமப்பட்டாள் வேதா.
“ஒரே ஒரு நாள் என் போட்டோ காட்டலை. தப்புதான். அதுக்காக இப்படியா? இப்ப உன்னோட எல்லா போட்டோவும் என்னால இன்ஸ்டால இருந்து எடுக்க முடியும். ஆனாலும் என்ன ரொம்பக் கெஞ்சவிடுற.” சலித்துக் கொண்டாலும் சந்தோஷமாய் சொன்னான் அர்ஜுன்.
“ஏன் அஜூ கெஞ்சனும். நான்தான் கல்யாணத்துக்கு முதல் நாள் எடுத்துக்குங்கன்னு சொன்னேனே. போட்டோக்ராபர் கிட்ட சொன்னா இன்னும் நல்லா நம்மள அழகா எடுப்பாங்க.”
“எனக்கு இன்விடேஷன் டிசைன் பண்ண வேணும்னு கேட்டா கல்யாணத்துக்கு தர்றாளாம், போடி. அன்னைக்கு உங்க வீட்டுக்கு எல்லாரையும் பார்க்க வந்தப்பவே மாமாகிட்ட கேட்டு வாங்கீருக்கணும். விட்டுட்டேன்.”
குளிர் நிலவென அவன் மனம் இருக்க அக்னி வெயிலாய் சுட்டது அவன் அலைபேசி. இந்த நான்கு வாரமாக தினமும் இரவு தீக்குளித்தன இவர்களின் காது மடல்கள்.
அவளை முதலில் கண்ட அன்று மட்டுமே அவன் இரவு தனிமையில் கரைந்தது. மறுநாள் விடியலே வேதாவிற்கு இவன் குரலில் தான். அன்றிலிருந்து அர்ஜுனின் விடியலும் உறக்கமும் அவள் குரலில்தான்.
எங்கும் அவள் அலைதான். அலுவலக நண்பர்கள் வட்டத்தில் கேலியும் கிண்டலும் இவனையே துரத்த, அதன் பலனாய் எத்தனை முறை நண்பர்களுக்கு விருந்தளித்தான் என்ற கணக்கு யாரிடமும் இல்லை.
மாதம் ஒருமுறை மட்டும் நண்பர்கள் இணைந்து செல்லும் கேளிக்கை விடுதிக்கு (பப்) இந்த ஒரு மாதத்தில் இருமுறை சென்று வந்துவிட்டான். வேதா அவனிடம் இதற்காகச் சண்டையும் போட்டிருந்தாள். அவனை மகிழ்விக்கும் அத்தனையையும் இந்நாட்களில் அள்ளித் தெளித்திட்டான். எங்கும் எதிலும் அவன் காணத் துடித்தது இன்பம் மட்டுமே.
இப்போதும் நண்பர்களுடன் தனியாக ஒரு நிச்சயதார்த்த நிகழ்வைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். வேதாவிற்கு வியப்பளிக்கும் விதமாக கடற்கரையில் இந்த வார இறுதியில் நடத்துவதாகத் திட்டம். சில மணி நேரங்களேனும் அவளைத் தனியே அழைத்துச் செல்ல வேண்டி வரும்.
அவள் வருவது நிச்சயமில்லை. இதுபோன்ற விஷயங்களெல்லாம் அவன் விரும்பிச் செய்தான். வேதாவோ குடும்பம், கட்டுப்பாடுகள், மற்றவர்களின் கருத்துக்கள் என அவளின் அம்மா சொல்லிய விஷயங்களைத் தானும் திருமணம் வரை மீறுவதற்கில்லை என மறைமுகமாகச் சொல்லி இருந்தாள்.
ஆயினும் தன் அம்மாவின் மூலம் வேதாவின் வீட்டில் பேசச் சொல்லி இருந்தான். வேதாவிற்கும் இன்னும் இவை பற்றி எல்லாம் சொல்லவில்லை.
ரம்யாவும் பிரகாஷும்தான் பெரும்பாலும் இவனுடன் இணைந்து திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
இவை போன்ற ஆடம்பர வெளிநாட்டுப் பழக்கங்கள் எல்லாம்தான் பெரும்பாலும் இருவரும் முட்டிக் கொள்ளும் இடங்களாக இருக்கும்.
ஆனால் இந்தமுறை இரு குடும்பத்தையும் பேசிப்பேசியே சரி செய்திருந்தான். அவனுக்கு எப்படியும் அவளை அழைத்துச் சென்றே ஆகவேண்டும். மறுநாள் மெல்ல மெல்ல வேதாவிடம் சொல்லத் தொடங்கினான்.
“ஹ்ம்ம் ஓகே அஜூ, ஆனா ரெண்டு அம்மாவும் சந்தோஷமா ஒத்துக்கிட்ட மாதிரித் தெரியலையே. கண்டிப்பா நானும் வரணுமா? உங்க டீம் அவுட்டிங்ல நான் வந்து என்ன செய்யப் போறேன். எனக்கும் யாரையும் தெரியாது தானே?”
“கண்டிப்பா என்னைத் தனியாவிட்டுட்டுப் போகக் கூடாது. சரி, எப்பத் திரும்ப வருவோம்? அம்மாவுக்கு அதுதான் கொஞ்சம் யோசனை. பகலிலேன்னா இவ்வளவு யோசிக்க மாட்டாங்க. நைட் பதினோரு மணிக்குள்ள வந்துடுவோம் தானே.”
“அதெல்லாம் வந்திடலாம், டின்னெர் முடுஞ்சதும் கிளம்பிடலாம். நாளைக்கு அர்ஜுன் உனக்காகக் காத்துகிட்டு இருப்பான்.”
“வேதாவும் வெயிட்டிங்.” வெட்கம் மறக்கத் தொடங்கி இருந்தாள். பின் நினைவு வந்தவளாய்க் கேட்டாள்.
“அதென்ன மெசேஜ், ஏதோ செய்யுள் மாதிரி இருந்தது.”
“ஒஹ் இப்பத்தான் டீச்சர்க்கு ஞாபகம் வந்துச்சா?”
“மத்தது பேசினதுல இதை மறந்துட்டேன். சொல்லுங்க.”
“சொல்றேன் சொல்றேன். ஆனால் நீ அதை ஒரு தரம் வாசிச்சுக் காட்டு.”
“ஏன் சக்கரக்கட்டி தமிழ்ப் பாட்டுப் படிக்கவே இவ்வளவு கஷ்டமா?”
“இல்லல்ல. இருங்க ஓபன் பண்ணி படிக்கிறேன்” குறுஞ்செய்தியில் அவன் அனுப்பி இருந்ததை வாசிக்கத் தொடங்கினாள்.
“மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி,
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே, நீயே
முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை, யாழ நின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து,
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின், அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள், ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே.” மெல்ல மெல்ல வாசித்து முடித்தாள் வேதா.
“பரவாயில்ல, நான் நினைச்ச அளவு மோசமா இல்ல, நல்லாவே வாசிக்கிற. இனி பயப்படாம உனக்கு அனுப்பி வாசிக்கச் சொல்லலாம்.”
“சரி சொல்லுங்க சீக்கிரம். இதுல பின்னாடி வர்ற பாட்டு வரிகளை மட்டும் போல்ட் பண்ணிருக்கீங்க.”
“ஒருவேளை உனக்கு ஒழுங்கா வாசிக்கத் தெரியாம நீ தமிழைக் கொலைபண்ணினா பின் பாதிக்கு மட்டும் விளக்கம் சொல்லிட்டு இனி உனக்கு சங்கப் பாடல்களை அனுப்பக் கூடாதுன்னு முடிவுக்கு வந்திருப்பேன். ஆனா இனி அந்தக் கவலை இல்லை.”
“நம்பிக்கை வந்தாச்சா. சரி இப்ப சொல்லுங்க.” கதை கேட்கத் தயாரானாள்.
“இந்தப் பாட்டு பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி எழுதின அகநானூறுல வர்ற இருபத்தி எட்டாவது பாட்டு. குறிஞ்சித் திணை பற்றிய பாட்டு டா. குறிஞ்சின்னா தெரியும் தானே?”
“ம்ம்ம் தெரியும் அஜூ, மலையும் மலை சார்ந்த இடமும்.”
“கரெக்ட்டு டா சக்கர. அங்க இருக்க மலை மக்கள் எல்லாம் தினை விளைஞ்சு இருக்கும் போது அதைப் பறவைங்க கிட்ட இருந்து காப்பாத்த காவல் இருப்பாங்க.”
“வள்ளி அப்படிக் காவல் காக்கும் போது தான் முருகனைப் பார்த்தாளாம்.”
“ஆனா இதுல முருகனும் வள்ளியும் இல்ல, தலைவனும் தலைவியும் தான். அதிலும் இது தோழி தலைவிகிட்ட சொல்லுற மாதிரிப் பாட்டு.” வேதாவும் விருப்பமுடன் கேட்க மேலும் அவனே தொடர்ந்தான்.
“அந்தத் தோழி தலைவியைப் பார்த்து ‘தலைவனும் நீயும் ஆழமான காதலோடு இருக்கிறதால நீ அவனை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்க. அதனால உனக்கு இன்னும் உன்னைச் சுத்தி நடக்குறது தெரியலை. நான் சொல்றதக் கேளு.’ அப்படின்னு சொல்லுறா”
“ஹ்ம் அப்புறம்”
“அப்புறம் ‘நம்ம தினைப்புனத்துல இருக்க காய்ஞ்ச தினைக் கதிரை எல்லாம் சாப்பிடப் பறவைகள் வருது. நீ வாசனைப் பூ மாலையைப் போட்டுட்டு, வேட்டை நாய்களோட பல மலையைத் தாண்டி வரும் தலைவனை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்க.’ன்னு சொல்லுறா”
“தலைவனைத்தானே நினைக்கிறா. அதனால என்ன?”
“அதனால அவ என்ன சொல்றா தெரியுமா? ‘நீ போட்டிருக்கிற மாலை எல்லாம் அசையிற மாதிரி கிளியை விரட்டு. அப்படி நீ சத்தம் போடலைன்னா உன்னோட அம்மா உனக்குக் கிளியை விரட்டத் தெரியலைன்னு உன்னை இனிமே இங்க விட மாட்டாங்க. அப்படி செஞ்சா நீ எப்படி உன்னோட தலைவனை இறுக்கமாக் கட்டிப் பிடிச்சுக்க முடியும்.’ அப்படின்னு தோழி கேக்குறது தான் இந்தப் பாட்டு” என்று முடித்தான் அர்ஜுன்.
“ஓ, இந்தப் பாட்டு இப்ப எனக்கு எதுக்கு சொன்னீங்க?” அவளும் அதே தோரணையுடன் கேட்டாள்.
“ஹ்ம்ம், எப்பவும் என்னை நினைச்சுக் கனவு காணாம, வீட்டுல ஒழுங்கா அத்தையைத் தாஜாப் பண்ணி நாளைக்குக் கிளம்பி வர்றதுக்காகச் சொன்னேன். இதை உனக்குச் சொல்ல வேற தோழி இல்லாததால நானே சொல்லீட்டேன்.” குறும்பு மின்ன சொல்லிச் சிரித்தான் அஜூ.
“அதெல்லாம் நீங்களே செஞ்சுட்டீங்க. இனி நான் ஏன் அம்மாவை தாஜா பண்ணனும். சரி, நீங்க இதெல்லாம் படிப்பீங்களா?”
“தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால விரும்பிப் படிப்பேன். சரி, நாளைக்கு என் கூட வர உங்க வீட்ல எதுவும் சொல்லலயே?”
“அம்மா அத்தைக்காக ரொம்ப யோசிக்கிறாங்க அஜூ. என்ன நினைப்பாங்களோன்னு. அதுவும் லேட்டா வேற வருவோம்னு சொல்லுறீங்க. இதுனால எதுவும் பிரச்சனை ஆகாம இருக்கணும் இல்ல.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இப்ப போய் தூங்கி நாளைக்கு பிரெஷா வாடா சக்கரக்கட்டி. முதல் தடவையா என் கூட வர்ற. நிஜமா இது நமக்கு ஹாப்பி மொமெண்ட்டா இருக்கும். அஜூ ப்ரோமிஸ் யு.”
“நீங்க சொல்லலைன்னாலும் எனக்குப் புரியிது அஜூ. நீங்களும் போய்த் தூங்குங்க. மார்னிங் கூப்பிடுறேன். பை.” இதமான மனநிலையுடன் இருவரும் உறங்கச் சென்றனர்.